Tuesday, July 12, 2005

ஃபலூஜாவும் லண்டனும்

லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகையில் கேரி யங் என்பவர் எழுதிய பத்தி இன்று தி ஹிந்துவில் பல சுருக்கங்களுடன் மறுபதிப்பு செய்யப்பட்டது. சொல்லப்போனால், தி ஹிந்து சுருக்கம் மூலத்தைவிட அழகாக எடிட் செய்யப்பட்டது போலவே எனக்குத் தோன்றுகிறது. அதிலிருந்து சில துண்டுகள் என்னுடைய தமிழாக்கத்தில்:

லண்டன் குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவர, புள்ளிவிவரக் கணக்குகள் மறைந்து, நிஜமான மனித இழப்புகள் - தாய்மார்கள், சகோதரர்கள், காதலர்கள், குழந்தைகள் - ஆக உருவெடுக்கின்றன. இந்த இழப்புகளுக்காக துக்கம் அனுஷ்டிக்கப்படவேண்டியதுதான். ஆனால் அதே நேரம் இந்தச் சம்பவம் ஏன் நடந்தது, என்ன செய்தால் இதைப்போன்று மீண்டும் நடக்காமல் தவிர்க்க முடியும் ஆகியவற்றை பகுத்தறிவுடன் ஆராய்வதே தவறு என்பது போலப் பேசுபவர்களை எதிர்க்கவேண்டும்.

ஏன் நடந்தது என்று விளக்குவது, தீவிரவாதிகள் செயலுக்கு அங்கீகாரம் கொடுப்பதாக ஆகிவிடாது. அரசின் செயல்களைக் கேள்விக்கு உள்ளாக்குவது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அடிபணிவது ஆகாது.

என்ன நடந்தது என்பது நமக்கு நன்றாகவே தெரிகிறது. ஒரு சிலர், சட்டத்துக்கும் நமது வாழ்க்கை முறைக்கும் புறம்பாக, நம் நகர் மீது தாக்குதல் நடத்தினர். மனித இழப்புகள், அரசியல் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், வன்முறை மூலம் மட்டும்தான் இவர்களை வற்புறுத்தமுடியும் என்று அப்பாவி மக்களை, வித்தியாசம் பாராமல் கொன்று குவித்தனர்.

பிரச்னை என்னவென்றால் மேலே சொன்ன ஒவ்வொரு சொல்லையும் லண்டனில் இருப்பவர்கள் மட்டுமல்ல, ஃபலூஜாவில் இருப்பவர்களும் சொல்லலாம்! என்றாலும் லண்டன், ஃபலூஜா இரண்டிலும் நடந்துள்ள அழிவுகள் ஒரேமாதிரியானவை என்று சொல்லமுடியாதுதான். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாவுகள், காயங்கள், பாதிக்கு மேற்பட்ட வீடுகள் நாசம், நகரில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கூடமும், மசூதியும் தரைமட்டம் என்று பார்க்கும்போது அமெரிக்கப் படைகள், பிரிட்டிஷ் துருப்புகளின் உதவியோடு ஃபலூஜாவில் நிகழ்த்தியிருப்பதுதான் பலமடங்கு கொடுமையானது!

ஆனால் இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுத்தான் ஆகவேண்டும். வலி, இழப்பு, கோபம், தளராமை ஆகியவை நமக்கு மட்டுமே சொந்தமா என்ன?

ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானத்திலும் உள்ளவர்களை விட நமது ரத்தம் அதிகம் சிவப்பானதல்ல, நமது முதுகெலும்புகள் அதிகம் வலுவானதல்ல, நம் கண்ணீர் சுரப்பிகள் அதிகம் சுரப்பதல்ல. இதுநாள் வரையில் வளைகுடாவில் நாம் உருவாக்கியுள்ள துன்பங்களைக் கண்டு மனம் இரங்காதவர்கள் இப்பொழுது நமக்கு வெகு அருகில் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ளவாவது முடியும். "பக்கவிளைவுகள்" என்று புறந்தள்ளிவிட்டுப் போகமுடியாது. பக்கவிளைவுகளுக்கும் மனித முகமுண்டு. அம்மனிதர்களின் உறவினர்களுக்கும் சோகம் உண்டு. அந்தச் சமூகத்தினருக்கும் நினைவுகள் உண்டு. அவர்களும் நியாயம் கேட்கிறார்கள்.

அடிப்படைவாதத்தின் முதல் பலி இந்த மனிதநேயக் கருத்துகள்தாம். சென்ற வாரம் லண்டனில் குண்டுகளை வெடித்தவர்களிடம் இந்த எண்ணங்கள் துளிக்கூட இல்லை. கடந்த நான்கு வருடங்களாக 'பயங்கரவாதத்தின் மீதான போர்'களை நிகழ்த்துபவர்களிடமும் கூடத்தான்!

4 comments:

  1. இந்த தாக்குதால் ஏற்பட்ட உயிர் செதத்தை ஒரு பக்கவிளைவு -- collateral damage -- என்று கூறுவது ஒரு புதிய, நியாமான பார்வையாக எனக்குப் படுகின்றது. இவ்வளவு காலமும், அமெரிக்காவும் பிரிட்டனும் அவர்களின் போர்களில் மடியும் அப்பாவிப் பொதுமக்களைப் பக்கவிளைவு என்று புறந்தள்ளி விட்டிருந்தனர். அவர்களின் முகங்களும், சின்னாபின்னமான அவர்கள் வாழ்வும் மேற்கத்திய கருத்தாடல்களுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    ஆனால், பக்கவிளைவு என்பது எதற்காக அரசியல் எல்லைகளை மதிக்க வேண்டும்? சந்தையும் பயங்கரவாதமும் உலகமயமாக்கப்பட்டு விட்ட நிலையில், பக்கவிளைவும் உலகமயமாக்கலினால், ஆயிர மாயிரம் கல் பிரயாணிப்பதில் என்ன ஆச்சரியம்? என்ன 'தவறு'?

    இச் சமன்பாட்டில் மாற்றம் ஏற்படுத்துவது பொதுமக்களின், குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழ்வோரின், கைகளிலேயே உள்ளது. (வேற்று நாடுகளில் வாழும் நாமும் நம் பங்கை ஆற்றல் அவசியம்.) இல்லையேல் பயங்கரவாததின் கோரத் தாண்டவத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதோ, அதன் கோரப் பிடியிலிருந்து உலகை விடுவிப்பதொ குதிரைக் கொம்பாகவே அமையும்!

    வே. இளஞ்செழியன்

    ReplyDelete
  2. Badri,

    Thanks for pointing Gary Younge's Guardian article and writing your earlier article on the same subject.

    Genuine voices such as Younge's and yours have the slightest occasion to be expressed and the faintest likelihood to be heard only when collateral damages are felt in London, Madrid or NY. Isn’t it a rare opportunity to pause a bit, think, and discover the uncanny similarities between Faluja and London? To denounce and deny these voices by branding them as insensitive and illegitimate is to completely miss the point.

    Increasingly, condolences for the dead and condemnation of terror are bogged down by knee jerk reactions and political correctness, which neither mean anything anymore nor provide a way out of the situation. The western world unfortunately is caught not only in the quagmire that is terrorism, but the semantics that surround it.

    It is time to cut the crap out of the discourse and call a spade a spade!

    yetanothervenkat

    ReplyDelete
  3. Gutsy article, coming as it does just a few days after the attacks. Can't remember of any such article for months after 9/11 in US.

    Thanks for the translation and the post.

    ReplyDelete