Friday, June 10, 2011

IIT JEE கவுன்செலிங்

உங்கள் உறவினர்கள் யாருக்கேனும் ஐஐடி நுழைவுத் தேர்வில் இடம் கிடைத்திருந்தால், அந்த மாணவர்கள் எங்கு சேர்வது, எந்தப் படிப்பில் சேர்வது என்று தடுமாறினால், கீழ்க்கண்ட சுட்டியைப் பரிந்துரைக்கிறேன்.

A Guide to JEE Counseling 2011

1987-ல் கவுன்செலிங்குக்குச் சென்றபோது நான் திக்குத் தெரியாமல்தான் இருந்தேன். முதலில் ஐஐடி என்றால் என்னவென்றே எனக்கும் தெரியாது, என் தந்தைக்கும் தெரியாது. ஏதோ ரிசல்ட் வந்து, ஏதோ ரேங்க் வந்திருந்தது. கவுன்செலிங்குக்கு குறிப்பிட்ட தினத்தன்று ஐஐடி மெட்ராஸ் வரவும் என்று கடிதம் வந்திருந்தது. கவுன்செலிங் என்ற வார்த்தையே புதுசு. டிக்‌ஷனரி பார்க்கும் வழக்கம் எல்லாம் கிடையாது.

என் தந்தை மஞ்சள் பை ஒன்றை எடுத்துக்கொண்டு என்னையும் அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். ஐஐடி கேம்பஸுக்கு உள்ளேயே தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தார்கள். காட்டு வாசலிலிருந்து ஹாஸ்டல் வரை செல்ல ஒரு பஸ் இருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. பக்கத்து அறைக்கு ஆந்திரா பார்ட்டி ஒன்று வந்திருந்தது. காகிநாடா என்றாலும் விவரமான ஆசாமி. தான் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் சேரப்போவதாக அந்தப் பையன் சொன்னான்.

கவுன்செலிங் நேரம் வந்ததும், வரிசையாக ஆளாளுக்கு ஏதோ ஒரு பேராசிரியர் முன் சென்று அமர்ந்தோம். எனக்கு ஸ்ரீனிவாச ராவ் என்ற மெக்கானிகல் எஞ்சினியரிங் பேராசிரியர் ஆலோசனை தந்தார். நான் அப்துல் கலாம் மாதிரி ஆர்வத்துடன் (அப்போது அப்துல் கலாம் யார் என்றே தெரியாது) ஏரோனாட்டிகல் எஞ்சினியரிங்தான் படிக்க விரும்புகிறேன் என்றேன். நாகப்பட்டினத்திலிருந்து வரும்போதே அதைத்தான் மனத்தில் நினைத்துக்கொண்டு வந்திருந்தேன்.

நாகப்பட்டினத்தில் வருடத்துக்கு எப்போதாவது ஒருமுறை வானில் ஏதோ விமானம் போவது தெரியும். உடனே தெருவில் பசங்கள் வானத்தைப் பார்த்தபடியே பின்னால் ஓடிச்செல்வோம். சில முறை ஹெலிகாப்டர்களும் வந்துள்ளன. ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது ஒருமுறை நாகூர் வந்தபோது மூன்று ஹெலிகாப்டர்கள் அடுத்தடுத்து வந்து இறங்கின. பள்ளிகளுக்கெல்லாம் விடுமுறை விட்டிருந்தார்கள். நாங்கள் எல்லாம் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் இடத்துக்குச் சென்றிருந்தோம். அதேபோல இந்திரா காந்தியும் ஹெலிகாப்டரில் வந்திருக்கிறார். ஒருமுறை இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் அவுரித் திடலில் ஒரே கூட்டத்தில் பேசினார்கள் என்று ஞாபகம்.

வானில் எங்கோ தொலைதூரத்தில் சர்ரென்று பறக்கும் விமானங்கள்மீது எப்படியோ ஒரு ஈர்ப்பு வந்திருந்தது. அதையெல்லாம்கூடப் பாடமாகச் சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள் என்பது கிளர்ச்சியைத் தந்தது.

ஆனால் அந்த ஆர்வத்தில் ஒரு பக்கெட் தண்ணியை புஸ்ஸென்று ஊற்றினார் ராவ்.

‘நீ என்ன ரேங்கோ, அந்த ரேங்குக்கு என்ன கிடைக்குமோ, அதை எடுத்துக்கொள்’ என்றார். ‘12-ம் வகுப்பு படித்திருக்கும் உனக்கு மேற்கொண்டு எதைப் படிக்கவேண்டும் என்பதெல்லாம் தெரியாது. சும்மா, அடாலசண்ட் காதல் விவகாரம்போல ஏதோ ஒரு சப்ஜெக்டைப் படிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு உன் வாழ்க்கையை ‘வீணடித்துக்கொள்ளாதே’ என்பது அவரது வாதம்.

