Wednesday, May 26, 2010

சிங்கப்பூர் டயரி - 6

சிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் 52 லட்சம். இதில் சீனர்கள் 75%, மலாய் இனத்தவர் 13.5%, இந்தியர்கள் 9%, மிச்சம் இதர. இந்தியர்களில் சரி பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். சிங்கப்பூரின் தேசிய மொழிகள் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ். இவ்வாறாக மிகச்சிறியதோர் மொழிக்குழுவின் மொழிக்கு உயர்ந்த தகுதியை சிங்கப்பூர் வழங்கியிருந்தாலும் அங்கே உருப்படியான தமிழ்ப் புத்தகக் கடை ஒன்றும் கிடையாது.

சிங்கப்பூர் தமிழ்ப் புத்தகச் சந்தையை மூன்றாகப் பிரிக்கலாம். (1) சிங்கப்பூர் நூலகம் (2) தமிழ்ப் பள்ளிகள், மாணவர்கள் (3) தமிழ் படிக்கும் சிங்கப்பூர்வாசிகள்.

சிங்கப்பூர் நூலகத்துக்குத் தமிழ்ப் புத்தகங்களை வழங்க என்று ஐந்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவர்களைத் தவிர வேறு யாரும் நேரடியாக சிங்கப்பூர் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கமுடியாது.

தமிழ்நாட்டில் வெளியாகும் தமிழ்ப் புத்தகங்களில் பெரும்பாலானவை சிங்கப்பூர் நூலகத்தில் கிடைக்கின்றன. தமிழகத்தில் உள்ள கிளை நூலகங்களில் இந்த நிலை கிடையாது. கன்னிமரா நூலகத்திலும்கூட இந்த நிலை கிடையாது. உண்மையில் இந்தியாவில் பதிப்பிக்கப்படும் அனைத்து நூல்களிலும் ஒரு பிரதி சென்னை கன்னிமரா நூலகத்துக்கும், மும்பை, கொல்கத்தா, தில்லி நூலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும். ஆனால் பெரும்பாலான பதிப்பாளர்கள் இதனைச் செய்வதில்லை. நூலக ஆணைக்கு விண்ணப்பிக்கும் புத்தகங்களை மட்டும் இந்த நூலகங்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

தமிழ்நாட்டு நூலக ஆணையம் ஆண்டுக்கு ஒருமுறை புத்தகங்களைக் கோரிப் பெறுகிறது. அதுவும் எப்போதும் இரண்டு ஆண்டுகள் பின்தங்கியே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் நூலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையாளர்கள் ஐவரும் மாதத்துக்கு இருமுறை புதிய புத்தகங்களை விண்ணப்பித்து, மாதிரி பிரதியும் கொடுக்கிறார்கள். அவற்றில் பல தேர்வு செய்யப்பட்டு, சிங்கப்பூர் நூலகத்தால் வாங்கப்படுகின்றன.

கதைகள் என்றால் அதிகப் பிரதிகள் வாங்கப்படுகின்றன. கதை அல்லாதவை குறைவாகவே வாங்கப்படுகின்றன. மதம் சார்ந்த புத்தகங்கள் அவ்வளவாக வாங்கப்படுவதில்லை.

அடுத்தது பள்ளிக்கூடச் சந்தை. மேலே குறிப்பிட்ட ஐந்து புத்தக வியாபாரிகள்தான் பள்ளிக்கூடங்களுக்கும் புத்தகங்களை வழங்க முற்படுகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் சிறுவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள், மலேசியாவில் அச்சாகும் தமிழ்ப் புத்தகங்கள், இலங்கைப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தருவித்து பள்ளிக்கூட நூலகங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பல நேரங்களில் பள்ளிக்கூடங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துகிறார்கள்.

