Friday, March 05, 2010

அமர சித்திரக் கதைகள் - தமிழில்

   
   

முன்னொரு காலத்தில் அமர சித்திரக் கதைகள் தமிழில் வந்தன. பழைய காலத் தமிழில். ஒரு பத்துப் புத்தகங்கள் வந்திருந்தால் பெரிது. அதில் னை, லை எல்லாம் பழைய மாடல் எழுத்துகள். எம்.ஜி.ஆர் சீர்திருத்தத்துக்கு முந்தையவை. கம்ப்யூட்டர் டைப்செட்டிங் காலத்துக்கு முந்தையவை. எழுத்துகள் கொட்டை கொட்டையாக கையால் எழுதப்பட்டிருக்கும்.

இப்போது அமர சித்திரக் கதை நிறுவனமும் நியூ ஹொரைஸன் மீடியாவும் இணைந்து இந்தப் புத்தகங்களுக்குப் புத்துயிர் ஊட்டுகின்றன. இன்று ஆங்கிலத்தில் மட்டும் (கொஞ்சம் ஹிந்தி...) இருக்கும் இந்தப் புத்தகங்களை தமிழகக் குழந்தைகள் மனம் மகிழும் வகையில் இன்றைய தமிழில், எளிய நடையில் கொண்டுவருகிறோம். முதல் நான்கு புத்தகங்கள் இப்போது வெளியாகியுள்ளன. 32 பக்கங்கள் கொண்ட இந்த கிரவுன் 1/4 வண்ணப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் விலை ரூ. 35 மட்டுமே.

குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த இந்தப் புத்தகங்கள் நிச்சயம் உதவும் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம். இனி வரும் மாதங்களில் மேலும் மேலும் புதிய புத்தகங்கள் வெளியாகத் தொடங்கும்.

22 comments:

  1. பெரியார் சீர்திருத்தம், எம்.ஜி.ஆர். அமலாக்கம்

    ReplyDelete
  2. i remember reading some of them (in Tamil) in black and white editions... from paico publishing company, i think.

    ReplyDelete
  3. நன்றி பத்ரி

    //இன்று ஆங்கிலத்தில் மட்டும் (கொஞ்சம் ஹிந்தி...) இருக்கும் இந்தப் புத்தகங்களை//

    மற்ற உள்ளூர் மொழிகளைப்பற்றித் தெரியவில்லை. இங்கே கன்னடத்தில் கிடைக்கிறது. மலையாளத்திலும் பார்த்த ஞாபகம் உள்ளது (’மலையாள மனோரமா’ குழுமம் என்று நினைவு)

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  4. கேண்டில் புத்தகம் ஈரோட்டில் இருக்கும் கிழக்கு சோரூம்ல் கிடைக்குமா??

    ReplyDelete
  5. Poonthalir Brought out "poonthalir amar chitra kathakail"

    It was a fortnightly issue - on 10th and 25th of every month

    There were quite a good stories there

    I believe Mahabharatham was told in 42 parts or something like it

    You can try translating that and bringing one big volume

    ReplyDelete
  6. I was waiting for this, to make my daughter to read tamil books. thanks for the info. We will surely buy from the book shops.

    ReplyDelete
  7. சித்திரக் கதைகளின் வாயிலாக, இந்துத்துவத்தைத் தமிழ்ச் சிறாரிடமும், அவர்களின் பெற்றோரிடமும் அறிமுகப்படுத்தும் உங்கள் முயற்சி வெல்ல வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. 32 பக்க புத்தகத்திற்கு ரூ.35 விலை அதிகமாகத் தெரிகிறது.

    ReplyDelete
  9. //முன்னொரு காலத்தில் அமர சித்திரக் கதைகள் தமிழில் வந்தன. பழைய காலத் தமிழில். ஒரு பத்துப் புத்தகங்கள் வந்திருந்தால் பெரிது//

    முற்றிலும் தவறான தகவல்கள் பத்ரி. நீங்கள் இப்படி தகவலை அளிப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

    அமர் சித்திரக் கதை முதலில் வெளியிட்ட கதை கிருஷ்ணன் என்றுதான் அவர்கள் தவறாக கூருவதைப்போலத்தான் நீங்கள் கூறுவதும் இருக்கிறது. (அவர்கள் முதலில் புகழ் பெற்ற ஆங்கில கதைகளை மொழி பெயர்த்து வெளியிட்டு விட்டு பின்னர் தான் கிருஷ்ணன் கதையை வெளியிட்டார்கள். இது நடந்தது அறுபதுகளின் முடிவில். அந்த கதைகளை மொழி பெயர்த்தவர்கள் புகழ்பற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் ஆகிய கல்வி கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள்.)

