Friday, December 24, 2010

மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் புத்தகங்களை மொழிபெயர்ப்பது எளிதல்ல. அவை இலக்கியப் புத்தகங்களாகட்டும், சமகால அரசியல், பொருளாதாரப் புத்தகங்களாகட்டும், ஏன், சாதாரண சுய முன்னேற்றப் புத்தகங்களாகட்டும். ஆங்கில வாக்கிய அமைப்புக்கும் தமிழ் வாக்கிய அமைப்புக்கும் தொடர்பே கிடையாது. எளிதான வாக்கியங்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் வளைத்து, மடித்து எழுதப்படும் வாக்கியங்கள், எண்ணற்ற மேற்கோள்கள், கலாசாரம் சார்ந்த idioms, துறை சார்ந்த குழூஉக்குறிகள் என்று தமிழாக்கம் செய்ய ரொம்பவே கஷ்டப்படுத்தும். இரு மொழிகளிலும் நல்ல ஞானம் தேவை. நிறையப் பொறுமை தேவை.

ஆங்கிலப் புத்தகங்கள் பெரும்பாலும் 400-500 பக்கங்கள் தாண்டி இருக்கும். குறைந்தபட்சம் 300 பக்கங்கள். தமிழாக்கம் செய்யும்போது, தமிழின் நீள நீளமான வார்த்தைகளும் inflexional முறையும் சேர்ந்து, ஒன்றரை மடங்கு விரிவாகும். சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்றால், ஒரு வரியைப் படித்தவுடனேயே தெரிந்துவிடும். மிகவும் அந்நியமாகத் தோன்றும்.

சென்ற ஆண்டு நாங்கள் கொண்டுவந்த சில புத்தகங்கள் மொழிபெயர்ப்பை சிறப்பாகச் செய்தன. முதலாவது ராமன் ராஜா மொழிபெயர்த்த, பல்லவி அய்யரின் சீனா பற்றிய புத்தகம்: சீனா: விலகும் திரை. இதைப் படித்த அனைவரும், ஏதோ தமிழில் எழுதப்பட்ட புத்தகத்தைப் படித்ததுபோலவே இருந்தது என்றார்கள். இரண்டாவது புத்தகம்: இலங்கை இறுதி யுத்தம். இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1, இதில் பெருமளவு வெற்றி கண்டது என்றாலும் இன்னும் சில இடங்களில் கொஞ்சம் தட்டிச் சரி செய்யவேண்டிய வேலைகள் உள்ளன. இந்த ஆண்டு வெளியாகும் பாகம் 2, இந்தப் பிரச்னைகளைக் கடந்துவிட்டது என்றே நினைக்கிறேன். சென்ற ஆண்டு வெளியான சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தகமும் திருப்தி தரக்கூடியதே.

இந்த ஆண்டு இன்னும் கொஞ்சம் அகலக்கால் வைத்துள்ளோம். முதலில் கொண்டுவந்தது அப்துல் கலாம், ஆசார்ய மஹாபிரக்ஞாவின் குடும்பமும் தேசமும், சுதா சேஷய்யன் மொழிபெயர்ப்பில் (ஆங்கில மூலம் The Family and the Nation, HarperCollins). இது மிகவும் கடினமான ஒரு துறை பற்றியது. இந்திய ஆன்மிகம் பற்றியது. எனவே அதற்கான மொழி தேவைப்பட்டது. அடுத்தது ராமன் ராஜா மொழிபெயர்ப்பில் வந்துள்ள இரண்டாவது புத்தகம். முதல் புத்தகம் போன்றே இதிலும் ராமன் ராஜா வெளுத்துக்கட்டியுள்ளார். போரஸ் முன்ஷி, 11 நிறுவனங்கள் பற்றி, எப்படி அவை புதுமை படைத்துள்ளன என்பது பற்றி எழுதிய புத்தகம் Making Breakthrough Innovations Happen (HarperCollins). தமிழில் திருப்புமுனை என்ற பெயரில் கொண்டுவந்துள்ளோம்.

