Wednesday, April 25, 2012

சிங்வி + ட்விட்டர் + அந்தரங்கம்

சென்ற பதிவில் அபிஷேக் மனு சிங்வி பற்றி நான் எழுதியதற்கும் ‘கருத்து கந்தசாமி’களின் திடீர் கருத்துகளுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்டிருந்தார். எனவே இந்தப் பதிவு.

1. பிற ஸ்டிங் ஆபரேஷன்களுக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. நித்தியானந்தா விஷயத்தில் லெனின் கருப்பன் என்கிற தர்மானந்தா திட்டம் போட்டு, விடியோ கேமராவைக் கொண்டுபோய் ரகசியமாகப் பொருத்தி, படம் எடுத்திருக்கிறார். அந்தரங்கத்தை மீறவேண்டும் என்று அவர் முன்பாகவே திட்டமிட்டிருக்கிறார். ஆனால் சிங்வி விடியோவைக் கவனமாகப் பார்த்தால் அது ஏற்கெனவே சிங்வியால் அல்லது சிங்வியின் அனுமதியுடன் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு செக்யூரிட்டி கேமரா என்று தெரிகிறது. அந்த அறைக்குள் வருகிற, போகிற, இருக்கிற அனைவரையும் படம் எடுக்க என்றே அந்த கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை எளிதில் கணித்துவிடலாம்..

2. பலான மேட்டர் நடக்கும், அதனைப் படம் பிடித்து உலகுக்குக் காட்டி, சம்பந்தப்பட்டவர்களை அவமானப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் படம் எடுக்கப்படவில்லை. ஏனெனில் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் எங்குமே காட்டப்படுவதில்லை. சிங்வி போல் தோற்றம் அளிப்பவர் சட்டையைக் கழற்றுவது மட்டும்தான் தெரிகிறது. அவருடைய இடுப்புக்குக்கீழ் எதுவுமே தெரிவதில்லை. மீதம் எல்லாமே சஜெஸ்டிவ்தான்.

3. அந்தரங்கம் எங்கு மீறப்பட்டுள்ளது என்பதற்குமுன் சட்டம் எங்கு மீறப்பட்டுள்ளது என்று பார்ப்போம். இப்படி ஒரு செக்யூரிட்டி விடியோ கட்டாயம் இருக்கும் என்று அந்த டிரைவர் நபருக்குத் தெரிந்திருக்கிறது. அந்த அறைக்குள் ஏகப்பட்ட விஷயம் நடக்கும் என்று அந்த நபருக்குத் தெரிந்திருக்கிறது. அவர் செய்த காரியம், பிறருடைய சொத்து ஒன்றைத் திருடியது

4. நிறைய விடியோ கோப்புகள் திருடப்பட்டு (பிரதி எடுக்கப்பட்டு), அதிலிருந்து குறிப்பிட்ட பகுதி வெட்டப்பட்டிருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்பது டிரைவருக்குத் தெரிந்திருக்கிறது. அதை வைத்துக்கொண்டு சிங்வியை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்று அவர் முடிவு செய்திருக்கிறார். இதுவும் குற்றம். எனவே திருட்டு, பணம் கேட்டு மிரட்டுதல் ஆகியவை தொடர்பாக டிரைவர்மீது வழக்கு பதிவுசெய்வது நியாயம். சிங்வி போன்ற மிகத் திறமையான வக்கீல்கள் அதனைச் செய்வார்கள் என்று நம்புவோம்.

5. சம்பந்தப்பட்ட சிடியில் பேச்சுவார்த்தை ஒன்றும் இல்லை, வெறும் செயல் மட்டும்தான் என்றால் அந்த சிடியை வெளியிட்டவர்மீதுதான் நம் கோபம் திரும்பவேண்டும். அந்தரங்கத்தை மீறிய செயல் இது. இதனை நாம் கடுமையாகக் கண்டிக்கவேண்டும்.

6. ஆனால் இருவருக்கும் இடையில் நடந்த செயலைவிட பேச்சுவார்த்தைதான் முக்கியத்துவம் பெறுகிறது. சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர் கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்து வந்து கொடுத்துவிட்டு, இதே பேச்சைப் பேசி, அந்த சிடி வெளியானால் யாரும் அந்தரங்கம் அது இது என்று பேசமாட்டார்கள். மனோஜ் பிரபாகர் ஸ்டிங் ஆபரேஷன் அல்லது சென்ற ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான ஸ்டிங் ஆபரேஷன் ஆகியவற்றிலும் அந்தரங்கம் மீறப்பட்டது. ஆனால் அதில் செக்ஸ் இல்லை என்பதால் யாருமே அதுபற்றி வாயைத் திறக்கவில்லை. அமர் சிங் சிடி, ஷாந்தி பூஷண் சிடி ஆகியவற்றிலும் யாரும் அந்தரங்கம் பற்றிப் பேசவில்லை.