    முதல் பத்து இதழ்களை வெளியிட்ட பின்னர் அவர்கள் கிருஷ்ணன் கதையை பல மொழிகளில் வெளியிட்டார்கள். மொத்தம் என்னிடமே பதினைந்து அமர் சித்திரக் கதைகள் இருக்கின்றன. எனவே அவர்கள் தமிழில் வெளியிட்டது மொத்தம் இருபத்தி ஐந்தாவது இருக்க வேண்டும்.

    பின்னர் எண்பதுகளின் மத்தியில் கேரளாவை சேர்ந்த பைகோ நிறுவனம் (இவர்கள் தான் பூந்தளிரை வெளியிட்டவர்கள்) இந்த கதைகளின் உரிமையை தமிழில் வெளியிட ஒப்புதல் பெற்றனர். அவர்கள் மொத்தம் நூற்றி பதினாறு புத்தகங்களை தமிழில் வெளியிட்டனர். அற்புதமான மொழி பெயர்ப்பு இந்த புத்தகங்களை வெற்றி பெற வைத்தது.

    முதல் இதழ் - கணேசர் (10/10/1984)
    கடைசி இதழ் - 10-09-1989

    என்னுடைய பயணம் முடிந்து இன்றுதான் சென்னை திரும்பினேன். அதனால் உங்கள் பதிவுகளை இன்றுதான் பார்க்க முடிந்தது. அதனால் தான் இந்த தாமதமான பதில்.

    ReplyDelete
  10. //i remember reading some of them (in Tamil) in black and white editions... from paico publishing company, i think.//

    Yes, You are right. But they were not in black and white. they were in double colour (I Do not know the right term, but that's how it is known in comics circle).

    ReplyDelete
  11. அன்புள்ள விஸ்வா: நான் சொல்லும் தகவல் அமர சித்திரக் கதைகள் நிறுவனம் சொல்லும் தகவலிலிருந்து வருவது. அவர்கள் தங்களிடம் சுமார் 10-15 கதைகள் மட்டுமே தமிழில் உள்ளன என்று அவற்றிலிருந்து சிலவற்றைத் தந்தார்கள். அதுவும்கூட அவர்களிடம் முழுமையாக இல்லை. அவற்றிலும் தமிழ் மொழிபெயர்ப்புகள் படு சுமார். அதனால்தான் அடிப்படையிலிருந்து முழுமையாக மீண்டும் ஒவ்வொன்றாகத் தமிழில் கொண்டுவருவது என்று முடிவுசெய்தோம்.

    பாய்கோ தமிழ் வடிவத்தை நான் பார்த்ததில்லை. அமர சித்திரக் கதைகள் நிறுவனத்திடமும் பிரதிகள் இல்லை. அந்த ‘லைசென்ஸ் ஒப்பந்தம்’ யார் செய்து, எப்படி வெளியானது என்ற தகவல் என்ன என்று விசாரிக்கிறேன்.

    ReplyDelete
  12. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி

    ReplyDelete
  13. பத்ரி சார்,

    //நான் சொல்லும் தகவல் அமர சித்திரக் கதைகள் நிறுவனம் சொல்லும் தகவலிலிருந்து வருவது.// இவர்கள் என்றுமே தங்களின் இமேஜ் பற்றிய சிந்தனையில் உண்மைகளை தருவதில்லை. கிருஷ்ணன் கதை தான் முதல் அமர் சித்திரக் கதை என்று இன்றும் கூறி வருகிறார்கள். உண்மையில் அது பதினொன்றாவது புத்தகம் ஆகும். முதல் பத்து கதைகளின் அட்டைப்படங்களை காண இந்த சுட்டியை பயன்படுத்தவும்.

    //அவர்கள் தங்களிடம் சுமார் 10-15 கதைகள் மட்டுமே தமிழில் உள்ளன என்று அவற்றிலிருந்து சிலவற்றைத் தந்தார்கள். அதுவும்கூட அவர்களிடம் முழுமையாக இல்லை// என்னிடம் மொத்தம் பதினெட்டோ இருபதோ இருக்கக் கூடும். தேடித் பார்க்கிறேன். நாளை அல்லது புதன்கிழமை உங்களை நேரில் சந்தித்து அந்த புத்தகங்களை காட்டுகிறேன். (முழுமையாக -அட்டை டு அட்டை).

