Friday, October 24, 2008

கலீஃபா உமர் இப்ன் அல்-கத்தாப் (581-644)

மலையாளத்தில் நூறநாடு ஹனீஃப் எழுதி, தமிழில் நிர்மால்யாவால் மொழிமாற்றப்பட்டு, “செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்” என்ற புத்தகம் விரைவில் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வெளிவர உள்ளது. இன்றுதான் அதனை எடிட் செய்துமுடித்தேன்.

முகமது நபியின் சமகாலத்தவரான உமர் என்பவரின் விதந்தோதப்பட்ட வாழ்க்கை வரலாறு (hagiography), நாவல் வடிவில்.

ஹேஜியோகிராபி என்றால் “திவ்ய சரித்திரம்” என்று சொல்லலாம். அதில் ஓரளவுக்கு உண்மை இருக்கும். மீதியெல்லாம் புகழ் மாலைகள். இந்த நாயகருக்கு எதிராக வேறு பல குழுக்கள் இருப்பார்கள். அவர்களது சரித்திரங்கள் முற்றிலும் வேறாக இருக்கும்.

ராமானுஜர், சங்கரர், வேதாந்த தேசிகர் ஆகியோரது “திவ்ய சரித்திரங்களும்” இதுபோன்றவைதான். அவர்களுக்கு எல்லாவிதமான கஷ்டங்களும் வரும். இறைவன் அருளால் அவர்கள் எல்லாக் கஷ்டங்களையும் முறியடிப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் தவறே செய்யம்மாட்டார்கள். இவர்களது வாழ்க்கையைப் படிக்கும் பக்தர்கள் கண்களிலிருந்து நீர் பெருகும். அவர்களது மதிநுட்பம், இறைவனிடம் கொண்டுள்ள மாறாத பக்தி, துன்பங்களை எதிர்கொள்ளும் திடத்தன்மை, நா வன்மை எதற்கும் ஈடு இணையே இருக்காது.

கலீஃபா உமரின் வாழ்க்கையை ஹனீஃப் சொல்லும் விதத்தில் படித்தால், அதேபோல, கண்ணீர் பெருக்கெடுத்தோடும். ஆரம்பகாலத்தில், முகமதுவைக் கடுமையாக எதிர்த்தவர் உமர். பல தெய்வ வழிபாட்டைப் பின்பற்றியவர். முகமதுவை வெட்டிக் கொல்லும் நோக்கத்தோடு, அவரைப் பார்க்கச் செல்பவர், அங்கே முகமதுவின் பாதையில் சேர்ந்துவிடுகிறார்.

அதன்பிறகு முகமதுவின் பக்கம் நின்று, பல்வேறு சண்டைகளில் ஈடுபடுகிறார். முகமதுவின் மறைவுக்குப் பிறகு, அபுபக்கர் முதல் கலீஃபா ஆவதற்கு உமர் துணைநிற்கிறார். இரண்டே வருடங்களில் அபுபக்கர், உமரை இரண்டாவது கலீஃபா ஆக்கிவிட்டு, இறக்கிறார்.

இந்தக் கட்டம் முழுவதிலும் முகமதுவின் முதல் மனைவி கதீஜாவின் மகள் ஃபாத்திமாவின் கணவர் அலி ஆட்சிக்கும் மதத் தலைமைக்கும் போட்டியாக இருக்கிறார். உமர் கொலை செய்யப்பட்டபின், உத்மான் கலீஃபா ஆகி, அவர் கொலை செய்யப்பட்டபின், அலி நான்காவது கலீஃபா ஆகிறார்.

உமர், உத்மான், அலி - மூவருமே கொல்லப்படுகின்றனர். உமர் பள்ளிவாசலில் தொழுகையில் இருக்கும்போது ஒருவனால் குத்திக் கொல்லப்படுகிறார். உத்மான் இரவில் படுக்கையறையில் எதிரிகளால் வெட்டிக் கொல்லப்படுகிறார். அலியும் பள்ளிவாசலில் தொழும்போது, விஷ வாளால் குத்திக் கொல்லப்படுகிறார்.

***

“செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல்” கதையில் அலி, அதிகம் காணப்படுவதில்லை. ஓரிரு இடங்களில் உமருக்கு அறிவுரை சொல்கிறார். அவ்வளவே.

