Tuesday, August 02, 2011

சமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் வீம்பு

சமச்சீர் கல்வித் திட்டம் என்று சொல்லப்பட்டு கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது வெறும் ஒற்றைப் பாடத்திட்டமே. எப்படி புரட்சி, சமூகநீதி போன்ற சொற்கள் எல்லாம் தமிழகத்தில் பொருள் இழந்துபோயுள்ளனவோ அதேபோலத்தான் இந்த சமச்சீர் என்ற சொல்லும்.

அடிப்படையில் நான் ஒற்றைப் பாடத்திட்டம் என்பதை எதிர்க்கிறேன். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தமக்கென தனியொரு பாடத்திட்டம் வேண்டினால் அதைக் கொடுத்துவிட்டுப் போய்விடலாம். அதில் சிக்கல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதையும் விடுத்து மாநில வாரிய (ஸ்டேட் போர்ட்) பட்டயத்துக்கே ஒன்றுக்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. இதை மேலும் விரிவாகப் பேசவேண்டும், வேறோர் இடத்தில்.

இந்தப் பதிவின் நோக்கம் ஜெயலலிதாவின் வீம்பைப் பற்றிப் பேசுவது. கருணாநிதி எதைக் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பதே தன் நோக்கம் என்பதாகவே ஜெயலலிதா செயல்படுகிறார் என்பது ஒரு பக்கம். வேறு யார்மீதும் எந்தக் கரிசனையும் இல்லாது நடந்துகொள்ளும் அகங்காரமான மனோபாவம் மற்றொரு பக்கம். பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து இரண்டு முழு மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் சரியான புத்தகங்கள் போய்ச் சேராமல் இருப்பதற்கு முழுமையான காரணம் ஜெயலலிதாதான். கருணாநிதிமீதான போரில் கொல்லேட்டரல் டேமேஜ் தமிழக மாணவர்கள்தானா?

இதனை வெளிப்படையாகச் சொல்லி அவரைக் கண்டிக்க எந்தத் தமிழ்நாட்டுப் பத்திரிகைக்கும் துப்பு இல்லை. தலையங்கங்கள் இதனைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தெருவில் ஒரு போஸ்டர் பார்த்தேன். அதில் யாரோ ஒரு கோவிந்து ‘அம்மா, தாயே, ஏதாச்சும் ஒரு சிலபஸை அப்ரூவ் செய்து எங்க பிள்ளைகள் வாழ வழி செய்யுங்கள், தாயே’ என்று பிச்சை எடுக்கிறார். கல்வி என்பது உரிமை. அதற்காகப் பிச்சையா கேட்கவேண்டும்? அந்த உரிமையில் ஜெயலலிதா வீம்புக்காகத் தலையிட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கிறார். முக்கியமாக இப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடையும் மன உளைச்சல் பற்றி அவர் கடுகளவும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதில் கருணாநிதியின் தவறே இருந்துவிட்டுப் போகட்டும். மாணவர்களைப் பாதிக்காமல் ஒரு முடிவு எடுத்துவிடமுடியாதா என்ன? எதற்காக விடாமல் இந்த கோர்ட், அந்த கோர்ட் என்று இழுத்தடிக்கவேண்டும்? இது என்ன சொந்த சொத்துக் குவிப்பு வழக்கா? அங்கு வாய்தா மேல் வாய்தா வாங்கினால் அதற்காவது நியாயம் கற்பிக்கலாம். ஆனால் இங்கு?

ஜெயலலிதாவின் ஆட்சிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த ஒன்றுதானே, அட்ஜஸ்ட் செய்துகொள்வோம், பிற விஷயங்கள் எல்லாம் பிரமாதமாகச் செய்கிறார் என்று பாராட்டுவது அபத்தம். நாளை அவருக்குப் பிடிக்காத ஒன்று நடைபெறுகிறது என்றால் அப்போது எந்தமாதிரியான ருத்ர தாண்டவம் ஆடுவார் இவர் என்பதை இந்த முதல் கோணலே காட்டிக்கொடுத்துவிட்டது.

33 comments:

  1. தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் CBSE, மாநிலப் பாடத் திட்டம் என்று இரண்டு பாடத் திட்டங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழகத்திலும் ஏன் இருக்கக்கூடாது?

    தனிப்பாடத்திட்டம் காசு கறப்பதற்கான ஒரு வழியாகவும் மாணவர்கள் மேல் தேவையற்ற சுமையைச் சேர்ப்பதாகவும் உள்ளதே பிரச்சினை.

    ReplyDelete
  2. பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும் என்பது என் கட்சி. எந்த முறை இருந்தாலும் அதனைத் தமக்கு வாகாக வளைத்துப் பணம் பண்ண முயற்சி செய்வதற்குப் பலர் இருக்கிறார்கள். எனவே அதனைக் காரணம் காட்டி சிந்தனையோட்டத்தைத் தடுக்கக்கூடாது.

    ஏன் பல பாடத்திட்டங்கள் தேவை என்பதை விரிவாகப் பின்னர் சொல்கிறேன் என்று சொன்னேன். இங்கு ஒரு புள்ளி மட்டும் வைக்கிறேன். பாடத்திட்டத்தின் நோக்கம் மாணவர்களுக்குக் கொஞ்சமாவது அறிவைப் புகட்டுவது என்பதே. ஆனால் அனைத்து மாணவர்களும் ஒன்றல்லர். நகரம் - கிராமம், பணம் உள்ளோர் - பணம் இல்லாதோர், ஆங்கிலம் தெரிந்தோர் - ஆங்கிலம் தெரியாதோர் என்று மிகப் பல பிரிவினைகள் நம்மிடையே உள்ளன. இவற்றை இனி வரும் சில பத்தாண்டுகளிலும் முழுமையாகத் தீர்க்க முடியாது என்ற நிலையில் அனைவருக்கும் ‘சமமான’ தரமான கல்வி என்பது சாத்தியமே இல்லை.