    //அவற்றிலும் தமிழ் மொழிபெயர்ப்புகள் படு சுமார்.// இதனை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை. அந்த நேரங்களில் தமிழகத்தில் இருந்த பல சிறந்த சிறுவர் இலக்கியவாதிகள் தான் அதனை மொழி பெயர்த்தனர். இந்த ஒரு காரணத்தினாலே நான் அந்த புத்தகங்களை பாதுகாத்து வருகிறேன்.

    //பாய்கோ தமிழ் வடிவத்தை நான் பார்த்ததில்லை.// சில சாம்பிள்களை உங்களுக்கு தருகிறேன். பாருங்கள். எனக்கு தெரிந்த வகையில் அதுதான் மிகச் சிறப்பாக வந்த ஒரு புத்தக வரிசை. அதன் மொழிபெயர்ப்பு பொறுப்பை ஏற்றவரின் திறமை அது. ஆம், பல விருதுகளை வென்றுள்ள திரு வாண்டுமாம ஆவர்கள் தான் அந்த மொழி பெயர்ப்பு பொறுப்பை ஏற்றார். (இந்த விஷயமே பலருக்கும் தெரியாது).

    //அமர சித்திரக் கதைகள் நிறுவனத்திடமும் பிரதிகள் இல்லை. அந்த ‘லைசென்ஸ் ஒப்பந்தம்’ யார் செய்து, எப்படி வெளியானது என்ற தகவல் என்ன என்று விசாரிக்கிறேன்// பைகோ நிறுவனம் கேரளாவை சார்ந்தது (எர்ணாகுளம், ஜூ ஸ்ட்ரீட்) சென்ற வாரம் நான் அங்கு சென்றபோது அவர்களை சந்திக்க நினைத்தேன், முடியவில்லை. அந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு பாய் அவர்கள் 1989ல் இறந்துவிட்டார்.(அதனால் அந்த வருடம் தான் பைகோ வெளியிடுகளின் கடைசி) அதன் பின்னர் அவர்களின் புதல்வர்களே அந்த நிறுவனத்தினை ஏற்று செல்லும் பொறுப்பை கொண்டுள்ளனர்.

    உங்களுக்கு வேண்டுமானால் ஒரு க்ளூ தருகிறேன். அவர்கள் நேரிடையாக தமிழ் உரிமையை பெற்றிருக்க வாய்ப்புகள் குறைவு. பூந்தளிரையே அவர்கள் பூம்பட்டா என்ற பெயரில் தான் மலையாளத்தில் நடத்தி வந்தார்கள். அவை தான் மொழி பெயர்க்கப்பட்டு தமிழில் வந்தன. அவர்கள் முறையான உரிமை பெற்றே நடத்தினார்கள். அதனால் உரிமைகள் முதலில் மலையாளத்திலும் பின்னர் தமிழிலும் வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

    இந்த பைகோ நிறுவனம் தான் உலக இதிகாசங்களை தமிழில் வெளியிட்டார்கள். பைகோ கிளாசிக்ஸ் என்ற பெயரில் ஷேக்ஸ்பியர் முதல் வேல்ஸ் வரை பலரின் கதைகளை சித்திரக் கதை வடிவில் அருமையான மொழிபெயர்ப்பில் தந்தனர்.

    ReplyDelete
  14. விஸ்வா: மற்றொரு விஷயம். அமர சித்திரக் கதைகள் நிறுவனம் இந்தியா புக் ஹவுஸ் என்பதன் ஓர் அங்கமாக இருந்தது. பின்னர் பிரைவேட் ஈக்விடி குழுமம் ஒன்று அ.சி.க டிவிஷனை மட்டும் விலைக்கு வாங்கிவிட்டது. அதனால் நிறைய மேனேஜ்மெண்ட் மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே பழைய ஆசாமிகள் யாரும் அங்கே இல்லாமல் இருக்கக்கூடும். மேலும் பாய்கோ காலத்தில் இருந்த அக்ரீமெண்ட்கள் அனைத்தும் இந்தியா புக் ஹவுஸுடன் போட்டதாக இருக்கும். புதிதாக அமைக்கப்பட்ட ஏ.சி.கே நிறுவனத்தில் அது தொடர்பான காகிதங்கள் இல்லாமல் இருக்கலாம்.

    அதன்பின் சமீபத்தில் ஏ.சி.கே நிறுவனமே இந்தியா புக் ஹவுஸை விலைக்கு வாங்கியுள்ளது.

