Thursday, August 11, 2011

புன்னகையை விதைக்கும் இளைஞர்கள்

சென்ற ஞாயிறு அன்று எதிராஜ் கல்லுரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். Smile Welfare Foundation என்ற தொண்டமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவுவிழா.

இந்த அமைப்பை ஆரம்பித்த அனைவரும் ஈரோட்டில் இருக்கும் Institute of Road and Transport Technology என்ற கல்லூரியின் மாணவர்கள். படித்து முடித்து பல்வேறு இடங்களுக்கு வேலைக்குச் சென்றபிறகு, ஓரளவு சம்பாதிக்கத் தொடங்கியபிறகு ஏதோ செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அப்படி 2004-ல் உருவானதுதான் மேலே சொன்ன அமைப்பு.

ஆரம்பத்தில் அவர்கள் சேர்த்த சிறுமளவு பணத்தை ஏதேனும் நல்ல காரியங்களுக்குத் தருவது என்று மட்டும்தான் யோசித்திருந்தனர். பின்னர் தமிழக அரசு நடத்தும் (அனாதை) இல்லங்களுக்கு ஏதேனும் செய்யலாம் என்று அவர்களுக்கு யாரோ அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசின் இல்லங்கள், ஆதரவற்றவர்களுக்காக நடத்தப்படுவது. ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், தம் பிள்ளைகளை எந்தவிதத்திலும் சரியாக வளர்க்க முடியாதோர் ஆகியோர் தம் பிள்ளைகளை இந்த இல்லங்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு இந்த இல்லங்கள் பற்றிய முழுமையான தகவல் கிடையாது. நான் இந்த இல்லங்களுக்குச் சென்று பார்த்ததும் கிடையாது.

ஸ்மைல் குழுவினர் சென்னை கொசப்பேட்டையில் இருக்கும் பெண்கள் இல்லத்துக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான சில பொருள்களை வாங்கிக்கொடுத்துள்ளனர். அப்போது அந்த இல்லத்தின் பொறுப்பாளர், உண்மையில் இந்தப் பெண்களுக்குத் தேவை கல்விக்கான உதவி என்று சொல்லியிருக்கிறார். பணம் அல்ல; நேரம். இந்தக் குழந்தைகளுக்கு பாடங்களில் உதவ யாரும் இல்லை. டியூஷன் என்று வெளியே எங்கும் செல்லமுடியாது. எனவே இல்லத்துக்கே வந்து டியூஷன் சொல்லிக்கொடுக்க முடியுமா என்று அவர் கேட்டிருக்கிறார். அப்படி ஆரம்பித்ததுதான் அவர்களுடைய சிக்‌ஷா திட்டம். கொசப்பேட்டை, வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் உள்ள இல்லங்களில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு விளையாட்டு கலந்து பாடங்களைச் சொல்லித்தர ஆரம்பித்திருக்கிறார்கள்.

அங்கிருந்து அடுத்த கட்டமாக புன்னகைப் பாலம் என்ற திட்டத்தில், 10, 12 வகுப்புப் பிள்ளைகளுக்கு அதிக மதிப்பெண்கள் பெறும் விதமாகப் பயிற்சி தரத் தொடங்கியுள்ளனர்.

ஒரு தன்னார்வலர் என்னிடம் இவை பற்றி விளக்கமாகச் சொன்னார். தன்னார்வலர்களோ பெரும்பாலும் ஆண்கள். இவர்கள் உதவச் செல்லும் இல்லங்களோ பெண்களை மட்டுமே கொண்டவை. இல்ல அலுவலரிடம் நம்பிக்கை ஏற்படுத்தி பயிற்சிகள் நடக்கும்போது திடீரென அலுவலர் இடம் மாறுவார். எனவே மீண்டும் ஆரம்பித்திலிருந்து அந்தப் புதிய அலுவலரிடம் தொடங்கவேண்டும். இதனால் எத்திராஜ் மகளிர் கல்லூரியைத் தொடர்புகொண்டு அங்கிருந்தும் சில தன்னார்வலர்கள் வந்து பாடம் கற்பிக்கத் தொடங்கினர். மேலும் ஸ்மைல் தன்னார்வலர்கள் பலரும் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள். தின அலுவல்கள் தாண்டி அவர்களுக்கு நேரம் கிடைப்பதே சிரமம். அதற்கிடையிலும் பலர் குறைந்தபட்சம் வார இறுதியிலாவது இல்ல மாணவிகளுக்குப் பாடங்கள் கற்பித்தனர்.