    கல்வி என்பதுதான் தம் பிள்ளைகளை முன்னோக்கிச் செலுத்தும் என்ற எண்ணம் கொண்ட பணக்காரப் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு மிக ‘உயர்ந்த’ கல்வியைப் பெற்றுத்தர எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பர்; எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பர். இதனால்தான் ‘சர்வதேசப் பள்ளிகள்’ என்பவை உள்ளே நுழைகின்றன. ஒற்றைப் பாடத்திட்டம் என்பதை கொண்டுவந்தாலுமே ஒரு பள்ளி தனித்து நிற்கவிரும்பினால் எந்த அரசாலும் அதனைத் தடுக்க முடியாது. அரசின் பாடத்திட்டத்தைத் தூ என்று உதறித் தள்ளிவிட்டு, தம் விருப்பத்துக்கு ஏற்ப அவர்கள் எதைவேண்டுமானாலும் நடத்திவிட்டுப் போகலாம். சென்னையில் ‘தி ஸ்கூல்’ என்ற பள்ளி ஒன்று இருக்கிறது. அவர்கள் விருப்பப்படி பாடம் நடத்திவிட்டு ஒரு கட்டத்தில் சி.பி.எஸ்.ஈ திட்டத்தில் இணைகிறார்கள் (என்று நினைக்கிறேன்). அதேபோல் மேலும் சில பள்ளிகளாலும் செய்யமுடியும்.

    பணம் உள்ள பிள்ளைகள் எப்படியோ பிழைத்துக்கொள்ளும். படித்தும் பிழைத்துக்கொள்ளும். படிக்காமலும் பிழைத்துக்கொள்ளும்.


    நம் பிரச்னையே பணம் இல்லாத பிள்ளைகளைப் பற்றி. அவர்களுக்குப் பலவிதமான பாடத்திட்டங்கள் தேவை என்பது என் கருத்து. ஏழைப் பிள்ளைகளிலேயே மிக நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கு உசத்தியான பாடத்திட்டம் தேவை. வெகு வேகமாக அவர்களை முன்னோக்கிச் செலுத்தி, மிக உயர்ந்த இடங்களைப் பெறுமாறு செய்யக்கூடிய (அரசு) கல்வி நிலையங்கள் தேவை. இது ஒரு பாடத்திட்டம். அதேபோல மிக மோசமாகப் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு மிக மிக எளிதான பாடத்திட்டம் தேவை. அவர்களை ஃபெயிலாக்கி வெளியே அனுப்புவது எளிது. அது மோசமான விளைவையே ஏற்படுத்தும். இல்லாமல் அவர்களுக்குத் தொடர்ந்து பாஸ் போட்டு, மேல் வகுப்புகளுக்கு அனுப்புவதும் அவர்களுக்குத்தான் தொந்தரவைத் தரும். வகுப்பில் நடக்கும் எதுவும் அவர்களுக்குப் புரியாது. எனவேதான் மிக எளிதான ஒரு பாடத்திட்டம். மீதமுள்ள இடைநிலைப் பிள்ளைகளுக்கு ஓர் இடைநிலைப் பாடத்திட்டம் தேவை.

    ஒவ்வோர் ஆண்டிறுதித் தேர்வுக்குப் பின்னரும் மாணவர் அடுத்த வகுப்புக்கு மட்டுமல்ல, அந்த வகுப்பில் மேல் தரத்துக்கு அனுப்பப்படவேண்டுமா, கீழ் தரத்துக்கு அனுப்பப்படவேண்டுமா என்பதும் முடிவு செய்யப்படவேண்டும். ஒருவிதத்தில் இது சாதிப் படிநிலை மாதிரிதான். (என்ன, பிறப்பு அடிப்படையில் அல்ல; திறமை அடிப்படையில் அவர்கள் மேலும் கீழும் சென்றபடியே இருப்பார்கள்.) இதற்காக என்னைப் பார்ப்பனவாதி என்று சொன்னாலும் கவலை இல்லை.

    இன்றைய நிலையில் அதிகபட்ச மாணவர்களுக்கு அதிகபட்சத் திறமையை அளிக்க இதுபோன்ற ஒரு அரசுக் கல்வித் திட்ட முறை அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

    தனியார் பள்ளிகளில் இதுபோன்ற ஒரு திட்டத்தை அமல்படுத்த பெற்றோர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருக்கும். எனவே தனியார் தமக்கென ஒரு ‘உயர்’ பாடத்திட்டத்தை உருவாக்கிக்கொண்டு அதை மாணவர்கள் தலையில் புகட்ட முற்படுவர். தப்பிப்பதோ பிழைப்பதோ மாணவர் பாடு; பெற்றோர் பாடு. இவர்கள் வெறும் 15% பேரே.

    மீதமுள்ள 85% பேருக்கு எப்படி சிறப்பான கல்வி தருவது என்பதுதான் நமக்கு முன் இருக்கும் மாபெரும் சவால்.

    ReplyDelete
  3. நீங்கள் இதைத் தரம் ( A/ B/ C) என்று பிரிப்பதுதான் பிரச்சனைக் குரியதாகிறது. . எட்டாம் கிளாஸ் மாணவன் ஆங்கிலத்தில் 95 மார்க் ஆனால், கணக்கில் 20 மார்க் என்றால் என்றால் அடுத்த வருஷம் அவனை C grade இலே தள்ளிவிடலாமா? நீங்க சொல்றதை தரம் என்பதற்கு பதிலால discipline / stream களாகப் பிரித்தால் பிரச்சனை வராது.

