Friday, March 16, 2007

கம்யூனிஸ்டுகளின் (CPI-M) பிரச்னை

CPI-M demanding that Tamil Nadu government not take people's land


கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட்கள் போஸ்டர் அடித்து திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு பொழிச்சலூர், கவுல் பஜார், பம்மல், அனகாபுத்தூர் பகுதி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

CPI-ML or sympathetic groups attacking CPI-M's stance in West Bengal


மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்டுகள் ஆட்சிதான் நடக்கிறது. அங்கு நந்திகிராமம் எனுமிடத்தில் விளைநிலங்களைக் கையகப்படுத்தி மலேசியாவைச் இந்தோனேசியாவைச் சேர்ந்த சலீம் குழுமத்துக்குக் கொடுத்து சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை உருவாக்க மேற்கு வங்க அரசு முயற்சி செய்கிறது. ஆனால் நந்திகிராம மக்கள் நிலங்களை விட்டுத்தர மறுக்கின்றனர். இரண்டு நாள்களுக்கு முன் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி நந்திகிராமத்தில் நிலம் மக்களின் அனுமதியின்றி கையகப்படுத்தப்படாது என்று மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா வாக்கு கொடுத்துள்ளார் என்கிறார். இப்பொழுது கிளப்பப்பட்டிருக்கும் பிரச்னை அரசியல் காரணமானது. திரினாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்டுகள் சேர்ந்து கிளப்பி விடுகிறார்கள் என்கிறார்.

கிட்டத்தட்ட ஒரே பிரச்னை. ஒரே கட்சி. இருவேறு மாநிலங்கள். இருவேறு கொள்கைகள்.

14 comments:

  1. Politbero members can get bribe from indonasian company.But They can't get the same from Airport authority

    ReplyDelete
  2. பத்ரி சந்துல சிந்து பாடுறதுன்னு சொல்லுவாங்களே அது இதுதானா? ஆஹா... நல்ல கொள்கையப்பா.

    ஒரே பிரச்சினை, ஒரே கட்சி, இரு வேறு மாநிலங்கள், இரு வேறு கொள்கைகள். நல்ல கண்டு பிடிப்பு ஐன்°டினை மிஞ்சுட்டீங்க...


    சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரால் கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள், தொழில், வேலை, கல்வி என பல்வேறு வலைப் பின்னலுக்கு இடையில் அதுவும், சென்னை தலைநகரத்தில் இருக்கும் மக்களுக்கும், மேற்குவங்கத்தில் நந்திகிராமத்தில் இருக்கும் மக்களுக்கும் ஒரே பிரச்சினையா? அது எப்படிங்க... இந்த கருத்தை பொழிச்சலூர்ல போய் சொல்லிப் பாருங்க?????

    மேற்குவங்கத்தில் கூட நந்திகிராம மக்கள் விரும்ப வில்லையென்றால், நாங்கள் இத்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றத் தயார் என்று மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் அறிவிக்கிறார். மேலும், நந்தி கிராமத்தில் இதுவரை எந்தவிதமான இடமும் கையகப்படுத்தவில்லை. திட்டத்திற்கான ஆலோசனைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஏன்? தமிழகத்தில் கூட முதல்வர் கருணாநிதி என்ன செய்தார்? துணை நகரம் அமைப்பதற்கான திட்டத்தை அறிவித்தவுடன், பா.ம.க.வும், அப்பகுதி மக்களும் எதிர்க்க ஆரம்பித்ததும் திட்டத்தை கைவிட்டு விட்டார். இதை வைத்துக் கொண்டு ஜெயலலிதா கூட இங்கே அரசியல் நடத்தவில்லை. மேற்குவங்கத்தில் காய்ந்துப்போன மமதாவுக்கும், காட்டுல இருக்குற நக்சல்களும்தான் எதைவாது செய்து மேற்குவங்க அரசிற்கு கலங்கத்தை ஏற்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஒரு முதலாளித்துவ ஆட்சியமைப்பிற்குள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பெரும் சாதனையான ஒன்று. இது கம்யூனிச வரலாற்றில் மிக புதுமையானது. இந்த ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று சர்வதேச அளவில் துடித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் கனவுகளையல்லவா இந்த நக்சல்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். பத்ரி விரிக்கிற வலையில் விழுந்தால், அதில் நீங்களும் சிக்கிக் கொள்வீர்கள்.

