Saturday, May 05, 2012

யார் அடுத்த குடியரசுத் தலைவர்?

அடுத்த குடியரசுத் தலைவர் பற்றிய என் கருத்தை, நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தார்.

குடியரசுத் தலைவர் பதவி அரசியல்ரீதியில் அவ்வளவு ஒன்றும் முக்கியமானதல்ல. யாராக இருந்தாலும் பெரிய தாக்கம் ஏதும் இருக்காது. அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவியை தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்துக்கொண்டார். நாடு முழுதும் சுற்றினார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேசினார். அவரால் பல லட்சக்கணக்காக மாணவர்கள் ஊக்கம் கொண்டனர். அதே நேரம் சில ஃப்ரிஞ்ச் ஆசாமிகள் அவரை ‘அரசவைக் கோமாளி’ என்றே அழைத்தனர். சில அரசியல் நோக்கர்கள், கலாம் மிகவும் ஆபத்தானவர் என்று கருதினர். முக்கியமாக அவருடைய அணு ஆயுத ஆதரவு, அணு மின் நிலைய ஆதரவு ஆகியவையும் குஜராத் கலவரங்களுக்கு எதிராக அவர் ஏதும் சொல்லாததும் அவர்களுடைய கோபத்துக்குக் காரணம்.

சில வலதுசாரிகள், கலாமால்தான் சோனியா பதவிக்கு வரமுடியவில்லை என்று பெருமையுடன் சொல்கின்றனர். சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு வருவதில் எனக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை. இப்போது இருக்கும் மன்மோகன் சிங் ஆட்சியைவிட அது எந்தவிதத்திலும் மோசமாக இருக்க முடியாது. இனி வரப்போகும் ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா ஆட்சியைவிடவும்தான்.

அடுத்து வந்த பிரதிபா பாடில், ஒரு அய்யோ பாவம். தன் நீண்ட, நெடிய குடும்பத்தை அழைத்துக்கொண்டு பல நாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்தார். கலாம் போகும் இடங்களிலெல்லாம் என்ன பேசுகிறார் என்பதைத் தன் இணையத் தளத்தில் போட்டு வைத்திருப்பார். கலாமின் கவிதைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அந்தப் பேச்சுகள் பெரும்பாலும் கவனத்துடன் எழுதப்பட்டதாக இருக்கும். மிகவும் ஆழமாக இல்லாவிட்டாலும்கூட கேட்போரை நன்கு கவரும். பாடில் அதையெல்லாம் செய்தாகவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்.

நம் நாட்டின் குடியரசுத் தலைவர்கள் வித்தியாசமானவர்கள். வெவ்வேறு காரணங்களுக்காகப் பதவிக்கு வந்தவர்கள். ராஜேந்திர பிரசாத் ஒரு வழக்கறிஞர். காந்தியைப் பின்பற்றி தேசியப் போராட்டத்தில் இறங்கியவர். அரசியல் அவருக்கு அத்துப்படி. தனக்குப் போட்டியாக பிரசாத் இருந்துவிடக்கூடாதே என்பதற்காக நேருவால் கட்டம் கட்டி குடியரசுத் தலைவராக அனுப்பப்பட்டவர் என்கிறார்கள். ராதாகிருஷ்ணன் அரசியல்வாதி கிடையாது. ஆனால் மிக்கப் படித்தவர். தத்துவவாதி. இதுவரையிலான அனைத்துக் குடியரசுத் தலைவர்களிலுமே மிகச் சிறந்த அறிவாளி அவராகத்தான் இருக்கவேண்டும். அசலான புத்தகங்களை எழுதியுள்ளார். ஜாகிர் ஹுசேன் கல்வியாளர். பொருளாதாரத்தின் முனைவர் பட்டம் பெற்றவர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர்.