    ReplyDelete
  4. ஸ்ட்ரீம் என்றே வைத்துக்கொள்ளுங்களேன். தரம் என்ற சொல் பொலிடிகல்லி கரெக்ட் ஆக இல்லாமல் போகலாம். ஆனால் நடுநிலையாகப் பாருங்கள். மேலும் நான் சொல்வதில் வேறு பல சிக்கல்களும் உள்ளன என்பதை உணர்கிறேன். உதாரணமாக மொழியில் நல்ல ஆளுமை ஆனால் கணிதத்தில் இல்லை என்றால் என்ன செய்வது? எவ்வளவு ஸ்ட்ரீம்கள் இருக்கவேண்டும்?

    என் கருத்து... தேவை பல பாடத்திட்டங்கள் என்பதுதான். சரியான திட்டமிடலுக்கு முன்னதாக மேலும் பல விவாதங்கள் தேவை.

    ReplyDelete
  5. கல்வி தொடர்பாகப் பேசுபவர்கள் அனைவரும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கோட்டைவிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. கல்வியை, பெருமாள் கோயில் புளியோதரையைப் போல் எல்லாரையும் வரிசையில் நிற்க வைத்துக் கொடுப்பதுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம். உண்மையில் அனைவருக்கும் கல்வி என்பதே தவறான, சாத்தியமில்லாத, தேவையில்லாத ஒன்று. கல்வியின் பலன்தான் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அது நடக்க வேண்டுமானால், எல்லாருக்கும் கல்வி என்ற கோஷத்தை விட்டால்தான் முடியும்.
    பள்ளியில் ஒருவர் சேருகிறார் என்றால் வேலைக்கான உத்தரவாதம் அவருக்கு இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வேலை வாய்ப்பு எவ்வளவு இருக்கிறதோ, தேவையோ அவ்வளவு பேருக்கு மட்டுமே கல்வி கொடுத்தால் போதும். ஒரு மாவட்டத்துக்கு ஐம்பது டாக்டர்கள் தேவை என்றால் 75 பேருக்கு மட்டுமே (அனைத்து பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்) உயர் தரமான கல்வியைக் கொடுத்தாலே போதும். பத்தாயிரம் பேருக்கு மொக்கை கல்வியைத் தரவேண்டிய அவசியமில்லை (தேவையான உள்கட்டமைப்பு இல்லாத பள்ளிகள், அர்ப்பண உணர்வு இல்லாத ஆசிரியர்கள், மனப்பாடம் செய்யும் திறமையை மட்டுமே இலக்காகக் கொண்ட போதனை முறை = மொக்கை கல்வி).
    இந்த வழிமுறையின்படி வேலைக்கு உத்தரவாதம் கொண்ட கல்வியை பத்து உயர் வகுப்பினர், பத்து பிற்படுத்தப்பட்டவகுப்பினர், பத்து தலித்துகள், பத்து கிறிஸ்தவர்கள், பத்து முஸ்லீம்கள் எனப் படித்தால் போதும். இவர்கள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் கல்வியின் பலனைக் கொண்டு சேர்ப்பார்கள் (தாய்நாட்டுத் தேவைகளை நல்லபடியாக முடித்த பிறகு அயல் நாட்டு சேவை பற்றி யோசிக்கலாம்). மற்ற அனைவருக்கும் அடிப்படை கல்வி மட்டுமே போதும். அடிப்படையான மொழி அறிவு, கணித அறிவு இந்த இரண்டையும் பள்ளியில் வைத்துத்தான் தரவேண்டும் என்ற அவசியமும் இல்லை.
    விஷயம் ரொம்ப சிம்பிள், ஒரு லிட்டர் பாலை வைத்து ஐந்து பேருக்கு காபி போட்டால் அதன் சுவை அருமையாக இருக்கும். ஐம்பது பேருக்குப் போட்டால் கழனித் தண்ணி மாதிரிதான் இருக்கும். கைவசம் இருக்கும் வளத்தை ஒருமுகப்படுத்திப் பயன்படுத்த வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், எல்லாருக்கும் டாக்டருக்குப் படிக்க வழி செய்து தருவதைவிட எல்லாருக்கும் உயர் தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வழி செய்ய வேண்டும். அதற்கு கொஞ்ச பேருக்கு மட்டுமே கல்வி கொடுத்தாலே போதும். அதுமட்டுமல்ல அப்படிச் செய்தால் தான் அது சாத்தியமும் கூட.
    அப்பறம் கல்வியில் முக்கியமான இன்னொரு அம்சமும் இருக்க வேண்டும். அது தகுதி உடையவர்களுக்கு மட்டுமே தரப்பட வேண்டும். எந்தவொரு தொழிலையும் சுய நலத்துடன் மட்டுமே செய்யாமல் இருக்கும் மனோபாவமே நான் சொல்லும் தகுதி. கல்வி என்பது வெறும் உரிமை சம்பந்தப்பட்டது அல்ல. பொறுப்பு சம்பந்தப்பட்டது. ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்கிறாய் என்றால் நாளை உன் மாணவர்களை உலகின் மேதைகளாக ஆக்குவேன் என்ற உறுதி எடுக்கும் மனம் வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். நாளை ஒரு மாணவன் சரியாகப் படிக்கவில்லையென்றால் அதற்கான பொறுப்பை ஏற்கவும் பதில் சொல்லவும் கடமைப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே ஆசிரியர் தொழிலை ஒண்ணம் தேதியானால் சம்பளம் கிடைக்கும் வேலையாக மட்டுமே பார்ப்பவராக இருக்கக்கூடாது.