    மேலும் மேற்குவங்கத்தில் ஏதாவது ஒரு திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அனைத்துவிதமான உத்திரவாதத்தையும் மேற்குவங்கம் அளிக்கிறது. இதனை இந்தியாவில் வேறு எங்கும் பார்க்க முடியாது. இதையெல்லாம் ஆங்கில பேப்பரில் தாங்கள் படிக்கவில்லையோ? அல்லது கிரிக்கெட் பார்த்து கண்கள் அயர்ந்த விட்டதோ?

    ReplyDelete
  3. பத்ரி அய்யா,

    சி பி எம் மின் இரட்டை வேடம் அவர்களுக்கே பெரிய பிரச்சினையை உண்டாக்கியிருக்கிறது.

    அது சரி. போஸ்ட்ர்ல ம க இ க என்னன்னு தெரியுது.அவங்க தமிழ்த் தாயிடமிருந்து திருடப்பட்ட கலை/இலக்கியமெல்லாம் கண்டு பிடிச்சு கொண்டு வந்து சேர்த்து ,சந்தா வசூல் செய்து சில்லி பீஃப்/சாராயம் சாப்பிட்டு மக்களுக்கு தொண்டு செய்யறாங்க.ஆனா இந்த, பு ம இ மு, பு ஜ மு க என்ன கும்பல்?

    பாலா

    ReplyDelete
  4. //
    கிட்டத்தட்ட ஒரே பிரச்னை. ஒரே கட்சி. இருவேறு மாநிலங்கள். இருவேறு கொள்கைகள்.
    //

    அது கூட இரு வேறு மானிலங்கள் என்று சொல்லிவிடலாம்.

    மத்தியில் ஒரு கொள்கை, மானிலத்தில் ஒரு கொள்கை பேசுவார் சீதாரம் எச்சூரி. அத எங்கே போயி எழுதுவீங்க. ?

    ReplyDelete
  5. வாங்க சந்திப்பு,

    //நல்ல கொள்கையப்பா//

    கொள்கை பத்தில்லாம் பேசுற மாதிரி தெரியுது? அது சரி என்னோட பின்னூட்டங்களை ஏன் உங்க பதிவுல பிரசூரிக்கறதில்லை? இது எந்த வகை கொள்கை?

    $சல்வன் அடிப்படையற்ற ஒரு அவதூறை கிளாப்பிவிட்டு போயிருக்கிறார் அதற்க்கு பதில் சொல்லும் வாய்ப்பை மறுப்பதே வெகு கோழைத்தனமான ஒரு அனுகுமுறை. இதோடல்லாமல் வாய்ஸ் ஆப் விங்க்ஸ்க்கு நான் விட்டுச் சென்ற செய்தையையும் பிரசுரிக்கவில்லை.

    இது வரை நான் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் இல்லை. ஆனால் ரோசத்திற்க்கு மட்டும் குறைச்சல் இல்லை.

    20 பேர் சாவுக்கு பிறகுதானே மக்களின் குரலுக்கு மயங்க வேண்டிய நிர்பந்தம் வந்தது CPmக்கு? ஏன் இதே பிரச்சனையை மக்களிடம் விரிவாக விவாதித்து ஜனநாயகப் பூர்வமாக நிறைவேற்றியிருக்கலாமே? ஏன CPm அவ்வாறு செய்யவில்லை?

    ஓ.... இந்திய மக்கள் என்ற ஆட்டு மந்தைக்கு ஜனநாயகம் என்றால் தெரியாது என்ற உண்மையை CPM தனது வோட்டு அரசியலுக்கு பயன்படுத்துவதை நான் மறந்து விட்டேன்(இது குறித்து நீங்களும் முன்பு கூறியுள்ளீர்கள்). ஆம், இந்திய மக்களுக்கு ஜன்நாயகம் மறூக்கப்படுகீறது. ஆனால் அதன் அர்த்தம் அவர்க்ள் ஜனநாயகத்தை விரும்பவில்லை என்பதல்ல. ஆனால் இந்த பலவீனத்தை சாக்காக வைத்து அதிகார பலத்தின் மூலமே எல்லா அயோக்கியத் தனத்தையும் செய்யலாம் என்ற விழைந்த CPMக்கு கம்யுனிஸ்டு கட்சி என்ற சொல்லிக் கொள்ள ஒன்றூம் கிடையாது.