இதன் விளைவாக தேர்வு பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் அதிகரித்தன. இப்போதெல்லாம் கிட்டத்தட்ட 100% தேர்ச்சி பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன். முன்னெல்லாம் இந்த இல்லங்களில் இருந்த பல பெண்களும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே மீண்டும் ஏழைமை வாழ்க்கைக்குத் திரும்பியபடி இருந்தனர். ஆனால் இப்போது மட்டும் என்னவாம்?

பள்ளிப் படிப்பு முடித்தாயிற்று. பிறகு, மீண்டும் அதே ஏழைமை வாழ்க்கைதானே?

அதனால்தான் ஸ்மைல் தன்னார்வலர்கள் சாதனா என்ற திட்டத்தைக் கொண்டுவந்தனர். தேவை கல்லூரிப் படிப்பு. ஏதோ ஒரு டிகிரி. அத்துடன் மிகுந்த தன்னம்பிக்கை. அதைக்கொண்டு ஒரு நல்ல வேலையைப் பெற்றுவிட முடியாதா என்ன?

ஆனால் இந்த மாணவிகள் எங்கு தங்கிப் படிப்பார்கள்? கல்லூரிக்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ. 1,500-ஓ என்னவோதான். ஆனால் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவேண்டுமென்றால் ரூபாய் 15,000 ஆகுமே? அந்தப் பணத்தில் இன்னும் பலரைப் படிக்கவைக்கலாமே?

ஸ்மைல் நிர்வாகிகள் தமிழகசமூக நலத்துறை அலுவலர்களிடம் சென்று பேசினர். ஏற்கெனவே 12-ம் வகுப்பு வரை இந்த இல்லங்களில் தங்கிப் படிப்பவர்களை தொடர்ந்து அதே இல்லங்களிலேயே தங்க அனுமதிக்க முடியுமா? இருப்பிடமும் உணவும் தரமுடியுமா? படிப்புக்கான செலவை ஸ்மைல் அளிக்கும்.

இதுவரையில் இப்படிப்பட்ட ஒன்றைச் சிந்தித்திராத சமூக நலத்துறையினர் நல்ல முடிவையே எடுத்தனர். தமிழகத்தில் ஏதேனும் ஓர் இல்லத்தில் தங்கி பள்ளிவரை படித்த மாணாக்கர்கள், அடுத்து கல்லூரிக்குச் செல்வதாகா இருந்தால் மீண்டும் அதுபோன்ற இல்லங்களில் தங்கிக்கொள்ளலாம்.

ஸ்மைலின் சாதனா திட்டம் நன்றாகச் செயல்படத் தொடங்கியது. பணத்தை எப்படியாவது திரட்டிவிடலாம் என்கிறார்கள் இவர்கள். இந்தக் கல்லூரிதான் என்றில்லை. குறைந்தபட்சம் ஒரு மாணவி மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். சிலர் பொறியியல் கல்லூரிகளில் படிக்கிறார்கள். மீதமுள்ள அனைவரும் கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கிறார்கள்.

சரி, கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வந்தால் என்ன செய்வது? இந்த மாணவர்களுக்கு சாஃப்ட் ஸ்கில்ஸ் பயிற்சி கொடுத்து, ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்க பிலேஸ்மெண்ட் செல் ஒன்றை உருவாக்கியுள்ளது ஸ்மைல்.

இது தவிர சாஃப்ட் ஸ்கில் சொல்லிக்கொடுக்க கிராமப்புறங்களுக்குச் செல்கிறார்கள். இவர்கள் கல்வி உதவித்தொகை தந்து படிப்பை முடித்த சில மாணவர்களுக்கு வேலையும் வாங்கிக்கொடுத்துள்ளனர்.




நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இரு பெண்கள் பேசினர். இந்த இல்லங்களில் வசித்து, ஸ்மைல் கொடுத்த உதவியால் வாழ்க்கையில் முன்னுக்கு வந்த பெண்கள். (மேலே உள்ள படம் நிர்மலா என்பவருடையது.) மற்றொரு பெண் லோகாம்பா, இப்போது விகடனில் பணியாற்றுகிறார். எந்த அளவுக்கு ஸ்மைல் அவர்களது வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளது என்பதை அருகிலிருந்து பார்க்கமுடிந்தது.

ஸ்மைல் தன்னார்வலர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பது முழுமையாகப் புரிந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்கள் உண்மையில் ஒரு சமூகப் புரட்சிக்கான விதையை நட்டிருக்கிறார்கள். வெறும் புலம்பல்கள் மட்டுமே மலிந்த மத்தியதரத்தினர் வசிக்கும் இந்தியாவில், மாபெரும் மாற்றத்தைத் தங்களால் கொண்டுவரமுடியும் என்பதை இவர்கள் காட்டியிருக்கிறார்கள். அலட்டல் இல்லாமல், ஆரவாரம் இல்லாமல், சிறிதாகத் தொடங்கி வலுவாக முன்சென்றபடி உள்ளனர் இவர்கள்.

ஏழைமையை ஒரே வாரத்தில் ஒழித்துவிடுவோம் என்று மார்தட்டும் அரசியல் ஆரவாரப் பேச்சல்ல இவர்களது. முன்கூட்டியே திட்டமிட்டு, இப்படித்தான் செல்லப்போகிறோம் என்று பாதையைத் தீர்மானித்து இவர்கள் ஆரம்பிக்கவில்லை. நம்மால் என்ன செய்யமுடியுமோ, முயன்று பார்க்கலாம் என்று ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதற்கான பாதை தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.

அவர்களது செயல்முறையில் எனக்குப் பல அம்சங்கள் பிடித்திருந்தன.

1. அரசு அமைப்புகளுடன் வேலை செய்தல். ஆனால் அதே நேரம் அரசின் பணத்தை நம்பியிருக்காமை.
2. பணம் எப்படியும் சேர்த்துவிடலாம் என்ற அதீதமான நம்பிக்கை. இந்த பாசிடிவிசம் ஒன்றுதான் அவர்களை தைரியமாக முன்செல்ல வைக்கிறது. இந்தியாவில் இருந்துகொண்டு ஏதோ ஒரு மேற்கத்திய மத நிதியமைப்புக்கு புரபோசல் எழுதிப் பணம் சேர்த்து, எஸ்.யு.வி வாங்கிக்கொண்டு சமூக சேவை செய்யும் அமைப்பல்ல இவர்களது.
3. முழுமையான ஒரு தொலைநோக்கு இவர்களிடம் உள்ளது. அடிப்படைத் தேவைகளைத் தருகிறது அட்சயா திட்டம். படிப்பை வெறுக்கும் மாணவர்களுக்கு விளையாட்டாகக் கல்வியை அறிமுகப்படுத்துகிறது சிக்‌ஷா. ஆனால் அதே நேரம் பள்ளி இறுதி வகுப்பை நல்ல மதிப்பெண்களுடன் கடக்க உதவுகிறது புன்னகைப் பாலம். அங்கிருந்து கல்லூரிக்கு இட்டுச் செல்கிறது சாதனா; பின் வேலையும் பெற்றுத்தர உதவுகிறது.
4. ஸ்மைல் தன்னார்வலர்களுக்கும் உதவி பெறுபவர்களுக்கும் இடையில் சகோதர பாசம் நிலவுகிறது. நான் கொடுக்கிறேன், நீ பெறுகிறாய் என்ற இறுமாப்பு இல்லை. நிஜமான மனிதநேயத்தைக் காண முடிகிறது.
5. இது ஒரு செகுலர் அமைப்பு. சாதி, மதங்களற்ற ஒரு பார்வையை முன்வைக்கிறது.

