Monday, April 16, 2012

கல்வி உரிமைச் சட்டம் - கபில் சிபல்

தினமணியில் வெளியான செய்தி:
25 சதவீத மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிப்பதற்குத் தேவையான நிதியை யார் அளிக்க வேண்டும் என்று கேட்டபோது, “ரூ. 6 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை அரசின் பங்களிப்பு இருக்கும்” என்றார் சிபல். 

எனினும், இந்தத் தொகை இலவசக் கல்வி அளிப்பதற்குப் போதுமானதல்ல என்பதை ஒப்புக் கொண்ட அவர், 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மாணவர்களுக்கு இலவச சீருடையையும், புத்தகங்களையும் அரசு வழங்கும் என்றார்.

பள்ளிகள் தங்களுடைய நிதி ஆதாரங்கள் மூலம், இலவசக் கல்வியளிக்கலாம். சமூகத் திட்டங்களுக்கு நிதி தர வேண்டிய பொறுப்பு பல பெரிய நிறுவனங்களுக்கு இருப்பதால், அவற்றிடமிருந்தும் நிதியைத் திரட்ட முடியும். அதனால் பெற்றோர்கள் மீது இந்தச் சுமை ஏற்றப்படாது என்றார் கபில் சிபல்.
கபில் சிபல் போன்ற முட்டாள்கள் அமைச்சர்களாக இருப்பது பெரும் சோகம். அரசு அளிக்கும் பணம் போதாது என்பதை ஒப்புக்கொள்கிறார் திருவாளர் அமைச்சர். ஒரு பள்ளி என்ன செய்யும்? தெருத் தெருவாகப் போய் நிதி திரட்டுமா? அதற்கான சாத்தியமே இல்லை. மாறாக, தலைக்கு இவ்வளவு என்று பிற மாணவர்கள் மீதுதான் கட்டணத்தைச் சுமத்தும். அதுதான் அந்தப் பள்ளிக்கு எளிதான செய்கை. பெற்றோர்கள்மீது இந்தச் சுமை ஏற்றப்படாது என்று எதை ஆதாரமாக வைத்து இவர் சொல்கிறார்? என் முந்தைய பதிவில் கட்டணம் எப்படி உயரவேண்டியிருக்கும் என்று கணக்கு காட்டியுள்ளேன். 

முதலில் அரசு தன் முரட்டுத்தனத்தை விடுத்து, அந்தந்தக் கல்விக்கூடங்கள் என்ன கட்டணம் வைத்துள்ளனவோ அதனைக் கொடுக்குமாறு ஒப்புக்கொள்ளவேண்டும். இப்போது அரசு செய்வது வழிப்பறிக் கொள்ளை. தன் கடமையை அடுத்தவர் கடமையாக மாற்றிவிட்டு, என் இந்தக் கல்விக் கூடங்கள் இலவசக் கல்வி அளிக்கக்கூடாது என்று நீட்டி முழக்குகிறார் சிபல்.

8 comments:

  1. நீங்கள் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் சரியென்ற புள்ளியிலிருந்த உங்கள் விவாதத்தை முன் வைக்கிறீர்கள்.

    ”கபில் சிபல் போன்ற முட்டாள்கள்” உங்களுக்கு தான் எவ்வளவு கோபம்....

    ReplyDelete
  2. சில தனியார் பள்ளிகள் எக்கச்சக்கமாக வசூலித்தாலும், பல தனியார் பள்ளிகளும் என் கணிப்பில் நியாயமான கட்டணத்தையே வசூலிக்கின்றன. சொல்லப்போனால், ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளம் தரவேண்டும் என்றால் இப்போதைய கட்டணத்தில் அது முடியவே முடியாது. நல்ல ஆசிரியர்கள் வேண்டும் என்றால், கட்டணத்தை உயர்த்தியே ஆகவேண்டும். அதற்குமேல், RTE சுமையும் சேர்ந்துகொள்ளும். கபில் சிபல் மேல் எனக்குக் கோபம்தான். சொல்லப்போனால் இந்த ஆட்சியின் அடுத்தடுத்த முட்டாள்தனமான செயல்பாடுகளின்மீது கடுமையான கோபம்.