    அசுரன்

    ReplyDelete
  6. //ஆனா இந்த, பு ம இ மு, பு ஜ மு க என்ன கும்பல்?//

    பாலா அய்யா,
    நீங்க சுயநினைவோடத்தான் எழுதுறீங்களா இல்ல கஞ்சா அடிச்சுட்டு எழுதுறீங்களா? கொஞ்சம் போதை தெளிஞ்சதுக்கப்பறம் அந்த படத்துல இருக்குற போஸ்டர உத்து பாருங்க பு.ஜ.தொ.மு அப்படினு போட்டுருக்கு.. சரிங்க நீங்க எந்த சாராயக்கடையில சரக்கு ஊத்தி தந்துக்கிட்டிருக்கீங்க எத்தனை ம.க.இ.க காரங்களுக்கு அதுமாதிரி ஊத்தி தந்தீங்க. பு.ஜ.தொ.மு. பு.மா.இ.மு அப்படினா என்ன விரிவாக்கம்னு கூட தெரியல அதுக்குள்ள புரளி கிளப்பிவிட கிளம்பிடீங்க.

    ஸ்டாலின்

    ReplyDelete
  7. அசுரன் கருத்தை கருத்தாக விவாதிக்க நான் எப்போதும் தயார். மேலும், தங்களது பின்னூட்டத்தை வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு சரியல்ல. சி.பி.எம்.க்கு எதிராக நீங்கள் எவ்வளவு வாந்தியெடுத்தாலும், அதனை இணையவாசிகளிடம் மறைப்பதில்லை. அப்படியே வெளியிட்டு வருகிறேன். மேலும், அதனை எடிட் கூட செய்வதில்லை. என்னுடைய தளத்திற்கு சென்று நீங்கள் பார்க்கலாம். நான் கவனிக்காமல் விட்டால் தவிர எந்த கமெண்டையும் திட்டமிட்டு பிரசுரிக்காமல் இருப்பது இணைய ஜனநாயகமல்ல.


    நக்சல்கள் எப்போதும் பிரச்சினையை தலைகீழாக பார்ப்பதுதான் வழக்கம். அதற்கு உங்களது இந்த குற்றச்சாட்டும் அடங்கும். மேற்குவங்கத்தில் நந்திகிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான ஆலோசனைகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து எந்தவிதமான இறுதி முடிவையும் மேற்குவங்க அரசு இதுவரை எடுக்கவில்லை. சிங்கூரில் தோல்வியடைந்த மமதாவும், நக்சல்களும் தங்களது அடுத்த களமாக நந்திகிராமத்தை பயன்படுத்துவதுதான் கோழைத்தனமான அரசியலே தவிர, இதில் எங்களுடைய தவறு எதுவும் இல்லை. மேலும் ஜனநாயகம் குறித்து பேசும் நீங்கள், ஜனநாயகபூர்வமான எந்தப் போராட்டத்தையும் நடத்தாமல், நக்திகிராமத்தில் உள்ள பெரும் பகுதி மக்களை விரட்டி விட்டு விட்டு, மமதா - காங்கிரசு - நக்சல்கள் என்று ஒரு பிற்போக்கு - சந்தர்ப்பவாத கூட்டணி வெடிகுண்டுகள் உட்பட மோசமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு சதிச் செயல்களில் ஈடுபட்டதும், நந்திகிராமத்தில் சட்டத்தின் ஆட்சியை நடத்தவிடாமல் முடங்கச் செய்ததும், அங்குள்ள சாலைகள், பாலங்களை தகர்த்தும், போலீசோ, அரசு அதிகாரிகளோ அந்த கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து செயல்பட விடாமல் முடக்கியது எந்த வகையான ஜனநாயகம் என்பதை அசுரன்தான் விளக்க வேண்டும். நக்சல்களுக்கு மேற்குவங்கத்தில் கால் பதிப்பதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லாத சூழலில் இந்த பிரச்சினையை ஒரு பகடைக்காயாக - பயன்படுத்த முனைகின்றனர். மேற்குவங்கத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு முழு பொறுப்பும் மமதா மற்றும் நக்சல் கூட்டணியையே சாரும். போலீசார் கிராமத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காக முயற்சித்தபோது, அவர்களில் ஒரு சப் இன்°பெக்டரை கொன்றதோடு அல்லாமல் போலீசையே நுழைய விடாமல் தடுத்ததோடு அவர்களது அடிப்படையான எச்சரிக்கை மற்றும் கண்ணீர் புகை வீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் போன்ற அனைத்து செயல்களையும் நிராகரித்து விட்டு, அவர்கள் மீது கொடும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதுதான் இந்த துப்hக்கி சூட்டிற்கு காரணம்.