கடைசியாக பொதுமக்களுக்கு விற்பது. மொத்தம் உள்ள ஐந்து முக்கிய புத்தக வியாபாரிகளின் இருவர் (அபிராமி பப்ளிகேஷன், விஸ்வநாதன் பப்ளிகேஷன்) வீட்டிலிருந்து வியாபாரம் செய்பவர்கள். இவர்கள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தையும் பள்ளிக்கூடங்களையும் மட்டுமே நம்பி இருக்கிறார்கள். GGS பப்ளிகேஷன் என்பவர்களது ஷோரூம் செராங்கூன் சாலையில் லிட்டில் இந்தியா ஆர்கேடில் உள்ளது. ராஜி பப்ளிகேஷன் ஷோரூம் செராங்கூன் பிளாஸா அருகிலேயே டல்ஹவுஸி சந்தில் உள்ளது. குமரேஷ் எண்டெர்பிரைசஸ் ஒரு ஷோரூமாக அமைக்கவில்லை. செராங்கூன் சாலையில் செராங்கூன் பிளாஸாவில் அலுவலகமாக உள்ளது.

ஆனால் முக்கியமான பிரச்னை அவர்களது விற்பனை விலையில்தான். இந்தியாவில் ரூ. 100 விற்கும் ஒரு புத்தகத்தை சிங்கப்பூர் தேசிய நூலகம் சிங்கை $22 என்ற விலை (மைனஸ் டிஸ்கவுண்ட்) என்று ஏற்றுக்கொள்கிறதாம். யார் எவ்வளவு டிஸ்கவுண்ட் கொடுப்பார்கள் என்பது அந்தந்த விற்பனையாளரைப் பொருத்தது. ஆனால் விற்பனையாளர்களுக்கு ரூ. 100 என்றால் $22 என்ற மைண்ட்செட் வந்துவிடுகிறது. GGS-ல் நான் பார்த்தபோது, ரூ. 100 புத்தகத்துக்கு $25 என்று லேபல் ஒட்டியிருந்தார்கள். அதாவது எட்டு மடங்கு விலை! இந்த விலையில் யாருமே இந்தப் புத்தகங்களை வாங்கமாட்டார்கள். மற்ற இருவரில் ராஜி $15 என்ற விலைக்கு விற்பதாகவும் குமரேஷ் $10 என்ற விலைக்கு விற்பதாகவும் சொன்னார்கள். முஸ்தபாவிலும் தமிழ்ப் புத்தகங்கள் விற்கப்படுவதாகவும், ரூ. 100 விலை கொண்ட புத்தகம் சுமார் $12 என்ற கணக்கில் கிடைக்கக்கூடும் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது.

ரூ. 100 என்றால் இப்போதைக்கு சுமார் $3. இந்தப் புத்தகம் ஏதோ ஒரு வகையில் $5 என்ற விலைக்கு மிகாமல் கிடைத்தால் சிங்கப்பூர் தமிழர்கள் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் பேசாமல் சென்னை போகும்போது வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவார்கள். அப்படிச் செய்யவும் செய்கிறார்கள். ஆனால், புத்தகங்கள் உடனுக்குடன் வாங்கிப் படிக்கப்படவேண்டும். ஆறப்போட்டால் பிறகு படிக்கத் தோன்றாது. ஒரேயடியாக 100 புத்தகங்களை வாங்கிச் சென்றால் படிக்க நேரம் இருக்காது. பணம் வீணாவதுபோலத் தோன்றும். பெரும் மூட்டையை இந்தியாவிலிருந்து சுமந்து வருவதுபோலத் தோன்றும். ஒருவித அலுப்புதான் ஏற்படும். புத்தகம் வாசகர் கைக்குப் போய்ச் சேரவேண்டும். அவரது வீட்டுக்கு அருகில் கிடைக்கவேண்டும். விலை ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டும்.

இந்தச் சிக்கலுக்கு ஏதோ ஒரு தீர்வு நிச்சயம் சாத்தியம். தமிழ்ப் பதிப்பாளர்கள் இது தொடர்பாக யோசிக்கவேண்டும்.

