Thursday, August 25, 2011

CBSE கணிதப் பாடத்திட்டம்

கடந்த சில தினங்களாக, CBSE பாடத்திட்டத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். பல்வேறு வடிவங்கள் கொடுத்து அவற்றுக்கான பரப்பளவைக் கண்டுபிடித்தல், லாப நட்ட விகிதங்கள், பின்னங்களைக் கூட்டுதல், தனிவட்டி, பின்னங்களும் அடுக்குக்குறிகளும் - இதுபோன்றவை.

பாடங்கள் மிகவும் கடினமானவையாகவே தோன்றுகின்றன. அந்தப் பருவத்தில் இதுபோன்ற கடினமான கணக்குகளை நான் நிச்சயம் செய்யவில்லை. தமிழ்நாடு பாடத்திட்டம் இன்றும்கூட எளிதான ஒன்றாகத்தான் உள்ளது என்பேன்.

தொட்டால் பற்றிக்கொள்ளும் வகையிலான பிள்ளைகளின் படிப்பைப் பற்றிக் கவலைப்படவேண்டிய தேவையில்லை. என் பெண்ணுக்குக் கணிதம் அவ்வளவாகப் பிடிக்காத ஒரு பாடம். பொதுவாகவே பெண்களுக்குக் கணிதம் என்றால் எட்டிக்காயோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருந்தும் ஒரு முடிவுடன் கணிதத்தை முடிந்தவரி எளிமைப்படுத்து அதை அவள் ரசிக்குமாறு சொல்லித்தருவதாகச் சவால் விட்டிருக்கிறேன். பார்ப்போம், எப்படிப் போகிறது என்று.

அவளுடைய பள்ளியில், அவள் வகுப்பில் படிக்கும் பிற குழந்தைகளும் இந்தப் பாடத்திட்டத்தை எதிர்கொள்ளக் கஷ்டப்படுகிறார்களாம். சமீபத்தில் நடந்த வகுப்புத் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் படுமோசமாகச் செய்துள்ளனர்.

அடிப்படையில் பாடத்திட்டத்தில் நாம் எதை எதிர்பார்க்கிறோம்? ஏன் இப்படிக் கடுமையானதாக பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும்? அப்படித் திணித்து எதைச் சாதிக்கப்போகிறோம்? பெற்றோர்களால் தம் குழந்தைகளுக்குத் தேவையான படிப்பைச் சொல்லித்தர முடியாவிட்டால் அந்தக் குழந்தைகளின் நிலை என்னவாகும்? எத்தனை சிபிஎஸ்இ ஆசிரியர்கள் முதலில் இவற்றை ஒழுங்காகச் சொல்லித்தரப்போகிறார்கள்?

National Curriculum Framework, 2005 என்று பெரிதாகப் பெயர்சூட்டி இந்தக் கல்வியாளர்கள் எல்லாம் என்ன கிழிக்கிறார்கள்?

இந்தக் காரணத்துக்காகவே முரண்டுபிடித்துக்கொண்டு மினிமல் சிலபஸ் என்ற ஒன்றை நான் முன்வைக்க விரும்புகிறேன். அதில் மிக மிகக் குறைவான பாடங்கள் மட்டுமே இருக்கும். காட்டுத்தனமான நுழைவுத்தேர்வுகளைத் தவிர்த்து, கல்வி என்பது தம் அறிவுநிலையை உயர்த்திக்கொள்ள மட்டுமே என்ற விருப்பம் உள்ள எளிமையான பிள்ளைகளுக்கான ஒரு கல்வித்திட்டமாக அது இருக்கும்.

11 comments:

  1. உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். நிறையத் திணிப்பது வீண்.

    ReplyDelete
  2. நாம் என்ன நல்லது சொன்னாலும் அதை மறுப்பதர்கேன்றே ஒரு கூட்டம் இருக்கிறது (கபில் சிபல் )..இவர்களை எல்லாம் வைத்து 2020 வல்லரசு கனவு காண முடியமா???????

    ReplyDelete
  3. என் அனுபவத்தில் இருந்து :

    நான் கூட சிபிஎஸ்ஈ யில் தான் படித்தேன். எதேச்சையாக நேற்றுத்தான் தற்போதைய ஏழாம் வகுப்பு புத்தகத்தையும் பார்த்தேன். மிக அதிக அளவு வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை ( நினைவில் இருந்து பார்த்தால்) . நாங்கள் படித்த பொழுதை விடவும், இப்போது interactive ஆக இருப்பதாகவே தான் தோன்றியது.