7. சிங்வியைப் பார்க்க வந்த பெண் வழக்கறிஞர் ஆரஞ்சுப் பழங்களைக் கொடுத்துவிட்டு ஜட்ஜ் வேலை எப்போது செட்டிலாகும் என்று பேசி, அந்த சிடி வெளியாகியிருந்தால் மைய நீரோட்ட ஊடகங்கள் அதனை வெளியிட்டிருக்குமா? வெறும் ஸ்பெகுலேஷன்தான் என்றாலும் இன்றைய ஊடகங்களின் தன்மையைப் பார்க்கும்போது அவர்கள் எதனை ஊதிப் பெருக்குவார்கள், எதனை மூடி மறைப்பார்கள் என்பது தெளிவு. சிங்வி எளிதாகத் தப்பியிருப்பார்.

8. Media Crooks தளத்தில் எழுதப்பட்டுள்ள ஓர் அருமையான கட்டுரையில் சொல்வதுபோல அந்த சிடியைக் காண்பிப்பதைத்தான் தில்லி உயர் நீதிமன்றம் தடை செய்தது. அதில் உள்ள பிரச்னைக்குரிய விஷயத்தை (செக்ஸை அல்ல, ஜட்ஜ் பதவியை விலை பேசுவதை) வெளியே சொல்வதில் தடை ஏதும் இருக்கவில்லை. ஆனாலும் அதைப் பற்றி எந்த மைய நீரோட்ட ஊடகமும் பேசவில்லை. குறைந்தபட்சம் அது உண்மையா இல்லையா என்று சம்பந்தப்பட்ட நபரைக் கூப்பிட்டுக் குடைந்து எடுக்கவில்லை.

9. இணையத்தில் அந்த சிடியை வெளியிட்டது நியாயம் இல்லைதான். ஆனால், முதன்மை ஊடகங்கள் என்ன செய்திருக்கவேண்டுமோ அதனைச் செய்யாத நிலையில் இணையம் வழியாக வெளியிடப்பட்ட அந்த விடியோதான் சிங்வியைக் கீழே இறக்கியது. இப்போதும் கூட மைய நீரோட்ட ஊடகங்கள் அவருடைய அந்தரங்கம் மீறப்பட்டதைப் பற்றிப் பேசுகின்றனவே ஒழிய உயர்நிலையில் இருப்போர் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பற்றியோ, நீதிபதி பதவிகள் பணத்துக்காகவும் உடலுக்காகவும் விற்கப்படுவது குறித்தோ பேசுவதில்லை என்பதுதான் பெரும் சோகம்.

13 comments:

  1. முதன்மை ஊடகங்கள் சார்பாக இருப்பதோ, சில விசயங்களில் மட்டும் அதீத கவனம், சில விசயங்களில் மௌனம் காட்டுவது
    இப்போது தான் முதல் முறை அல்ல.

    முன்பே பல விசயங்களில் இது நடந்து உள்ளனவே

    சிவகாசி ஜெயலட்சுமி, குமுதம் குடும்பச் சண்டை, நீரா ராதியா, தமிழ் ஈழம், காவிரி பிரச்னை, காஷ்மீர் பிரச்னை, விவகாரம் எனப் பல விசயங்களில் ஊடகங்கள் விரும்பும் பொழுது கூக்குரல் இடுவதும்,
    விரும்பா பொழுது அதைப் பற்றி எழுதாததும்

    ReplyDelete
  2. உண்மைதான். ஆனால் அதைத்தான் இனியும் செய்யமுடியாது என்கிறேன். ட்விட்டர் போன்ற நெட்வொர்க்கில் இப்போது கணிசமானோர் உள்ளனர். தொலைக்காட்சியிலும் இதழ்களில் வராவிட்டால் அது செய்தியே அல்ல என்பதெல்லாம் இனியும் உண்மை அல்ல. அதைத்தான் சிங்வி விவகாரம் காட்டுகிறது. மாற்று ஊடக வெளி இன்று உண்மையிலேயே உள்ளது. இங்கு வாசகர்களைத் திரட்டி ஒர் கருத்தை வலுவாக முன்வைக்க முடியும்.

    ReplyDelete
  3. Replies
    1. நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இப்போதைக்கு ஆள் மாற்றம் மட்டும்தான். ஆட்சி மாற்றத்துக்கு இன்னும் பத்தாண்டுகள். அப்போது இணையம்தான் ஆட்சியைத் தீர்மானிக்கும். ஜெய் இணைய பகவான்!

      Delete
  4. வரப் போகும் புதுக் கோட்டை தேர்தலில்
    இணைய மாற்று ஊடக வெளி மூலம்
    தேர்தல் முடிவை மாற்ற முயல்வோம்

    ReplyDelete
  5. Awesome points from you here sir...Also, thanks for the Mediacrooks links. That was a well written one. We as a twitter user should come even more and tear the MSM journos apart.

    ReplyDelete
  6. Dear Badri sir,

    நல்ல கட்டுரை. நீங்கள் குறிப்பிட்ட Media Crooks கட்டுரையும் படித்தேன். இனி வரும் காலங்களில் பலரின் முகமூடி சமூக வலைதளங்களின் வாயிலாக கிழியும் என்பது உறுதி.

    Few good lines from Media crooks....
    Social media has come to challenge their(Mainstream Media and some politicians) monopoly, their bias, their spins, their lies, and their selective reporting.

