Friday, April 27, 2007

கோதாவரி, பாலாறு

இரண்டும் ஆறுகள். இரண்டும் ஆந்திரம் வழியாக ஓடுகின்றன. முன்னது மஹாராஷ்டிரா வழியாக வந்து ஆந்திரத்தில் நுழைகிறது. பின்னது ஆந்திரம் வழியாகத் தமிழகத்துக்கு வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் பப்ளி என்ற இடத்தில், கோதாவரிக்குக் குறுக்கே தடுப்பணை (Check Dam) கட்ட அந்த மாநில அரசு விரும்புகிறது. ஆனால் இந்த அணையைக் கட்டினால் ஆந்திராவின் வறண்ட தெலுங்கானா மாவட்டங்களுக்குத் தண்ணீர் கிடைப்பது நின்றுபோய்விடும் என்று ஆந்திரா போராடுகிறது. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் அமைச்சரவைகள்தான்.

இதற்கிடையில் பாலாறில் குப்பத்துக்கு அருகில் அணை கட்ட ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது. அங்கு அணை கட்டினால் தமிழக வட மாவட்டங்கள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுவார்கள் என்கிறது தமிழக அரசு. ஆந்திரா அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

ஒருபுறம் தனக்கு மேல் உள்ள (Upper Riparian) மாநிலம் அணை கட்டக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தான் மேலாக உள்ள இடத்தில் அதையே செய்யத் தீர்மானிக்கிறது ஆந்திரம்.

மஹாராஷ்டிரத்தின் செயலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று சில தடைகளை வாங்கியுள்ளனது ஆந்திரம். இப்பொழுது அதே ஆந்திரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போகிறது தமிழகம்.

தண்ணீரைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும் மிகவும் குறுகிய நோக்கில் மட்டுமே செயல்படுகின்றன.

இவ்வாறு தினம் தினம் இவைபோன்ற கேலிக்கூத்துகளைப் பார்க்கையில், நதிகளை தேசியமயமாக்கி, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இன்றியமையாதது என்று தோன்றுகிறது.

3 comments:

  1. What will happen If Rivers are Nationalized? No One will be allowed build Dams across rivers? I have no idea, Can u please explain..

    ReplyDelete
  2. இல்லை. மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் இருக்காது. மத்திய அரசு மட்டுமே இரண்டு மாநிலங்களையும் கலந்துகொண்டு முடிந்தவரை யாருக்கும் பங்கம் வராமல் செயல்படும். (என்று நினைக்கிறேன்.)

    இப்பொழுது மாநில அரசுகள் தத்தம் விருப்பங்களுக்கு மட்டும் ஏற்றவாறு நடந்துகொள்கிறார்கள். நியாயங்கள் பற்றிக் கவலைப்படுவதில்லை.

    ReplyDelete
  3. பொண்டாட்டிக்கு பயந்து பேயிடம் படுத்த கதைதான் நீங்கள் குறிப்பிடுகிற நதிகளை மத்திய அரசின் கையில் ஒப்படைப்பது. இன்றைக்கு இந்திய வளங்கள் தனியார்மயமாகி சுரண்டப்படும் சூழலில் அதுவும் குறிப்பாக தண்ணீர் தனியார் மயம் என்பது முக்கியமான மறுகாலனியாதிக்க திட்டமாக இருக்கும் பொழுது நதிகளை மையப்படுத்துவது என்பது அவர்களின் சதிக்கு நாமும் இடம் கொடுப்பதாக ஆகி விடும்.

    எப்பொழுதுமே அதிகாரத்துவமாகவே திட்டங்களை செயல்படுத்தி பழகிய நமக்கு நதி நீர் பங்கீட்டு பிரச்சனையிலும் கூட அதே நடைமுறைகளே கண்ணுக்கு தெரிவதில் ஆச்சரியம் இல்லை. உண்மையில் இரு மாநிலத்து மக்களிடம் சென்று இந்த பிரச்சனையை தீர்ப்பதற்க்கான கோரிக்கைகளை வைத்து அணி திரட்டி அரசை நிர்பந்திப்பதே சரியானதாக இருக்கும்.

    அசுரன்

    ReplyDelete