Saturday, July 16, 2005

குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்

நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பற்றிய விவாதம் நடந்தபோது யாரும் பெரிதாக ஆட்சேபித்ததாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாள்களாக தமிழக வழக்கறிஞர்கள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். பல இடங்களில் வேலை நிறுத்தமும் செய்துவருகிறார்கள்.

தமிழகத்துக்கே உரித்தான திமுக, அதிமுக குழப்பங்களும் இதில் உண்டு.

மேற்படி சட்டத்திருத்தத்தை "தாமதப்படுத்த வேண்டும்" என்று தயாநிதி மாறன் தலைமையில் ஒரு வழக்கறிஞர் குழு சோனியா காந்தியைச் சந்தித்து மனு கொடுத்ததாம். இந்த மசோதாவின் வரைவை சட்ட அமைச்சர் H.R.பாரத்வாஜ் கேபினெட்டில் சமர்ப்பித்தபோது தயாநிதி மாறன் என்ன செய்துகொண்டிருந்தார்? இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது திமுக, தோழமை உறுப்பினர்கள் என்ன செய்தனர்? இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் திமுகவின் சட்ட நிபுணர்கள் ஈடுபடமாட்டார்களா என்ன?

ஜெயலலிதாவும் உடனே, சட்டம் ஒழுங்கு என்பது concurrent list-இல் இருப்பதால், மத்திய அரசின் சில விரும்பத்தகாத திருத்தங்களை அழிக்கும்வண்ணம் தான் ஓர் அவசரச்சட்டம் இயற்றுவேன் என்றும் அதை உடனே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவேன் என்றும் சூளுரைத்தார். மேற்படி சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது அதிமுக உறுப்பினர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

தமிழகம் தவிர பிற மாநிலங்களில் இந்த அளவுக்கு எதிர்ப்பு இருப்பதுபோலத் தெரியவில்லை.

எனக்கு இதுநாள்வரையில் பிரச்னையே புரியாமல் இருந்தது. நேற்றைய துக்ளக் இதழில் வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஓரளவுக்கு பிரச்னையைப் பற்றி விளக்கியுள்ளார். சுருக்கமாக:

* குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

* மேற்படி சட்டத் திருத்தங்களில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. (1) டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஒருவரைக் கைதுசெய்யும்போது காவல்துறையினர் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று வழிகாட்டியிருந்தனர். அது இப்பொழுது சட்டமாக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல்துறையினர் யாரையாவது கைதுசெய்யும்போது அந்த நபரின் உறவினரிடம் என்ன காரணம், கைது செய்யப்படுபவர் எங்கு கொண்டுசெல்லப்படுகிறார் போன்ற விவரங்களை எடுத்துரைக்கவேண்டும். (2) பெண்களை மாலை 6.00 மணியிலிருந்து காலை 6.00 மணியிலான நேரத்தில் கைதுசெய்யமுடியாது. தவிர்க்க முடியாத சூழலில், மாஜிஸ்டிரேட் அனுமதி பெற்றால்தான் பெண்களை இந்த நேரத்தில் கைதுசெய்யமுடியும்.

(ஆனால் போராடும் சில பெண் வழக்கறிஞர்கள் பெண்களுக்கு பெரிய அளவில் ஏதோ அநீதி இழைக்கப்பட்டதுபோலச் சொன்ன சில துண்டுகளை சன் டிவியில் காண்பித்தார்கள். ஒரே குழப்பம்!)

* சட்டத் திருத்தத்தில் கெட்டவை என வழக்கறிஞர்கள் எடுத்துக்காட்டுவது: (1) முன் ஜாமீன் கேட்பவர் நேரடியாக ஆஜர் ஆக வேண்டியதில்லை என்று இருந்தது. ஆனால் மேற்படி சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் முன் ஜாமீன் கேட்பவர் நேரடியாக நீதிமன்றத்துக்கு வரவேண்டும். அப்பொழுது நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டால் காவல்துறையினர் அவரை அங்கேயே அப்பொழுதே கைதுசெய்யமுடியும். மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்குக் கூட அவகாசம் இல்லாமல் கைது நடக்கலாம். அப்படிப் பார்க்கும்போது முன் ஜாமீன் என்ற ஒரு விஷயமே அடிபட்டுப் போகிறது. (2) அடையாள அணிவகுப்பு நடத்துவதில் ஏதோ விரும்பத்தகாத மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன போலத் தெரிகிறது. (3) ஒரு குற்றம் நடந்துள்ளது என்று அரசு அதிகாரிகள் தரும் சாட்சியங்களை அந்த அரசு அதிகாரிகளை குறுக்கு விசாரணை செய்யாமலேயே ஏற்றுக்கொள்ளும் வகையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன போலத் தெரிகிறது. (விஜயன் இதைப்பற்றி முழுமையாக எழுதவில்லை.)