4 comments:

  1. Sir,
    idharku kaaranam, virpanayaiyaalargalin kollai laaba nokkaa alladhu, avargaladhu nyaamaana selaveenangalaa( expenses incurred to take books from india and else where to singapore).
    mudhalaavadhu enraal, prachinaikku theervu elidhaayirrae?

    if this is an embarassing question to answer, request you to pease reply to me individually at mail.to.venkat@gmail.com.
    PS: I am just a resident of madras,and an admirer of Yours. I am not part of any of the publishers in singapore :)

    ReplyDelete
  2. Yes! The prices are too different.. i used to check tamil books in different shops but once i see the price i always think when i come to india i can buy. Atleast 10 Sing dollar for Rs100 book is Ok but 18 or 20 sing dollar are too much..

    ReplyDelete
  3. There is no need to buy a book in Singapore. Most of the books which you want are available in library once it gets released @ Chennai. 3 weeks are allowed to keep the book without fine. Even if you are unable to complete the book, you can read it by paying fine which is far less than book price which you mentioned.(10C/day)If you really like the book to be in your home library, we can buy it when travelling to India.

    ReplyDelete
  4. அன்புள்ள பத்ரி,
    நீங்கள் சிங்கப்பூர் வரும்போது உங்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அலுவல் காரணமாக சந்திக்க இயலவில்லை.நீங்கள் கூறுவது உண்மைதான்.புத்தங்களை இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் கொண்டுவருவது சவாலான விஷயந்தான்.நான் சென்னையிலிருந்து வரும் வேளையில் 30கிலோ புத்தகங்கள் கொண்டுவந்தேன்.பல புத்தகங்கள் விற்கின்றன சில விற்பதில்லை.குறைந்த அளவு லாபம் மட்டுமே கிடைக்கிறது.நான் சிங்கப்பூரில் புத்தக வியாபாரம் செய்ய முயன்றுள்ளேன்.100 ரூபாய் புத்தகத்தை $5க்கு கொடுத்தேன்.ஆனால் இங்கு கடை அமைத்து வியாபாரம் செய்ய கடை வாடகை மின்சாரம் என நிறைய செலவு செய்ய வேணியுள்ளது.மேலும் இங்கு தமிழ் புத்தகம் வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள்.சிங்கப்பூரர்கள் நாடுவது பெரும்பாலும் அரசியல் மற்றும் ஆன்மீகப் புத்தகங்கள் மட்டுமே.வாசிப்பவர்கள் குறைவாக இருப்பதாலும் பரவலாக இருப்பதாலும் ஓரிடத்தில் வியாபாரம் செய்தால் அவர்களை அடைவது கடினம்.தேக்காவில் உள்ள கடைகளில் புத்தகங்கள் மட்டும் விற்பதில்லை.அவர்கள் மளிகை,தொலைபேசி அட்டை இவற்றுடன் சேர்த்தே விற்கிறார்கள்.தனியாக விற்க இயலாது.எனக்குத் தெரிந்த சீன நண்பர் ஒருவர் சீனப் புத்தகங்களுக்காக ஒரு கடை ஒன்றை ஆரம்பித்தார்.சில மாதங்களிலேயே அந்தக்கடை வாடகையைக் கூடக் கொடுக்க முடியாமல் மூடி விட்டு தற்போது வேறு வியாபாரம் செய்கிறார்.மலாய்ப் புத்தகங்களின் நிலை தமிழை விட மோசம்.இங்குள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களையே விரும்புகின்றனர்.அவற்றையும் நூலகத்தில் படித்து விடுகின்றனர்.ஈரண்டுகளுக்கொருமுறை தேசிய நூலகம் பழைய புத்தகங்களை பொதுமக்களிடம் விற்பனை செய்கிறது.தமிழ் புத்தகங்களின் விலை $1 ஆங்கிலம் $2.நான் தேக்காவில் உள்ள கடைகளில் எனது புத்தகங்களை கொடுக்க அவர்களை அணுகும்போது அவர்கள் என்னை திருக்குறளை மனப்பாடம் செய்யச் சொல்லும் வாத்தியாரிடம் காட்டும் விரோதத்தை காட்டுகின்றனர்.(சில கடைக்காரர்களை பார்க்கும் போது சிங்கப்பூரில் பிச்சைக்காரர்கள் இல்லாதது குறித்து சந்தோஷம் வருகிறது.)

    ReplyDelete