Friday, February 27, 2009

வரும் தேர்தலில் காங்கிரஸ்தான் ஜெயிக்கும்?

மூன்று நாள்களுக்குமுன் மும்பை சென்றிருந்தேன். எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் நிதி நிறுவனம், தாங்கள் முதலீடு செய்திருக்கும் அனைத்து நிறுவனங்களையும் அழைத்து ஒரு பிரசண்டேஷனைச் செய்யச் சொல்லியிருந்தார்கள். பெரும் முதலீட்டாளர்கள் சிலர் அங்கு இருந்தனர். உலகப் பொருளாதார வீழ்ச்சி, இந்தியாவின் நிலை போன்ற பலவற்றைப் பற்றியும் பேசினார்கள்.

பேசிய பலரில் இரு இந்தியர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் BP சிங் என்ற அனலிஸ்ட். மற்றொருவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்ற இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்.

இருவரும் முற்றிலும் வேறான பின்னணியைக் கொண்டவர்கள் என்றாலும் இருவரது பகுப்பாய்வும் ஒரேமாதிரியாக இருந்தது. சிங், அனலிஸ்ட் என்பதால் எண்களை வைத்து விளையாடுபவர்; அதிலிருந்து சில புரிதல்களை முன்வைப்பவர். ஜுன்ஜுன்வாலா நிச்சயமாக பல அனலிஸ்ட்களை வேலைக்கு வைத்திருப்பாராக இருக்கும்; ஆனால் எண்களை மட்டுமே நம்பியிராமல் தனது இதயத்தையும் பின்பற்றி முதலீடு செய்பவர்.

இருவரும் அடித்துச் சொன்னது - வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் ஜெயிக்கும் என்பது. காங்கிரஸ் கூட்டணி இப்போது இருக்கும் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்களைப் பெறுவார்கள் என்றும் பாஜகவும் கம்யூனிஸ்டுகளும் இப்போது இருப்பதைவிடக் குறைவான இடங்களைப் பெறுவார்கள் என்பதும் இவர்களது கணிப்பு.

இருவரும், சுவாரசியமாக, விவசாயத்துக்குத் தரப்பட்டுள்ள மான்யத்தை வரவேற்றனர். அதன் காரணமாகவும், மேலும் பல கிராம நலத்திட்டங்களாலும் இப்போதுள்ள அரசின்மீது கிராமப்புற மக்களுக்கு அதிருப்தி இல்லை என்றும், எனவே ஆச்சரியம் தரத்தக்க வகையில் இப்போதுள்ள மோசமான உலகப் பொருளாதார சூழ்நிலையில் இந்தியாவில் மட்டும்தான் ஒரு incumbent, ஆட்சியைத் தக்கவைக்க வாய்ப்புள்ளது என்றும் இருவரும் கருதினர்.

இது கருத்துக் கணிப்பு என்ற வகைக்குள் அடங்காது. Informed opinion என்று சொல்லலாம். ஆனால் இவர்களது சிந்தனையை என்னால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ளமுடிகிறது.

தமிழகத்தில் மட்டும் நிலைமை வேறு மாதிரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மண்ணைக் கவ்வக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

10 comments:

  1. //இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மண்ணைக் கவ்வக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. //

    எந்தக் கூட்டணி வரும்னு நினைக்கிறீங்க, கலைஞர் இல்லாவிட்டால் - அம்மா தான்.

    அம்மாவோட ஒப்பிட்டால் கலைஞர் 100% தேவலைன்னு ஒரு முடிவுக்கு வரமுடியாதா? இலங்கை விஷயத்திலுமே கூட.

    காங்கிரஸ் மத்தியில் வந்து, ஒன்னுக்கும் உதவாத அதிமுக தமிழகத்தில் வந்து இலங்கை விஷயத்தில் என்ன செய்யும்னு நினைக்கிறீங்க, இல்லாவிட்டால் பொதுவாக தமிழகத்தில் ஜெயிக்கப்போகும்(வாட் எவர்) கட்சி இலங்கை விஷயத்தில் என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க.