இந்தக் கதையில், உமரின் வாழ்க்கை, அவர் எப்படி கலீஃபாவாக இருந்தும், கஜானாவிலிருந்து ஒரு காசு எடுக்காமல், கடனாளியாக வாழ்ந்து மடிந்தார் என்றும், அவர் எப்படி தொடர்ந்து போர் புரிந்து, மக்களுக்கு ரோம, பாரசீக அரசர்களிடமிருந்து விடுதலை வாங்கித் தந்தார் என்றும், எப்படி பேரரசை உருவாக்கினார் என்றும், பஞ்சத்திலும் கொள்ளை நோயிலும் மக்களைக் காத்தார் என்றும், எப்படி நீதி பரிபாலனம் செய்தார், மக்கள் கஷ்டங்களைப் போக்கினார், ஏழைகளுக்கு உதவித்தொகை வழங்கினார் என்றும் வருகிறது.

வரலாற்றை இத்துடன் குழப்பாமல் படித்தால், ஆராய்ச்சிகள் ஏதும் செய்யாமல் படித்தால், ஷியா-சுன்னி விவாதங்களுக்குள் செல்லாமல் படித்தால், மிகவும் சுவாரசியமாக இருக்கும். உமர், அலியை ஏமாற்றினாரா? அலியை மிரட்டி, பணியவைத்து, அபுபக்கரை கலீஃபா ஆக்கினாரா? ஃபாத்திமாவை அடித்துத் தள்ளி, கருச்சிதைவு உண்டாக்கினாரா போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடை இருக்காது.

ஆனால் ஒருவிதத்தில், ராம ராஜ்யம் என்பதற்கு சமானமானது உமர் ராஜ்யம் என்று ஹனீஃப் நிறுவுகிறார்.

***

புத்தகத்திலிருந்து சில சுவாரசியமான மேற்கோள்கள்:

1. கலீஃபா உமர், ஜெருசலேம் போகிறார். அங்கே கிறிஸ்துவ தேவாலயத்தில் இருக்கும்போது தொழுகை நேரம் வந்துவிடுகிறது. சர்ச் உள்ளேயே உமருக்கு தொழுகைக்கான வசதிகளைச் செய்துதர கிறிஸ்துவர்கள் முற்படும்போது, உமர் மறுத்து, இப்படிச் சொல்கிறார்:

‘இவ்விடத்தில் தொழுகை நடத்துவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நீங்கள் இங்கே சிறுபான்மையினராக இருக்கிறீர்கள். இப்போது நான் இவ்விடத்தில் தொழுகை நடத்தினால் எதிர்காலத்தில் இஸ்லாமியர்கள் அது அவர்களின் உரிமை என்று வாதிட்டு இந்தத் திருத்தலத்தின் இயல்பை மாற்றி உங்களை இவ்விடத்தைவிட்டு வெளியேற்றிவிடலாம். அதனால்தான் மறுத்தேன்.’

2. ராணுவத் தலைமைப் பதவியிலிருந்து அவரது நண்பர் சுஹரபி என்பவரை உமர் நீக்கி, அங்கு வேறு ஒருவரை நியமித்திருப்பார். மக்கள் என்ன காரணமோ என்று தெரியாமல் குழம்புவார்கள். சுஹரபியுமே, தான் என்ன தவறு செய்தேன் என்று கேட்பார். அதற்கு உமர், நட்பு முக்கியமல்ல, பதவிக்குப் பொருத்தமான ஆள்தான் வேண்டும் என்று பதில் சொல்வார்:

‘நான் வெறுப்பின் காரணமாக சுஹரபியை மாற்றவில்லை. தவறு இழைத்ததற்காகவும் அல்ல. சுஹரபி எனக்குப் பிடித்தமான நண்பர். சுஹரபிமீது அன்றும் இன்றும் அதே நிலைப்பாடுதான். அது ஓர் ஆட்சியாளனை பலவீனப்படுத்திவிடக்கூடாது. நமது நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியைப் பற்றி நீங்கள் அறிவீர்கள்தானே? பலம் பொருந்திய எதிரி ஓங்கி அறைய நேரம் பார்த்திருக்கிறான். ஆகவே, அவரது பதவிக்கு மேலும் வலிமை சேர்க்கும் ஒருவர் நமக்கு மிக அவசியம். யாராவது மாற்றுக்கருத்தைத் தெரிவிக்க விரும்பினால் கூறுங்கள்.’

3. ஓர் ஆளுநர் பதவிக்குத் தன்னை நியமிக்குமாறு ஒரு நண்பர் சிபாரிசு கேட்டு வருவார். அப்போது நடக்கும் விவாதம்:

இன்னொரு நண்பர் வந்தார். காலியாகக் கிடக்கும் ஆளுநர் பதவிக்குத் தன்னைப் பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட கலீபா கூறினார்: ‘அந்தப் பதவிக்குத் தங்களை நியமிக்கலாம் எனக் கருதியிருந்தேன்!’