அடுத்து குடியரசுத் தலைவர் ஆனவர் விவி கிரி. முழு நேர அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியில் பிளவு நீறுபூத்த நெருப்பாக இருந்தது. காமராஜ் தலைமையிலான சிண்டிகேட் நீலம் சஞ்சீவ ரெட்டியை நிறுத்த, இந்திரா காந்தி ‘மனச்சாட்சியின்படி வாக்களியுங்கள்’ என்று கட்சிக்காரர்களைத் தூண்ட, கிரிக்குக் கிடைத்தன வாக்குகள். அதன்பின் இந்திரா காந்தி மிகப் பெரும் அதிகாரத்தைத் தன் கைக்குள் கொண்டுவந்தார். ஊர் பேர் தெரியாத அஸ்ஸாமிய காங்கிரஸ்காரரான ஃபக்ருதீன் அலி அகமதுவை குடியரசுத் தலைவர் ஆக்கினார். நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படுவதில் தன் பங்கை ஆற்றினார் அவர்.

பின் இந்திரா காந்தியால் பழிவாங்கப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி, நெருக்கடி நிலைக்குப் பிறகான ஜனதா ஆட்சிக்காலத்தில் குடியரசுத் தலைவர் ஆனார். அடுத்த மூன்று குடியரசுத் தலைவர்களும் காங்கிரஸின் மூத்த தலைவர்களே. கியானி ஜெயில் சிங், ஆர்.வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா ஆகியோர் காங்கிரஸ் சார்பாக மாநில முதல்வர்களாக அல்லது மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள். காங்கிரஸின் வாக்கு வலிமை காரணமாக எந்தவித எதிர்ப்பும் இன்றி குடியரசுத் தலைவர் ஆனவர்கள்.

அடுத்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஒரு மாற்றம். அரசு அதிகாரியான இவர் ஓய்வுக்குப் பின் குடியரசுத் துணைத் தலைவராகவும் பின் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

காங்கிரஸின் வலிமை முற்றிலுமாகக் குன்றிய நிலையில் பாஜகவிடம் தேவையான வலிமை இல்லாத காரணத்தால் பெரும்பாலானோருக்கு ஏற்புடையவராக அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு மீண்டும் காங்கிரஸ் அரசியல்வாதி பிரதிபா பாடில்.

மேலே உள்ள முழுப் பட்டியலிலிருந்து பார்த்தால், குடியரசுத் தலைவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் அரசியல்வாதிகளாக, இந்திரா/ராஜிவ்/சோனியா ஆதர்வு நிலைப்பாட்டை எடுப்பவர்களாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தனிப்பட்ட முறையில் சாதனையாளர்களாக இருக்கவேண்டும். தனிப்பட்ட சாதனையாளர்கள் என்ற வரிசையில் ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசேன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் என்ற நால்வர் மட்டுமே வருகிறார்கள். இவர்களுக்கு அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என்றாலும் இவர்கள் பெரும்பாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.

அந்த ஸ்டேச்சரில் இன்று இந்தியாவில் வேறு யாருமே இல்லை. அதனால்தான் மீண்டும் அப்துல் கலாம் என்ற பெயர் முன்வைக்கப்பட்டது. அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டது. மேலும் எதிர்ப்பு இருந்தால் அவர் போட்டியில் இருப்பாரா என்பது சந்தேகம். அத்துடன் அவரது விருப்பமே மாணவர்களைச் சந்தித்துப் பேசுவது. இன்றும்கூட அவர் அதனைச் செய்துவருகிறார். அவருடைய சந்திப்புகளில் கூட்டம் அலைமோதுகிறது. மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவது அவருடைய விருப்பத்தை வெகுவாகப் பாதிக்கும். அதற்கு அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை. எனவே கலாமை விட்டுவிடுவோம்.

பாஜக யாரைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அவரை ஜெயிக்கவைக்கத் தேவையான வாக்குகளைத் தன்னிடத்தே கொள்ளவில்லை. அதேபோலத்தான் காங்கிரஸும். ஆனால் பொதுவாக காங்கிரஸ் குறிப்பிடும் ஒரு கேண்டிடேட் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

காங்கிரஸின் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆவதை நான் ஆதரிக்கிறேன். இரண்டு காரணங்களுக்காக. முதலாவது: நேர்மையான ஆளாகத் தெரிகிறார். பண்பாளர். பெரும்பாலான எதிர்க்கட்சியினர்கூட இவரை ஏற்றுக்கொள்வார்கள்.

