Tuesday, July 05, 2005

தில்லி இன்னமும் தள்ளி...

தில்லி இன்னமும் தூரத்தில்... ஆனால் தொடர்ந்து நடந்தே ஆகவேண்டும் (ஹிந்தி வலைப்பதிவு)

ஏப்ரல் மாதம் தமிழ் எழுத்துவடிவங்கள், சில மென்பொருள்கள் ஆகியவற்றை வெளியிட்ட தயாநிதி மாறன், சென்ற மாதம் ஹிந்தியில் அதே காரியத்தைச் செய்துள்ளார். இம்முறை குறுந்தட்டில் கருணாநிதி படம் மட்டும் இல்லை. மன்மோகன் சிங், சோனியா காந்தி, தயாநிதி மாறன் மட்டும்தான்.

இந்தக் குறுந்தட்டில் உள்ள மென்பொருள்களும் கருவிகளும் "பயனர்களின் ஆசைகளை நிறைவேற்றியுள்ளதா அல்லது ஏமாற்றிவிட்டதா" என்பதைக் கண்டறிய வினய் ஜைன் என்பவர் அவற்றைப் பரிசோதித்து மேற்படி ஹிந்தி வலைப்பதிவில் எழுதியதிலிருந்து சில கருத்துகள்:

* மொத்தத் தொகுப்பில் மிகவும் உபயோகமானது எழுத்துவடிவங்கள் என்று தோன்றியது... ஆனால் முக்கால்வாசி எழுத்துவடிவங்கள் படிக்க வசதியானதாக இல்லை. எழுத்துவடிவங்களின் தரம் சராசரி அல்லது அதற்குக் குறைவாக உள்ளது. இப்படி ஏகப்பட்ட எழுத்துவடிவங்களைக் கொடுப்பதற்கு பதில் ஒன்றிரண்டு வடிவங்கள் மீது கவனம் செலுத்தி நல்ல தரத்தில் கொடுத்திருக்கலாம்.

* ஹிந்தி ஒளிவழி எழுத்துணரி (OCR) இதுவரையில் வேலை செய்யவில்லை. கணினியில் நிறுவவே முடியவில்லை.

* ஃபயர்ஃபாக்ஸ் - வேலை செய்கிறது. ஆனால் ஹிந்தியாக்கத்தில் நிறைய முன்னேற்றம் தேவைப்படுகிறது.

* கொலும்பா - நிறுவி முடித்தபின் வேலை செய்யவில்லை.

* ஓப்பன் ஆஃபீஸ் - நன்றாக உள்ளது. ஆனால் உள்ளடங்கிய ஹிந்தி அகராதி தப்பும் தவறுமாக உள்ளது.

* இன்ஸ்டண்ட் மெசஞ்சர் - கைம் ("சிறகு வெட்டப்பட்ட புறா" என்கிறார்!): நிறுவியபின் சரியாக வேலை செய்யவில்லை. திறந்த சில விநாடிகளில் தானாகவே மூடிவிடுகிறதாம்.

இன்னமும் சில மென்பொருள்களின் குறைகளையும் பட்டியலிடுகிறார். கடைசியாகச் சொல்கிறார்: "இன்னமும் செய்யவேண்டியது நிறைய பாக்கி இருக்கிறது. பயனர்-சோதனை என்று எதுவும் நடந்ததுபோலத் தெரியவில்லை. எண்ணமும் முயற்சியும் பாராட்டப்படவேண்டியதுதான் ஆனால் இந்த முயற்சி வெற்றியடையத் தேவையான செயல்பாடுகள் சரியாக எடுக்கப்படவில்லை. ஏதோ அவசரகதியாகச் செய்தது போலிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னதாக அரசு பல்வேறு நிறுவனங்களிடமிருந்து மென்பொருள்களைக் கேட்டதாகத் தெரிகிறது. எக்கச்சக்கமான அழுத்தம் காரணமாக இந்த நிறுவனங்கள் அரைகுறை மென்பொருள்களை அரசிடம் கொடுத்ததுபோலத் தெரிகிறது. மேற்படி அமைச்சரின் தாய்மொழி தமிழ். ஹிந்தி மென்பொருள் குறுந்தட்டுடன் வெளியான தமிழ் மென்பொருள் குறுந்தட்டும் இதேபோல மோசமாக இருந்தால், நாம் அதிகம் வருத்தம் கொள்ளவேண்டியதில்லை."

(நாம் அவருக்குச் சொல்லவேண்டியது இதுதான்! தமிழும் மோசம்தான். எங்கள் அமைச்சர் ஹிந்தியின்மீது பாரபட்சம் காட்டவில்லை!)

வினய் மேலும் சொல்கிறார்: "யூனிகோடை அரை மனதுடன் ஏற்றுக்கொண்டது மாதிரி உள்ளது."

-*-

தயாநிதி மாறனின் ஆர்வத்தைப் பாராட்டும் அதே நேரத்தில், அவர் இப்படி அவசரப்பட்டு அரைகுறைத் தரத்தில் குறுந்தட்டுகளை வெளியிடுவது அவரது பெயருக்குத்தான் இழுக்கு என்பதையும் நாம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா எங்கிலும் மானம் போகிறது. சற்றே நிறுத்தி, கவனமாகச் சிந்தித்து, தன் அமைச்சகத்தின் அதிகாரிகளைக் கூப்பிட்டு, நாலு திட்டு திட்டி, இனியும் பணத்தை வீணடிக்காமல் நல்ல (மென்)பொருளாகச் செய்து நேர்த்தியுடன் அதை மக்களுக்குத் தர முனையவேண்டும் தயாநிதி மாறன்.

1 comment:

  1. /தயாநிதி மாறனின் ஆர்வத்தைப் பாராட்டும் அதே நேரத்தில், அவர் இப்படி அவசரப்பட்டு அரைகுறைத் தரத்தில் குறுந்தட்டுகளை வெளியிடுவது அவரது பெயருக்குத்தான் இழுக்கு என்பதையும் நாம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். /


    மதிப்பு 5 star

    ReplyDelete