    ReplyDelete
  6. she knows only to apply reverse gear. A leader of this level should have tolerance to which she does not know the meaning

    ReplyDelete
  7. மகாதேவன்: உங்கள் கருத்தை நான் முற்றாக நிராகரிக்கிறேன். கல்வி என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்று நினைக்கிறேன். இது கறந்த பசும்பால் அல்ல. இதற்குக் குறைவே இல்லை. தெருக்கோடியில் non-formal முறையில்கூடக் கல்வியை அளிக்கமுடியும். நீங்கள் சொல்வது சிறப்புக் கல்வியை. அதனைச் சிலர் மட்டும்தான் கற்கிறார்கள். பொதுக்கல்வி அனைவருக்கும் போய்ச்சேரவேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது.

    ReplyDelete
  8. More than tolerance, a leader needs to have concern for the subjects. Jayalalitha doesn't have the basic human concern. Hence she cannot be a good ruler.

    ReplyDelete
  9. மிஸ்டர் மகாதேவன், manufacturing defect. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்லை :)

    ReplyDelete
  10. நான் அடிப்படைக் கல்வி என்று சொன்னதை நீங்கள் பொதுக் கல்வி என்கிறீர்கள். நானும் அதை எல்லாருக்கும்தான் கிடைக்கவேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு.
    வீண் பிடிவாதத்தினால் பிள்ளைகளின் நாட்கள் வீணாகின்றன. பெற்றோர்களின் மன உளைச்சல் கூடுகிறது.

    ReplyDelete
  12. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நிஜமாகவே long term damage இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? பள்ளி அளவில் இதை சமாளித்து விட முடியாதா?

    ReplyDelete
  13. ஸ்வாமி: நன்றாகப் படிக்கும் பிள்ளைகளுக்கு எந்தக் காலத்திலும் பிரச்னை இல்லை. பிரச்னை இரண்டு குழுவினருக்கு:

    1. ஆண்டுத் தொடக்கம் முதலே கஷ்டப்பட்டு படித்தால்தான் தேர்வே ஆகமுடியும் என்ற நிலையில் உள்ளவர்கள். இவர்கள் பாடு திண்டாட்டம்.
    2. கொஞ்சம் முனைப்புடன் படித்தால் கொஞ்சம் அதிகம் மதிப்பெண்கள் வாங்கமுடியும் என்ற நிலையில் இருப்பவர்கள். அப்படி வாங்கினால்தான் கேட்ட குரூப் 11-ம் வகுப்பில் கிடைக்கும் என்ற நிலையில் இருப்பவர்கள். இவர்கள் பாடும் திண்டாட்டம்தான்.

    ReplyDelete
  14. ஆனாலும் long term damage மிக குறைவு என்றுதான் நினைக்கிறேன். இந்தி எதிர்ப்பின் போது பரீட்சை தள்ளி வைக்கப்பட்டதால் ஆன பாதிப்பு போல... அதனால் யார் வாழ்கையும் நாசமாகிவிடவில்லை என்பதே என் அபிப்ராயம்... இது ஒரு கேலிக்கூத்துதான்... ஆனால் irrelevant to the future of the kids...

    ReplyDelete
  15. ஸ்வாமி: முற்றிலும் அப்படியாக ஒதுக்கித்தள்ள முடியாது. கல்வி என்ற அடிப்படையில் இது irrelevant என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உளவியல் என்ற அடிப்படையில் இது முக்கியமானது. ஏன் பத்தாம் வகுப்பை மட்டும் நான் குறிப்பிடுகிறேன் என்பதைப் பார்த்தால் நீங்கள் இதனை ஏற்றுக்கொள்வீர்கள். 9, 8, 7 வகுப்புகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் 10 என்று வரும்போது மாணவர்கள் தங்களைக் கொஞ்சம் சைக் செய்துகொள்கிறார்கள். அந்த ஆண்டை மிக முக்கியமான ஆண்டாகக் கருதி படிப்பில் இறங்குகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் தெளிவில்லாத் தன்மை அவர்களைக் கடுமையாக உளரீதியில் பாதிக்கும். மேலும் இது அடுத்த கட்டப் பயணத்துக்கு ஒரு திசைகாட்டி. இந்தப் பரீட்சையில் சரியான மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற திசையே முற்றிலுமாக மாறிப்போய்விடும். அதனால் என்ன, பெரிய சிக்கல் ஏதும் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உளரீதியாக எப்படி இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை மட்டும் பாருங்கள்.

    ReplyDelete
  16. ஒப்புக்கொள்கிறேன்... psychologically this is going to affect them - but in the short term...

    இரண்டு விஷயங்கள்...

    1. பத்தாம் வகுப்பு பரீட்சையே short term தான்... RTE முழுமையாக ஏற்கப்பட்டால், அதன் முக்கியத்துவம் குறைந்துவிடும்.
    2. cutoff மார்க்குகள் ஓரளவுக்கு relative தான்... இது எல்லா மாணவர்களையும் "சமச்சீராகதான்" பாதிக்கும்...

    அதே சமயம், இதற்கு முன் செய்யப்ப்ட்ட வேலை சரியானது அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்... திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் இந்த விஷயத்தில் மாணவர்களுக்கு long term damage இருந்திருக்கும் என்ற வாததையும் நிராகரிக்க முடியவில்லை..

