Friday, December 24, 2010

இரு போர்கள், ஒரு கண்டம், பல நாடுகள்

யோசித்துப் பார்த்தால் இரு உலகப்போர்களும் நடந்திருக்கவே கூடாது என்றுதான் தோன்றும். இன்றெல்லாம் எந்த நாடும் சில்லறை விஷயத்துக்கெல்லாம் முணுக் என்று கோபித்துக்கொள்வதில்லை. போர் என்றால் எக்கச்சக்க உயிரிழப்பு என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்துள்ளது. முடியாட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளும் வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் ஓர் ஆசாமி முடிவெடுத்தால் உடனே போர் என்பதெல்லாம் சாத்தியமல்ல.

அமெரிக்க மட்டும்தான் விதிவிலக்கு. கடந்த இரு பத்தாண்டுகளில் வலிந்து பிற நாடுகள்மீது போர் தொடுத்த ஒரே நாடு அமெரிக்காதான் (உள்நாட்டுப் போர்கள் தவிர்த்து). அதுவும் இந்தப் பத்தாண்டில் ஈராக், ஆஃப்கனிஸ்தான் மீதான போர்கள் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கவேண்டியவை. அமெரிக்க நாடாளுமன்றங்களும் தேசப்பற்று என்பதை மட்டுமே முன்வைத்து அதிபருக்கு போர் தொடுக்கத் தேவையான சகல உரிமைகளையும் கொடுத்துவிடுகின்றன.

முதல் உலகப்போர் தொடங்க தீவிரமான காரணங்கள் ஏதும் தேவை இருக்கவில்லை. அதற்கு முன்பாகவே ஏகப்பட்ட நெப்போலியன் போர்கள், அதற்கு முன் ஐரோப்பியக் கண்டம் முழுமையிலும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாக நடந்த போர்கள் ஆகியவற்றை விளக்க இது சரியான இடமல்ல.

இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் என்ற சர்வாதிகாரியின் ஒற்றைப் பரிமாண அணுகுமுறை, அதற்கான பிரிட்டனின் (பின்னர் ரஷ்யாவின்) எதிர்ப்பு என்பதாகக் கட்டம் கட்டலாம். ஆனால் முதலாம் உலகப்போரை ஒற்றை மனிதனின் வெறியாக மட்டும் சித்திரிக்கமுடியுமா என்பது சந்தேகமே.

முதல் உலகப்போரிலும்கூட ஜெர்மனியின் கைசர் (பேரரசர்) மீதுதான் குற்றம் சாட்டவேண்டியிருக்கும். தன்னைச் சுற்றியுள்ள பிரிட்டனும் பிரான்ஸும் ஏகப்பட்ட காலனி நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டே இருக்க, தனக்கு ஐரோப்பிய அளவில் மரியாதை இல்லையே என்பது அவருடைய குறையாக இருந்தது. ஒருவித தாழ்வு மனப்பான்மையில் இருந்த அவருக்குத் தன் படைகள்மீது அபார நம்பிக்கை இருந்தது. பிரிட்டனின் கடல்படை மிக மிக வலுவானதாக இருந்தது. அந்த அளவுக்குத் தன் கடல்படையை உருவாக்க விரும்பியிருந்தார் கைசர். ஆனால் அதைச் செய்துமுடிப்பதற்குள்ளாக போர் ஆரம்பித்திருந்தது. பிரிட்டனின் கடல்படையோ சண்டைகளில் தன்னை ஏற்கெனவே நிரூபித்திருந்தது. ஜெர்மனியின் கடல்படை அப்படிப்பட்டதல்ல.

போரின் காரணமாக ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசின் இளவரசர் ஆர்ச்டியூக் ஃபெர்டினாண்ட் ஒரு செர்பியனால் கொலை செய்யப்பட்டதைச் சொல்வார்கள். வரலாறு படித்த காலத்தில் இது எனக்குப் புதுமையாகவே இருந்தது. யாரோ ஒரு நாட்டின் ஓர் இளவரசனை ஒருவன் கொல்வதால் எப்படி இந்தப் பக்கம் 5 நாடுகள், அந்தப் பக்கம் 5 நாடுகள் சண்டைக்குக் கிளம்பின?