    அடுத்து, தங்களது விமர்சனத்திற்கு பதில் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பதிந்துள்ளீர்கள். தங்கள் விமர்னமா வைத்துள்ளீர்? கடந்த காலத்தில் பல்வேறு இடங்களில் போடப்பட்ட பதிவுகளையெல்லாம் மொத்தமாக ஒன்றாக திரட்டி கட் - பே°ட் செய்து விட்டு, விவாதத்திற்கு தயாரா? என்ற கேள்வி வேறு? கம்யூனிசம் என்ற பெயரில் குழப்புவதை விடுங்கள்.

    விவாதத்திற்கு நான் எப்போதும் தயார்? விவாதத்திற்கென்று தனிப் பதிவாக நானே போடுகிறேன். அதிலிருந்து துவக்கலாம்.

    ReplyDelete
  8. ம.க.இ.க இன்னாதுரா இது?

    ReplyDelete
  9. //ம.க.இ.க இன்னாதுரா இது? //

    மக்கள் கலை இலக்கிய கழகம்????

    ReplyDelete
  10. சி.பி.எம்: துரோகிகளா? எதிரிகளா?

    நாயோடு படுத்தவன் உண்ணியோடுதானே எழுந்திருக்க முடியும்? தரகுப் பெருமுதலாளிகளோடும் அந்நிய ஏகபோக நிறுவனங்களோடும் கூடிக் குலாவினால் இரத்தக் கறையோடுதானே தரிசனம் தரமுடியும்? ஆம்! கொலைகாரர்களாகக் காட்சி தருகிறார்கள், மே.வங்கத்தை ஆளும் "மார்க்சிஸ்டு'கள். உழைக்கும் மக்களின் அரசு என்று மார்தட்டிக் கொண்ட மே.வங்க "இடதுசாரி' அரசு இன்று இரத்தக் கவிச்சி வீசும் கொலைகார அரசாக நாடெங்கும் நாறுகிறது.

    சிங்கூரைத் தொடர்ந்து இப்போது நந்திகிராமத்தில் அடக்குமுறை கொலைவெறியாட்டம். விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஏகாதிபத்திய சேவைக்குப் பெயர் "தொழில் வளர்ச்சி'! அதை மூடிமறைக்க கோயபல்சையும் விஞ்சும் அண்டப்புளுகுகள்; தகிடுதத்தங்கள். பிணங்களின் மீதேறி சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதில் புதுவேகம்; புதுமோகம்.

    ஒருவரல்ல, இருவரல்ல; ஆறு பேர் கொலை. 15 முறை போலீசு துப்பாக்கிச் சூடு; தடியடி, கண்ணீர் புகை வீச்சு, 144 தடையுத்தரவு. ஆளும் வர்க்கக் கட்சிகளையே விஞ்சும் வண்ணம் "மார்க்சிஸ்ட்' கட்சி குண்டர்களின் வெறியாட்டம். வர்க்க விரோதிகள், மக்கள் விரோதிகள் என்று உழைக்கும் மக்களாலேயே குற்றம் சாட்டப்பட்டு காறி உமிழப்படுகிறது, மே.வங்க "இடதுசாரி' ஆட்சி. இதுதான் போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கம்.

    ஏற்கெனவே சிங்கூரில் டாடாவின் கார் தொழிற்சாலைக்காக 997.1 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, போராடிய விவசாயிகளை ஒடுக்கி, சமூக பாசிஸ்டுகளாகிக் கொக்கரித்த "மார்க்சிஸ்டுகள்'. இப்போது அதேவழியில் ஹால்டியா வட்டாரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவ மூர்க்கமாக இறங்கியுள்ளனர். சிங்கூரில் போராடிய மக்களையும் எதிர்த்தரப்பினரையும் ஒடுக்கியது போலவே, மிருகத்தனமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டால் எதிர்ப்புகளை முறியடித்து விடலாம் என்பதுதான் "மார்க்சிஸ்டுகள்' வகுத்துக் கொண்ட உத்தி. ஆனால் இந்த துரோகத்தனம் வெகுவிரைவிலேயே அம்பலப்பட்டு, மறுகாலனியாக்கத்தின் கீழ் போலி கம்யூனிஸ்டுகள் எடுத்துள்ள புதிய கைக்கூலி அவதாரம் நாடெங்கும் சந்தி சிரிக்கிறது.