என் தந்தை திருதிருவென்று விழித்தார். அவருக்கு இதெல்லாம் புரியவில்லை. பள்ளி ஆசிரியரான அவர், தனது வழமைபோல, ‘அதான் அந்த ப்ரொபஸரே சொல்லிட்டாரே, அவர் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டார்.

என் முகத்தில் ஏமாற்றத்தைக் கண்ட ஸ்ரீனிவாச ராவ் கொஞ்சம் பரிவுடன் பேசினார். ‘இளநிலைப் படிப்பின்போது ஸ்பெஷலைசேஷன் கூடாது. ஏரோனாட்டிகல் என்பது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் ஒரு பகுதிதான். எனவே வேண்டுமானால் முதுநிலைப் படிப்புக்கு அதை படிக்கலாம்’ என்றார்.

அப்படியென்றால் ஏன் அந்தப் படிப்புகளை இளநிலையில் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, தட்டிக் கழித்துவிட்டார் ராவ்.

அதன்பின் வேறு வழியின்றி, அவர் சொன்னபடியே ஐஐடி மெட்ராஸில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

ஸ்ரீனிவாச ராவ், நான் எந்த ஹாஸ்டலுக்குச் சென்றேனோ (கோதாவரி) அதே ஹாஸ்டலின் வார்டனாகவும் இருந்தது தற்செயல். என் நான்கு வருடப் படிப்பின்போது அவர் எனக்குப் பாடங்கள் எதையும் எடுக்கவில்லை. காகிநாடா பார்ட்டியும் என்னைப் போலவே அதே துறைக்கும் அதே ஹாஸ்டலுக்கும் வந்து சேர்ந்தான்.

பொதுவாக ஐஐடி கவுன்செலிங் மட்டுமல்ல, வேறு எந்த எஞ்சினியரிங் கவுன்செலிங்கிலும் இதே சிக்கல்தான். சென்ற ஆண்டு எந்த ரேங்கில் இருப்பவர்கள் எந்தக் கல்லூரியில் எந்தத் துறையை எடுத்திருக்கிறார்கள் என்ற மந்தைச் சூழ்நிலைதான் இந்த ஆண்டு யார் எதை எடுப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும். வெகு சிலர் மட்டுமே இதிலிருந்து விலகி வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி விலகவேண்டும் என்றால் அவர்களுக்கு ஓரளவுக்கு விஷயம் தெரிந்திருக்கவேண்டும்; நிறைய தைரியம் வேண்டும்; பெற்றோரின் ஆதரவு வேண்டும்.

ஸ்ரீனிவாச ராவை நான் குறைசொல்ல மாட்டேன். கிராமத்திலிருந்து வந்திருக்கும் விவரம் தெரியாத சிறு பயல் என்று அவர் என்னைச் சரியாகவே எடைபோட்டிருந்தார். தன்னளவில் எனக்குச் சரியான வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்றுதான் அவர் நடந்துகொண்டார். அவர் இடத்தில் இருக்கும் வேறு யாருமே அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார்கள்.

இது ஒருவிதத்தில் நம் கல்வித் துறையின் கோளாறு. ஹையர் செகண்டரி அளவிலேயே நம் மாணவர்களுக்கு அடுத்த கட்டத்துக்கான தெளிவான பாதை காண்பிக்கப்படவேண்டும். சொல்லப்போனால் வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்பது ஒரு பாடமாகவே இருக்கவேண்டும். பொறியியல் என்றால் என்னவெல்லாம் அதில் செய்யலாம், என்னென்ன பாட வாய்ப்புகள் உள்ளன என்பது 12-ம் வகுப்பின் பாடத் திட்டத்திலேயே வந்திருக்கவேண்டும். (பொறியியல் மட்டுமல்ல, வேறு பல துறைகளும்தான்!)

இது தொடர்பான ஒரு மிக முக்கியமான புத்தகத்தை நியூ ஹொரைஸன் மீடியாவின் சக இயக்குனர் சத்யநாராயண் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார். விரைவில் கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வெளியாகும். 12-ம் வகுப்பில் உள்ள மாணவர்கள் அடுத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் அந்தத் துறைகள் ஒவ்வொன்றும் எவை பற்றியது என்பதையும் ஓரளவுக்கு விளக்கமாகக் கூறும் நூல் இது.

[இந்த விளம்பரத்துடன் இந்தப் பதிவை முடித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.]

18 comments:

  1. எதார்த்த மொழியழகு இங்கு கொட்டி கிடக்கு. கூடவே உங்கள் மேல் உள்ள மரியாதையையும் அதிகமாக்குது.