    ஒரு விதத்தில் முரளி மனோகர் ஜோஷி போல தன்க்கென்று ஒரு agendaவை திணிப்பதில், திமுக - தற்போதைய ஆட்சியினறை மிஞ்சியவர்களே.

    They have already demonstrated their ability with the TV/Cinema empire. Education should do better without that. The choice is most certainly between the devil and the deep sea. After due consideration, I feel I'd choose deep sea.

    ReplyDelete
  17. அதே சமயம், ஜெயலலிதா உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், ப்ரச்சனையை எதிர்க்கட்சியில் இருக்கும்போதே சொல்லி இருக்க வேண்டும்... போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்...

    But we know that very few politicians in general (and none in TN) have that kind of concern...

    Opposing from the opposition would have been a democratic way of doing it... this is a mockery of democracy at the cost of children... no doubt...

    ReplyDelete
  18. அன்புள்ள திரு.பத்ரி

    பல பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும் என்ற தங்களுடைய கருத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
    தற்போதைய மெட்ரிக் பாடத்திட்டமும் இதைப் பூர்த்தி செய்யவில்லை என்பதைத் தாங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்றே நான் நினைக்கிறேன்.

    மெட்ரிக் பாடத்திட்டம் நகர்ப் பகுதிகளுக்கு மட்டுமே பொருத்தமானது என்றே நினைக்கிறேன்.
    கிராமப் பகுதிகளில் செயல்படும் மெட்ரிக் பள்ளிகள் தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிப்பதில்லை என்றே தோன்றுகிறது.

    எனக்கென்னவோ மெட்ரிக் பாடத் திட்டத்திற்கும் மாநில பாடத்திட்டத்திற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை.
    நான் இங்கு அளவீடாக எடுத்துக் கொள்வது மாணவர்களின் சிந்திக்கும் திறன்.

    அதேபோல மாநில பாடத்திட்டத்தைப் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிறது என்பதும் உண்மையே.
    அவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.

    நான் இங்கு சொல்ல வருவது மெட்ரிக் மாணவர்கள் சமச்சீர் பாட்த்திட்டத்திற்கு மாறுவதால் அவர்கள் பெரியதாகப் பாதிக்கப்படப் போவதில்லை.
    அதே சமயம் மாநில பாடத்திட்டத்தைப் படிக்கும் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மை விலகும்.

    பல பாடத்திட்டங்களுக்குத் தாங்கள் கூறும் வழி சரியானதாகத் தோன்றவில்லை. தேர்வின் அடிப்படையில் இதைச் செய்தால் மாணவர்களின் மனோநிலை பெரிதும் பாதிக்கப்படும்.
    படிப்பு படிப்பு என்ற நிலை உருவாகி விடும். சரியான முறை ஆசிரியர்கள் மாணவர்களைச் நேர்மையான முறையில் மதிப்பிட வேண்டும் என்பதே.
    ஆனால் இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. அப்படி மாணவர்களின விருப்பத்திற்கு தகுந்தவாறு கல்வி கற்பித்தாலும் எல்லோருக்கும்
    வேலை வாய்ப்பை உருவாக்கித்தர முடியுமா என்பது சந்தேகம். அந்த அளவு நம்முடைய நாட்டின் நிலை இல்லை.

    நீங்கள் சொல்வதுபோல திறமையின் அடிப்படையில் மாணவர்கள் கல்வி கற்க விரும்புவதில்லை. எது படித்தால் வேலை கிடைக்கும் என்பதுதான் அவர்கள் நினைப்பது.

    ஆக பெயரளவில் பல பாடத்திட்டங்கள் என்ற முறை கொண்டுவர முடியுமே தவிர அதை நடைமுறைப் படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதாகவும்
    தோன்றவில்லை. மெட்ரிக் பாடத்திட்டமும் திறமையின் அடிப்படையில் மாணவர்களுக்குக் கற்பிப்பதில்லை. மந்தமான மாணவர்களுக்கு மெட்ரிக் பாடத்திட்டம் பெரிய சுமையாக உள்ளது
    என்றே தோன்றுகிறது. இதைக் களைய வேண்டும். அதற்காவது சமச்சீர் பாடத்திட்டம் பயனுள்ளதாக அமையும் என்றே தோன்றுகிறது.

    தனியார் பள்ளிகள் மத்தியப் பாடத்திட்டத்திற்கு மாறினாலும் நல்லதுதான். ஆக திறமையுடைய மாணவர்கள் மத்தியப் பாடத்திட்டத்தையும் சற்று மந்தமான மாணவர்கள் மாநில பாடத்திட்டையும்
    தேர்வு செய்து கொள்ளலாம். பொருளாதார வசதிகளின் அடிப்படையில் இதைச் செய்யக்கூடாது.

    நடைமுறைக்கு இப்போதுள்ள சூழ்நிலைக்கு இருபாடத்திட்டங்களும்(மாநில மற்றும் மத்திய) எல்லாப் (தனியார் மற்றும் அரசு) பள்ளிகளிலும் இருக்க வேண்டும்.
    மாணவர்கள் விருப்பப்படி பாடத்திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். இதுதான் தற்போதைக்குச் சரியான சமச்சீர் கல்வியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    இப்படிக்கு
    பா.மாரியப்பன்

