Tuesday, May 25, 2010

சிங்கப்பூர் டயரி - 5

நீண்ட நாள்களுக்குப்பின் எழுதுகிறேன். இடையில் எழுத அவ்வளவாக நேரம் கிடைக்கவில்லை.

செவ்வாய்க்கிழமை அன்று பெரும்பாலும் ஓய்வெடுத்தேன். அன்று மாலை சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நான் பேசினேன். சுமார் 40-45 பேர் வந்திருந்தனர். பேச்சு ஆரம்பிக்கும் நேரத்தில் 15 பேர் இருந்திருப்பார்கள்.

தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை பற்றியும் எதிர்காலம் பற்றியும் பேசினேன். அதைப் பற்றிப் பேச எனக்கு என்ன தகுதி? நான் எழுத்தாளரோ, விமரிசகரோ கிடையாது. ஆனால் ஏதோ சில ஆண்டுகளாக பதிப்புத் துறையில் இருப்பதை வைத்துக்கொண்டு என் கருத்துகளைப் பேசினேன். இந்தப் பேச்சுக்காக நான் தயார் செய்திருந்த சிலவற்றை ஒரு முழுக் கட்டுரையாக என் வலைப்பதிவில் சேர்க்கிறேன்.

இறுதியாக நான் தொகுத்துச் சொன்னது இவைதான்:

1. வணிகக் காரணங்களால் தமிழ் இலக்கியம் (கதை, நாடகம், கவிதை) பெரும்பான்மை மக்களைச் சென்று சேர்வதில்லை. எனவே வணிகம் பற்றிக் கவலைப்படாத இணையம் மூலமாகவே அடுத்த பத்தாண்டுகளில் பெரும்பான்மை இலக்கியம் முதலில் அரங்கேறும். இன்று இணையத்தைப் புழங்குபவர்கள் குறைவாக இருந்தாலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகப்போகிறது. எனவே இலக்கியம் படைக்க ஆசைப்படுபவர்கள் இணையத்தை உடனடியாக நாடுவது நலம்.

2. படைப்பிலக்கியத் தரத்தை அதிகரிக்க மொழிபெயர்ப்புகள்தான் உதவப்போகின்றன. தமிழ் வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் உலக இலக்கியத்தின் தரம் எப்படி உள்ளது என்பதை எடுத்துக்காட்ட அன்னிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் நிறைய நடக்கவேண்டும். அதேபோல தமிழ் எழுத்தாளர்கள் எவ்வளவு தரமான படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்பதை உலகம் அறியச் செய்ய தரமான ஆங்கில மொழிபெயர்ப்புகள் மிக மிக அவசியம்.

3. தமிழ் எழுத்தாளர்கள் அவசரமாகவும் அவசியமாகவும் சிறுவர் இலக்கியத் துறையில் இறங்கவேண்டும். பள்ளிகளில் தமிழ் பயிற்றுவித்தல் மிக மோசமாக இருக்கும் இன்றைய நிலையில் நாளைய சமுதாயம் தமிழைத் தேடிப் படிக்கவேண்டிய காரணங்களை இன்றே உருவாக்கவேண்டும். எனவே இங்கும் வணிக சாத்தியங்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலையின்றி தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் உடனடியாக சிறுவர்களை, குழந்தைகளை தம் எழுத்துத்திறன் கொண்டு ஈர்க்கவேண்டும். பாடல்களாக, அற்புதக் கதைகளாக, சொல் சித்திரங்களாக அடுத்த சில தலைமுறைகளை வசீகரிக்காவிட்டால் நாளைக்கு இந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் படிக்க ஆளே இருக்காது.

உரையாடலுடன் அந்த நாள் முடிவுற்றது.

***

சிங்கப்பூரில் சீன உணவகங்கள் இரவு 9.30-க்குள் மூடிவிடுகிறார்கள். மீண்டும் கோகுல் சென்றுதான் சாப்பிட்டோம். அங்கும் எங்களை ஓட ஓட விரட்டிவிட்டார்கள். சென்னையில் இரவு 12 வரை ஏதேனும் உணவுக்கடை திறந்திருக்கும். ஆனால் சிங்கப்பூரில் அதற்கு வாய்ப்பே இல்லை.

சிங்கப்பூரர்கள் காலை சீக்கிரமே அலுவலகம் வந்துவிடுகிறார்கள். நாள் முழுக்க, கடுமையாக உழைக்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்கூட காலை 6.30 மணிக்கே கிளம்பிவிடவேண்டும்! சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் சூரிய உதயமே 7 மணி அல்லது அதற்குப் பிறகுதான்! எனவே இரவில் பெரும்பாலும் சீக்கிரம் கடை அடைத்துவிடுகிறார்கள்.

அடுத்த நாள் (புதன்) சில நண்பர்களைச் சந்திக்கவும், தமிழ்ப் புத்தகங்களை விற்பனை செய்பவர்களைச் சந்தித்துப் பேசவும் என்று ஒதுக்கிக்கொண்டேன்.

5 comments:

  1. என்னவோ புதுசா சொல்ற மாதிரி. சிங்கப்பூர் பற்றி இவ்வளவு தூரம் எழுதியிருக்கீங்களே
    பலருக்குத் தெரிந்த விஷயம் தான். அடிக்கடி சிங்கப்பூர் சென்று வரும் என்னைப் போன்ற பலருக்கும் இவை தெரியும்
    எழுத வேறு விஷயம் இல்லையா பத்ரி?

    அங்கே போய் இந்தியாவைப் பற்றி மட்டமா பேசி அந்த நாட்டை உயர்வாகப் பேசினீர்களாமே? அப்படியா!

    ReplyDelete
  2. Badri,

    Singapore is known for its round-the-clock food centers. They are called hawker centers. You can get all kinds of food. Hundreds of them are located all over the island. There are few 24 hour restaurants in Little India too.

    ReplyDelete
  3. நான் நினைத்ததை அப்படியே பேசியிருக்கிறீர்கள்,மிகவும் அருமை பத்ரி,
    நேரில் சந்திப்போம் ,நிறைய பேசனும்

    ReplyDelete
  4. Singapore is known for its round-the-clock food centers. They are called hawker centers. You can get all kinds of food. Hundreds of them are located all over the island. There are few 24 hour restaurants in Little India too. Annapoorna vegetatarian restaurant is open 24 hrs .this is opposite to Mustafa centre!! Your friend has taken you to wrong places!!!

    ReplyDelete
  5. HI Badri,

    It is nice to hear that you have visited Sg. As you mentioned in your post, we do not purchase the books at Singapore because of the price. So, as and when we visit Chennai, we purchase good books and carry it along with us.

    One important thing. In Vasantham Central (TV)you have been named as a "Writer Mr. Badri". So, please do not restrict yourselves only to publication and publisher... write something good.

    Regards
    Ranga.

    ReplyDelete