Monday, May 03, 2010

மாமல்லையின் சிற்பத் தொகுதிகள்

மாமல்லபுரத்தில் மண்டபங்கள், ரதங்கள், கட்டுமானக் கோயில்கள் ஆகியவற்றுடன் மிக எளிதில் புரிந்துகொண்டு ரசிக்கக்கூடிய சிற்பத் தொகுதிகளும் உள்ளன. வணங்கக்கூடிய தெய்வங்கள், தங்கள் பரிவாரங்களுடன் இருக்கும் சிற்பத் தொகுதிகள் ஒருபக்கம் என்றால், புராண, இதிகாசங்களிலிருந்து ஒரு காட்சியைப் பிரதிபலிக்கும் சிற்பத் தொகுதிகள் மற்றொரு பக்கம்.

இங்கே நாம் இந்த புராண, இதிகாச சிற்பத் தொகுப்புகளை மட்டும் பார்ப்போம். இவற்றை சிறு குழந்தைகளுக்குக்கூட எளிதில் விளக்கிச் சொல்லிவிடமுடியும். கதை அல்லவா? இப்படித்தான் நான் என் மகளுக்கு மாமல்லபுரத்தை அறிமுகம் செய்தேன்.

மண்டபங்களுக்கு உள்ளாக நான்கு அற்புதமான சிற்பத் தொகுதிகள் உள்ளன: வராகத் தொகுதி, திரிவிக்கிரமத் தொகுதி, மஹிஷாசுரமர்த்தினி தொகுதி, அனந்தசயனத் தொகுதி. ஒரு மாபெரும் தொகுதி - மா தவத் தொகுதி (இமயமலைக் காட்சி) - அப்படியே ஒரு சிறு குன்றின்மீது செதுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, கோவர்த்தனத் தொகுதி, இப்படித்தான் ஒரு மலை மீது செதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் நாயக்கர் காலத்தில் இதன்மீது ஒரு மண்டபம் (கிருஷ்ண மண்டபம்) எழுப்பப்பட்டு, கோவர்த்தனத் தொகுதியின் அழகு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர, சாலுவக்குப்பம் அதிரணசண்ட மண்டபத்தின் முன் இருக்கும் சிறு கல்லில் மற்றொரு மஹிஷாசுரமர்த்தினி தொகுதி காணப்படுகிறது. இமயமலைக் காட்சியின் மற்றொரு வடிவம் - மிகவும் சுமாரான தரத்தில் - மற்றொரு குன்றின்மீது காணப்படுகிறது. திரிமூர்த்தி மண்டபத்தின் பின்புறம் யானைகள், குரங்கு, மயில் கொண்ட ஒரு தொகுதி காணக்கிடைக்கிறது.

இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

(தொடரும்)

1 comment:

  1. குழந்தைகளுக்கு சொல்லுவதற்கு ஏற்றாற்போல் எழுதினால் குழந்தைகளுக்கு சொல்ல நாங்களும் பயன்படுத்திக் கொள்ள முடியுமே! நன்றி!

    ReplyDelete