Monday, July 18, 2005

குழந்தைகள், கேமராக்கள், அண்டங்காக்கைகள்

நேற்று ஆனந்த் ராகவின் முதல் புத்தகம் - க்விங்க் என்னும் சிறுகதைத் தொகுப்பு - வெளியிடப்பட்டது. மாலன் வெளியிட, இரா.முருகன் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். மாலன், முருகன், திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் ஆனந்த் ராகவின் சிறுகதைகளைப் பற்றிப் பேசினர். இணைய நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

-*-

துளிவிஷம் கதையிலிருந்து:

[குழந்தைகள் பாட்டியிடம் மேளாவின் கதையைக் கேட்கிறார்கள்.]

"தேவர்களும் ராட்சஸர்களும் மந்தார மலையைப் பாம்பால் கடைந்து எடுத்த அமிர்தம் அசுரர்கள் கையில் சிக்காம கருடன் எடுத்துகிட்டு போகும்போது கொஞ்சம் சிந்தி இந்த நதி புனிதம் ஆயிடுச்சி. இங்க குளிச்சா நாம செஞ்ச தப்பெல்லாம் கரைஞ்சி போயிடும் முன்னா."

"இதுக்கப்புறம் தப்பு செஞ்சா?"

"இதுக்கப்புறம் தப்பு செய்யாம இருக்கணும் பேட்டா"

"நான் தப்பு எதுவும் பண்ணல. நான் குளிக்க வர்ல படி நானி"

இதைப்பற்றிப் பேசும்போது திருப்பூர் கிருஷ்ணன் மற்றொன்றை நினைவு கூர்ந்தார். திருப்பூர் கிருஷ்ணனின் தந்தை, இரண்டு மாதங்களுக்கு முன்னர், தனது 97 வயதில் காலமானார். கண்டிப்பானவராம். அவரது கடைசி நாள்களில் அவரைப் பார்க்க ஒரு நான்கு வயதுக் குழந்தை வருகிறது. வாயில் விரலைக் கடித்தபடி.

"சீ, வாயிலிருந்து கையை எடு. கடிக்கக் கூடாது!"

குழந்தை பதில் சொல்கிறது:

"அங்... என்னோட விரலைத்தானே கடிச்சேன்? உன் விரலையா கடிச்சேன்?"

நேற்று, நானும் என் மகளும் லாண்ட்மார்க் சென்று ஹாரி பாட்டர் புத்தகங்களை வெறுமே புரட்டிப் பார்த்துவிட்டு (வாங்கவில்லை), இளையராஜாவின் திருவாசகமும் வால்ட் டிஸ்னியின் 'பாம்பி'யும் வாங்கிக்கொண்டு வந்தோம். வந்தவுடன் என் மகள் 'பாம்பி' பார்க்கத் தொடங்கினாள். பாதியில் நான் அவளிடம்

"என்ன, எதாவது புரியுதா?"

"நான் பாக்கறதுக்குத்தான் வாங்கினேன், புரியறதுக்கு இல்ல"

-*-

இரா.முருகன் தாய்லாந்தில் பார்க்க விடுபட்டுப்போன மூன்று விஷயங்களைப் பற்றிப் பேசினார்: வாட் அருண் (சூரியன் கோவில்), உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆரின் இரண்டரையாவது கதாநாயகி (பச்சைக்கிளி, முத்துச்சரம், முல்லைக்கொடி), ஆனந்த் ராகவ்.

"வாட் அருண் போகப் பலதடவை முயற்சி செய்தும் நடக்கவில்லை. நண்பர்கள் வாட் அருண் போவதாக இருந்தால் காலை வேளைகளில் வேண்டாம், பொழுதுசாயும் நேரமாகப் போனால்தான் கேமராவில் படம் எடுக்க நன்றாக இருக்கும் என்றனர். எண்ணூறு ஆண்டுப் பழமை, கலாசாரத்தின் காலடிச்சுவடு, ஏன் இந்த உலகமே - எல்லாமே - நாம் ஏதோ நமது டிஜிட்டல் கேமராவில் பிடிப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டதுபோல மக்கள் நினைக்கின்றனர்."

["I find it astonishing — not to say macabre — that virtually the first thing a lay person would do after escaping injury in an explosion in which dozens of other human beings are killed or maimed is to film or photograph the scene and then relay it to a broadcasting organisation." - John Naughton on Citizen Reporters in The Hindu (Via Guardian)]

-*-

அண்டங்காக்காக் கொண்டக்காரி
அச்சுவெல்லத் தொண்டக்காரி
ஐ.ஆர்.எட்டு பல்லுக்காரி
அயிரை மீனு கண்ணுக்காரி

யை நேற்று பார்த்தேன்.

ஆனால் அண்டங்காக்கைகளின் கொடூர குணத்தை இன்று பார்த்தேன்.