இரண்டாவது காரணம் முக்கியமானது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் குட்டிச்சுவர் ஆக்கியதில் முக்கியப் பங்கு முகர்ஜியுடையது. எனவே இவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கி அனுப்பிவிட்டால் மத்திய அமைச்சரவையில் அந்த இடம் காலியாகிவிடும். புதிதாக வரப்போகும் நிதியமைச்சர் சில நல்ல காரியங்களைச் செய்யலாமே என்று ஓர் ஆதங்கம்தான்.

29 comments:

  1. // கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் குட்டிச்சுவர் ஆக்கியதில் முக்கியப் பங்கு முகர்ஜியுடையது. எனவே இவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கி அனுப்பிவிட்டால் மத்திய அமைச்சரவையில் அந்த இடம் காலியாகிவிடும். புதிதாக வரப்போகும் நிதியமைச்சர் சில நல்ல காரியங்களைச் செய்யலாமே என்று ஓர் ஆதங்கம்தான்.//


    ஆசைப் படுதலைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத உண்மையை உரக்கச் சொல்லி உள்ளீர்கள்

    Ramachandran
    Abu Dhabhi

    ReplyDelete
  2. I accept the second point for your support to MR.Pranabji. Completely true ;-)

    ReplyDelete
  3. "கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் குட்டிச்சுவர் ஆக்கியதில் முக்கியப் பங்கு முகர்ஜியுடையது"

    - Claps, claps, claps

    ReplyDelete
  4. முகர்ஜியே நல்லவர் என்று சொல்கிற வகையில் மோசமான காரியங்களை செய்பவரை நிதி அமைச்சர் ஆக்கிவிட்டால் என்ன செய்வீர்கள்.

    ReplyDelete
  5. பத்ரி,

    வணக்கம். முகர்ஜி நேர்மையாளர் பண்பாளர் என்கிறீர்கள். 2G விவகாரத்தில் வாய் மூடி இருப்பதிலும், இல்லாவிட்டால் திசை திருப்புவதிலும், அரும்பாடுபட்டு சிதம்பரத்தை காப்பாற்றுவதிலும் மூத்த காங்கிரஸ்காரர்கள் எல்லோருமே முனைந்தே இருந்தனர். முகர்ஜி உட்பட. அப்புறம் நேர்மை எங்கிருந்து வந்தது ? "நீ என் ஆபீசில் வேவ் பார்த்த இல்லை ? நான் ஒன் பங்கு என்ன என்று வத்தி வெக்கறேன்" என்று செய்த பண்பாளர் தானே அவர் ? இங்கு இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாருமே பயிரை மேய்ந்த வேலிதான். தாமஸ், சாவ்லா, பிரதிபா பாட்டில் என்று அரசை நிர்வாக ரீதியாக corruption மயமாக்கும் காங்கிரஸ் கொள்கைக்கு முகர்ஜி கைக்கூலியாகவே இருப்பார். அடுத்த முறை குவாடரோக்கி தனி விமானத்திலேயே தப்பிப்பார். சத்தியாமாக காங்கிரஸ் காரர் வரக்கூடாது

    Gokul

    ReplyDelete
  6. //கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் குட்டிச்சுவர் ஆக்கியதில் முக்கியப் பங்கு முகர்ஜியுடையது. எனவே இவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கி அனுப்பிவிட்டால் மத்திய அமைச்சரவையில் அந்த இடம் காலியாகிவிடும். புதிதாக வரப்போகும் நிதியமைச்சர் சில நல்ல காரியங்களைச் செய்யலாமே என்று ஓர் ஆதங்கம்தான்.//

    Yup, as they say in UK, kick him upstairs! :-)

    ReplyDelete
  7. நீங்களும் ஹமீத் அன்சாரிக்கு "Stature" பத்தாது என்று நினைக்கிறீர்களா:)