பர்மிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஒருசில போராளிகளை இந்திய ராணுவ உளவுத்துறையின் ஒரு மோசக்கார மேஜர் எப்படி ஏமாற்றினார்; அதன் விளைவாக அந்தப் போராளிகள் இந்திய ஜெயிலில் எப்படி வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி அந்தப் போராளிகளின் வக்கீலான நந்திதா ஹக்சர் எழுதிய புத்தகம் Rogue Agent (Penguin). இதனை வஞ்சக உளவாளி என்ற புத்தகமாக குமரேசன் மொழிபெயர்த்துள்ளார். மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, இந்திய அரசின் Armed Forces Special Powers Act-ஐ எதிர்த்து, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அவரைப் பற்றி தீப்தி பிரியா மெஹரோத்ரா எழுதிய Burning Bright (Penguin) என்ற புத்தகத்தை ராம்கி மொழிபெயர்த்துள்ளார் - ஐரோம் ஷர்மிளா - மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று கொண்டுவருகிறோம்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூன்று புத்தகங்கள் இந்த வரிசையில் முக்கிய இடம் பெறுகின்றன. ஒன்று அவர் அதிபராவதற்குப் பல வருடங்கள் முன்பு எழுதப்பட்ட Dreams From My Father. இதற்கான மொழிமாற்ற உரிமை அவரிடமே இருந்தது. அவரது ஏஜெண்ட் மூலம் இதனைப் பெற்றோம். அடுத்த இரண்டு புத்தகங்களின் ஒன்று அவர் தன்னை அதிபர் பதவிக்கான பிரைமரி வேட்பாளராக முன்வைத்தபோது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Audacity of Hope). மற்றொன்று அவரது பிரெசிடென்ஷியல் கேம்பெய்ன்போது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Change We can Believe in). இந்த இரண்டு புத்தகங்களும் Random House வெளியீடு. கடைசி இரண்டு புத்தகங்களையும் தமிழாக்கி வெளியிடுவதன் பயன், அவற்றை யார் வாங்கப்போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. இருந்தும் செய்துதான் பார்ப்போமே என்று முடிவெடுத்தோம். அவை மிகவும் கடினமான மொழிபெயர்ப்புகள்கூட. அக்களூர் ரவி, நாகூர் ரூமி, அருண் மகாதேவன் ஆகியோர் மொழிபெயர்ப்பில் அவை முறையே என் கதை, நம்மால் முடியும், மாற்றம் என்றொரு மந்திரம் என்று வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகளுக்குமுன் Penguin வெளியீடாக வந்த A Wasted Death என்ற புத்தகம் பிரிட்டானியா நிறுவனத்தை ஒரு காலத்தில் நிர்வகித்த ராஜன் பிள்ளையின் வாழ்க்கை. ராஜன் பிள்ளையின் தம்பி ராஜ்மோகன் பிள்ளையால் எழுதப்பட்டது. அதன் ஆங்கில மறுபதிப்பை நாங்கள் பதிப்பித்தபோது கூடவே தமிழாக்கத்தையும் - நீதியின் கொலை - வெளியிட்டுள்ளோம். படு சுவாரசியமான, மிக வேகமாக நகரும் கதை இது. நிஜ வாழ்க்கையும்கூட. ஜெயிலில் மரணம் அடைந்த ராஜன் பிள்ளை ஒரு கட்டத்தில் இரு நாட்டுக் காவல் துறையால் தேடப்பட்டார். அவர் செய்த குற்றம்தான் என்ன? இன்று பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள பிரிட்டானியா என்ற நிறுவனம் எப்படி ஆரம்பித்தது?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த மூத்தவரான நாராயண மூர்த்தி, பல பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களிலும் இன்னபிற இடங்களிலும் அளித்த சொற்பொழிவுகளின் தொகுப்பை பெங்குவின் A Better India, A Better World என்ற பெயரில் நூலாக வெளியிட்டது. அதன் தமிழாக்கத்தை அக்களூர் ரவி செய்ய, அதனை புதிய கனவுகள், புதிய இந்தியா என்ற பெயரில் வெளியிடுகிறோம். உங்களில் பலர் இந்தப் புத்தகத்தை சீரியலாக புதிய தலைமுறை இதழில் படித்து வரக்கூடும். அந்தப் புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