இரண்டு கழுத்து கருத்த அண்டங்காக்கைகள் சேர்ந்து ஒரு கழுத்து சாம்பலான சாதா காக்கையை கைமா பண்ணிக்கொண்டிருந்தன. அவை நான் விரட்டும் தூரத்தில் இல்லை. என் கேமராவின் 'ஸூம்' எவ்வளவு தூரம் போகுமோ, அவ்வளவுக்குக் கொண்டுசென்று படங்களைப் பிடிக்கமட்டும்தான் என்னால் முடிந்தது.



சுற்றி பிற சாம்பல் கழுத்துக் காக்கைகள் கையாலாகாத்தனத்துடன் கதறிக்கொண்டு மட்டுமே இருந்தன. அந்தக் கதறலைச் சற்றும் லட்சியம் செய்யாமல் இரண்டு அண்டங்காக்கைகளும் தமது கொலைவெறியை சிறிதும் குறைக்காமல் கொத்திக் குதறி உயிர் போகுமட்டும் அருகிலேயே இருந்து செத்தவுடன்தான் அங்கிருந்து சென்றன.



செத்த தமது சகோதரனைப் பார்த்துக் கதறமட்டும்தான் முடிகிறது இந்த சாம்பல் கழுத்துக் காக்கையால்.



அழகான பெண்கள் இனியும் தமது கொண்டைக்கு அண்டங்காக்கைகளை உவமையாக்க விரும்பமாட்டார்கள்.

10 comments:

  1. கிழக்குப் பதிப்பகத்தின் புதிய புத்தகத்துக்கு பாராட்டுக்களும், பதிவுக்கு நன்றியும்.

    அவை நான் விரட்டும் தூரத்தில் இல்லை. என் கேமராவின் 'ஸூம்' எவ்வளவு தூரம் போகுமோ, அவ்வளவுக்குக் கொண்டுசென்று படங்களைப் பிடிக்கமட்டும்தான் என்னால் முடிந்தது.
    பராவாயில்லை... பின்னூட்டங்களைப் படிப்பதோடல்லாமல் அடுத்த பதிவுகள் எழுதும்போதும் ஞாபகமும் வைத்திருக்கின்றீர்கள்:)

    இருந்தாலும்... முன்னொருமுறை செய்தியில் - கேரளத்தில் ஒரு குளத்தில் மனம்பிறழ்ந்தவர் ஒருவர் இன்னொருவரை பிடித்து அடித்து, துவைத்ததையும், குளத்தை சுற்றி மக்கள் நின்று வேடிக்கை பார்த்ததையும் - அப்படியே தொலைக்காட்சியில் காட்டியது ஞாபகம் வந்து தொலைக்கிறது...

    ஆனால் அதே வேளையில் - நான் அங்கிருந்திருந்தால் மட்டும் என்ன செய்து கிழித்திருப்பேன் - கூட நின்று வேடிக்கையோ அல்லது பார்க்கமாட்டமால் தூரவோ சென்றிருப்பேன் - இரண்டுமே நிகழ்வை தடுக்க உதவாதுதானே!

    (ஏனோ உங்கள் கண்ணில் மீண்டும், மீண்டும், இதுபோன்ற நிகழ்வுகள் விழுந்து தொலைக்கிறது. போனமுறையை விட ஒரு முன்னேற்றம் கையில் இப்போது கேமரா.

    அடுத்தமுறை ஏதும் இதுபோன்ற நடக்காதிருக்கவும், அல்லது கையில் ஹேண்டிகேம் இல்லாதிருக்கவும் பிரார்த்திக்கிறேன்)

    மீண்டும், பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அப்படியே அச்சு வெல்லத்தை சாப்பிடுவதால், அதில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் நம் உடல்நலத்தை எப்படி பாதிக்கும் என்பதையும், செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் ஐ.ஆர்.8 போன்ற நெல்லு வகைகைளில் நச்சுப் பொருட்கள் நுழைகின்றன என்பதையும், சுனாமி ஏற்பட்ட நீர்நிலைகளிலிருந்து பிடிக்கப்பட்ட அயிரை மீன்களை சாப்பிடுவதால் எவ்வாறான உடற்கோளாறுகள் ஏற்படுகின்றன என்பனவற்றையும் விளக்கியிருக்கலாம். :-))

    ReplyDelete
  3. //நான் பாக்கறதுக்குத்தான் வாங்கினேன், புரியறதுக்கு இல்ல"//
    :))

    ReplyDelete
  4. Not related to this Post but an interesting topic to be analyzed.\

    <<<<<<<<<<>>>>>>>>>>>> From Dinamalar's Teakadai Bench

    http://www.dinamalar.com/2005july18/teakadai.asp

    ""ஒரு வழியா இன்ஜினியரிங், மெடிக்கல் கவுன்சிலிங் தொடங்கப் போறது ஓய்...'' என்று அடுத்த விஷயத்துக்குள் நுழைந்தார் குப்பண்ணா.