    மே.வங்கத்தின் ஹால்டியா வட்டாரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி மாநிலத்தைத் தொழில்மயமாக்கப் போவதாக "இடதுசாரி' அரசு அறிவித்துள்ளது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலம் 14,500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இதில் 10,000 ஏக்கர் நிலம் இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்கும் 4,500 ஏக்கர் நிலம் ருயா குழுமத்துக்கும் தாரை வார்க்கப்படும். இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களைப் பறிகொடுக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம்.

    விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகக் கடந்த நான்கு மாதங்களாக, இப்பகுதியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு விவசாயிகளை அணிதிரட்டி வந்தார்கள். இதுதவிர, எதிர்த்தரப்பு ஓட்டுக் கட்சிகளும், ஜாமியத் உலேமாஐஹிந்த் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பும், தன்னார்வக் குழுக்களும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்தன.

    இப்பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 8 முதல் ரூ. 10 லட்சம் வரை வழங்கப்பட உள்ளதாக சி.பி.எம். கட்சியினரே வதந்திகளைப் பரப்பி வந்தனர். இத்தொகுதியின் "மார்க்சிஸ்ட்' எம்.பி.யான லக்ஷ்மண் சேத், ஏக்கருக்கு ரூ. 4.3 லட்சம் வரை கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும், நந்தி கிராமத்தில் பகுதியளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

    இந்நிலையில், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் நந்திகிராம வட்டார வளர்ச்சி அதிகாரி (ஆஈO) அலுவலகத்துக்கு ஜனவரி 2ஆம் நாளன்று, இப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதற்கு நிலங்களைக் கையகப்படுத்த விரைவில் செயல்படுமாறு ஓர் அறிவிப்பை அறிக்கையாக அனுப்பியது. இது, நந்திகிராம வட்டார வளர்ச்சி அதிகாரியின் அலுவலக தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டது. இதைக் கண்டதும் நந்திகிராம மக்கள் கொதிப்படைந்தனர்.

    மறுநாளில் நந்திகிராமத்தை அடுத்துள்ள கர்சக்ரபேரியா கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகள் கூட்டம் நடப்பதைக் கண்ட மக்கள், விளைநிலங்களைக் கையகப்படுத்தவே இக்கூட்டம் நடப்பதாகச் சந்தேகித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு முழக்கமிட்டு போராடினர். அவர்கள் மீது தடியடி நடத்தி வெறியாட்டம் போட்டது மே.வங்க போலீசு. ஆத்திரமடைந்த மக்கள் அப்பஞ்சாயத்து அலுவலகத்தை அடித்து நொறுக்கி, இரண்டு போலீசு வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

    அடுத்தநாளான ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து நந்திகிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதோடு, கிராமத்தைச் சுற்றி தடுப்பரண்களை எழுப்பிப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சி.பி.எம். கட்சித் துரோகிகளின் வீடுகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த கிராம மக்கள், இப்பகுதியிலுள்ள இரண்டு சி.பி.எம். கட்சிக் கிளை அலுவலகங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

    சோனாசுரா கிராமத்தில், ""நந்திகிராம நிலப்பாதுகாப்புக் கமிட்டி'' எனும் கூட்டமைப்பின் முன்னணியாளர்கள் கூடி போராட்டத்துக்குத் திட்டமிடுவதை அறிந்த சி.பி.எம். குண்டர்கள், அக்கிராமத்தை அடுத்துள்ள தெகாலி கிராமத்தில் இரகசியமாக அணிதிரண்டனர். ஜனவரி 6ஆம் தேதியன்று அதிகாலையில் சோனாசுரா கிராமத்துக்கு 250 பேருக்கும் மேலாகத் திரண்டு வந்த சி.பி.எம். குண்டர்கள். அக்கிராம விவசாயிகளது வீடுகளின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய மக்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் நாளன்று எதிர்க்கட்சிகள் நடத்திய மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தின்போதும் போலீசு தடியடி நடத்தியதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்குமுறை வெறியாட்டம் போட்டது.