கடைசி இரண்டு புத்தகங்களில் ஒன்று இந்தியா-சீனா ஒப்பீடு. சி.என்.என் - ஐ.பி.என் முதல் பல ஆங்கில, இந்தி சானல்களை நடத்தும் தொழில்முனைவர் மற்றும் மூத்த பத்திரிகையாளரான ராகவ் பஹல் எழுதிய Superpower? (Penguin) புத்தகம் சில மாதங்களுக்குமுன் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியானது. அந்தப் புத்தகத்தின் தமிழாக்கம் (சரவணன், மகாதேவன்) நீயா நானா? இந்திய சீன வல்லரசுப் போட்டி என்று வெளியாகிறது. இரு நாடுகளையும் நெருக்கமாக ஆராய்ந்து அலசி எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம்.

மற்றொன்று, குழந்தை வளர்ப்பு தொடர்பானது. உங்கள் குழந்தை சரியாகச் சாப்பிடுவதில்லையா? எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இருக்கிறார்களா? பெற்றோர்கள் சொன்னதைக் கேட்பதில்லையா? படிப்பில் ஆர்வம் செலுத்துவதில்லையா? ராண்டம் ஹவுஸ் இந்தியா, ஸ்டீவன் ருடால்ப் என்பவரைக் கொண்டு இந்தியக் குழந்தைகள், இந்தியப் பெற்றோர்கள் கண்ணோட்டத்தில் எழுதவைத்த புத்தகம் இது. 10 Laws of Learning என்பது. இது குழந்தை வளர்ப்பு அறிவியல் என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது (அருண் மகாதேவன்). பெற்றோருக்கு மிகவும் உபயோகமான புத்தகம் இது.

ஆக, இந்த ஆண்டு, பியர்சன் அல்லாமல், 12 புத்தகங்கள், கிழக்கு வெளியீடாக தமிழ் மொழிபெயர்ப்பில் வருகின்றன. இவற்றின் மொழிபெயர்ப்புத் தரத்தில் பல வேறுபாடுகள் இருக்கலாம். அவற்றைச் சரிசெய்து, ஒரே தரமான, உயர் தரமான மொழிபெயர்ப்பைக் கொண்டுவருவதில் முனைந்துள்ளோம். நிச்சயமாக வரும் ஆண்டுகளில் எங்கள் வேலைத்திறன் மேலும் முன்னேற்றமடையும் என்றே நம்புகிறோம். இந்தக் கட்டத்தில் மேலும் 20 புத்தகங்களுக்கான தமிழாக்க வேலைகள் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு அவை வெளியாகும்.

2 comments:

  1. நன்றி...இதைப் போல இந்தியாவின் பிரிட்டிஷ் (கிழக்கிந்தியக் கம்பெனி காலம் தொடங்கி) ஆட்சிப் பற்றிய மொழிப்பெயர்ப்பும், முகலாயர் வரலாறும் (like 'The Last Mughal') தேவை...NHM-ல் அது பற்றிய திட்டம் இருக்கிறதா? Just curious.

    Thanks
    Rajesh

    ReplyDelete
  2. வந்தவாசி ஒரு சரித்திர புகழ் பெற்ற ஊர். சென்னை என்கின்ற பகுதியை வெள்ளையர்களுக்கு விற்றவர்கள் வந்தவாசி நாயக் பரம்பரையினர் தான். எங்கள் ஊரை பற்றி ஒரு பதிவு வருமா..

    ReplyDelete