    ""திடீருன்னு கல்வித்துறையில நுழைஞ்சிட்டீரே வே...'' என்று கேட்டார் அண்ணாச்சி.

    ""முக்கியமான தகவல், கேளும்... மெடிக்கல் அட்மிஷனுக்கு ரேங்க் பட்டியல் போட்டிருக்கா... முதல் மூணு மாணவர்களுமே 300க்கு 300 மார்க் எடுத்திருக்கா ஓய்... முதல் மாணவருக்கும் 50வது மாணவருக்கும் உள்ள இடைவெளி எவ்வளவு தெரியுமா... ஒண்ணேகால் மார்க் தானாம்... முதல் மாணவி எடுத்திருக்கற மார்க் 300... 50வது மாணவர் எடுத்திருக்கற மார்க் 298.75... முதல் 50 மாணவர்கள்ல நாலே பேர் தான் முற்பட்ட பிரிவு மாணவர்களாம்...'' என்றார் குப்பண்ணா.

    ""ஐம்பது பேர்ல நாலு பேர் தானா... ரொம்ப குறைச்சலா இருக்கே வே... அப்ப மற்ற 46 பேரும் இதர பிரிவு மாணவர்களா...'' என்று கேட்டார் அண்ணாச்சி.

    ""ஆமா ஓய்... முதல் 50 பேர்ல 41 பேர் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களாம்... 3 பேர் மிகவும் பிற்படுத்தப் பட்ட பிரிவாம்... 2 பேர் தாழ்த்தப்பட்ட பிரிவாம்... இவா எல்லாருமே பொதுப் பிரிவிலேயே இடத்தைப் பிடிச்சுடறா... முற்பட்ட பிரிவை துõக்கி சாப்பிட்டுட்டு பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் முன்னேறி வர்றதை தான் இந்த புள்ளிவிவரங்கள் காட்டறது ஓய்...'' என்றார் குப்பண்ணா.

    ""அதுக்குத் தான் பொருளாதார அடிப்படையில இடஒதுக்கீடு கொண்டு வரணும் வே... அதுசரி... இந்த நிர்வாக ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு... இந்த கூத்தெல்லாம் முடிஞ்சிருச்சா வே...'' என்று கேட்டார் அண்ணாச்சி.

    ""இனிமேல் தான் ஆரம்பிக்கப் போறதாம்... பொறியியல் கல்லுõரிகள்ல நிர்வாக ஒதுக்கீடுக்கான நுழைவுத்தேர்வு விவகாரம் கோர்ட்டுக்கு போகப் போறதா பேசிக்கிறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

    <<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  5. //"என்ன, எதாவது புரியுதா?"

    "நான் பாக்கறதுக்குத்தான் வாங்கினேன், புரியறதுக்கு இல்ல"//

    இதைத்தான் நெத்தியடினு சொல்லுவாங்க :-)

    ReplyDelete
  6. "என்ன, எதாவது புரியுதா?"

    "நான் பாக்கறதுக்குத்தான் வாங்கினேன், புரியறதுக்கு இல்ல"

    it applies to books as well i guess :)

    ReplyDelete
  7. //நான் பாக்கறதுக்குத்தான் வாங்கினேன், புரியறதுக்கு இல்ல"//

    குழந்தைளுக்கேயான பிரத்யேக உலகில் நாம் நுழைய முற்படக்கூடாது / முடியாது என்பதற்கு இந்த ஒரு உரையாடல் நல்ல உதாரணம்.

    ReplyDelete
  8. நீங்கள் காக்கையின் சண்டையை
    தடுத்துயிருக்கலாம்
    அண்டங்காக்கைகளும் தமது கொலைவெறியை சிறிதும் குறைக்காமல் கொத்திக் குதறி உயிர் போகுமட்டும் அருகிலேயே இருந்து செத்தவுடன்தான் அங்கிருந்து சென்றன.
    "சென்றது" அண்டங்காக்கை மட்டும் அல்ல

    ReplyDelete
  9. கேமரா ஜூம் செல்லும் தூரத்திற்கு நீர் எறியும் கல் போகாது என்று நீங்கள் நம்பினீர்களா?! முயன்று இருக்கலாமே..

    ReplyDelete
  10. அய்யா, அண்டங்காக்கைகள் ஆணினம். அந்த சாம்பல் காக்கைகள் பெண்ணினம். இரண்டு ரௌடி ஆண் காக்கைகள் ஒரு அப்பாவி பெண் காக்கையை கற்பழித்து(பார்க்க படம் 1), கொலையும் செய்து விட்டுப் போய் இருக்கின்றன. அதனை நீர் பார்த்து, படமெடுத்துக் கொண்டு இருக்கின்றீர்! என்ன சொல்வது?

    ReplyDelete