    கணிதத்தைப் பொறுத்தவரை, ஏழு / எட்டு வகுப்பு ஒரு முக்கியமான கட்டம். ஈர்ப்பு வருவதும், வெறுப்பு வருவதும், கற்றுத் தருவதைப் பொறுத்ததே. இந்தப் பருவத்தில் கணிதம் கற்பது, சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதைப் போல. பேலன்ஸ் பிடிபடுகிறவரைக்கும் படு இம்சையாக இருக்கும். ஆனால், பிடிபட்டு விட்டால் பேரின்பம்.

    இந்தச் சமயத்தில், கணித்தில் தேர்ச்சி பெற்றோர் ( பெற்றோர், சுற்றத்தினர்) செய்யக் கூடாதது, ' இந்தப் படிப்பினால் என்ன பலன்' என்று தத்துவார்த்த ரீதியாக பிள்ளைகள் காது படப் பேசாமல் இருப்பதே ஆகும். என் அனுபவத்தில், கணிதத்தை, உட்கார வைத்துச் சொல்லித் தருவதைக் காட்டிலும், அடிப்படைகளை மட்டும் சொல்லித் தந்து விட்டு, தாங்களாகவே, மேலும் கற்றுக் கொள்ள ஒரு சூழலை ( உதாரணமாக நாலைந்து பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து படிக்கும் பொழுது ஏற்படும் ஒரு competitive environment)ஏற்படுத்தித் தருவது நல்லது .

    சிரமமான கணக்குகள் போடுதல், சூத்திரங்களை மனப்பாடம் செய்தல் பற்றியெல்லாம் அதிகமாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அர்த்தம் புரியாமல் சிறுவயதில் நெட்டுரு செய்த பல விஷயங்கள், அடுத்து அடுத்த வகுப்புகளில், சரியான அர்த்ததுடன் விளங்கும் பொழ்து ஏற்படும், 'அட, ஆமால்ல" என்கிற தருணம் பரவசமானது. அதற்கு இப்பொழுது கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும். முதலிலே பால் பொறுக்கிப் போட்டால் தான் பின்னாளில் ஓசி காஜி கிடைத்து பிறகு டீமிலே சேர முடியும் இல்லையா...?

    ReplyDelete
  4. I am a CBSE student n the Maths syllabus is not that much tough....... interested people will enjoy it n all can study it with ease...

    ReplyDelete
  5. //பொதுவாகவே பெண்களுக்குக் கணிதம் என்றால் எட்டிக்காயோ என்று நினைக்கத் தோன்றுகிறது.//

    don't tell this to larry summers ;-). steven pinker had an interesting take on summers' blatant bs, although he used summers just as a datapoint.

    ReplyDelete
  6. //பெற்றோர்களால் தம் குழந்தைகளுக்குத் தேவையான படிப்பைச் சொல்லித்தர முடியாவிட்டால் அந்தக் குழந்தைகளின் நிலை என்னவாகும்? எத்தனை சிபிஎஸ்இ ஆசிரியர்கள் முதலில் இவற்றை ஒழுங்காகச் சொல்லித்தரப்போகிறார்கள்//

    இந்த உண்மை புரியாமல், சமச்சீர் கல்வியைத் தரக்குறைவாக நினைத்துப் பலர் CBSE பாடத்திட்டத்துக்கு நகர்கிறார்கள். இழப்பு என்னவென்று பின்னாளில் தான் தெரியும்.

    ReplyDelete
  7. ஒரு குரூப் சீபீஎஸ் ஈ ல முட்டி மோதி வியர்க்க விறுவிறுக்கப் படித்துவிட்டு (ஒரு வேளை) நல்ல வேலையில் செட்டிலாகும்போது மினிமல் சிலபஸ்ஸில் ஹாயாகப் படித்துவிட்டு, கிடைத்த நேரத்தில் சன் மியூசிக் எஞ்ஜாய் செய்து .... (ஒரு வேளை) நல்ல வேலை கிடைக்காவிடில் நாளை வேலை என் உரிமை என்று கொடி பிடித்து, மினிமல் சிலபஸ் இட ஒதுக்கீடு என்றெல்லாம் இந்த குரூப் அலம்பல் செய்யாமல் இருக்குமா?