    இத்தனைக்கும் பிறகு, முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைத்த கதையாக, வீண் வதந்தியைப் பரப்பி திரிணாமுல் காங்கிரசாரும் நக்சல்பாரிகளும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதாகவும், கொல்லப்பட்டவர்கள் சி.பி.எம். ஆதரவாளர்கள் என்றும் கூசாமல் புளுகுகிறார் மே.வங்க சி.பி.எம். முதல்வர்.

    ஆனால், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போராடிய விவசாயிகள் என்று நந்திகிராம மக்கள் சாட்சியம ளிக்கின்றனர். அக்கட்சியின் எம்.பி.யாகிய லக்ஷ்மண் சேத், நந்திகிராமத்தில் நிலம் கையகப்படுத்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று கோயபல்சையே விஞ்சும் வகையில் அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டார். சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான எச்சூரியும், கட்சியின் அதிகாரபூர்வ நாளேடுகளும் இதுதான் உண்மை என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுத்தன.

    ஆனால், இது அண்டப்புளுகை விஞ்சும் ஆகாசப்புளுகு என்பதை மே.வங்க நாளேடுகள், லக்ஷ்மண் சேத் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையையும், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் படத்தோடு செய்தியாக வெளியிட்டு நாறடித்தன. அதன் பிறகே மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதை உடனே ரத்து செய்யுமாறு ஆணையிட்டுள்ளதாகவும் இப்போது பசப்புகிறார். முழுமையான விவரங்களை வெளியிட்டு விவசாயிகளின் ஒப்புதலோடு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் உபதேசம் செய்கிறார்.

    விவசாயிகளின் ஒப்புதலோடு நிலம் கையகப்படுத்தப்படுமா, ஒப்புதல் இல்லாமல் செய்யப்படுமா என்பதல்ல பிரச்சினை. சிறப்புப் பொருளாதார மண்டலம் எனும் மறுகாலனியாக்கச் சூறையாடலை சி.பி.எம். கட்சி ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்பதுதான் மையமான கேள்வி.

    நேற்றுவரை சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பதாகவும், பின்னர் மனிதமுகம் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவப் போவதாகவும் நாடகமாடிய சி.பி.எம். இப்போது, இதர ஓட்டுக் கட்சிகளை எல்லாம் விஞ்சும் வகையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதில் வெறியாக இருக்கிறது. நேற்றுவரை உழைக்கும் மக்களின் அரசாகச் சித்தரிக்கப்பட்ட மே.வங்க "இடதுசாரி' அரசு. இன்று மே.வங்க உழைக்கும் மக்களாலேயே காறி உமிழப்படுகிறது. பிரபல நாவலாசிரியரான மகாஸ்வேதா தேவி, ""இது பாசிஸ்டு அரசு'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார், மேதாபட்கர். அருந்ததிராய், நீதிபதி சச்சார் என அறிவுத்துறையினரின் கண்டனத்துக்கு ஆளாகி மே.வங்க போலி கம்யூனிஸ்டு அரசு தனிமைப்பட்டுப் போயுள்ளது.

    தரகுப் பெருமுதலாளி டாடா கார் தொழிற்சாலை நிறுவுவதற்காக, சிங்கூரில் விளைநிலங்களை ஆக்கிரமித்து, போராடிய மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய மே.வங்க இடதுசாரி அரசு, போராட்டங்கள் வலுக்கத் தொடங்கி மம்தா பானர்ஜி தொடர் உண்ணாவிரதம் இருந்தபோது, சிங்கூர் விவகாரம் பற்றி அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி இணக்கமாக முடிவை எட்ட விழைவதாக அறிவித்தது. ஆனால், அந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு டாடா கார் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவிட்டது. இதற்கெதிரான மீண்டும் போராடிய மக்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இவையெல்லாம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைச் சீர்குலைக்கும் செயல் என்று குற்றம் சாட்டும் சி.பி.எம். கட்சியினர், தமது கட்சி ஊழியர்களை வைத்து எதிர்போராட்டம் ஊர்வலம் என்று மூர்க்கமாக இறங்கிவிட்டனர்.