    ReplyDelete
  8. பிரணவ் முகர்ஜி நாணல் மாதிரி. அவ்வப்போது வளைந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்.1984 ஆம் ஆண்டில் இந்திரா அம்மையார் சுட்டுக் கொல்லப்பட்ட போது அடுத்து பிரண்வ முகர்ஜி பிரத்மராவார் என எதிர்பாக்கப்ப்ட்டது. அவரும் அதை விரும்பினார். ஆனால் ராஜிவ் பிரதமராக்கப்பட்டார். ராஜீவ் அமைத்த அமைச்சரவையில் முகர்ஜிக்கு எந்த மந்திரி பதவியும் அளிக்கப்படவில்லை. ராகுல் காந்தியை பிரதமராக்கும் திட்டம் ஈடேறுமானால் அவரது அமைச்சரவையில் பிரணவ் முகர்ஜியை சேர்த்துக் கொள்வது என்பது சங்கடமாக இருக்கும். அவரைத் தூக்கி ஜ்னாதிபதியில் உட்கார வைத்து விட்டால் சங்க்டம் இராது. அந்த பிளானில் தான் முகர்ஜி முன் நிறுத்தப்படுகிறார்.
    ஜனாதிபதி ஒரு கைப்பாவையாக இருக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ்காரர்கள்(சோனியா) ஒரே குறியாக இருப்பவர்கள். அது ஒன்றே நோக்கமாக இருந்ததால் தான் பிரதிபா பாட்டீல் நல்ல பெயர் வாங்கிக்கொள்ளவில்லை.
    மக்களவை முன்னாள் சபா நாயகர் சாங்க்மா ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவரே. ஆனால் அவர் தலையாட்டியாக இருக்கமாட்டாரே. இப்போது காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் அல்லாத மானிலங்களின் முதல்வர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கப் பார்க்கிறது. என்னெவெல்லாம் நடக்க்ப் போகிறதோ

    ReplyDelete
  9. அவர் பெயரில் தான் எல்லா சொத்தும் இருக்கிறது.. அவர் தான் இந்த ஜமீனுக்கு வாரிசு.. ஆனால் அக்காவின் கணவர் / சித்தப்பா / மாமா கேரக்டரில் வருபவர் தான் அந்த வாரிசை ஆட்டி வைக்கிறார்

    எங்க வீட்டுப் பிள்ளை எம் ஜி ஆர் தொடங்கி நமது பாஷையில் இந்த ஜமீன் வாரிசு கேரக்டரில் நடிக்காதஹீரோவே இல்லை ( சமீபத்து ஹீரோக்கள் நீங்கலாக) எனலாம்

    எனக்கென்னவோ இந்த ஜமீன் வாரிசு கதையிலிருந்து தான் ராஷ்ட்ரபதி என்ற உத்யோகத்தை உருவாக்கியிருப்பார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது

    சினிமா ஜமீன் வாரிசாவது டபுள் ஆக்ட் காரணமாகவோ அல்லது பாவாடை தாவணி அணிந்த சின்ன கதாநாயகிப் பெண் வீரம் ஊட்டுவது காரணமாகவோ வீரம் பொங்கிட ஒரே பாட்டில் மாறிவிடலாம்

    ஆனால் நம் கான்ஸ்டிட்யூஷன் ராஷ்ட்டிரபதிக்கு வீரம் பொங்க சின்ன சின்ன சந்தோஷ சந்தர்ப்பங்களை மட்டுமே தந்திருக்கிறது..

    ReplyDelete
  10. பத்ரி, //அந்த ஸ்டேச்சரில் இன்று இந்தியாவில் வேறு யாருமே இல்லை. // என்கிறீர்கள். கோபாலகிருஷ்ண காந்தி, மகாஸ்வேத தேவி, ரோமிலா தாப்பர் போன்றோர் இருக்கிறார்களே.. வயதின் காரணமாக நான் கோபாலகிருஷ்ண காந்தியைப் பரிந்துரைப்பேன்.ஏன் இவர்கலில் யாரையும் நீங்கள் பரிந்துரைக்கவில்லை ?

    ReplyDelete
    Replies
    1. ரோமிலா தாப்பர் போல் மேலும் சில வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள் உள்ளனர். மகாஸ்வேதா தேவிபோல் இந்தியாவின் பல மாநிலங்களில் பெரும் இலக்கியவாதிகள் உள்ளனர். ஆனால் இவர்களை ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசேன், கே.ஆர். நாராயணன், கலாம் வரிசையில் நான் வைக்கமாட்டேன்.

      கோபாலகிருஷ்ண காந்தி - நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக் கூடியவரே. கிட்டத்தட்ட நான் முன்னே குறிப்பிட்ட நால்வரைப்போல ஸ்டேச்சர் கொண்டவர். அதே அளவு அல்ல, ஒரு படி கீழ்தான். (என் கருத்து.) ஆனால் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசிவிடக் கூடியவர், நியாயவான் என்பதால் எந்தக் கட்சியுமே இவரை முன்மொழியப் போவதில்லை.