அதைக் கேட்ட அந்த நபர் உற்சாகமடைந்தார்.

கலீபா தொடர்ந்து பேசினார்: ‘அப்பதவிக்குப் பேராசைப்பட்டதாலும் சிபாரிசுடன் வந்ததாலும் தாங்கள் தகுதியற்றவர். தாங்கள் போகலாம்.’

4. கலீஃபாவின் மகன் எகிப்தில் இருக்கும்போது மது அருந்தியிருப்பார். விஷயம் தெரிந்ததும், எகிப்தின் ஆளுநர், காதும் காதும் வைத்தாற்போல, மிதமான தண்டனையை, ரகசியமாக அவருக்கு வழங்கியிருப்பார். விஷயம் வெளியில் தெரிந்ததும், உமர், தன் மகனையும் ஆளுநரையும் கூட்டிவந்து விசாரிப்பார். பிறகு சொல்வார்:

‘என் மகன் என்ற காரணத்துக்காக இங்கு எந்தச் சலுகையும் இல்லை. சட்டத்தின் முன்னால் எனக்கும் உங்களுக்கும் என் மகனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களோ, அவர்களின் உறவினர்களோ குற்றமிழைத்தால் சாதாரணமாக வழங்கப்படும் தண்டனையிலிருந்து இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் என்பதுதானே நமது கொள்கை. என் மகன் செய்த குற்றத்தை அம்பலப்படுத்தாமல் தண்டிக்கப்பட்டதாக ஒரு ரகசிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.

‘அதற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே, ஆளுநர் தண்டனைக்குரியவர். அவரது குற்றம் ஓர் எச்சரிக்கை மூலமாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. என் மகன் இழைத்த குற்றத்துக்கு, ஒரு சாதாரணக் குடிமகன் செய்திருந்தால் என்ன தண்டனை தரப்படுமோ அதில் இரட்டிப்பு தண்டனை, ரகசியமாக அல்ல, பகிரங்கமாக அவனுக்குத் தரப்படவேண்டும். ஆகவே, என் மகனுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கத் தீர்ப்பளிக்கிறேன்.’

(தொடரும்)

5 comments:

  1. ஆச்சர்யமான விஷ்யங்கள், புதிய தகவலுமாய் இருக்கிறது உமரின் வாழ்க்கை, புத்தகம் அவசியம் படிக்கவேண்டிய ஆவலைத்தூண்டுகிறது.

    ReplyDelete
  2. Expecting to read the book once it is out. Happy Deepavali.

    ReplyDelete
  3. உமர் ஒரு உதாரண ஆட்சியாளர். முகமது நபியின் காலத்தில் வாழ்ந்தவர் மட்டுமல்ல. அவருக்கு மாமனாரும் கூட. தன் மகள் ஹஃப்சாவை முகமது நபிக்கு மணமுடித்துக் கொடுத்தார். நான் மூன்றாவதாக எழுத இருக்கும் இஸ்லாமிய வரலாற்று பாகம் கலீஃபாக்களைப் பற்றியதுதான். அதற்கும் உங்கள் புத்தகம் உதவலாம்.

    அன்புடன்
    ரூமி

    ReplyDelete
  4. இந்த புத்தகம் வெளியிட்ட பிறகு சொல்லுங்க பத்ரி. இன்டர்நெட் வழியா புத்தகம் ஆர்டர் பண்ற வசதி இருக்கிறதா ?

    ReplyDelete
  5. ////ஹேஜியோகிராபி என்றால் "திவ்ய சரித்திரம்" என்று சொல்லலாம்.

    ....ராமானுஜர், சங்கரர், வேதாந்த தேசிகர் ஆகியோரது "திவ்ய சரித்திரங்களும்"
    இதுபோன்றவைதான்.///

    N O N S E N S E.

    Hindus never bother about the historical value of their saints. But, for muslims and christians it is very important to project these biographies as something actually happened. Because,

    1. they want everyone to believe it as something true.

    2. their concept of time: one life, one birth, one death, and eternal hell/heaven

    But, for hindus time itself has no value, it is eternal. so, they really do not bother about the historical value of "Ramarajya", but for the muslims it is very important to prove the holiness of caliphate.

    I can remain a Hindu without much belief on Ramarajya, but a muslim cannot afford to reject Caliphate.

    Because muslims want to establish the caliphate throughout the world. It is the sole purpose of Islam and every muslim.

    Congratulations for being the mouthspeak and promoter of Islamaization of tamilnadu.

    (But, sorry you will not have any huris in the heaven, ye kuffar !)

    Hope your book mentions that "every leader" of the Islam, including, Mohammad, led a painful life for themselves and others, and met with a goary death.

    ReplyDelete