இவர்கள் பெரிதாக வளரவேண்டும். பல இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும். ஆதரவற்ற ஆனால் பெரும் திறமைகொண்ட இந்திய இளைஞர்கள், தம் உண்மையான திறமையைப் பறைசாற்ற இவர்கள் உதவவேண்டும்.

மனமார வாழ்த்துகிறேன்.

7 ஆகஸ்ட் 2011 அன்று நடந்த ஸ்மைல் அமைப்பின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டப் படங்களைப் பார்க்க

ஸ்மைல் அமைப்பினருடன் தொடர்புகொள்ள

15 comments:

  1. அருமையான முயற்சி! நான் புனேயில் வசிக்கிறேன். இங்கேயும் இது போன்ற ஒரு அமைப்பு உள்ளது. “Friends of Children" என்று பெயர். சில காலம் அவர்களுடன் பனியாற்றி இருக்கிறேன். இந்த அமைப்புகள் ஒவ்வொரு படியாக மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. நமது நாட்டின் உன்மையான நம்பிக்கை நட்சத்திரங்கள்!

    ReplyDelete
  2. Wow. I wish the mainstream media gives more exposure to such groups to motivate more people to come forward.

    ReplyDelete
  3. ஒவ்வொரு எழுத்திலும் மனிதம் உயிர்வாழ்கிறது என்பதை உணர்ந்தேன் சகோதரா....


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).

    ReplyDelete
  4. மாற்றங்களை யார் உருவாக்குகிறார்கள் என்பது முக்கியமல்ல நாம் செயல்களைச் செய்வோம் மாற்றம் தானாய் அமையும்.. என்பதை நிருபித்து கொண்டிருக்கிறார்கள்.. வாழ்த்துக்கள் எனக்கும் இது போல் ஒரு அமைப்பில் செயல்படவோ.. அல்லது ஆரம்பிக்கவோ விருப்பமாய் இருக்கிறேன்.. நன்றி பத்ரி சார் புதுமைகளை தேடி ஊக்கம் கொடுப்பதற்கு...

    ReplyDelete
  5. மாற்றங்களை யாரும் உருவாக்க தேவை இல்லை நாம் செயல்களை செய்து கொண்டிருப்போம்.. அது மாற்றமடையும்... சேவை புரியும் தன்னார்வ தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள்,,, நன்றி பத்ரி சார் புதுமைகளை தேடி ஊக்கம் கொடுப்பதற்கு.

    ReplyDelete
  6. நம் சகோதரர்களை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம இன்றைய இளைங்கர்களிடம் அதிகம்..

    ReplyDelete
  7. அருமையான முயற்சி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அருமையான முயற்சி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மிக அருமையான தேவையான சமூக சேவை.

    இதனை எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  10. Badri Sir,

    Finest social service.

    Thanks for your post.

    Bala

    ReplyDelete
  11. // இந்தியாவில் இருந்துகொண்டு ஏதோ ஒரு மேற்கத்திய மத நிதியமைப்புக்கு புரபோசல் எழுதிப் பணம் சேர்த்து, எஸ்.யு.வி வாங்கிக்கொண்டு சமூக சேவை செய்யும் அமைப்பல்ல இவர்களது. //

    வி.வி.சி!!!

    ReplyDelete
  12. //// இந்தியாவில் இருந்துகொண்டு ஏதோ ஒரு மேற்கத்திய மத நிதியமைப்புக்கு புரபோசல் எழுதிப் பணம் சேர்த்து, எஸ்.யு.வி வாங்கிக்கொண்டு சமூக சேவை செய்யும் அமைப்பல்ல இவர்களது. //

    வி.வி.சி!!!//

    :)

    ReplyDelete
  13. 'கோ’ படத்தில் வரும் இளைஞர் கூட்டம் நேரில் வந்ததைப் போல இருக்கிறது... வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  14. good keep it up am also like to join

    ReplyDelete