      Delete
    2. அப்துல் கலாம் ஏற்கெனவே ஒரு முறை ஜனாதிபதி பதவி வகித்து கண்ணியம் சேர்த்தவர். இருப்பினும் இந்தியா போன்ற பெரிய நாட்டில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறப்பு. கோபாலகிருஷ்ண காந்தி 25 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவர். உதவி ஜனாதிபதிக்கும், ஜனாதிபதிக்கும் சுமார் 7 ஆண்டுகள் செயலாளராக இருந்தவர். எனவே ஜனாதிபதி அலுவலகம் பற்றி நன்கு அறிந்தவர்.வெளிநாடுகளில் தூதராகவும், மாநிலங்களில் ஆளுநராகவும் இருந்தவர். ராஜாஜி மற்றும் காந்தி குடும்பத்து வழியில் வந்தவர். கலாக்ஷெத்ராவின் தற்போதைய சேர்மனாகவும் உள்ளார். சிறந்த பேச்சாளரும் கூட. எனவே கோபாலகிருஷ்ண காந்தி ஜனாதிபதி ஆவது சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

      Delete
    3. குடியரசு தலைவர் பதவி இந்த முறை வட கிழக்கு மாநிலங்களை சார்ந்தவருக்கு சென்றால் நல்லது.ஐ நா தலைவர் பதவி கண்டம் விட்டு கண்டம் தாவுவது போல.
      முன்னாள் தேர்தல் தலைமை அதிகாரியாக இருந்த lyngdoh நல்ல குடியரசு தலைவராக இருப்பார் என்று நம்புகிறேன்.அவர் பெயர் தோன்றவே இல்லை எனபது ஆச்சரியம் அளிக்கிறது

      Delete
  11. பத்ரி சேஷாத்ரி 2ஜி விவகாரம் பற்றி எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பிவைத்தால்,இப்படிப்பட்டவர்தான் தேவை என்று அவரையே குடியரசுத்தலைவராக்கிவிடுவார்கள் :)

    ReplyDelete
  12. நமது அரசியலமைப்புச் சட்டப்படி, ஜனாதிபதி மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் செயல்பட முடியும். ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் ஒரு முறை மட்டும்தான் திருப்பி அனுப்ப முடியும். அமைச்சரவை மீண்டும் அனுப்பினால் ஒப்புதல் தந்துதான் ஆக வேண்டும். தொங்கு லோக்சபை அமைந்தால் மட்டும்தான் ஜனாதிபதிக்கு சுயமாக செயல்படும் அதிகாரம் உள்ளது.

    இதோடு ஒப்பிட்டால், மாநில ஆளுநருக்கு, மாநில அரசாங்கத்தைப் பற்றி ரகசிய அறிக்கை அனுப்பும் செயலாவது உள்ளது.

    ஜனாதிபதி / ஆளுநர் பதவிகள் தேவையா? அந்தப் பொறுப்புகளை உச்ச நீதி மன்ற / உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிகள், தேவையான சமயத்தில் மட்டும் ஆற்றும்படி செய்ய முடியாதா?

    ReplyDelete
  13. ||கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்தைக் குட்டிச்சுவர் ஆக்கியதில் முக்கியப் பங்கு முகர்ஜியுடையது. எனவே இவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கி அனுப்பிவிட்டால் மத்திய அமைச்சரவையில் அந்த இடம் காலியாகிவிடும். புதிதாக வரப்போகும் நிதியமைச்சர் சில நல்ல காரியங்களைச் செய்யலாமே என்று ஓர் ஆதங்கம்தான்.||

    இந்த கருத்துக்கான முகாந்திரம் என்ன?

    வேறு நிதி அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்பட்டவர் உங்கள் நோக்கில் யார்? ஏன்?