அந்தக் காலத்தில் நாடுகளுக்கு இடையே அபத்தமான ஒப்பந்தங்கள் இருந்தன. அதன்படி, யார் ஒருவர்மீது பகை நாடு போர் தொடுத்தாலும், மற்றவரும் தோழமை நாட்டுக்காகப் போரில் இறங்குவார். ஆஸ்திரியா-ஹங்கேரியப் பேரரசு, ஜெர்மனி இரண்டும் அப்படிப்பட்ட ஓர் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. செர்பியாவும் ரஷ்யாவும் அதேபோன்ற ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. ரஷ்யாவும் பிரான்ஸும் அதேபோல. அட, பிரிட்டனும் பிரான்ஸும் அதேபோல மற்றொரு ஒப்பந்தத்தில். ஜெர்மனி, துருக்கியுடன் கிட்டத்தட்ட அதேமாதிரியான ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது.

ஆஸ்திரியா செர்பியாவை மிரட்ட, செர்பியா கொலைகாரனை ஒப்படைக்க மறுக்க, ஒரு நாள் காலை முகூர்த்தத்தில் ஆஸ்திரியா செர்பியாமீது போரை அறிவிக்க, உடனே ரஷ்யா ஆஸ்திரியாமீது போரை அறிவிக்க, உடனே ஜெர்மனி ரஷ்யாமீது போர் தொடுக்க, பிரான்ஸ் ஜெர்மனிமீது போர் தொடுக்க... அதகளம் ஆரம்பம். எல்லாம் ஆரம்பித்தது ஒரு ஆகஸ்ட் மாதத்தில். ஜெர்மனி ரஷ்யப் படைகளைப் புறமுதுகிட்டு ஓட வைத்து, பிரான்ஸைக் கதறவைத்து ஆட்டத்தையே முடித்துவிடும் என்றால், அதுதான் இல்லை. கொஞ்சம் தாமதித்து பிரிட்டன் களத்தில் குதித்தது. இதற்குள் பிரான்ஸில் வெகுதூரம் நுழைந்திருந்த ஜெர்மனியால் சப்ளை, லாஜிஸ்டிக்ஸ் விஷயங்களைச் சரியாகக் கவனிக்கமுடியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் பிரான்ஸில் அதிரடியாக வெகுதூரம் புகுந்திருந்த ஜெர்மானியப் படைவீரர்கள் அடுத்த பல மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்த இடத்தைப் பாதுகாக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் சிக்கி, கடைசியாக ஜெர்மனி தோற்றது.

இதனால் ஐரோப்பாவின் முகமே மாறியது. மீண்டும் சில ஆண்டுகளிலேயே இரண்டாம் உலகப்போர் ஆரம்பம் ஆவதற்குமான அடி அப்போதுதான் போடப்பட்டது.

***

மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நூல். கம்யூனிஸ்ட் வாசம் அதில் கொஞ்சம் ஜாஸ்தி என்பது என் கருத்து. ஆனால் அந்தச் சிக்கல் இருந்திருக்காது மருதனின் முதல் உலகப்போர் புத்தகத்துக்கு. வாசகர்கள் இந்தப் புத்தகம் எப்போது வரும் என்று வெகு நாள்களாகக் கேட்டுவந்தனர். இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அறிமுகமாகும் இந்தப் புத்தகம்.

1 comment:

  1. மருதனின் இரண்டாம் உலக போர் படித்திருக்கிறேன். எளிதாக அனைரவருக்கும் புரியும்வண்ணம் எழுதிய சிறப்பான புத்தகம். முதல் உலக போர் பற்றி வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன். வியட்நாம் யுத்தம், Cold War போன்றவற்றையும் மருதன் எழுதவேண்டும். பணி சிறப்புற வாழ்த்துகிறேன்.
    - நெல்லை சீனிவாசன்

    ReplyDelete