    ReplyDelete
  2. பத்ரி,
    இந்தப் பதிவின் நோக்கம் அருமையானது...

    பெரும்பாலும் இந்த அவலம் கிராமப் புற மாணவர்களுத்தான் நிகழ்கிறது...அவர்கள் பெரும்பாலும் விவரம் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்....

    ஆனால் நீங்கள் ஏரோநாட்டிக்ஸ் எடுக்காததும் நல்லதுதான்..இல்லாவிட்டால் எந்த நாட்டிலாவது விமானத்தைக் குடைந்து கொண்டோ அல்லது ஸ்ரீ ஹரிகோட்டாவில் உழன்று கொண்டோ இருந்திருக்கலாம்.!

    கிழக்குப் பதிப்பகத்திற்கு வாய்ப்பு இருந்திருக்காது!!

    ReplyDelete
  3. well done badri! idhu oru rasikkathakka padhivu. GMAT exam patri ippadi yedhavadhu ezhuthungalaen.......

    ReplyDelete
  4. I had also the same experience when I accompanied my son for IIT counceling; He was granted B.Tech for Metallurgy in BHU and completion of the same he got schlorship for Phd and continued the studies in MIT in Boston;
    But left the same when completed MS. Finally he worked as consultant in Mcncy and now in BOOSE and specialised in Pharmecital and Health Care and working as partner in BOOSE; why I am telling all thses things is some course are bing allotted in councelling and they are specialised just opposited to the same while choosing their carrier; Like this so many students specialised in Mechanical; Civil; Architecural ARE FINALLY WORKING AS SOFT WARE ENGINEER IN INFORMATIN TECHNOLOGY OR IN COMPUTER SERVICES; while seeing all these things the little hope in councelling has also gone
    SUPPAMANI

    ReplyDelete
  5. ராமதுரை எழுதியது
    சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது மைத்துனரின் ம்கனுக்கு கரக்பூர் ஐ.ஐ.டி யில் மெட்டலர்ஜி கிடைத்தது. என் மைத்துனருக்கு மனதில் ஏதோ குறை. அவரது புதல்வருக்கும் தான். நான் எனக்கு இருந்த அறிவில் (!) அது மிக நல்ல பிரிவு. அதில் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு என்று அறிவுரை வழங்கினேன். பின்னர் அந்தப் பிள்ளையாண்டான் அமெரிக்கா சென்று மேல் படிப்பு படித்து இப்போது சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆகவே கவுன்சிலிங் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? ஏதோ சிலருக்கு மட்டும் கவுன்சிலிங் உதவலாம். ஒன்று சொல்வார்கள்.அதாவது ஒருவர் மெக்கானிக்கல் எஞ்சினீரிங் படித்தால் எப்படியும் தேறி விடுவார் என்று கூறுவார்கள். அது தங்கள் விஷயத்தில் நிரூபணமாகிவிட்டது எனலாம்.
    ராமதுரை

    ReplyDelete
  6. நீ என்ன ரேங்கோ, அந்த ரேங்குக்கு என்ன கிடைக்குமோ, அதை எடுத்துக்கொள்’ என்றார்.

    Sir,Which was of higher demand at that time? - Mech or Aero?.What did the Prof exactly mean?

    Also, I have read your ealier post your counselling experience,where you had mentioned about a USA bound senior's advice(met in the iit campus bus) to take up mech.

    ReplyDelete
  7. I think we should pick our own mistake. At least we can't blame others. Finally we might end up with the job we get.

    ReplyDelete
  8. Venkat: Mech was higher demand than Aero, then and now. What the Professor meant was, if for your rank, the "best" you can get is Mech, take Mech. Don;t take anything "lower". That is, go by the cut-off of the previous year for each dept, and follow the safest option.

    Yes, right from the old students to the counseling professors, everyone gives only the most conventional advise which is to look at the previous year pattern and sign on the dotted line.

    ReplyDelete
  9. அது சரி

    உங்களை விட குறைவான மதிப்பெண் எடுத்த அவரது உறவுக்காரா மாணவன் யாரும் ஏரோநாட்டிக்களில் அந்த வருடம் சேரவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டீர்களா

    #Devil's Advocate

    ReplyDelete
  10. // முதலில் ஐஐடி என்றால் என்னவென்றே எனக்கும் தெரியாது, என் தந்தைக்கும் தெரியாது. ஏதோ ரிசல்ட் வந்து, ஏதோ ரேங்க் வந்திருந்தது. //


    கப்ஸா உஷார்.. ஐஐடி என்றால் ”என்னவென்றே” தெரியாமல், கிராமப்புரத்தில் ஒர் ஸ்டேட்போர்ட் பள்ளியில் படித்து, கோச்சிங் இல்லாமல், ஹைரேங்க் வருவது...?

