Friday, October 03, 2008

ஓர் அல்ஜீரிய அகதியின் கதை

நேற்று TV5Monde-ல் அழகான ஒரு படத்தைப் பார்த்தேன். அதன் தலைப்பு இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. நான் பார்க்க ஆரம்பித்தபோது படம் தொடங்கியிருந்தது. SCV-யின் எலெக்ட்ரானிக் டைரெக்டரியின்படி படத்தின் பெயர் “Les Petites mains” என்று போட்டிருந்தது. இது சரியில்லாமலும் இருக்கக்கூடும்.

நான் TV5Monde சானலுக்குப் போனால் அங்கு அல்ஜீரியா பற்றித்தான் படம் போடுவார்கள் போல.

அல்ஜீரியாவிலிருந்து பிரான்சுக்கு வந்து வாழ்க்கையைத் தேடும் அகதி ஒருவரின் கதை. படம் ஆரம்பிக்கும்போது அவருக்கு நல்ல வயதாகிவிட்டது. மனைவி இறந்துவிட்டார். நான்கு குழந்தைகள். அதில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். ஒரு பையன் சிறையில் இருக்கிறான். ஆனால் மற்ற பிள்ளைகள், அவன் எங்கேயோ வெளி நாட்டில் இருப்பதாகப் பொய் சொல்லி அவ்வப்போது கிரீட்டிங் கார்டுகளை அனுப்பி வருகிறார்கள். முதல் பெண்ணை, 17 வயதாகும்போதே அல்ஜீரியன் ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்கள். அவளுக்கு நான்கு குழந்தைகள். வெளியே இருக்கும் மகன், டாக்ஸி டிரைவராக இருக்கிறான். கடைசி மகள் (சொஹேலா) டாக்டருக்குப் படித்தவள். இன்னும் மணமாகவில்லை. அவளை பிரெஞ்சு டாக்டர் (கிறித்துவன்) ஒருவன் காதலிக்கிறான்.

சொஹேலாவின் தந்தை சிகரெட் பிடிப்பவர். புற்றுநோய் வந்து இறக்கப்போகிறார். உடனே தாய் நாடு ஞாபகம் வந்து அல்ஜீரியா செல்ல முடிவு செய்கிறார். டிக்கெட் எல்லாம் எடுத்த பிற்பாடு, முதலில் சொஹேலாவிடம் பேசுகிறார். அவளுக்கு மணமாகவில்லை என்பதுதான் அவரது கவலை.

தந்தை அல்ஜீரியா திரும்புவதாகச் சொல்வது சொஹேலாவை பாதிக்கிறது. கடைசியில் கப்பல் ஏறச் செல்லும் தந்தையை ரயிலில் அனுப்பாமல் தானே காரில் அழைத்துக்கொண்டு செல்வதாகச் சொல்கிறாள்.

கதை பெரும்பாலும் அவர்களது கார்ப் பயணத்தில்தான் நகர்கிறது. இளம் அல்ஜீரிய அகதி, எப்படி பிரான்ஸில் வந்து கஷ்டப்பட்டு, ஏழைமையில் தோய்ந்து, அதிலிருந்து மீண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, ஓரளவுக்கு வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான் என்று தந்தை-மகள் பேச்சில் தெரிய வருகிறது. தனது மகளின் காதலனைப் பார்க்கும் தந்தையால், தன் மகள் அல்ஜீரியனல்லாத ஒருவனைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறாள் என்பதை ஏற்க முடிவதில்லை. ஆனால் அவரே பின்னர் மனம் மாறி, மகளது விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறார்.

மகளிடம், தன் மனைவிக்குத் தான் பரிசாகக் கொடுத்திருந்த நகைகளை எடுத்துக் கொடுக்கிறார். “உன் மனம் விரும்பியவனுடன் உனக்கு மணம் நடக்கும். உனக்கு நிறைய குழந்தைகள் பிறக்கும். ஆனால் அவர்களுக்கு ‘முகமது’ என்று பெயர் வைப்பது சற்றே அபத்தமாக இருக்கலாம்” என்று கூறிச் சிரிக்கிறார். தனது மகளது வேர்கள் தன்னுடைய வேர்களிலிருந்து வேறுபட்டவை என்பதை நெகிழ்ச்சியுடன் அவர் ஏற்றுக்கொள்வதை இதைவிட அழகாகக் காண்பிக்கமுடியுமா என்று தெரியவில்லை.

