Thursday, July 14, 2005

தமிழ்மணம் திரட்டியின் எதிர்காலம்

நான் கடந்த சில நாள்களாகத் தமிழ்மணம் திரட்டியின் எதிர்காலம் பற்றி யோசித்து வருகிறேன். இப்பொழுது தமிழ்மணம் மன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் ஆரம்பிக்கும் முன்னதாகவே.

தமிழ்மணம் திரட்டி ஒரு முடிவான தீர்வல்ல. சொல்லப்போனால் தமிழ்மணத்தில் பதிவாகியிருக்கும் பதிவுகள் 3,000-4,000-ஐ எட்டும்போது இப்பொழுதிருக்கும் சேவை முற்றிலுமாக உருக்குலைந்துபோகும். பதிவுகள் 1,000ஐத் தாண்டும்போதே திரட்டியை நாளுக்கு ஒருதடவை படிக்க வருபவர் தடுமாறுவார்.

தானியங்கி முறையில் இன்னமும் சில வசதிகளை ஏற்படுத்துவதன்மூலம் இந்த உருக்குலைதலை தள்ளிப்போடலாம். அவ்வளவே.

நாளடைவில் ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான பதிவுகளைத் திரட்டவேண்டியிருக்கும். அல்லது சில மனிதர்கள் (இயந்திரங்கள் அல்ல) திரட்டிக் கொடுக்கும் செய்தியோடைச் சேவையைப் பயன்படுத்தவேண்டியிருக்கும். உதாரணத்துக்கு India Uncut, DesiPundit போன்ற வலைப்பதிவுகளைக் கவனிக்கவும். இதில் 'தேசி பண்டிட்' Wordpress-ஐப் பயன்படுத்துவதன்மூலம் இன்னமும் சிறப்பான சேவையை (பகுதிவாரியாகப் பிரிப்பது) கொடுப்பதை கவனிக்கலாம்.

மற்றுமொரு விஷயம்... இதைப்போலக் கோர்த்தெடுத்துக் குறிக்கும் பதிவுகளை இப்பொழுது தமிழுக்கென பிரத்யேகமாகச் செய்யமுடியாது. அதற்குக் காரணம் தமிழ் வலைப்பதிவுலகில் நல்லது என்று குறிப்பிடக்கூடிய பதிவுகள் இப்பொழுதைக்கு மிகவும் குறைவு. ஆனால் மொத்தப் பதிவுகள் 2,000ஐத் தாண்டும்போது தானாகவே ஒரு நாளைக்கு பத்து நல்ல பதிவுகளைக் கண்டுபிடிக்க முடியும்.

தமிழ்மணத்தின் மிக முக்கியமான பணி தமிழ் வலைப்பதிவுகளை 100இலிருந்து 1000க்கு எடுத்துச் செல்வதாகத்தான் என்று நான் நினைக்கிறேன்.

ஒருவகையில் தமிழ் வலைப்பதிவுகள் 500, 600களிலேயே தேங்கி இருக்கிறதே என்று வருத்தமாக இருக்கிறது. இப்பொழுதே ஆயிரத்தைத் தாண்டியிருக்கவேண்டும். ஆனால் சமீபகாலங்களில் நடைபெற்றுவரும் சில கூத்துகள், இன்னமும் தமிழில் எழுதுவதில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள், தமிழில் எழுதத் தெரிந்தவர்கள், விரும்புபவர்களுக்கு கணினி கையில் கிடைக்காதது என்று சிலவற்றால் வளர்ச்சி பெருமளவில் தடைபட்டுள்ளது.