    ReplyDelete
  3. //நீங்கள் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் சரியென்ற புள்ளியிலிருந்த உங்கள் விவாதத்தை முன் வைக்கிறீர்கள்.// அப்படிப் பார்ப்பதில் உள்ள யதார்த்தத்தை ஒதுக்கி விட முடியாது. உயர்வரம்பு கட்டணத்தை அரசே எல்லா பள்ளிகளுக்கும் நிர்ணயிக்கவேண்டியிருக்கும்.சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் சேர்த்து.கேள்வி அரசு கொடுக்கும் காசுக்கும் கட்டணத்துக்கு உள்ள வித்தியாசத்தை என்ன செய்து நிரப்புவது.இப்போது இது பிஸினஸ் ஆக இருப்பதுபோலவே தொடரும்.தொடரமுடியாவிட்டால் பள்ளிகள் இழுத்து மூடப்படுகிற நிலைக்கு வரும்.இல்லை அரசே பள்ளிகளை நடத்தவேண்டும்.அதுவும் முடியாது ஊழல் காரணமாக!அல்லது செலவு காரணமாக.அரசுக்கு மட்டும் செலவு காரணமாக நடத்த முடியாது எனில் தனியாருக்கு எப்படி முடியும்?

    மறுபடி கோர்ட்டுக்கு கேஸ் போகும் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  4. சுருக்கமாக சொன்னால் தனியாரால் business aspect இல்லாமல் பள்ளிகள் நடத்தமுடியாது.ஆனால் அரசாங்கம் நடத்தலாம். தனியார் பள்ளிகளுக்கு பொருட்களை விற்கிறவர்கள் இலவசமாக விற்கலாமே! முடியாது இல்லையா? ஆக business aspect தவிர்க்கமுடியாது. இப்போது செலவை சரி செய்ய மற்ற மாணவர்களிடம் இந்த வித்தியாசத்தை சுமத்தியாகவேண்டும்.எப்போது தனியார் என்று வருகிறதோ அப்போது business aspect ஐத் தவிர்க்கவே முடியாது.

    business ல் ஒரு இரண்டு பேர் இருக்கிறார்கள் அதில் ஒருவருக்கு சலுகை அளிப்பீர் எனில் மற்றவர் காலப்போக்கில் மறைந்துவிடுவார்.நான் சிறுபான்மைபள்ளிகளுக்கு நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்ட சலுகையைச் சொல்கிறேன்.

    இதற்கு வழி அரசாங்கம் அந்த கட்டணவித்தியாசத்தை கொடுப்பதுதான்.பிஸினஸா...கல்வியை வியாபாரமாக்கலாமா? என்று கேட்டால் கூடாதுதான்.அரசு இலவசமாக நல்ல கல்வி கொடுக்கட்டும் இந்த பிரச்னையே வராதே!

    பெரிய(!?) பள்ளிகளில் ஏழைமாணவர்கள் படிக்க வாய்ப்பு என்பது உண்மையே. அதில் அவர்கள் சந்திக்கிற பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட முடியும் என்றே நம்புகிறேன். இது காலப்போக்கில் நடக்கும்.அந்த மாணவர்களைப் பொறுத்தவரை நல்ல விசயமே இது.

    இப்போது வேறு வழியில்லை கட்டணம் உயர்த்தியே ஆகவேண்டும்.இது சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளுக்கு, பலத்த அடியே. அவர்கள் இனி ரியாலிடி ஷோ நடத்தி பணம் வசூலிக்கவேண்டியதுதான்.இல்லை இப்போது மறைந்து நடத்துகிற வணிகத்தை அப்பட்டமாக வெளிப்படையாக -கல்வித்துறை இனி மாறவே மாறாத நிலையில்- நடத்தவேண்டியிருக்கும்.

    மொத்தத்தில் வணிகரில் சிறுபான்மையின வணிகருக்கு கிடைத்த சலுகையே இது. இது சிறுபான்மை இன மக்களின் மீதான கடுப்பில் சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம். நான் இது ஏற்படுத்தப்போகிற ultimate impact அடிப்படையிலேயே சொல்கிறேன்.சிறுபான்மை இனமக்களுக்கு நன்மை என்பதை விட சிறுபான்மையினரில் உள்ள கல்விவணிகர்களுக்கு மட்டுமே இதனால் நன்மை.அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களே! இது கல்வியை மேம்படுத்த உருவானது அல்ல.ஆம்...இந்த தீர்ப்பே முழுக்க வணிகம் சம்பந்தப்பட்டதே!