தனது மகளிடம் தன் சிறுவயதுக் காதலைப் பற்றிச் சொல்லி, அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லச் சொல்வதும் நெகிழ்ச்சியானது. காதலியா என்று மகள் கேட்கிறாள். இல்லை, நட்புதான், கல்யாணம் என்றால் அது ஓர் அல்ஜீரியப் பெண்ணுடன்தான் என்று அழுத்தமாக வலியுறுத்துகிறார் தந்தை. அந்தப் பெண்ணும் வியட்நாமிலிருந்து வந்த ஓர் அகதி. ஹோட்டலில் பணியாற்றுபவள். மிச்சம் மீதி உணவுகளை எடுத்துவைத்து, இந்த அல்ஜீரியனுக்குக் கொடுத்தவள்.

***

மூப்பு, அதனால் விளையும் தனிமை, உடல் அவஸ்தை, தன் தாய் நாட்டுக்குச் சென்று உயிரைவிடத் துடிக்கும் முரட்டுத்தனம், பிள்ளைகள்மீது பாசம், ஆனால் அந்தப் பாசத்தாலும் சில முரட்டுத்தனமான பழக்கவழக்கங்களாலும் சிறு வயதில் அவர்களுக்கே பாதகங்களை ஏற்படுத்துதல், ஆனால் வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளுக்காக முற்றிலுமாகத் தங்கள் உணர்வுகளை விட்டுக்கொடுத்தல்... இப்படி எல்லாவிதத்திலும் பார்க்கும்போது அந்தப் படத்தின் தந்தை என் தந்தையை நினைவுபடுத்துகிறார். நம் எல்லோரின் தந்தையாகவும் அவர் இருக்கக்கூடும்.

இதுதான் நல்ல சினிமாவின் சாதனையோ?

***

கடைசி நாளன்று, தன் மகள் படுத்துத் தூங்கும்போது அவசர அவசரமாக அவளது படுக்கையில் ஒரு கடிதத்தை விட்டுவிட்டு, தன் தம்பியைக் கூட்டிக்கொண்டு, கப்பல் இருக்கும் துறைமுகத்துக்கு வருகிறார். தூங்கி எழுந்திருக்கும் மகள், அவசர அவசரமாக உடையை அள்ளி வாரிக் கட்டிக்கொண்டு, தந்தை கிளம்புவதைப் பார்க்க ஓடிவருவதற்குள், கப்பல் புறப்பட்டிருக்கிறது. பெண்ணின் கண்களில் சோகமும் கண்ணீரும். அங்கேயே ஃப்ரீஸ் செய்து ஒரு மெல்லிய சோகம் கலந்த பாடல் பின்னணியில் இசைக்க, கிரெடிட்ஸ்.

படத்தில் பின்னணி இசை என்று ஒன்றுமே கிடையாது. ஆனால் அதற்கான தேவையும் இல்லை. நடுவில் ஒரு பாடலும் ஆடலும் - முழுவதும் “கனவு சீனாக”. கிழவராக நடித்தவர் அப்படியே வாழ்கிறார். அவரது கை நடுங்குதலும், அவரது முக பாவங்களும், அவரது பேச்சும் அமர்க்களம்.

எப்படி இவர்களால் சாதாரணமான சின்னஞ்சிறு நிகழ்ச்சிகளைக் கோர்த்து மனத்தில் உட்காரும்படி சினிமாவாக மாற்ற முடிகிறது?

2 comments:

  1. நல்ல ஒரு திரைப்படம் பார்த்த உணர்வினை தருகிறது உங்கள் விமர்சனம்

    ReplyDelete
  2. Good - GLobally feelings are the same for everyone - We all start living like our parents one day - Good post - keep writing about movies like this.

    ReplyDelete