    ReplyDelete
  19. முதலில் திமுக வீழவேண்டும் என வாக்களித்த பொது மக்களில் ஒருவனாக இதை பார்க்கலாமா? அது உங்களால் முடியாது. ஏன்னா நீங்க யாருக்கு வாக்களித்தீர்கள் என்று எனக்கும் தெரியும். 2G ஊழல் இல்லைனு கையேடு போட்ட நீங்கள் இதை பற்றீயெல்லாம் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும். கடந்த 1987ஆம் ஆண்டு ஆசிரியர்கள் ஸ்டிரைக் எத்தனை நாட்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நாங்கள் என்ன மக்காகவா போய்ட்டோம்? ஒ அப்ப உங்க கருணாநிதிதானே எதிர்கட்சி தவைவர்? அப்ப அதை எதிர்த்தாரா? ஜெயலலிதா சொன்னது போலதான் இப்ப புது தலைமை செயலகத்தில் செயல்படவில்லை. அப்ப மட்டும் என்ன அவரை என்ன எல்லாரும் பாராட்ராங்களா என்ன? அவர் எதிர்த்திருந்தால் சமச்சீர் கல்வியை கருணாநிதி நிறுத்தி வைத்திருப்பாரா என்ன? அரசை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்கள் யார்? அதுதானே இந்த பிரச்னைக்கு காரணம். ஜெயலலிதா ஆரம்பித்த காரணத்தால் மட்டுமே கருணாநிதி நிறுத்திய திட்டங்கள் எத்தனை தெரியுமா? முதலில் இது போல குழந்தை போல எழுதுவதை நிறுத்தி, கணக்கு, சிற்பம் இப்படினு உங்களுக்கு தெரிந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தலாமே? கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வியே போதும்னா ஜெயலலிதா தேவையில்லையே? அப்படி வாக்களித்த உங்களால் இப்படிதான் பேசமுடியும். I never speak technically with you. Because You know better. why waste time to speak wisely.

    ReplyDelete
  20. நீங்கள் சொல்லும் தரம் பிரிப்பு, ஓரளவுக்கேனும் ஏற்கனவே பல தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கத் தான் செய்கிறார்கள். ஏ, பி, சி என்று செக்ஷன்களாகப் பிரித்துவிடுவார்கள். பி மற்றும் சி செக்ஷன்களில் படிப்பவர்களுக்கு ஸ்பெஷல் வகுப்புகள் எல்லாம் நடத்தி அதில் முன்னேறுபவர்களை அடுத்த ஆண்டு ஏ வகுப்பில் போடுவது எல்லாம் பல வருடங்களாக நடைமுறையில் உள்ள ஒரு செயல்பாடு தான். செக்ஷனுக்கு தனி பாடதிட்டம் எல்லாம் செய்யும் அளவுக்கு அரசு அடிப்படை கல்வியில் பணமுதலீடு செய்ய முடியாது. அவ்வளவு பணம் நம்மிடம் (நம் அரசாங்கத்திடம்) இருக்கா என்ன ?

    ReplyDelete
  21. வழக்கு தொடுத்த பிரகஸ்பதி ஒன்பதாம் பத்தாம் வகுப்புகளை விட்டு விட்டு வழக்கு தொடர்ந்திருக்கக் கூடாதா?
    அல்லது அரசாவது ஒன்பதாம் பத்தாம் வகுப்புகள் நீங்கலாக என்று வழக்கை நடத்தி இருக்கலாம்.
    எல்லா கோர்ட் நீதிபதிகளும் அதை கணக்கில் எடுக்கவில்லை.
    இதில் இருந்து ஓன்று தெரிகிறது இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் யாரும் இந்த கல்வித் திட்டத்தில் படிக்கவில்லை அல்லது இந்த வகுப்புகள் படிக்கவில்லை.

    இங்கே CBSE பற்றி சிலர் கருத்து சொல்லி இருக்கிறார்கள். CBSE பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரை பேருக்குத் தான் CBSE . கேந்த்ரிய வித்யாலயா (அரசுப் பள்ளிகள்) தவிர தனியார் பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக அவர்கள் விரும்பிய படியான பாடங்களைத் தான் நடத்துகிறார்கள்.

    ReplyDelete
  22. mariappan said...
    /* நான் இங்கு சொல்ல வருவது மெட்ரிக் மாணவர்கள் சமச்சீர் பாட்த்திட்டத்திற்கு மாறுவதால் அவர்கள் பெரியதாகப் பாதிக்கப்படப் போவதில்லை.
    அதே சமயம் மாநில பாடத்திட்டத்தைப் படிக்கும் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மை விலகும்.
    */
    /*
    நடைமுறைக்கு இப்போதுள்ள சூழ்நிலைக்கு இருபாடத்திட்டங்களும்(மாநில மற்றும் மத்திய) எல்லாப் (தனியார் மற்றும் அரசு) பள்ளிகளிலும் இருக்க வேண்டும்.
    மாணவர்கள் விருப்பப்படி பாடத்திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். இதுதான் தற்போதைக்குச் சரியான சமச்சீர் கல்வியாக இருக்கும் என்று தோன்றுகிறது.*/

    சபாஷ் மாரியப்பன்.
    இதைத்தான் நான் முன்பே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன்..

