Friday, December 24, 2010

எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா - 1

சென்ற புத்தகக் கண்காட்சியில்தான் முதன்முதலாக சுஜாதாவின் சில புத்தகங்களைப் பதிப்பித்து விற்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஐந்து புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தோம். ஆஸ்டின் இல்லம், தீண்டும் இன்பம், மீண்டும் ஜீனோ, நில்லுங்கள் ராஜாவே, நிறமற்ற வானவில்.

புத்தகக் கண்காட்சியின்போதுதான் இந்தப் புத்தகங்களில் சில பிரதிகள் அச்சாகி வந்திருந்தன. அவை அடுக்கப்படும் முன்னரேயே விற்பனையும் ஆகிக்கொண்டிருந்தன. நில்லுங்கள் ராஜாவே, மீண்டும் ஜீனோ தவிர மற்றவை அதிகம் கேள்விப்படாத புத்தகங்கள். அதன்பின் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டுவந்துவிட்டோம். இவை அனைத்தும் பிரம்மாண்டமாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் காண, வாங்கக் கிடைக்கும்.

கடந்த சில மாதங்களிலேயே சுஜாதாவின் ஈர்ப்பு சக்தி எத்தகையது என்பதை அறிந்துகொண்டுள்ளோம். சுஜாதா இன்னும் தமிழக மக்களுக்கு ஒழுங்காகப் போய்ச்சேரவே இல்லை. புத்தகக் கடைகள் தாண்டி தெருவோரக் கடைகளில், டிபார்ட்மெண்டல் கடைகளில் எல்லாம் வைக்கப்படும்போது அங்கு வரும் மக்கள் ஆர்வத்தோடு வாங்குகிறார்கள்.

இந்த ஆண்டில் நான் வேலை செய்த பல புத்தகங்களுக்கிடையே சுஜாதா புத்தகங்கள் அனைத்தும் என்னைப் பொருத்தவரையில் திருப்தி தரக்கூடியவை. கடுமையான மொழி கொண்ட மொழிமாற்றல் புத்தகம் ஒன்றுடன்தான் என் காலை வேளை தினமும் ஆரம்பிக்கும். இரண்டு மணி நேரத்துக்குப்பின் மண்டைக் குடைச்சல். அப்போது சுஜாதா புத்தகத்தைக் கையில் எடுத்து மெய்ப்பு பார்க்கத் தொடங்கினால், வேலைக்கு வேலையும் ஆயிற்று, ரிலாக்சேஷனும் ஆயிற்று.

அப்படித்தான் நான் படித்தே இராத பல கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் பலமே உரையாடல்கள் மூலம் படு வேகமாகக் கதையைக் கொண்டு செல்வது. எப்போதே படித்திருந்தாலும் இப்போது கையில் எடுக்கும்போதும் மீண்டும் மீண்டும் படிக்கவைக்கும் கதைகள். முடிவுகள் பெரும்பாலுமே திருப்தியற்றவையே. ஆனால் தொடர்கதைகளை எழுதும்போது வேறு வழி இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். பெரும்பாலான கதைகள் தொடர்கதைகள் என்றால், சில மாத நாவல்களும் உண்டு. சுஜாதா என்றாலே கணேஷ் - வஸந்த் என்றுதான் பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவற்றையும் தாண்டி பல மர்மக் கதைகள் முதல் மனித மனங்கள் பற்றிய கதைகள் உண்டு.

மீண்டும் ஜீனோ கொண்டுவந்தபோது ‘என் இனிய இயந்திரா’ இல்லையா என்றார்கள் (திருமகள் நிலையம் வெளியீடு). விரைவில் வந்துவிடும் என்றோம். இப்போது அதுவும் வந்துவிட்டது. என் கணக்கின்படி, சுஜாதா புத்தகங்கள் மொத்தம் 76 இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு வெளியீடாகக் கிடைக்கவேண்டும். சில அச்சாகி வருமா என்பதில் சந்தேகம் உண்டு. கண்காட்சியில் கிடைக்கக்கூடிய முக்கியமான சில:

நில்லுங்கள் ராஜாவே
நைலான் கயிறு
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
நில், கவனி, தாக்கு!
பிரிவோம் சந்திப்போம் (இரு பாகங்களும் சேர்த்து ஒன்றாக)
கனவுத் தொழிற்சாலை
கரையெல்லாம் செண்பகப்பூ
காயத்ரி
ப்ரியா
திசை கண்டேன் வான் கண்டேன்
சொர்கத்தீவு
வைரங்கள்
இருள் வரும் நேரம்
உள்ளம் துறந்தவன்
ஆ...!
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

பின்வரும் நாள்களில் ஒரு பதிவில் 76 நூல்களையும் பட்டியலிடுகிறேன்.

4 comments:

  1. I bought all Sujatha books available on NHM website at the time of ordering (1-6-2010)..Your listing of 76 books will really help ordering the rest as and when it is available to order through your website.

    ReplyDelete
  2. Mr Badri one thing i have to mention about the Sujatha's books is that all the cover design for the books are very attractive and nice. Keep it up!

    I am thinking of collecting all his books too, Gopalan. Nowadays i am borrowing from Singapore library only.

    ReplyDelete
  3. Thanks Badri, I was waiting for the following 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ','பிரிவோம் சந்திப்போம் (இரு பாகங்களும் சேர்த்து ஒன்றாக)','கனவுத் தொழிற்சாலை','கரையெல்லாம் செண்பகப்பூ', 'காயத்ரி' and happy to note that they are avaiable through NHM.

    Will get them through online.

    Thanks
    Rajesh

    ReplyDelete