    ReplyDelete
  15. // முதல் பத்து கதைகளின் அட்டைப்படங்களை காண இந்த சுட்டியை பயன்படுத்தவும்//

    http://ayyampalayam.blogspot.com/2010/01/blog-post.html

    ReplyDelete
  16. ஒரு த‌க‌வ‌ல்,

    பூந்த‌ளிர் வெளியீட்டில் வ‌ந்த‌து,

    1985 88

    முழு ம‌ஹாபார‌த‌மும், க‌பீஷ் போன்ற‌ செல்ல‌ பிராணி க‌ளின்,

    க‌தைக‌ளும் வெளிவ‌ந்த‌ன‌

    10 15 கிடையாது? 100 க்கு மேல்,

    என்னிட‌மே, 50 புத்த‌க‌ங்க‌ள் பொக்கிஷ‌மாக‌ பாதுகாத்து வைத்துள்ளேன்.

    ச‌ஹ்ரித‌ய‌ன்

    ReplyDelete
  17. அமர் சித்ர கதைகளில் புராண கதைகள் சுமாராக தான் இருக்கும். ஆனால் பாட்டி கதைகளும் மதம் சார்ந்த கலை நிகழ்வுகளும் பெரும்பான்மையாக மறைந்ததாலும் குறைந்ததாலும் சினிமா டிவி மட்டும் பார்த்து வளர்ந்த ஓரிரண்டு தலைமுறைகளுக்கு இவையே கதை மூலமாக விளங்குகின்றன.

    அ-சி-க வில் நான் மிகவும் ரசித்தவை பீர்பல், தெனாலி ராமன், பஞ்சதந்திரம், புத்த ஜாதகம் ஆகியவை. ரத்னவலி, உதயணன் கதை, எலிவணிகன் (The mouse merchant), ப்ரிஹத்ஹரி கதை, தேவி சௌத்ராணி (ஆனந்த மடத்தின் கதை சுருக்கம் என்று நினைக்கிறேன்) இவற்றை அ-சி-க தயவில் தான் அறிய முடிந்தது. ஆஸ்டரிக்ஸ் டிண்டின் போன்ற பெருவடிவ கதைகள் ஏதும் இல்லாதது ஒரு பெரும் குறை தான் - ஏன் இல்லை? சோசலிசத்தால் தேய்ந்த வாங்கும் சக்தியா, திறமை குறைவா, காமிக்ஸ் தானே என்ற ஏளன மனப்பாடா?

    பத்ரி: முயற்ச்சிக்கு பாராட்டுக்கள். இரும்புக்கை மாயாவியும் வருவாரா?

    ர கோபு

    ReplyDelete
  18. முக்கிய‌ கார‌ண‌ம், அப்போழுது டிவி கிடையாது.

    விசுவ‌லாக‌ ப‌ட‌க்க‌தைக‌ள் அந்த‌ இட‌த்தை நிர‌ப்பின‌.

    அதுவும், அந்த‌ சித்திர‌ங்க‌ள் சிறுவ‌ர் ம‌ன‌துக்கு பேசுவ‌து போல‌ வே இருக்கும்.(உரையாட‌லின் ப‌ல‌ம்)

    மிக‌வும் தெளிவான‌ பிரிண்ட கூட‌.

    ந‌ன்றி,

    ப‌த்ரி , மேல‌ க‌ண்ட‌ 4 புத்த‌க‌ங்க‌ள், ந‌ல்ல‌ ஆர‌ம்ப‌ முய‌ற்சி, ஆனால், ப‌ட‌ங்க‌ளில் தெளிவு இன்னும் வேணும், இதுவே, சிறு உள்ள‌ங்க‌ளை புத்த‌க‌த்திற்கு கொண்டுவ‌ரும்,

    ச‌ஹ்ரித‌ய‌ன்

    ReplyDelete
  19. எங்களிடம் அந்தக்காலத்தில் சுமார் 10 - 12 அ.சி. க புத்தகங்கள் இருந்தன. அவை எதுவுமே புராணம் அல்லது வரலாறு அல்ல. சிந்த்ரெல்லா, பனிவதனி (Snow White),ஆழ்ந்துறங்கும் அழகி (Sleeping Beauty), ஜாக்கும் மந்திர அவரைக்கொடியும் (Jack & the Bean Stalk)போன்றவை. தற்போது நீங்கள் வெளியிடுவதில் அந்த தலைப்புகள் இல்லாதது ஏமாற்றமாக உள்ளயது.

    ReplyDelete
  20. சென்னையில் இருக்கும் துவக்கப்பள்ளி மாணவிக்கு இந்த புத்தகங்களை அனுப்பினேன். அந்த கட்டிடத்திலேயே தமிழ் படிக்கும் குழந்தை யாரும் இல்லை. அதனால் ஆங்கில புத்தகங்களுக்கு மாற்றிக்கொண்டார்கள்.