    ReplyDelete
  23. தோடா ... எல்லாம் தெரிஞ்ச பத்ரி தீர்ப்பு சொல்ட்டாரு .... செயலலிதாவுக்கு ஆளத்தெரியாதாம் .... அதான் அவருக்கு இசுபெக்ட்ரமே ஊழல் கெடையாதே .... பத்ரியின் மாணிக்கம் அவரது கோபாலபுரம் வீட்டருகேதானே வாழ்கிறது ... அந்த வாசனைதான் போலும் .........மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு, சமச்சீர் கல்வி என்று மேடைபோட்டு பேசிக்கொண்டு .... இசுடாலின் குடும்பத்தினர் நடத்தும் சன்சயின் பள்ளியில் இருப்பதோ மத்திய அரசின் சி.பி.எஸ்.ஈ. (CBSE) கல்வித்திட்டம். இந்த அநீதியை எதிர்த்து பள்ளியின் வாயிலில் நீங்கள் ஏன் போராட்டம் நடத்தக்கூடாது ??? இதனை வெளிப்படையாகச் சொல்லி இரட்டை வேடக்காரர்களை கண்டிக்க எந்தத் தமிழ்நாட்டுப் பத்திரிகைக்கும் துப்பு இல்லை. பத்ரி போன்ற அறிவுஜீவீக்களுக்கும் துப்பு இல்லை. இது வெட்கங்கெட்டவர்களின் நாடு

    ReplyDelete
  24. இரவிசங்கருக்கு பதில் சொன்ன உங்கள் உண்மையான கருத்துக்கு என் நன்றி. நிச்சயம் சமம் என்ற வார்த்தை சமகாலத்தில் எந்த இடத்திலும் கொண்டு வரவே முடியாது. ஏற்றுக் கொள்ள கடினமாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  25. அரசாங்கம் ஒரு அடிப்படை பாடத்திட்டத்தை தான் கொடுத்துள்ளது.அதோடு அதிகமாக matric பள்ளிகள் மேலும் சொல்லி கொடுத்தால் யாரும் தடுக்க போவதில்லை.அடிப்படை பாட திட்டம் எல்லா படிப்புகளுக்கும் உண்டு.மேற்படிப்புகள் உட்பட
    பள்ளி கல்விக்கு பல்வேறு பாட திட்டங்கள் இருக்க வேண்டும் எனபது சரியல்ல.மேல் படிப்பை முடிவு செய்யும் கல்வி அனைவருக்கும் ஒன்றாக இருந்தால் தான் குழப்பம் இல்லாமல் கல்லூரியில் இடம் கிடைக்கும்.matric பள்ளிகள் ஏன் பன்னிரண்டாம் வகுப்பிற்கு தனி பாட திட்டங்கள் வைத்து கொள்ளவில்லை.மருத்துவம்,பொறியியல் சேர பத்தாவது வகுப்பு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்து கொள்ளபடும் என்று அரசு கூறினால் matric /angloindian பாட திட்டங்களை முதலில் தூக்கி போடுவது அந்த பள்ளிகளாக தான் இருக்கும்
    அனைவரும் ஒன்றாவது முதல் சாலை விதிமுறைகளை படிக்க வேண்டும்,சுற்று சூழல் பற்றி படிக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்பினால் அதை செயல்படுத்த அனைவருக்கும் அடிப்படையான திட்டம் இருக்க வேண்டாமா

    ReplyDelete
  26. சமசீர் கல்வி என்றால் என்ன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அரசாங்கம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நான்கு மணி நேரம் தான் ஆசிரியர்கள் பாடம் எடுக்க வேண்டும் .மீதி நேரம் விளையாட வேண்டும் என்று சொல்வதற்கோ நடைமுறைபடுத்துவதற்க்கோ உரிமை இல்லையா
    ஆசிரியர்கள் அடிக்க கூடாது.கடுமையான தண்டனைகள் தர கூடாது.குழந்தைகளை தேர்வில் fail ஆக்க கூடாது/மதிப்பெண் போடாமல் .a b c என்று தகுதி வரைபாடு தான் தர வேண்டும் என்று கூறுவது தவறா
    அனைவரும் சாலை விதிகளை ஒன்றாம் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும் என்று பாட புததகத்தில் அவற்றை புகுத்துவது சரியா தவறா
    பெப்சி,சிப்ஸ் போன்றவை உடல் பருமன்,இளவயது நீரிழிவு நோய் போன்றவற்றை உருவாக்கும்,தினமும் விளையாட்டு,உடற்பயிற்சி முக்கியம் என்று பாடம் எடுக்க கட்டாய படுத்துவது தவறா
    இது ஆரம்பம் தான்.அரசாங்கம் அமைக்கின்ற குழு தான் அடிப்படை பாட புத்தகங்களை தீர்மானிக்க முடியும்.அதில் மாற்றங்கள் வந்து கொண்டிருக்குமே தவிர அதில் தலையிட யாருக்குமே உரிமை இல்லை அவரவர் இஷ்டம் போல பாடபுத்தகங்களை வைத்து கொள்ளலாம் எனபது சரியா
    இந்த திடீர் எதிர்ப்பு,கல்வியின் மேல் கரிசனம் எதனால் இதை எதிர்க்கின்றவர்களுக்கு வந்தது
    கருணாநிதியின் மேல் உள்ள எதிர்ப்பு சம சீர் கல்வியின் மீதும் படிகின்றதாலா .தமிழ் சீர்திருத்தம் எப்படி பெரியார் சீர்திருத்தம் என்று (சோ சில ஆண்டு முன் வரை அவர் புத்தகத்தில் பழைய லை தான் போட்டு கொண்டிருந்தார்)வெறுக்கபட்டதோ அது போல
    வட கிழக்கு மாநிலங்களில் CBSE பாட திட்டத்தை நவோதய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் படும் கஷ்டத்தை நான் பார்த்திருக்கிறேன்.படிப்பை இடையில் கை விடும்,வகுப்புகளில் தவறி 20 ,22 , வயது ஆண் பெண் பத்தாவது படிப்பதை பார்த்திருக்கிறேன்.அனைவரையும் பள்ளிக்கு இழுத்து சில ஆண்டுகளாவது படிக்க வைக்க வேண்டுமானால் அதன் தரம் அதிகமாக இருக்க கூடாது.

