Wednesday, December 30, 2009

விளம்பர மாயாஜாலம்

மார்க்கெட்டிங் மாயாஜாலம் என்ற புத்தகத்தை சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதி கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அதனைத் தொடர்ந்து விளம்பர மாயாஜாலம் என்ற புத்தகம். அதில் அட்டையில் ஆப்பிள் என்றால், இதில் ஆரஞ்ச்!

இதை நான் ரசித்தபடியே எடிட் செய்தேன். நிறைய சிரிக்க வைத்த வசனங்கள். கொஞ்சம் tough சப்ஜெக்ட் என்றாலேயே எழுத்தாளர்களுக்கு பயம் வந்துவிடுகிறது. இதை வாங்கிப் படிப்பார்களா என்று தயக்கம். அதனாலேயே ஒரு defensive attitude காரணமாக கொஞ்சம் சிரிப்பை அதிகமாகக் கொடுத்துவிடுகிறார்கள். ஆனாலும் அதனால் குறை ஒன்றும் இல்லை.

தொலைக்காட்சி விளம்பரங்களைக் கண்டாலே டென்ஷனாகி, அடுத்த சானல் போவார்கள் ஒரு சிலர். ஆனால் ஒரு சிலர் விளம்பரங்களை ரசித்துப் பார்ப்பார்கள். நான் விளம்பரங்களை ரசிக்கும் ஜாதி. பல விளம்பரங்கள் கண்றாவியாக இருக்கும். முக்கியமாக சன் நியூஸில் காணப்படும் பல ‘லோக்கல்’ விளம்பரங்கள். முறுக்குக் கம்பிகளுக்கு வரும் விளம்பரங்கள் அனைத்தையும் கொளுத்தவேண்டும். ரசனை இல்லாமல் கழுத்தறுக்கும் வெரைட்டி அவை. ஆனால் எக்கச்சக்கமாகக் காசு செலவு செய்து எடுக்கப்படும் பல ‘அகில இந்திய’ விளம்பரங்களும் கழுத்தறுவைதான்.

இந்த மேலோட்டமான புரிதல் தாண்டி, விளம்பரங்கள் என்னென்ன காரணங்களுக்காக எடுக்கப்படுகின்றன, அவை வெற்றி பெறுகின்றனவா என்று ஆராயப் போனால், சுவாரசியமான ஒரு புது உலகம் கிட்டுகிறது. அந்த உலகத்துக்குள் எப்படிச் செல்வது என்பதை சதீஷ் கிருஷ்ணமூர்த்தி காண்பித்துக் கொடுக்கிறார்.

இது ஓர் அறிமுகப் புத்தகம் மட்டுமே. அடுத்த எடிஷனில் மேலும் மேம்படுத்தப்படலாம். ஆனாலும் இதன் 130-சொச்சப் பக்கங்களில் தொலைக்காட்சி விளம்பரம், ரேடியோ விளம்பரம், அச்சு விளம்பரம் என்று பலவற்றைப் பற்றிய கோட்பாடுகள் முதல், விளம்பரங்களின் வீச்சு, அவற்றின்மூலம் சாதிக்கக்கூடிய விஷயங்கள் என்று பலவும் தெரியக் கிடைக்கிறது.

கடைசி அத்தியாயம், ஒரு fictitious பொருளுக்கு விளம்பரம் உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மோட்டார் பைக் பிராண்ட் அதிகம் விற்பதில்லை. அந்த நிறுவனத்தின் தலைவர் தன் விளம்பர ஏஜென்சியிடம் தன் கவலையைத் தெரிவிக்கிறார். அங்கு தொடங்கும் உரையாடல், அங்கிருந்து விளம்பர ஏஜென்சிக்கு வந்து, அங்கு விளம்பரங்கள் உருவாக்கப்படுவதை கொஞ்சம் அலசுகிறது.

புத்தகத்தின் ஹைலைட் இந்த அத்தியாயம் என்று நிச்சயமாகச் சொல்வேன்.

விளம்பரத் தொழிலில் இருப்பவர்கள், எம்.பி.ஏ படிப்பு படிப்பவர்கள், சிறு தொழில் நடத்துபவர்கள் என அனைவருக்கும் உபயோகமான புத்தகம்.

No comments:

Post a Comment