Wednesday, December 22, 2010

ஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது?

ஒரு புத்தகப் பதிப்பாளனுக்குத் தெரியாத ஒரு விஷயம் இது. எந்த அறிவியலுக்கும் கட்டுப்படாத விஷயம் இது. பொதுப்புத்தி எப்படி இயங்குகிறது என்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பது கடினம். அந்தச் செயல் நடந்துமுடிந்ததும் பிறகுதான் இது இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று சொல்லமுடிகிறது. இந்த சூட்சுமம் ஒருசிலருக்கு மட்டும் எப்படியோ தெரிந்துவிடுகிறது.

ரஜினி படம் என்றால் ஊரில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அல்லவா? அதைப் பற்றி ஊரில் எல்லோரும் பேச ஆரம்பிப்பார்கள். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதும். இணையத்தில் விமரிசனம் தூள் பறக்கும். தொலைக்காட்சியில் பேட்டிகள்.

புத்தகங்களுக்கு அப்படி எல்லாம் ஆவதில்லை. ஏதோ 100, 200 பிரதிகள் சடசடவென விற்றாலேயே பதிப்பாளர்கள் அகம் குளிர்ந்துவிடுவார்கள். புத்தகத்துக்கு விளம்பரம் தரும் அளவுக்கு எந்தப் பதிப்பகமும் காசு பார்ப்பதில்லை. விகடன் பிரசுரம் போன்றவர்கள் தங்களிடம் உள்ள சொந்த மீடியாவில் நன்றாக விளம்பரம் செய்யமுடிகிறது. கிழக்கு உட்பட, வேறு யாருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பு கிடையாது. புத்தகங்களுக்கு தமிழில் ரிவ்யூவே ஒழுங்காக வருவதில்லை. இதில் ஒரு புதிய புத்தகம் வந்துள்ளது என்பது எப்படி மக்களுக்குத் தெரியவரும்? அப்புறம் எப்படி ஒரு புத்தகம் சூப்பர் செல்லர் ஆவது?

ஆனால் அபூர்வமாக அப்படி ஒரு புத்தகம் வந்துவிடுகிறது. சில மாதங்களுக்குமுன் பாலசுப்ரமணியம் என்ற சிரியஸ் ரஜினி ரசிகர், ரஜினி பற்றி ஒரு புத்தகம் எழுதுவதாக சில பக்கங்களை அனுப்பினார். ரஜினி சினிமாக்களின் பஞ்ச் வசனங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு மேனேஜ்மெண்ட் வாசனை கொண்ட புத்தகம். ஆங்கிலத்தில் இருந்தது. தமிழ் சினிமாக்கள் பலவற்றில் நடித்திருகும் கிட்டு என்ற ராஜா கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து புத்தகத்தை எழுதியிருந்தார். அதை நாங்கள் பதிப்பிக்க முடிவு செய்தோம். அப்படியே தமிழிலும் செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அதன் விற்பனை எப்படியிருக்கும் என்பது பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. சினிமா வாசனை கொண்ட புத்தகங்கள் பலவற்றை நாங்கள் பதிப்பித்துள்ளோம். ஆனால் அவை அதிகம் விற்றதில்லை. அதிகம் என்றால் பல ஆயிரங்கள். இவை அதிகபட்சம் 2,000 - 3,000-க்குள் முடிந்துவிடும்.

ரஜினியின் பன்ச் தந்திரம், Rajini's Punch Tantra என்ற இந்தப் புத்தகம் ரிலீஸ் ஆனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். 12 டிசம்பர் 2010, ரஜினியின் பிறந்தநாள் அன்று. முதலில் இந்தப் புத்தகத்துக்கு என்று ரிலீஸ் நிகழ்ச்சி எதுவும் வைப்பதாக இல்லை. கடைசி நேரத்தில்தான் முடிவானது. ஒடிஸி புத்தகக் கடையில் சிறு நிகழ்ச்சி. கே.பாலசந்தரும் ராதிகா சரத்குமாரும் வந்திருந்தனர். ரஜினியின் மகள் வந்திருந்தார். நானும் சத்யாவும் ஊரிலேயே இல்லை. வேறு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ஒப்புக்கொண்டிருந்ததால் சென்னையில் அன்று இருக்கமுடியவில்லை.