    மறுகாலனியாக்கத்தின் கீழ், புரட்சி சவடால் அடித்துக் கொண்ட சந்தர்ப்பவாதிகளாகவும் துரோகிகளாகவும் வலம் வந்து கொண்டிருந்த போலி கம்யூனிஸ்டுகள், இப்போது மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்யும் எதிரிகளாக புதிய பரிணாமத்தை எட்டியுள்ளார்கள். இதுவரை போட்டு வந்த போலி முற்போக்கு போலி கம்யூனிச முகமூடிகள் அனைத்தையும் கழற்றி எறிந்துவிட்டு, ஏகாதிபத்தியங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிக்கும் தொண்டூழியம் செய்வதில் இதர ஓட்டுக் கட்சிகள் அனைத்தையும் விஞ்சி விட்டார்கள் என்பதை சிங்கூர் நந்திகிராம விவகாரங்கள் நிரூபித்துக் காட்டிவிட்டன.

    நாற்பதாண்டுகளுக்கு முன்பு மே.வங்கத்தில் கிளர்ந்தெழுந்த நக்சல்பாரி பேரெழுச்சியானது போலி கம்யூனிஸ்டுகளின் துரோகத்தைத் திரைகிழித்துக் காட்டியது. இன்று அதே மே.வங்கத்தில் தொடரும் சிங்கூர் நந்தி கிராம மக்களின் போராட்டங்கள், போலி கம்யூனிஸ்டுகளை உழைக்கும் மக்களின் எதிரிகளாக அடையாளம் காட்டிவிட்டது. போலி கம்யூனிஸ்டு கட்சிகளிலுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகள் உடனடியாகக் கலகத்தில் இறங்கி, சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட துரோகத் தலைமையைத் தூக்கியெறிய வேண்டும். அதன்மூலம் மார்க்சிய லெனினியத்தைப் பற்றிப் பாதுகாத்து, மறுகாலனியாக்கத்தை வீழ்த்தும் மகத்தான புரட்சிக்குத் தோள் கொடுக்க முன் வரவேண்டும்.

    · பாலன்

    ReplyDelete
  11. சில கேள்விகள்:

    1. வரலாற்றாசிரியர் சுமித் சர்க்காரும், இதர சி.பி.எம் ஆதரவு அறிவுஜீவிகளும் நந்திகிராம் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மேற்கு வங்க அரசு விருதுகளை திருப்பி அளித்திருக்கிறார்களே(The Hindu - 17-03-07)? ஒரு வேளை அவர்களும் நக்சலைட்டுகளோ?

    //மேற்குவங்கத்தில் ஏதாவது ஒரு திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அனைத்துவிதமான உத்திரவாதத்தையும் மேற்குவங்கம் அளிக்கிறது.//

    2. இந்த உத்திரவாத லட்சணத்தை எதிர்த்துதான் மேதா பட்கர் சிங்கூரில் போராட்டம் நடத்திய பொழுது உள்ளே நுழைய அனுமதிக்கப்படாமல் கைது செய்யப்பட்டார்.தங்களுடைய பதிவுத்தளத்தில் நக்சல்களுக்கும்,மேதா பட்கருக்கும் ஒப்பீடு செய்திருந்தீர்களே, அதே மேதா பட்கர் இப்பொழுது "Don't call them as Special Economic Zones, but as Special Exploitation Zones"என்று சொல்லி போராடுகிறாரே, அவரும் நக்சலைட்டாக மாறி விட்டாரோ? சர்தார் சரோவர் அணை அரசியல் எடுபடாததால், மேற்கு வங்கத்தில் காலூன்ற முயல்கிறாரோ?

    //நந்திகிராமத்தில் சட்டத்தின் ஆட்சியை நடத்தவிடாமல் முடங்கச் செய்ததும், அங்குள்ள சாலைகள், பாலங்களை தகர்த்தும், போலீசோ, அரசு அதிகாரிகளோ அந்த கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து செயல்பட விடாமல் முடக்கியது எந்த வகையான ஜனநாயகம்//