    ReplyDelete
  2. தமிழகத் தேர்தலைப் பொருத்தமட்டில், காங்கிரஸ்/திமுக மீதான் கோபம், பிறவற்றைக் காட்டிலும் முன்னுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். வக்கீல்கள் திமுகமீது கோபமாக உள்ளனர். தமிழ் தேசியவாதிகள், இலங்கைத் தமிழர்மீது பரிவுள்ளவர்கள் திமுக/காங்கிரஸ்மீது கோபமாக உள்ளனர்.

    முதலில் தமிழகத்தில் இரண்டு கூட்டணிகள் இருக்குமா, மூன்று கூட்டணிகள் இருக்குமா என்று தெரியவில்லை. பாமக/மதிமுக/விடுதலைச் சிறுத்தைகள் ஒரு குழுவாகப் போட்டியிடக்கூடிய வாய்ப்பு உண்டு. தேமுதிக/பாஜக? கூட்டணி சேர வாய்ப்புண்டு.

    இப்படி நான்கு முனைத் தேர்தலாக இருந்தால், ஆளுக்குக் கொஞ்சம் இடங்கள் என்று ஆக வாய்ப்புண்டு.

    அஇஅதிமுக இலங்கைப் பிரச்னையில் தமிழர் ஆதரவு நிலையை எடுக்கப்போவதில்லை. ஆனால் என் கணிப்பு, இலங்கை விஷயத்தைப் பொருத்தமட்டில் பெரும்பாலும் ‘எதிர்மறை வாக்குக’ளுக்குத்தான் இடம் உண்டு. அந்த வாக்குகள் அஇஅதிமுகவுக்குப் போகவேண்டும் என்பதில்லை; மதிமுக, பாமகவுக்குப் போகலாம்.

    ReplyDelete
  3. தமிழகத்தில் தோல்வி உறுதிதான்.

    நீங்கள் சொல்வது போல் தமிழகத்தில் திமுக, அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகள் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.

    மற்ற மாநிலங்களில் நிலமை மறியுள்ளது சோனியாவை ஏற்றுள்ளதாக தெரிகிறது. மன்மோகன்சிங்கின் personality ஒரு காரணமா?

    ReplyDelete
  4. பா.ஜ.க வை பொறுத்தவரை அத்வானி பிரதமர் வேட்பாளராக இருக்கும் வரை, அவர்களுக்கு வாய்ப்பில்லை. இந்தியர்கள் மன்மோகன் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்றே தோன்றுகிறது. தமிழகத்தில் கருணாநிதி மீது அதிருப்தி அதிகமாக உள்ளது. அனால், அது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மாறுமா என்பது பெரிய சந்தேகமே! இந்த முறை 20 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுமென தோன்றுகிறது. மற்றபடி, இலங்கை தமிழர்களுக்காகவெல்லாம் நாம் வாக்கை மாற்றி விட மாட்டோமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. ராகேஷ் ஜுன்ஜூன்வாலா - இந்தியாவின் பங்குசந்தை பிதா. இன்னமும் அவர் மட்டும் தான் We are heading for the biggest bull run in history, with sensex touching 25000 என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    மற்றபடி இங்கே நான் அரசியல் பேசப்போவதில்லை ;)

    ReplyDelete
  6. //அஇஅதிமுக இலங்கைப் பிரச்னையில் தமிழர் ஆதரவு நிலையை எடுக்கப்போவதில்லை.//

    தமிழர் ஆதரவு நிலை என்றால் புலிகள் ஆதரவு நிலையா?
    அப்படி பார்த்தால் சீமானை தவிர வேறு எவரும் உங்கள் அகராதியில் சேர்க்க முடியாது

    ReplyDelete
  7. I agree with your assessment. To add, I think the ADMK coalition will win the majority of the Lok Sabha seats in TN (at least 25-30). We could even see ADMK joining the Cong led govt. in the centre post-election! Again just an informed opinion.

    ReplyDelete
  8. கூட்டணியை பொறுத்துதான் காய்கள் நகரும்.

    But he is a master and very brilliant @ number game. Let us wait and see.

    ReplyDelete
  9. நகர்புறங்களில் திமுக கூட்டணி மண்ணை கவ்வ போவது உறுதி.

    ReplyDelete
  10. அன்று சொன்னது எவ்வளவு உண்மை..கருத்து சொன்ன இருவருமே மிக புத்திசாலிகள்..

    ReplyDelete