    சிதம்பரம் என்று சொன்னால்-அவரது 2007-2008 பட்ஜெட் பற்றி குருமூர்த்தி\சுப்ரமணியம் சுவாமி எழுதிய கட்டுரைகளைப் படித்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8%-க்குக் குறைவாக ஆனதே நிதியமைச்சரின் performance மோசமானது என்பதைக் காட்டுகிறது. மோசமான fiscal policy காரணமாக பணவீக்கம் அதிகமாகிக்கொண்டே போக, அதன் காரணமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துக்கொண்டே போக, அதன் காரணமாக தொழில்துறை வளர்ச்சி குறைந்துகொண்டே போக, மேலும் பொருளாதாரம் மோசமாக, எதிர்பார்த்த (வரி) வருமானம் வராததால், அரசின் கடன் அதிகமாக, அதனால் fiscal deficit அதிகமாக... இங்கே வந்து நிற்கிறோம்.

      யார் சிறப்பான நிதியமைச்சர், சிதம்பரமா இல்லை வேறொருவரா என்பதல்ல இப்போதைய கேள்வி. பிரணாப் முகர்ஜியின் தற்போதைய performance சரியல்ல என்பது நிதர்சனம். அதற்குப்போய் ஐரோப்பா சரியல்ல, ஆப்பிரிக்கா குறை என்று முகர்ஜி சப்பைக்கட்டு கட்டுகிறார்.

      Delete
    2. மிகச் சரி.
      இந்தியாவைப் பொறுத்த வரை நிதி மேலாண்மை என்பது லிபோர் விகிதத் திருத்தங்கள்தான் என்பது பல காலமாக நிலைத்து விட்டது.
      நான் ப்ரடக்டிவ் செலவுகளும் பொதுத்துறை நிறுவணங்கள் வைட் எலிஃபென்ட் களாக மாறுவதும் நிர்வாக சீர்திருத்தத்தில் லவலேச முன்னேற்றமும் இல்லாததோடு, உலக அளவிலான உபயோகம் குறையும் போது அதன் விளைவு ஆசிய நாடுகளில் எதிரொலிகத்தான் செய்யும்.

      இதில் சீரிய செயல்பாடு உள்ள சிங்கப்பூர் போன்ற நாடுகள் பணக் கொள்கையிலும்(வட்டி விகித மாற்றங்கள் அல்லது டாலரின் மதிப்பை செயற்கையாக ஒரு அளவு வரை நிலைநிறுத்துவது) போன்ற செயல்களால் ஈடு கட்டுகிறார்கள்.

      இண்டஸ்ரியின் மீது இருக்கும் கட்டுப்பாடும்,தேவைப் பட்ட சிரிய கொள்கைகளும் தயவு தாட்சண்யமில்லாத,ஊழலுக்கு எதிரான தெளிவான நிர்வாகமும் உதவி செய்யும் போது நிர்வாகம் சீராகச் செல்லும்.

      இந்தியாவில் சீரற்ற நிர்வாகத்தோடு,லஞ்சத்தின் முன்னால் நாட்டு நலன்கள் கைவிடப் படுவது போன்ற மாறாத சூழலில் எந்த நிதி அமைச்சரும் ஒன்றும் செய்து விட முடியாது.

      சீனர்களுக்கும் கூட பெரும் கன்ஸ்யூமர் மார்கெட்டாக அமெரிக்காதான் இருந்து வருகிறது.அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் வாங்குவதைக் குறைத்தாலோ அல்லது சேவைத் துறை வாய்ப்புகளை அமெரிக்காவை விட்டு வெளிச் செல்லாமல் தடுத்தாலோ இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைவதைத் தவிர்க்க முடியாது.

      Delete
  14. பத்ரி.. இந்த பதிவுக்கு சற்று சம்பந்தமில்லாத கேள்வி.பி.ஏ.கிருஷ்ணனின் Tiger Claw tree அல்லது அதன் மொழியாக்கம் புலிநகக் கொன்றை, இரண்டில் எதை படிக்கலாம்??

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே ஒரே வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவை. எனவே உங்களுக்குப் பிடித்த மொழியில் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். நான் இரண்டையுமே படித்துள்ளேன். முதலில் ஆங்கிலம், பிறகு தமிழ்.

      Delete
  15. இப்பதிவின் எல்லாக்கருத்துக்களையும் நான் ஏற்கிறேன் இரண்டைத் தவிர. ப்ரணாப் நேர்மையாளர் என்பது ஒரு ஜோக். சிரித்துவிட்டு நகரலாம்.
    //புதிதாக வரப்போகும் நிதியமைச்சர் சில நல்ல காரியங்களைச் செய்யலாமே என்று ஓர் ஆதங்கம்தான்.//இந்த எதிர்பார்ப்பு இன்னொரு ஜோக்...
    நிதியமைச்சர் ஆக ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் உருப்படியாக ஏதும் செய்ய யாருமில்லை காங்கிரசில் என்பதே உண்மை.