    அடிப்படை கல்வி வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதே தவிர அவர்களை plane கண்டுபிடிக்கவோ ஓட்டவோ எடுத்து செல்ல முடியாது.விமானம் என்றால் என்ன அதை ஓட்டுபவர் விமானி என்று அழைக்கபடுவார்.விமானியாக வேண்டுமானால் அறிவியல் பாடமாக வைத்து +2 வரை படித்திருக்க வேண்டும் எனபது போன்றவற்றை தெரியபடுத்துவது.விமான படையில் சேர்ந்தால் பணம் செலவில்லாமல் விமானம் ஓட்ட கற்று கொள்ளலாம்.

    விமானத்தை எப்படி செய்வது,அதை எப்படி மேம்படுத்துவது,சூரிய சக்தியில் ஓட்ட வைக்க முடியுமா போன்றவை அடிப்படை கல்வியில் வராது.விமான வியல் படிக்கின்றவர்களுக்கு தான் அது தேவை.

    ReplyDelete
  27. //ஸ்ட்ரீம் என்றே வைத்துக்கொள்ளுங்களேன். தரம் என்ற சொல் பொலிடிகல்லி கரெக்ட் ஆக இல்லாமல் போகலாம். ஆனால் நடுநிலையாகப் பாருங்கள். மேலும் நான் சொல்வதில் வேறு பல சிக்கல்களும் உள்ளன என்பதை உணர்கிறேன். உதாரணமாக மொழியில் நல்ல ஆளுமை ஆனால் கணிதத்தில் இல்லை என்றால் என்ன செய்வது? எவ்வளவு ஸ்ட்ரீம்கள் இருக்கவேண்டும்?//

    one can study maths in A Stream and English in C Stream

    Another can study English in A, History in A and Match in C

    Why can't you give this combination also

    ReplyDelete
  28. //மகாதேவன்: உங்கள் கருத்தை நான் முற்றாக நிராகரிக்கிறேன். கல்வி என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்று நினைக்கிறேன். இது கறந்த பசும்பால் அல்ல. இதற்குக் குறைவே இல்லை. தெருக்கோடியில் non-formal முறையில்கூடக் கல்வியை அளிக்கமுடியும். நீங்கள் சொல்வது சிறப்புக் கல்வியை. அதனைச் சிலர் மட்டும்தான் கற்கிறார்கள். பொதுக்கல்வி அனைவருக்கும் போய்ச்சேரவேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது.//

    வழிமொழிகிறேன்

    மகாதேவன் சார் அடிப்படை கல்வியையும் தொழிற்கல்வியையும் குழப்பியுள்ளார்

    ReplyDelete
  29. சர்வாதிகாரிகள் கூட இந்த அளவுக்கு கொடுரமாக கல்வி விஷயங்களில் தலையிட்டதில்லை. உலகிலேயே எந்த நாட்டிலும், இரண்டு மாதங்களுக்கு மேலாக மாணவர்களை படிக்கவிடாமல் செய்த அரசு எதுவும் இல்லை.

    அரசியல் விளையாட்டில், ஒழுங்காக பள்ளிகளை நடத்த வக்கு இல்லாத இந்த ஜெயலலிதா அரசுக்கு சட்ட மன்றம் எதற்கு? இழுத்து மூடிவிட்டு கருணாநிதி வீட்டு வாசலில் நின்று அடித்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

    எங்கள் பிள்ளைகள் படிக்கட்டும்!

    ReplyDelete
  30. மகாதேவன்,
    //உண்மையில் அனைவருக்கும் கல்வி என்பதே தவறான, சாத்தியமில்லாத, தேவையில்லாத ஒன்று. கல்வியின் பலன்தான் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அது நடக்க வேண்டுமானால், எல்லாருக்கும் கல்வி என்ற கோஷத்தை விட்டால்தான் முடியும். //

    உங்கள் சிந்தனை மிகவும் அபாயகரமானது. உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  31. நணபர் பத்ரி அவர்களே,

    கருணாநிதி கொண்டு வந்த பாடத்திட்டம் அபத்தம்.மாற்று கருத்து இல்லை ஆனால் சமச்சீர் கல்வி என்பது முக்கியம். பிறிதொரு நாளில் நான் சொல்கிறேன் விளக்கம். தமிழ்நாட்டில் பார்ப்பனிய பள்ளிக்கூட ஆதிக்கம் அதிகம் என்பது கற்றறிந்தவர்களுக்கு தெரியும். உன் மற்றும் ஜெயா போன்ற பார்ப்பானுக்கு தெரியாது.ஆனாலும் நீ திறமையான கல்வி வேண்டும் என்பது போல் சொல்லி பார்ப்பான் குழுவை வலுச்சேர்க்கிறாய்.....

    அந்த கோர்ட் இந்த கோர்ட் என்று கேவலப்படுத்தாதே முதலில் இந்திய சட்டத்தை படி.. படிக்காதவன் போல் செயல்படாதே..
    நன்றி
    அகரன்.

    ReplyDelete
  32. பாடதிட்டம் மிக நன்றாக உள்ளது.சென்ற வருடம் 6ம் வகுப்பு புத்தகம் [இப்போதும் அமுலில் உள்ளது] அதற்கு முந்திய வருடம் இருந்த பழைய புத்தகம் ஒப்பிட்டு பார்க்கலாம்.

    ReplyDelete
  33. sangeetha,
    first think what is samacheer kalvi.. the word "samacheer" means all pupils should be equally treated in all ways.. its is more important.. matric schools the students had ac labs and neat clean classrooms but that neatness and basic needs was not in government school students.. if it is the case.. first provide the basic needs for all the government schools.. Not only the education can lift up the students.. first there should be a good environment in the schools

    ReplyDelete