Wednesday, August 03, 2011

ரஜினியின் பன்ச்தந்திரம் - வெள்ளி மாலை 6.00 மணிக்கு

நியூ ஹொரைஸன் மீடியா ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டுள்ள புத்தகம் Rajini's PUNCHtantra / ரஜினியின் பன்ச்தந்திரம்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது? என்று முன்னதாக டிசம்பர் 2010-ல் ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவை எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது தொடங்கி இந்தப் புத்தகம் தொடர்ந்து top of the chart-லேயே இருந்துவந்துள்ளது. கிழக்கு புத்தகங்கள் கிடைக்கும் எல்லா இடங்களிலும் கிடைப்பதைத் தவிர, யுனிவெர்செல் செல்பேசிக் கடைகள் பலவற்றில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. இப்போது இந்தப் புத்தகத்தின் 30 பன்ச் வசனங்களையும் 30 எபிசோடுகளாக ராஜ் டிவி தயாரித்து வாராவாரம் ஒளிபரப்ப உள்ளது. இந்த மாசக் கடைசியிலோ அல்லது அடுத்த மாதத்திலோ நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடும். சேலத்தில் உள்ள கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று எழுத்தாளர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி தயாரித்தது. அது விரைவில் சேலம் முழுவதும் கேபிளில் வலம் வர ஆரம்பிக்கும். பிற நகரங்களிலும் கேபிள் தொலைக்காட்சிகளில் தெரியலாம். இதுபற்றிய தகவலை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வாரம், 5 ஆகஸ்ட் 2011 அன்று மாலை 6 மணிக்கு, அமிஞ்சிக்கரை, அம்பா ஸ்கைவாக் மால், லாண்ட்மார்க் புத்தகக் கடையில் இந்தப் புத்தகம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பிதழ் இதோ:

புத்தகத்தின் இரு எழுத்தாளர்களுடன் சினிமா மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொள்ளும் சுவாரசியமான நிகழ்ச்சியாக இது இருக்கும். இதன் எடிட்டட் ஒளிப்பதிவும் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும்.

இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். ஒரு புத்தகம், தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஆவது மிகவும் மகிழ்ச்சியைத் தருவது. அதுவும் சானல் ஒன்று எங்கள் பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இந்த நிகழ்ச்சியைத் தயாரிப்பது, தமிழ்ப் பதிப்புலகத்துக்கு நல்ல செய்தி.

இந்தப் புத்தகத்துக்கு என்று தனியான ஒரு இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம். புத்தகம் தொடர்பான பல செய்திகளும் இங்கே வெளியாகும்.

8 comments:

  1. இது துறை சார்ந்த விசயங்களுக்காக ஒரு முன்னோடி அல்லது ஏற்பாடு என்று எடுத்துக் கொள்ளலாம். இதை சாதனை என்று எப்படி சொல்றீங்கன்னு புரியல. ஏற்கனவே பத்திரிக்கைகளுக்கும், செய்தி தொடர்பு சாதனங்களுக்கும் இந்த திரை சம்மந்தப்பட்ட செய்திகள் தான் முக்கியமாக இருக்கிறது. இதுக்கு மேலே உங்கள் மூலம் அடுத்த பரிசு. குமுதம் ஆனந்தவிகடன் பத்திரிக்கை எப்படி இருந்தது? இப்போது எப்படி ஆகி விட்டது? இதைப் போலவே ஒவ்வொரு பத்திரிக்கையும் அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் கொடுக்கின்றோம் என்று தங்களின் தரத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். நீங்களும் அந்த வரிசையில் வந்து விடாதீங்க. இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் நிகழ்கால இளைஞர்களுக்கு தேவைப்படும் முன்னோடியான நிகழ்ச்சிகளை காட்சி வடிவமாக்குவதில் சற்று கவனம் செலுத்தலாம் என்பது என் கோரிக்கை.

    ReplyDelete
  2. //ஒரு புத்தகம், தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஆவது மிகவும் மகிழ்ச்சியைத் தருவது.//.


    இது எந்த பு்த்தகத்திற்கு என்பதைப் பொறுத்துத்தானே வருத்தமோ மகிழ்ச்சியோ அடைய முடியும். :-)