மேற்படி சட்டத் திருத்தங்கள் சரியல்ல, ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று புரிகிறது. ஆனால் இந்தச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது ஏன் மந்தையாடுகள் போல உறுப்பினர்கள் 'ஆம்' என்று சொல்லி ஏற்றுக்கொண்டார்கள்? பாரத்வாஜ் முதல் சிதம்பரம் வரையில், அருண் ஜெயிட்லி முதல் கபில் சிபல் வரை இந்திய நாடாளுமன்றத்தில் இல்லாத வழக்கறிஞர்களா? ஏன் அத்தனை பேரும் இப்படிப்பட்ட கேவலமான திருத்தங்களை அனுமதித்தனர்?

கம்யூனிஸ்டுகள் எதற்கெல்லாமோ சண்டை போடுவார்கள் - மன்மோகன் சிங் ஆக்ஸ்ஃபோர்டில் பேசியது எல்லாம் முக்கியம் அவர்களுக்கு - ஏன் இதைக் கோட்டை விட்டார்கள்? ஏற்கெனவே காவல்துறை கையில் அகப்பட்டுக்கொண்டு பொதுமக்கள் திண்டாடுகின்றனர்.

ஏன் எந்தப் பொதுநல அமைப்பும் இந்தச் சட்டத் திருத்தங்களில் உள்ள குழுப்பங்களை முன்னதாகவே எடுத்துப் பேசவில்லை? ஏன் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா இதைப்பற்றி அப்பொழுதே சண்டைக்கு வரவில்லை?

இதே கேள்வியை பாரத்வாஜ் கேட்கிறார். (The lawyers resorted to strikes. This is not the way they should have behaved. In Parliament none had spoken out against it at the discussion stage.) ஆனால் அவர் கேட்டால் அது படு அபத்தம். இவரது மூளை எங்கே போனதாம்? மந்தையாடுகள் மாதிரி நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதற்கெடுத்தாலும் கொறடாவின் பேச்சைக்கேட்டு வாக்களித்துக்கொண்டிருந்தால் நமது பாடு படு திண்டாட்டம்தான்!

அப்துல் கலாம் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறார். இந்தச் சட்டத்தில் கையெழுத்து போடமாட்டேன் என்று மனசாட்சியோடு செயல்படுவாரா?

பார்க்கலாம்.

[ouch. கவனமாகப் படித்துப் பார்த்ததில், குடியரசுத் தலைவர் இந்த சட்டத் திருத்தத்தில் கையெழுத்து இட்டாயிற்று. ஆனால் இப்பொழுது நடந்துவரும் எதிர்ப்புகளைப் பார்க்கும்போது அரசே இந்த மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் மாற்றுக்கருத்துகள் என்ன என்று சிந்திக்கப்போவதாகவும் சொல்லியுள்ளார்கள்! ஆக சட்டமாக குடியரசுத் தலைவரால் கையெழுத்தான ஒன்றை, இப்படியெல்லாம் தள்ளிவைக்க முடியும் என்ற புதுமை நிகழ்கிறது... நடக்கட்டும்!]

3 comments:

  1. Badri,

    Very informative article. Such articles sustain my interest in reading blogs.

    Thanks

    Rajkumar

    ReplyDelete
  2. நாடாளுமனறத்தில் தாக்கல் செய்யப்படும் எந்த அறிக்கையையும் சம்மந்தப்பட்டவர்கள் கவனமாகப் படித்து, புரிந்துகொண்டு, விவாதிக்காமலேயே நிறைவேற்றுவது தற்காலங்களில் அடிக்கடி கேட்கும் செய்தியாகிவிட்டது; ஆபத்துதான்! தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  3. இந்தியச்சட்டப்படி, குடியரசுத்தலைவர், பாராளுமன்றத்தால் அங்கீகரிகப்பட்ட ஓர் சட்டத்தில் கையெழுத்துப்போட இருமுறைதான் மறுக்கமுடியும், மூன்றாம் முறை கையெழுத்து போட வேண்டும் என்பதுதான் சட்டம் என்று நினைக்கின்றேன், யாராவது விளக்க முடியுமா ?

    ReplyDelete