இதற்கிடையில் ஏகப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு புத்தகம் ஒரு பிரதியும் ஒரு செய்திக்குறிப்பும் அனுப்பியிருந்தோம். ரேடியோ ஒன் எஃப்.எம் சானல் ஒரே சந்தோஷத்தில் ஏகப்பட்ட புரமோஷன் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். (எல்லாம் ஃப்ரீ!). அடுத்து குங்குமம் பத்திரிகையில் ஐந்து பக்கத்துக்கு ஒரு பேட்டி! அத்தோடு விட்டார்களா! இந்த வாரக் குங்குமம் வாங்கிவிட்டீர்களா என்று சன் குழும சானல்கள் அனைத்திலும் செய்யும் விளம்பரத்தில் ‘ரஜினியின் பன்ச் வசனங்கள் நிர்வாக வழிகாட்டி’ (அல்லது இப்படி ஏதோ) என்று நொடிக்கு நூறு தரம் வரத்தொடங்கியது.

லாண்ட்மார்க் அவர்களது கஸ்டமர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில் இந்தப் புத்தகத்தை முதலில் வைத்து, ஸ்பெஷல் ஆஃபர் அனுப்பியுள்ளனர்.

ரஜினிகாந்த் தானே பல புத்தகங்கள் வாங்கி சினி இண்டஸ்ட்ரியில் பலருக்குக் கொடுத்துள்ளார். விஷயம் கேள்விப்பட்டு பல சினிமாத்துறையினர் 50, 100 என்று புத்தகங்களை வாங்கி மேலும் பலருக்குக் கொடுக்கின்றனர்.

ஜப்பானிலிருந்து எங்கள் இணையத்தளத்துக்கு இந்தப் புத்தகத்துக்கு சில ஆர்டர்கள் வந்துள்ளன. (நிஜமாவேங்க!)

அப்படி என்ன இந்தப் புத்தகத்தில் இருக்கிறது, இதனை வாங்கலாமா, கூடாதா என்பது பற்றி நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை. நீங்களே வாங்கி முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சில புத்தகங்களுக்குத் தானாகவே இறக்கைகள் முளைக்கும். அவை அப்படியே பறந்து செல்லும். எந்த மார்க்கெட்டருக்கும் இதற்கான காரணங்கள் புரியப்போவதில்லை.

நானும் அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யப்போவதில்லை.

8 comments:

  1. கிட்டு இல்லை கிட்டி

    ReplyDelete
  2. ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் மாயம்தான் இது.

    :-)

    வேறு ஒன்றுமில்லை.

    ReplyDelete
  3. Will it beat the sale of Rajini - Sapthama / Sagapthama......???

    ReplyDelete
  4. நடிகர் ரஜினிக்கு இருக்கும் மார்கெட் விசித்திரமான ஒன்று. அவரே புத்தகத்தை வாங்கி பலருக்குக் கொடுத்திருப்பது மேலும் விசித்தரமாக இருக்கிறது. அவர் குளியலறை சென்றாலே விளம்பரப் படுத்தும் நம்மவர்களுக்கு, இந்த விஷயம் வாயில் அவில் போட்ட மாதிரி...

    :-)

    ReplyDelete
  5. இந்த புத்தகம் வெளியிடும் முயற்சிக்கு துணைநின்ற கிழக்கு பதிப்பகத்துக்கு முதலில் நன்றி.

    இந்த புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் நிறைய பேருக்கு ரெகமென்ட் செய்தேன். அதில் பலர் வாங்கிவிட்டனர். அவர்கள் நம்மிடம் சொன்ன ஒரே ஒரு வார்த்தை 'சூப்ப்ப்ப்பர்' என்பது தான்.

    இந்த புத்தகம் குறித்து என் தளத்தில் பதிவும் போட்டாயிற்று. அதை பார்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்திருப்பதாக நண்பர்கள் சிலர் கூறினர்.

    புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, ரஜினியின் பன்ச் டயலாக்குகள் பற்றி எகத்தாளமாக கூறியவர்களின் முகத்தில் கரியை பூசும் என்று எதிர்பார்க்கிறேன்.

    எல்லா பெருமையும் தலைவருக்கே.

    - சுந்தர்
    OnlySuperstar.com

    ReplyDelete
  6. K. SAID ALAUDDEEN FAISZSun Dec 26, 12:42:00 AM GMT+5:30

    Rajini is one of the best marketing guy ( or executive, you can say) in branding his name in his career.
    He knows the ways how people can remember his name.
    There is no surprise that the book has got this much attention.

    ReplyDelete