    ReplyDelete
  16. நாகராஜன்: ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி விட முடியாது.மத்திய அரசுக்கு அவர் ஆலோசனை கூறலாம். அரசை எச்சரிக்கலாம்.அரசு அத்து மீறி செயல்படாமல் அவரால் இழுத்துப் பிடிக்க இயலும். தில்லியில் பாபா ராம் தேவ் கூட்டத்தில் நள்ளிர்வில் புகுந்து அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். அதிகார பீடத்தில் உள்ள ஒருவர் போட்ட உத்தாவு தான் அதற்குக் காரணம். அவர் யார் என்பது இதுவரை வெளியே வரவில்லை. இப்படியான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி பிரதமரைக் கூப்பிட்டு என்ன நடந்தது, யார் காரணம் என கேட்க முடியும். இப்படி நடப்பது அழகல்ல என்று எச்சரிக்க முடியும. அந்த செயலுக்குப் பொறுப்பானவரைப் பதவியிலிருந்து அகற்றும்படி யோசனை கூற முடியும்.ஜனாதிபதி எந்த விஷயத்திலும் நேரடியாக உத்தரவிட முடியாது என்கிற அதே நேரத்தில் மத்திய அரசு அல்லது மானில ஆளுனர்கள் அரசியல் சட்டத்தை மீறாமல் ஜனநாயக நெறி முறைகளை மீறாமல நிச்சயம் பார்த்துக் கொள்ள முடியும்.
    இங்கு ஒரு யோசனை. ஜனாதிபதியை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. அதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் மக்கள் வாக்குப் போடுவதில்லை.எனினும் அதனால் அடுத்த ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவிக்கலாம். இதற்கு இந்தக் காலத்தில் ட்விட்டர் முதல் பல வழிகள் உள்ளன. இந்த்த் தடவை மக்கள் இதில் முன்முயற்சி எடுத்துக் கொள்ளலாம்.
    அமெரிக்க அரசியல் சட்டத்தில் ஜனாதிபதியை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கும் முறை தான் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதிய மக்களே தேர்ந்தெடுக்கும் முறை நடைமுறைக்கு வந்து விட்டது.இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி செல்வாக்கு கொண்ட கும்பலின் கைப்பவையாக இருக்கின்ற நிலை மாறியது.
    இந்தியாவில் ஆட்சி அதிகார கும்பல் மக்கள் மீது ஜனாதிபதியாக ஒருவரைத் திணிக்கும் முறை ஒழிய வேண்டுமானால் மக்களே யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று தங்கள் கருத்தை வெளிப்படுத்துவது தான் ஒரே வழி.

    ReplyDelete
  17. நிதி அமைச்சரின் performance சரியில்லை என்று ஜனாதிபதி ஆக்குவதா? இதன் மூலம் அமைச்சர்களுக்கு நீங்கள் செய்யும் அநீதி உறைக்கவில்லையா? நீங்கள் சொல்கிற லாஜிக் படிப் பார்த்தால் சாக்ஷாத் மன்மோஹன் சிங்கைத் தவிர யாருக்கு அந்தப் பதவியைத் தர முடியும்?
    இப்போதைய சூழ்நிலையில்,( இனிமேல் அண்மை வருங்காலத்திலும் கூட ) யார் நிதி அமைச்ச்சரானாலும்- இடதுசாரிகளின் தனிப்பெரும்பான்மை ஆட்சியே வந்தாலும் கூட -அமெரிக்க முதலாளிகளின் கைப்பாவையாகத்தான் இருந்தாக வேண்டும்.
    நஜ்மா ஹெப்துல்லா ஓரளவு நல்ல தேர்வாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  18. //அந்த ஸ்டேச்சரில் இன்று இந்தியாவில் வேறு யாருமே இல்லை. //

    E. Sridharan / NR Narayanamurthy

    ReplyDelete
  19. பிரதிபா பாட்டில் என்ற ஜந்து அமர்ந்திருந்த பதவி ஜனாதிபதி பதவி. அதற்குப் பிறகு அந்தப் பதவிக்கு எந்த மரியாதையும் இல்லை எனபது என் எண்ணம். அப்புறம் என்ன "stature ", புண்ணாக்கு எல்லாம். சோனியா காந்தி வீட்டுக்கு பால் ஊத்தற அம்மாவை புடிச்சு ஜனாதிபதி ஆக்குங்கப்பா.