    ReplyDelete
  3. சு. நீலகண்டன்Wed Aug 03, 02:08:00 PM GMT+5:30

    இந்த புத்தகம் வெளியானப்போது அதை வாங்கிப் படித்தவர்களில் நானும் ஒருவன். கிழக்கின் பல புத்தகங்கல் உண்மையிலேயே தரமாக இருக்கும். உலகப்போர்களைப் பற்றிய புத்தகங்களும் பிடல் காஸ்டிரொ, சே குவெரா போன்றவர்களினது வாழ்க்கை வரலாறுகளும் பிரபாகரன் பற்றின புத்தகமும் பலமுறை திரும்ப திரும்ப படிக்க வைத்தப் புத்தகங்கள். சோம வள்ளியப்பனின் அனைத்து புத்தகங்களினையும் உங்கள் ஷோ ரூமில் வாங்கி படித்துள்ளேன். எந்த புத்தகமும் கொடுத்த பணத்துக்கு “மேலே” திருப்பி கொடுத்த புத்தகங்களே. ஆனால் இந்த “பஞ்சதந்த்ரா”வினைப்பற்றி உண்மையில் எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இதைவிட மட்டமான, கீழ்தரமான, விசயமே இல்லாத ஒரு புத்தகத்தினை நான் வாசித்ததில்லை. கிழக்கு எப்படி இதை பதிப்பித்தது என்று நண்பர்களிடம் வியந்துள்ளேன். ஆனால் இந்த புத்தகத்திற்கு நீங்கள் தொடர்ந்து ஏராளமான விளம்பரங்கள் செய்து வருகின்றீர்கள் என்பது வியப்பளிக்கிறது. தரமான புத்தகங்கள் எந்தக் “கூவலும்” இல்லாமல் விற்பனையாகும். தரமற்ற சரக்கு எத்தனை கூவினாலும் எடுபடாது. இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். கிழக்கின் பெரும்பான்மையான நூல்களினை வாங்கி வாசித்தவன் என்னும் உரிமையில் இதனை சொல்வது என் கடமை என்றே எண்ணுகின்றேன்.

    தங்கள் வாசகன்
    சு. நீலகண்டன்

    ReplyDelete
  4. புல் ஷிட் .... ரஜினி பெயரைப்போட்டால் விக்கும் ..... இந்த மாதிரி எந்தக் கதையிலிருந்தும் நாம மேனேஜ்மென்ட் சரக்குகளை இன்டெர்ப்ரெட் செய்யலாம் ... குமுதமோ, சரோஜாதேவி கிளுகிளுப்புக் கதையிலிருந்தும்கூட பீட்டர் ட்ரக்கர் பேசும் நாலு நிர்வாக ஜார்கன் களை இன்டர்ப்ரெட் செய்யலாம் .... என்ன ரஜினி பெயரைவைத்து இந்த நிர்வாக விற்பன்னர்களின் தந்திர வியாபாரம் ... இதற்கு சேஷசாயி போன்றோர்கள் எப்படி ஆஹா ஓஹோன்னு லைன் குடுக்கறாங்களோ தெரியல ... இதையெல்லாம் பாத்து பொத்திக்கிட்டு வேடிக்க பாக்கமட்டும் நாம கத்துக்கணும் ... இந்த நிகழ்வு முடிஞ்சு விகடன் இதப்பத்தி எழுதும், நிகழ்ச்சியில் இதை எழுதியவர்களுக்கு பாராட்டு மழை கிடைக்கும் ...... இதையெல்லாம் பாத்து பொத்திக்கிட்டு வேடிக்க பாக்கமட்டும் நாம கத்துக்கணும் ...

    ReplyDelete
  5. ரஜினி என்னும் பெயரின் மூலம் பல குப்பைப் படங்கள் கரையேறுகின்றன.

    நீங்களும் ரஜினி என்னும் பெயரின் அதிபலன்களை அடையும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது.

    ReplyDelete
  6. மெர்ச்சண்டைசிங் (Merchandising) என்று பலமுறை சுஜாதா(இம்சை அரசன் 23க்கு கூட) குறிப்பிட்டது இந்த புத்தக விஷயத்தில் நன்றாக நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். புத்தக உள்ளடக்கம் குறித்து மாறுபட்ட கருத்துக்க்ள் இருக்கலாம். நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் எந்த முன் விளம்பரமும் இல்லாமல் வந்து திடீரென பரபரவென்று விற்றதை எழுதி இருந்தீர்கள். பதிப்பக தொழிலில் பல புதிய மார்க்கெட்டிங் உத்திகளை இந்த புத்தகம் மூலம் எட்டியிருப்பதற்கு வாழ்த்துக்கள்.
    -ஜெகன், கோவை

    ReplyDelete
  7. http://punchtantra.nhm.in/ இந்த வெப்சைட்டில் காலரி (Gallery) பகுதியில் உள்ள படங்கள் மிக பெரிய அளவில் இருக்கிறது. பெரிதாகும்போது திரை கொள்ளாமல் இருக்கிறது. சிறிதாக்கச் சொல்லவும்.
    - ஜெகன்

    ReplyDelete
  8. விடுங்கப்பா, என்னமோ பத்ரிய தேச தலைவர் ரேஞ்சுக்கு பாக்குறீங்க. அவரும் யாவாரம் பண்ண வேணாமா!

    ReplyDelete