    சட்டம்? யாருடைய சட்டம்? அது என்ன வர்க்க நியாயங்களுக்கு அப்பாற்ப்பட்ட சட்டம், ஜனநாயகம்? பாராளுமன்றத்தை அம்பலப்படுத்துவதற்காகவும், புரட்சிகர அலையின் ஏற்ற் இறக்கத்தையொட்டியும், முதலாளித்துவ நாட்டில் பாராளுமன்ற பங்கேற்பை லெனின் வலியுறுத்தினார்.ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக இருக்கிறது. தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தில் பங்கேற்கிறது. பாராளுமன்றம் கேலிக் கூத்தாவது பற்றி சோம்நாத் சாட்டர்ஜி கண்ணீர் வடிக்கிறார். பன்னாடுக் கம்பெனிகளுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு குலைந்தால் புத்ததேவ் பொறுமையிழக்கிறார்.இதில நல்லாட்சி தம்பட்டம் வேறு, 'முதலாளித்துவ ஜனநாயகம் எத்துணை உயர்ந்ததாக இருந்தாலும், அதிலும் மக்கள் கூலியடிமையில்தான் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை மறக்க நமக்கு உரிமை இல்லை' என ஏங்கெல்ஸ் கூறுகிறாரே, அதன் பொருள் என்ன? அது சரி, சித்தாந்தத்திற்கும், மார்க்சிஸ்டுகளுக்கும் என்ன சம்பந்தம்? சமகால விசயத்திற்கு வருவோம்.நீங்கள் சர்வதேச அளவில் உச்சிமோந்து வியந்தோதுகிறீர்களே,சாவேஸ், அவரும் 'இதே கைகள் கட்டப்பட்ட, தொழில் வளர்ச்சியின் அவசியம் உணர்ந்த' காலகட்டத்தில்தான் தமது நாட்டு எண்ணெய் வயல்களை தேசியமயமாக்கி, பன்னாட்டுக் கம்பெனிகளை விரட்டியடிக்கிறார். ஒருவேளை அவரும் சர்வதேச நக்சலைட்டாகி விட்டாரோ?

    //இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஒரு முதலாளித்துவ ஆட்சியமைப்பிற்குள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பெரும் சாதனையான ஒன்று. இது கம்யூனிச வரலாற்றில் மிக புதுமையானது. இந்த ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று சர்வதேச அளவில் துடித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் கனவுகளையல்லவா இந்த நக்சல்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.//

    அட அய்யா, சர்வதேச அளவில் ஏகாதிபத்தியவாதிகள் மேற்கு வங்க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களா? வேடிக்கைதான். உலக வங்கி அதிகாரிகளும், சலீம் குழுமமும், பன்னாட்டு கம்பெனி அதிகாரிகளும் அன்றாடம் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்களே, அது என்ன? ஒரே தமாசா இருக்குப்பா!

    தயை கூர்ந்து இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுகிறேன் சந்திப்பு அய்யா!

    ReplyDelete
  12. சி.பி.அய். 25 பேர் கொண்ட குழு ஆராய்ந்து சி.பி.எம். குண்டர்கள் போலிசோடு இணைந்து 14 பேரை கொண்டதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்களே. புத்ததேவ் மன்னிப்பு கேட்டுள்ளாரே! 'சந்திப்பு' என்ன சொல்வார் இனி. பாவம். - செல்வம், சென்னை.

    ReplyDelete
  13. நந்திகிராம விவகாரத்தில் இந்திய பரிபாலண முதலாளித்துவமும் ஊடகமும் நீலி கண்ணீர் வடிப்பதுபோல் அரசுரன் நிங்க நல்லவரா கெட்டவரா நாயகன் பட பானியில் கேட்க ஆசையாக இருக்கிறது. தாங்கள் உங்களை என்னவேன்று நினைத்து கொண்டு இருக்கிரீர்கள் கம்யூனிசத்தை இந்தியாவில் வளரவிடாமல் பாதுகாக்கிற ஏ(கா)வல் காரன்போல் செயல்படுவதாகவே தெரிகிறது.லெனின் ரஷ்சிய புரட்சிக்கு பின் அரசு நிர்வாக்தையும் கிடைத்து இருக்கிற புரட்சியை பாதுகாக்கவும் ஜெர்மணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சில மகாணங்களையும் மக்களையும் ஒப்படைத்தையும் அப்போது அது தேவையான அவசியமான புரட்சியை பாதுகாக்க கூடியதாகவும் இருந்தை நினைவில் கொள்ளுங்கள் மேற்கு வங்கத்தில் 30ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களை புரட்சிநோக்கி அழைத்து செல்லும் கட்சியாகவும்.இந்திய மக்களின் பண்பாட்டு ஜாதிய அரைநிலபிரபுத்துவ முதலாளித்து அமைப்பில் கம்யூனிஸ்ட்கட்சியை எப்படி வழி நடத்தவேண்டுமோ அப்படி செய்கின்றபோது ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களை வைத்து முடிவெடுப்பது சரியல்ல

    ReplyDelete
  14. நீங்கள் தா.நா.ம.க.இ.கவா அப்படியினா

    ReplyDelete