    ReplyDelete
  20. Does it really matter who becomes the President in India? It is an apolitical office with some powers which cannot be used. People who can contribute outside the office of President should not be wasted in that position.

    ReplyDelete
  21. இந்திய குடியரசுத்தலைவராக திரு.சேஷன் அவர்களை தேர்ந்தெடுத்தால் அந்த பதவியின் பலம் என்ன என நமக்குபுரியும்.ஆனால் இது நடக்காது.

    மேற்கு வங்கத்திலிருந்து இதுவரை யாரும் குடியரசுத்தலைவர் ஆகவில்லை என்ற ஒரு காரணத்திற்காக பிரணாப் தேர்ந்தெடுக்கப்படலாம்.

    ம்ம்ம்..2011 இல் மட்டும் தி.மு.க ஜெயித்திருந்தால் இந்நேரம் மு.க தான் குடியரசுத்தலைவர்..ஸ்டாலின் தமிழக முதல்வர்.அழகிரி உள்துறை அல்லது தகவல் தொடர்புத்துறை அமைச்சர்..நல்லவேளை இந்தியா தப்பியது.

    நான் வேண்டிகொள்வது இதுதான் :
    ப்ரதிபாவிற்கு பதவி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது.
    ராஜசேகரை (aka நித்யானந்தா)தேர்ந்தெடுக்கக்கூடாது.

    Why not Mr.Manmohanji himself as President?
    நமக்கு ஒரு நல்ல பிரதமராவது கிடைப்பார்.
    ஒருவேளை ராகுல் பிரதமரானாலும் ,மன்மோகன் எவ்வளவு திறமையான பிரதமராக பணியாற்றினார் என்பதாவது தெரியும்!

    ReplyDelete
    Replies
    1. ||Why not Mr.Manmohanji himself as President?
      நமக்கு ஒரு நல்ல பிரதமராவது கிடைப்பார்.
      ஒருவேளை ராகுல் பிரதமரானாலும் ,மன்மோகன் எவ்வளவு திறமையான பிரதமராக பணியாற்றினார் என்பதாவது தெரியும்! ||

      இது பத்ரி ஏன் பிரணாப் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதற்குக் கூறிய இரண்டாவது காரணம் போல இருக்கிறது..

      ஆனால் இதில் உண்மையில்லை என்று சொல்லிவிட முடியாது..

      எப்டி இப்டி ?!!
      :)

      Delete
  22. பத்ரி...// விவி கிரி. முழு நேர அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியில் பிளவு நீறுபூத்த நெருப்பாக இருந்தது. காமராஜ் தலைமையிலான சிண்டிகேட் நீலம் சஞ்சீவ ரெட்டியை நிறுத்த, // என்று சொல்கிறீர்கள். கிரி மட்டுமா முழு நேர அரைச்யல்வாதி. காமராஜ் தலைமையிலான சிண்டிகேட் நிறுத்திய சஞ்சீவ ரெட்டியும் முழு நேர அரசியல்வாதிதானே ? அதைச் சொல்லாம்லே போகிறீர்களே ஏன் ? கிரி தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர்.குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் அவர் என்ன செய்தார் தெரியுமா? சென்னை நகரின் சேரிப் பகுதிகளில் அங்கே மாநகராட்சி குளியலறை கழிப்பிடம் முதலியவற்றை உடனடியாகக் கட்டிக் கொடுத்து அங்கே சுகாதார நிலையை மேம்படுத்தவேண்டுமென்று சில காந்திய அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு குடிசைப்பகுதிக்கு நேரில் சென்று மாநகராட்சி அதிகாரிகளை கட்டாயமாக அங்கே கவனம் செலுத்த வைத்தார்.அப்படிப்பட்ட பல விசிட்டுகளுக்கு நான் அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபராக உடன் சென்றிருக்கிறேன்.

    ReplyDelete