    ReplyDelete
  8. சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில். விஜயகாந்த் கல்யாண மண்டபம் எதிரில், ஆக்சிஸ் பேங்க் ATM அருகில் உள்ள கட்டத்தில் மூன்று பெண் வழக்கரிஜர்கள் உண்ணா நிலைப்போராட்டத்தில் இருக்கிறார்கள்.

    தோழர் கிருஷ்ணசாமி MLA அவர்கள் அங்கு வந்து பார்த்து, பேசி விட்டு சென்றார்கள். பேரறிவாளனின் தாயார், அற்புதம் அம்மா அவர்களும் அங்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். நூற்றுக்கும் மேலான நமது உணர்வாளர்கள் அங்கு உள்ளார்கள். நாளை காலை பரப்புரை ஆரம்பம் ஆகும். ஆயிரகணக்கான தமிழர்கள் அங்கு வரவேண்டும்.

    பல தோழர்கள் இன்னமும் அங்கு இருக்கிறார்கள். லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவாளர்களுக்கு தகவலை பரப்புங்கள்.
    லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.

    ReplyDelete
  9. வீரம் பேசி கொலைசெய்து கொண்டாடி இன்று அய்யொ அய்யோ என்று அங்கலாய்க்கும் வெட்டிக்கூட்ட நாடகம் பார்க்க கோயம்பேடு வரமுடியாது போங்கடா

    ReplyDelete
  10. பாடத்திட்டம் ஒரு பகுதியானாலும், விடயம் சொல்லிக்கொடுப்பதில்தான் இருக்கிறது. எளிதாக சொல்லிக்கொடுத்தால், கடினமானது கூட இனிக்கும். புரியாத ஆசிரியர்கள் ஏனோதானோ என்று வகுப்பெடுப்பதுதான் காரணம். கணிதத்தைப் போல அருமையான subject வேறெதுமில்லை. அந்த வாய்ப்பு எனக்கும் வாய்க்கவில்லை என்பது வேறு விடயம். ரிலேட்டிவிட்டியைப் பற்றி இந்த குழந்தைகள் புத்தகத்தை படித்துதான் நன்றாக தெரிந்து கொண்டேன். http://www.amazon.co.uk/Albert-Einstein-Inflatable-Universe-Famous/dp/0439992168

    ReplyDelete
  11. ஒரு தனியார் நிறுவனத்துக்காக அதே சிபிஎஸ்இ ஏழாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தை சமீபத்தில்தான் எடிட் செய்தவன் என்ற முறையில் அந்தப் பாடத்திட்டம் பற்றி நன்கு அறிந்தவன் நான். நீங்கள் சொல்வதோடு முழுதும் உடன்படுகிறேன்.

    ஜியாமெட்ரியை எடுத்துக்கொள்வோம். சதுரம், செவ்வகம், வட்டம் வரையக் கற்றுக் கொடுத்தால் போதாதா? 3 நீளங்கள், 2 கோணங்கள் கொடுத்து நாற்கரம் வரைவது, 4 நீளங்கள், 1 கோணம் கொடுத்து நாற்கரம் வரைவது என்று வாழ்க்கைக்குப் பைசா பிரயோசனமில்லாத விஷயங்களாகச் சென்றுகொண்டே இருக்கிறது! பரப்பளவு கண்டுபிடிப்பதிலும் அவ்வாறே. டிரபீசியம், பாரலெல்லோகிராம் பரப்பளவுகளுக்கான சூத்திரங்களை மனப்பாடம் பண்ணி ஆகப்போவது என்ன?

    மெட்ரிக் அளவு முறை பற்றிய பாடத்தில் டெகாமீட்டர், டெசிலிட்டர் போன்று உலகத்தில் யாரும் உபயோகிக்காத அளவீடுகள் மாணவர்கள்மேல் திணிக்கப் படுகின்றன.

    உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் கேம்பிரிட்ஜ் ஜிசிஎஸ்சி சிலபஸ் நம்ம ஊர் சிபிஎஸ்சி, மெட்ரிக், சமச்சீர் எல்லாவற்றையும்விட எளிதானது என்பதை இங்கு சமச்சீர்கல்வி தரம்குறைந்தது என்று புரியாமல் பேசுபவர்கள் உணரவேண்டும்.

    சரவணன்

    ReplyDelete