    ReplyDelete
  5. மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றின் அடிப்படைப் பணிகள்,தெரு விளக்கு, சுகாதாரம், ஆரம்பக் கல்வி ஆகியவையே. அந்தக் காலத்து பாடப் புத்தகங்களிலும் இதைக் காண்லாம். தமிழகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பல முனிசிபாலிடிகள் ப்ள்ளிகளை-- ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்னிலைப் பள்ளி-- நடத்தி வந்தன.அவை மிகச் சிறப்பாகவே நடத்தப்பட்டன. நான் அப்படிப்பட்ட முனிசிபல் பள்ளியில் படித்திருக்கிறேன்.சிறந்த ஆசிரியர்கள், சிறந்த நிர்வாகம், மாணவரிடையே நல்ல ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை இருந்தன.பின்னர் நாளாவட்டத்தில் முனிசிபாலிடிகள் இந்த்ப் பணியை விரிவாக்கவில்லை. முனிசிபல் பள்ளிகளை மானில அரசு எடுத்துக் கொண்டது. படிப்படியாக சீரழிவு தொடங்கியது. இப்படியான நிலையில் தான் தனியார் துறையினர் பள்ளிகளைத் தொடங்க ஆரம்பித்தனர். அவை நல்ல வியாபாரமாகின. அரசாங்கம் இதை நன்கு ஊக்குவிததது. எனினும் அவ்வப்போது “ அரசாங்கம் எழுந்து உட்கார்ந்து தனியார் பள்ளிகள் பற்றி சிந்தித்து அவற்றைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டிய நிலை பற்றி ஆராயும் சூழ்னிலை வரலாம் என்று தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகலாம்”என்று அறிவிப்பு வெளியிடும்.இப்படியாக ஆரம்பப் பள்ளிகளில் நல்ல ப்னம் பார்த்த தனியார் பின்னர் தனியார் எஞ்சினீரிங் கல்லூரிகளைத் தொடங்கினர். அதற்கு அரசு ஊக்குதல் அளித்தது.மத்திய அரசில் இருந்தவர்களும் ஊக்குதல் அளித்தனர்.
    ஆரம்பக் கல்வியை அளிக்க வேண்டியது கார்ப்பரேஷன்,மற்றும் முனிசிபாலிடிகளின் கடமை என்பது மறக்கப்பட்ட காரணத்தால் இன்று விசித்திர நிலை உண்டாகியுள்ளது.
    இப்போது தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு வந்தால் ஆந்த ஒதுக்கீட்டின் கீழ் பின் தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த பணக்காரர்களின் குழந்தைகளே பலன் பெறும்.அப்படி ஏற்படுமானால் அது நல்லதே. ஏனெனில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்பட்டால் அவர்களால் இதர குழந்தைகளுக்கு ஈடாக ஆங்கிலம் பேச முடியாது. பழக்க வழக்கங்களும் வித்தியாசப்படும் ஏழைக் குழந்தைகளை மற்ற குழந்தைகள் ஏளனமாகப் பார்க்கும்.ஒதுக்கி வைக்கும். இவையெல்லாம் ஏழைக் குழந்தைகளின் மனதில் தேவையற்ற தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். ஆகவே புதிய சட்டப்படி அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் வசதி படைத்த பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமே இடம் ஒதுக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்து விடட்டும்.வீணாக ஏழைக் குழந்தைகளை இழுக்காதீர்கள். அவர்கள் தட்டுத் தடுமாறி லட்சிய வேகத்தால் உந்தப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி சாதனை படைக்கின்ற திறமை படைத்தவர்க்ள். உலகில் பெரும் சாதனை படைத்தவர்கள் எல்லாம் மேட்டுக் குடியினரின் பள்ளிகளில் படித்து வந்தவர்கள் அல்ல.

    ReplyDelete
  6. //கபில் சிபல் போன்ற முட்டாள்கள் அமைச்சர்களாக இருப்பது பெரும் சோகம்//

    The blog author, being very diplomatic in voicing opinions has broken his restraint. A well-deserved comment

    ReplyDelete
  7. பத்ரி

    அரசு ஏன் அதிகம் பள்ளிகளை நடத்தக்கூடாது

    என்ற கேள்விக்கு விடை என்ன

    ReplyDelete
  8. In spite of getting starting salary of around Rs.15,000/ to Rs.80,000/ for experienced Government school teachers there out put is dismal. Dependence of such Govt. school is much higher in rural and very much higher in remote rural areas. Accountability is absolutely zero. If we address this problem most of our social evil will go away. Inspite of Government is spending crores and crores every year quality of the output is going down. This is the basic problem we all need to raise in every forum.

    ReplyDelete