    ReplyDelete
  11. i think you can write better than anybody else
    it will be useful badri

    ReplyDelete
  12. மிகவும் அவசியமான புத்தகம். நகர்ப்புறத்திலும் பலருக்கும் பல படிப்புகளைப் பற்றிய விவரங்கள் தெரிவதில்லை. இதுவரை ரமேஷ் பிரபா எழுதியுள்ள பழைய புத்தகம் ஒன்றைத்தான் வாங்கிவைத்துக் கொண்டு 12-ஆம் வகுப்பை முடிக்கும் உறவினர்களுக்கு கொடுத்துவருகிறேன். அவ்வகையில் இப்புத்தகத்தை வரவேற்கிறேன். விகடனில் தொடராக சில ஆண்டுகள் முன்பு இதே போல் அணைத்துப் பட்டப்படிப்புகளைப் பற்றிய தகவல்கள் வந்தன!

    ReplyDelete
  13. //கப்ஸா உஷார்.. ஐஐடி என்றால் ”என்னவென்றே” தெரியாமல், கிராமப்புரத்தில் ஒர் ஸ்டேட்போர்ட் பள்ளியில் படித்து, கோச்சிங் இல்லாமல், ஹைரேங்க் வருவது...?//

    What Badri means here is he was not far sighted about IIT as a Brand at that time. As we came from the same town at that time, I know him personally - my brother and Badri were classmates - the awareness to IIT and the prerequisite it takes to get in there were surely not as same as now, especially for someone hails form Nagapatinam. With 25 years on, I still doubt whether Nagappatinam is proud to have someone to get into IIT as Badri did.-Magesh

    ReplyDelete
  14. //கப்ஸா உஷார்.. ஐஐடி என்றால் ”என்னவென்றே” தெரியாமல், கிராமப்புரத்தில் ஒர் ஸ்டேட்போர்ட் பள்ளியில் படித்து, கோச்சிங் இல்லாமல், ஹைரேங்க் வருவது...?//

    அது அவரின் திறன்

    கோச்சிங் பெற்றிருந்தால் பத்ரி முதல் ரேங்கு பெற்றிருப்பார்

    ReplyDelete
  15. Sure he is talented. But I do think he understates the preparation it takes, especially for the stateboard ones.

    If it were that easy we would see many in IIT from TN stateboard schools. And without knowing the brand value of IITs, willnever come the required commitment for the preparation.

    Most common opinion of TNSB candidates who "casually" sits for JEE is that it looks all Greek & Latin. And more so for the older format exam (long format reasoning type).

    It would be great if Badri shares any preparatory tips for TNSB aspirants with no coaching.

    ReplyDelete
  16. Anon: I have said this before in other places as well, also possibly in my blogs. Can't remember now.

    I didn't know a thing about IITs, their importance etc. when I started preparing for this. A student of my father dropped in one day to my house and suggested I prepare for IIT JEE. At that time, he was doing engineering in CEG (Anna Univ).

    My father eventually figured out what JEE was and then learnt about Brilliant Tutorials, and found that it was costing Rs, 5,000 to join YG File. We decided against the same as we found the amount to be 'way high'. Later on, he collected old Brilliant material and Agarwal material from people who had prepared a few years back (yes, some people in Nagapattinam were actually preparing for JEE!) and handed them over to me.

    I started going through them over the next two years and was totally unprepared for the exam. I didn't do a great job in the exam. I remember that I could probably attempt only about 20 marks or so in the Math paper. Physics and Chemistry were better, but I couldn't have done all that great compared to others.

    If I had known the importance of IIT, I would have certainly prepared for JEE better.

    My suspicion is that I got fairly good marks (around 15-16?) in Maths which when normalised pushed my rank up (AIR 469) and made up for the deficiencies in Chemistry and Physics.

    I had to struggle right through my first year at IIT-Madras simply because I didn't have the requisite background in Physics and Maths.

    ReplyDelete
  17. பத்ரி அவர்களுக்கு,
    இது ஒரு முக்கியமான சமாச்சாரம். எனக்கும், என் பத்தாம் வகுப்பு முடித்த பையனுக்கும் iit-jee coaching செல்ல வேண்டும் என்று தெரிகிறது (இதுவும் peer pressure தான்) . ஆனால் அதற்குப் பிறகு என்ன...
    45 வயதான என்க்கு இன்னும் நான் எதில் திறமைசாலி, என் விருப்பம் எது என்று தெரியவில்லை :)
    இதில் என் பையனை எப்படி .....
    அன்புடன்
    கணேஷ்.

    ReplyDelete