8 comments:

  1. நல்லது பத்ரி.. 500,600 பதிவுகள் வரும்போதே 20 அல்லது 25 படித்துப் பின்னூட்டம் இடுவதற்கு நேரம் அதிகம் பிடிக்கின்றது. சரி, அதை விடுங்கள்..தனிமனிதப் பிரச்னை..
    தமிழ்மணம் சிறக்க நிபுணர்களும் வல்லுநர்களும் விரைவில் தீர்வு காண முன்வாருங்கள்..
    எங்களைப் போன்ற தெருத் தொண்டர்களுக்கு நீங்கள் தான் பாதை போட்டுக் கொடுக்க வேண்டும்.
    தெருத்தொண்டன் http://theruththondan.blogspot.com

    ReplyDelete
  2. பத்ரி,

    தமிழ்மணத்துக்கென்று ஒரு தனி வருமான உத்தி காணப்பட வேண்டும்.. தற்போது அது காசி மற்றும் சில ஆர்வலர்களின் உழைப்பில் மட்டுமே நடக்கிறது... தமிழ்மணம் இன்கார்ப்பரேட்டட் என்ற வழியில் சென்றால் தான் அதிகப் பதிவுகளைத் திரட்ட அதன் பலமும் கூடும்.. சென்றடையும் வீச்சும் பெருகும்..

    ReplyDelete
  3. பத்ரி, சமீப காலமாக நான் படித்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப மின்னிதழ்கள் வேறு மாதிரியான ஒரு முன்மாதிரியினை முன்வைக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் செய்தியோடைகளையும், அவற்றின் சாராம்சத்தையும் உள்ளடக்கிய டேகிங் (Tagging) பிரபலமாகிக் கொண்டு வருகிறது. http://del.icio.us இதற்கு சரியான உதாரணம்.

    ஒடைகளை தொகுத்தளிக்கும் முறையினிலேயே மாற்றங்கள் நடக்குமென்று நம்புகிறேன். இப்போதுள்ள பார்மெட் தற்போது ஒரளவிற்கு ஒப்பேற்றுகிறது என்றாலும், இது ரொம்ப நாள் தாங்காது. வேறுவிதமான ஒரு பார்மெட்டினை உள்ளடக்கி பதிவுகளை திரட்டுதலையும், திரட்டியினை மேம்படுத்தலையும் செய்ய வேண்டும்.

    யோசித்துக் கொண்டிருக்கிறேன். சரியான அமைப்பு தோன்றியவுடன் காசிக்கு எழுதி என்னால் என்ன செய்ய இயலுமோ செய்ய விழைகிறேன்.

    ReplyDelete
  4. தமிழ்மணம் திட்டியின் எதிர்காலம்னு படிச்சிட்டு உள்ளே வந்தேன்... ம்... எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க சாரே!

    ReplyDelete
  5. நாராயண்: இந்தச் சுட்டியைப் படிக்கவும். Tagging போதாது. அதற்குமேலும் செல்லவேண்டும்.

    ReplyDelete
  6. நல்ல சுட்டி பத்ரி, இப்போதுதான் படித்து முடித்தேன். பர்ன்ஹேம் சொல்வது கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும், சில வருடங்களில் எல்லோரும் அங்கேதான் செல்வோம் என்று நினைக்கிறேன். ஆனாலும், மீண்டும் "தேடல் பொறி" மையமான செய்தியோடை என்று தேடல் திரும்பி வந்துவிடும் என்று யோசித்தால், வராது என்றுதான் தோன்றுகிறது. P2P போன்ற வேறு சில விஷயங்களின் சாராம்சத்தினை உள்ளடக்கிய வேறொரு வடிவம் வரலாம்.

    சுவாரசியமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. நுட்பம் எத்திசை செல்கிறது என்பதைப் பார்ப்போம்.

    ReplyDelete
  7. Badri,

    thanks for kind words about DesiPundit.

    ReplyDelete
  8. Badri,
    The life cycle of a software is very small. this applies to Thamizmanam also. Now the major functionality of Thamizmanam is to gather blog posts, tracking comments and a rating system for the blog posts. as the number of blogs increases these functionalities may not be as useful as now. tamil blog search in the lines of technorati/findory will be the next logical step. But it needs time and money. who can take up this ?

    ReplyDelete