    சிலநாட்கள் முன் யாருக்கோ வாய் கிழிந்தது - தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தி அயல்நாட்டு தமிழர்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித் தருகிறார்களாம். சென்னையில் இருந்து ஆரம்பித்தால் நலம்.

    ReplyDelete
  21. ரங்கதுரை, தஞ்சை.

    வணக்கம் நண்பர்களே, அ.சி.க வை கூகுளில் தேடி அது இங்கு கூட்டி வந்தது.

    விஸ்வா சார் என்னவென்று பாராட்ட இத்தனை தகவலுக்கு.
    மிக்க நன்றிகள்.

    என் வாழ்வின் நடுவயது ஆரம்பமும், பசுமையுமான காலங்கள் அவை.

    என்னை தஞ்சை நெல் பூமிக்கு மாற்றி இருந்தார்கள். தஞ்சை-திருவாரூர்-நாக பட்டிணம்-புதுக்கோட்டை வரையிலுமான குறுங் கிராம விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்யும் பணத்தை கையாளும் பொறுப்பு மிக்க,குறைந்த வேலைகள் உள்ள பணி.

    படிநிலை அதிகாரம் கொண்ட கிராமங்களில் இருக்கும் பஞ்சாயத்து தலைவருக்கே நான் தான் வி.ஐ.பி, அப்போ மக்கள் எப்படி மதித்திருப்பர் பாருங்கள். மேள தாளம் இல்லாதது தான் பாக்கி ? விவசாயிகளுக்கு வழங்க கொண்டு போகும் 3,000 பணத்திற்கு !

    இவ்வாறிருக்கையில் என் அண்ணன் குடும்ப சூழல் காரணமாக அவர் மகனை என்னிடம் வளர வந்தான்.

    சதா மௌனம், வெறுமை, தோய்வு 8 வயதில் !

    அப்போது தான் விஸ்வா சொன்னபடி பைகோ நிறுவனம் தன் அழகிய வெளியீடுகளை களத்தில் இறக்கியது.

    மகனை புத்தக கடைக்கு அழைத்துச் சென்ற போது வைத்த கண் வாங்காமல் அந்தப் புத்தகங்களை பார்த்து புரட்டிக்கொண்டிருந்தான். வாங்கித் தந்தேன். நானும் மயங்கித் தான் போனேன் காட்சிகளின் அழகில்.

    மகாபாரதத்துக்குள் மூழ்கி தன்னை பிடித்த கவலைகளை மறந்தான் சிறுவன்.ஒவ்வொரு மாதமும் அநுராகம், அ.சி.க, தவறாது வாங்கிச் சேகரித்தோம்.

    பிறகு மேற்சொன்பபடி சின்ரெல்லா போன்றவை,பல இதழ்களில் வந்தவை என காமிக்ஸ், கார்டூன் சேகரிப்பு பல மடங்கானது. காலம் தன் சுழற்சி வேகத்தில்... படங்களுடனே மூழ்கிப் போன மகன்..அறங்களை யாரும் போதிக்காமலே கற்றுக் கொண்டான், வேகமாய் படித்தான், முதன் மாணாக்கனாய் ஆனான் எவ்வித ட்யூஷன் ஜெயிலுக்கும் போகாமல் மல்டிமீடியா படிக்க ஆஸ்றேலியா போய் பேராசிரியனாய் இருக்கிறான். சுபம்.

    ஆனால், இன்றைக்கு பல விருதுகள் பெறும் போதும், எனது சித்தப்பாவினால் அடைந்த வாழ்க்கை என்னும் போது தான் ஒரு பொறுப்பு மிக்க சித்தப்பா வேலையை நான் செய்திருந்தாலும், செய்தவை என்னவோ அ.சி.க வும்.இன்ன பிற படக் கதைகள் ரூபத்தில் குழந்தை இலக்கியமும் தான்.

    இன்றைய குழந்தைகளுக்கு கார்டூனை விடவும் தான் சிந்தித்து அறியும் படி , உறவாடும் படி, கதையை புரிந்து கொண்டு அதை விட பல மடங்கு சிந்திக்கும் சாத்தியமுள்ள புத்தகங்களே தேவை இது இயக்கமாகவே மாற வேண்டும்.

    கிழக்கு பதிப்பகம் வளர்க.

    நன்றி

    ReplyDelete
  22. என் குழந்தைகளுக்கு அமர சித்திரக் கதை புத்தகங்கள் வேண்டும். எங்கே கிடைக்கும்? தயவு செய்து உதவுங்கள். நன்றி.

    ReplyDelete