Monday, December 27, 2010

கிழக்கு இலக்கியம்

கிழக்கு பதிப்பகத்திலிருந்து இலக்கியப் புத்தகங்கள் வெளியாவது குறைவுதான். இந்த ஆண்டு வெளியான புத்தகங்கள் இவை:

இந்திரா பார்த்தசாரதியின் முழுச் சிறுகதைகளின் தொகுப்பு, இரு பாகங்களாக வெளியானது. ஒவ்வொன்றும் விலை ரூ. 300/- வெளியானவுடன் டாக் செண்டரில் வைத்த நிகழ்ச்சியில், இரு தொகுதிகளும் சேர்ந்து ரூ. 150/-க்கு அதிரடி விலையில் வழங்கப்பட்டது! கிட்டத்தட்ட 300 பிரதிகள் (இரு தொகுதிகளும் சேர்ந்து) அன்று விற்றது என்று நினைக்கிறேன். பின்னர் சிங்கப்பூரிலிருந்து ஒரு நண்பர் 50 பிரதிகள் வாங்கிச் சென்றார். முழுத் தொகுதிகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஒட்டுமொத்தமாக ஓர் எழுத்தாளரின் முழுப் பங்களிப்பை, அவரது எழுத்தில் உள்ள மாற்றத்தைக் காண முழுத்தொகுதி அவசியம். விலை எப்போதுமே சிக்கலானது. (கடந்த ஓராண்டில் காகித விலை 20%-க்கும் மேல் ஏறியுள்ளது என்பது இந்தத் தொழிலில் இருப்போருக்குத் தெரிந்த ஒன்று.) இந்தக் காரணத்தால்தான் இரு தொகுதிகளாக அச்சிட்டோம்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த இரு தொகுதிகளுக்கும் முக்கியமான இடம் இருக்கும்.

ஜெயமோகனின் மூன்று புத்தகங்களை இந்த ஆண்டு கொண்டுவருகிறோம். இரண்டு மீள்பதிப்புகள். ஏழாம் உலகம் (நான் கடவுள் சினிமாவுக்கான ஒரு இன்ஸ்பிரேஷன்) தமிழினி வெளியீடாக வந்து அச்சில் இல்லாமல் போனது. அதை ஆண்டின் இடையில் கொண்டுவந்திருந்தோம். விசும்பு என்ற அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு எனி இந்தியன் பதிப்பக வெளியிடாக வந்திருந்தது. அதுவும் இப்போது கிழக்கு மீள்பதிப்பாக வெளியாகிறது. இறுதியாக உலோகம், ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியாகி, பரபரப்புடன் பேசப்பட்டது. அதனை பல்ப் ஃபிக்‌ஷன் வெளியீடுபோல, கிரவுன் 1/8 அளவில், அட்டையில் தங்க முலாம் எல்லாம் பூசிக் கொண்டுவருகிறோம். விறுவிறுவெனச் செல்லும் சாகசக் கதை.

வெகு நாள்களாகக் கையில் இருந்த மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மருந்து என்ற புதினம் இந்த ஆண்டின் இடையில் வெளியானது. தமிழாக்கியவர், மலையாள மனோரமாவில் வேலை செய்யும் ராமன்.

பா. ராகவனின் இரு புதினங்கள் வெளியாகின்றன இம்முறை. இலக்கியப்பீடம் பரிசு பெற்ற அலகிலா விளையாட்டு ஒன்று, கல்கியில் தொடர்கதையாக வெளியான கொசு.

கதையாக அன்றி, அனுபவக் கட்டுரைகளாக, ஆனால் சிறுகதைக்கு உரிய சுவாரசியத்தை இழக்காமல் இருப்பது அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகள். அவரது இணையத்தளம், பல பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் என அனைத்தையும் தொகுத்து நாங்கள் கொண்டுவரும் புத்தகம் அமெரிக்க உளவாளி.

ஜே.எஸ். ராகவன் மாம்பலம் டைம்ஸில் தொடர்ந்து எழுதிவரும் தமாஷா வரிகளின் இந்த ஆண்டுத் தொகுப்பு, அன்புள்ள சண்டைக்கோழியே... என்று வெளியாகிறது. இதற்கு முந்தைய தமாஷா வரிகளின் தொகுப்புகள் இங்கே கிடைக்கின்றன.

சுஜாதா புத்தகங்கள் பற்றித் தனியாக எழுதிவிட்டேன். மேலும் இரு பதிவுகள் சுஜாதா புத்தகங்கள் தொடர்பில் வரும். வேறு சில இலக்கியப் புத்தகங்களை இந்த ஆண்டு கொண்டுவர முயற்சித்து, முடியாத நிலையில் உள்ளன. இவை வரும் மாதங்களில் வெளியாகும்.

3 comments:

  1. if possible, please give tamil version of this..
    http://www.amazon.com/How-Talk-Anyone-Success-Relationships/dp/007141858X/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1293545241&sr=1-1

    ReplyDelete
  2. ஒரு சிறிய (பெரிய ?) சந்தேகம் :) - பொதுவாக,அபுனைவு கதைகளை, இலக்கிய புத்தகம் என குறிப்பிடுகிறீர்களா?

    ReplyDelete
  3. சுஜாதா எழுதிய கணேஷ் vs வசந்த் என்னும் புஸ்தகத்தை மறு பதிப்பு செய்வீர்களா? எங்கு தேடியும் கிடைக்கவில்லை

    ReplyDelete