    -Siva

    ReplyDelete
  7. ஒவ்வொரு நீதிபதி பதவி நிரப்பப்படும் பொழுதும் நடக்கும் திரைக்குப் பின்னாலான அரசியல்கள், மொகலாய சாம்ராஜ்ய வாரிசு சண்டைகளை விட சுவராசியமானவை. வழக்குரைஞர்களுக்கு நீதிமன்ற தாழ்வாரங்களில் பொழுது போவதே, இது குறித்தான பேச்சுக்களில்தான்...

    அவற்றில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். ஆனால் அந்த வம்பு பேச்சுகள்தான், வழக்குரைஞர் தொழிலின் இறுக்கத்தை தளர்த்த உதவும் எண்ணை!

    ReplyDelete
  8. சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகச்சிறந்த சில வழக்குரைஞர்களில் அவரும் ஒருவர். முக்கியமாக தொழில் தர்மத்தை என்றும் காக்கும் அப்பழுக்கில்லாதவர். நீதிபதியாக விரும்பினாலும், அந்தப் பதவி அவரைத் தேடி வரவில்லை. சுதந்திர இந்தியாவின் மிகச்சிறந்த நீதிபதிகளில் ஒருவர் அவருடைய ஆதர்ச புருசர்.

    அந்த நீதிபதி கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய சென்னை தலைமை நீதிபதி, மற்றவரை தனது குரு என்று குறிப்பிட்டார். பேசி அமர்ந்த தலைமை நீதிபதியைப் பார்த்து மற்றவர், ‘குரு என்று சொன்னீர்களே, குருதட்சணை எங்கே?’ என்று கேட்டார். தலைமை நீதிபதி, ‘என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்’ என்றதற்கு மற்றவர், ‘………ஐ நீதிபதியாக்குங்கள்’ என்றார்.

    தலைமை நீதிபதிக்கு மறுக்க முடியவில்லை. மூத்த வழக்குரைஞர் சந்துரு நீதிபதியானார். ஆனால் காலம் பல கடந்து விட்டதால், சில வருடங்களிலேயே ஓய்வு பெற்று விடுவார்

    ஆனானப்பட்ட சந்துருவிற்கே, கிருஷ்ணய்யர் போன்றவர்கள் குருதட்சணை என்று கெஞ்ச வேண்டியுள்ளது.

    மற்றவர்கள் பாடு?

    ReplyDelete
  9. It is sad that no media has shown the courage to investigate and report the controversies sorrounding the elevation of any person as a Judge of the High Courts or the Supreme Court

    ReplyDelete
  10. உலகம் முழுக்க மாஸ் மீடியாக்களின் போக்கு ஒரே விதமாக இருக்கும் போது இதில் எழுத/கருத்துக் கூற என்ன இருக்கிறது ? சோஷியல் மீடியாக்கள் சத்தம் ஏற்படுத்தும் ஆனால் அதன் இரைச்சலை அதனாலேயே தாங்க முடியாது. இன்றைக்கு ட்விட்டர்களில் வரும் விஷயமும் அப்படித்தான். தமிழ் ட்வீட்கள் நாற்றமடிக்கின்றன

    ReplyDelete
  11. பெரிய மனுஷங்களின் அந்தரங்க்ங்களை ஊர் அறிய வெளியே கொண்டு வருவது தர்மம் அல்ல என்பது போலவும் வாதிக்கப்படுகிறது.இப்படியான படுக்கை அறை விஷயங்கள் வெளியாகாதபடி சக்தி படைத்த ஊடங்களின் மேல் மட்ட மனிதர்களுடன் பேசி முன்னர் மூடி மறைக்க முடிந்தது. ஊடங்களின் முதலாளிகளும் பெரிய மனிதர்கள் தானே. இனி அதெல்லாம் சாத்தியமில்லை என்பதை இப்போதைய சம்பங்கள் எடுத்துக் காட்டி வருகின்றன.பொது வாழ்க்கைக்கு வந்த பின்னர் புகழ் பப்ளிசிடி ஆகியவை கண்டு சந்தோஷப்படுகிறவர்கள் பாதகமான பப்ளிசிடி வரும் போது கூக்குரல் போடுவதேன்? அந்தரங்க வாழ்க்கை என்று போர்வைக்கு ஒளிய முற்படுவது ஏன்?

    ReplyDelete
  12. There are 3 fundamental differences between the two episodes:

    - Singhvi did what he did in High Court Lawyer's chamber, in a property that is paid for and sustained by public money. Nithyanandha did what he did in his private property funded by his disciples. Singhvi must be answerable to the entire Indian public, Nithyanandha to his disciples.

    - Singhvi bartered a public post of an institution that is deemed one of the pillars of democracy for sex as a personal favor. There is no comparison to this in what Nithyanandha did.

    - In the case of Nithyananda, the episode is an embarrassment for the ones involved and his disciples. On the other hand, Singhvi is a powerful persona in Indian politics and spokesperson of the ruling party. His personal failings are potential opportunities to be exploited for foreign governments and anti-national elements.

    Arunagiri.

    ReplyDelete