Friday, December 21, 2007

திரைக்கலைஞர்கள் வாழ்க்கை: எம்.ஆர்.ராதா

சந்திரபாபு, சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு ஸ்மிதா, தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் - வரிசையில் அடுத்து இப்பொழுது கிழக்கு மூலம் வெளியாகிறது எம்.ஆர்.ராதா. ராதா-எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டமுழு விவரங்களும் சுதாங்கனின் சுட்டாச்சு, சுட்டாச்சுவில் ஏற்கெனவே பதிவாகியிருந்தன.

ஆனால் ராதா என்னும் சினிமாக் கலைஞனை, எம்.ஜி.ஆருடனான துப்பாக்கிச் சண்டையின் வில்லனாக மட்டும் பார்ப்பது அவருக்குச் செய்யும் அநீதி.

ராதா ஒரு மேவரிக். சிவாஜி, எம்.ஜி.ஆர் சினிமாக்களில் பிரபலமாவதற்கு முன்பிருந்தே ராதா, மேடை நாடகங்களில் முடிசூடாச் சக்ரவர்த்தியாக இருந்தார். தானே கதைகளை எழுதி முக்கியப் பாத்திரங்களில் நடித்தார். நடிக்கும்போதே இம்ப்ரவைஸ் செய்யக்கூடியவர். அப்பொழுதைய தமிழக அரசு அவரது நாடகங்களைத் தடை செய்ய முயன்றபோது, அதை எதிர்த்து, பலவிதமான தந்திரமான வழிகளில் போராடி, அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தவர்.

தனது மனத்தில் பட்டதை ஒளிவுமறைவின்றிப் பேசக்கூடியவர். சந்திரபாபுவைப் போன்றே.

இந்தப் புத்தகத்தில் இருந்து ராதாவின் வார்த்தைகளில் சில:

*

தூக்குமேடையில் ஒரு காட்சி. ராதா ஒரு பெண்ணைத் தன்னுடன் வைத்திருப்பார். வேலைக்காரன் வருவான்.

'யாருண்ணே இது?'
'அண்ணிடா.'
'அண்ணி காலைப் பாருங்க'
'என்ன?'
'யானைக்கால் மாதிரி இருக்கு.'
'போடா, பிள்ளையாருக்கே யானைத்தலை இருக்கு. இதுவரைக்கும் ஒருபயலும் கேட்கலை. கால் யானைக்காலா இருக்கறதை சொல்ல வந்துட்டான்.'

*

'உடனடியாக எல்லோரும் சேர்ந்து நான் நடத்தும் ராமாயணத்தை தடைசெய்ய ஏற்பாடு செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன். தடை செய்யப்பட்டால்தான் தற்பொழுது வந்திருக்கும் நாடகப் புதுச் சட்டத்தின் மூலம் ராமாயணம் பற்றி உயர்நீதி மன்றத்தில் விவாதிக்க முடியும். ராமன் குடிகாரன், கடவுளல்ல அயோக்கியன் என்பதை விவாதித்து சட்டத்தின் முலம் ராமாயணம் புனிதமான கதைதானா, மக்களுக்குத் தேவைதானா என்பதை முடிவு செய்ய முடியும். அப்பொழுதுதான் குடிகாரக் கடவுளான ராமன் கோர்ட்டின் மூலம் நாட்டில் தடுக்கப்படுவான். நாடும் நாட்டு மக்களும் ராமாயணத்தின் யோக்கியதையை, ஊழல்களை நன்றாகப் புரிந்து கொள்வார்கள். கோர்ட் ஏறட்டும், குடிகாரக் கடவுள் ராமன்!'

*

'பகவானுக்கு கோயில் கட்டுறேன்னு சொல்லுற. மனுசனுக்கு வீடு கட்டுற மாதிரி. பகவான் வர்ற மனிதர்களுக்கெல்லாம் தரிசனம் கொடுக்கறதுக்காக விசிட்டிங் ரூம் - கருவறை. கட்டியிருக்குற ஆல்ரைட். அதேபோல பகவானுக்கு ஆறுகால பூஜை ஆறு வேளை பிரசாதம் சமையல் பண்ண கிச்சன் ரூம் - மடப்பள்ளி. கட்டியிருக்குற ஆல்ரைட். அதே மாதிரி பகவான் தூங்குறதுக்கு பெட் ரூம் - சயன அறை. கட்டியிருக்குற ஆல்ரைட். நான் தெரியாமக் கேக்குறேன், இந்த ஆறுகால பூஜையில ஆறுவேளை பிரசாதம் சாப்பிட்ட பகவான், காலைல எழுந்தரிச்ச உடனே வெளிய போறதுக்கு ஏன்டா கக்கூஸ் கட்டல டேய்.'

*

ராதா வெறும் கடவுள் எதிர்ப்பாளராக மட்டும் தன்னை முன்வைக்கவில்லை. அன்றைய சமூகத்தில் தனக்கு ஒவ்வாதவற்றையெல்லாம் உடனடியாகத் தனது நாடகத்தில் கேலி செய்தார்.

ராதாவுக்கு சினிமாவைவிட நாடக மேடையே அதிகம் பிடித்திருந்தது. ஆனால் அந்தச் சமயத்தில்தான் நாடகம் அழிந்து அதனிடத்தில் சினிமா உயரத் தொடங்கியிருந்தது. சினிமாவில் தனது இமேஜை ஒரு சிவாஜியும் ஒரு எம்.ஜி.ஆரும் வளர்த்துக்கொள்ள முயன்றதுபோல ராதா செய்யவில்லை.

தமிழ் மேடை நாடகத்தின் கடைசிப் பெரும் கலைஞன் எம்.ஆர்.ராதா.

முந்தைய பதிவு: இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர்

2 comments:

  1. நன்றி பத்ரி.

    கருத்துச்சுதந்திரத்தில் நாம் எவ்வளவு பின்னடைவு அடைந்திருக்கின்றோம்!!! ராதா இப்பொழுது இதே கருத்துக்களை சொல்ல முடியுமா? தினம் ஒரு கோர்ட் படியேறுவதற்குத்தான் நேரமிருக்கும்.

    - மு.க

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்கள் அடங்கிய புத்தகம்
    நன்றி

    ReplyDelete