Thursday, February 02, 2012

புதுக்கோட்டை பயணம் - 5

எம்.எல்.ஏ தந்த விருந்து

திருமெய்யம் கோட்டையைப் பார்த்தது போதும் என்று உடனடியாகக் கிளம்பி ஆவுடையார்கோவில் என்னும் பெருந்துறைக்குச் செல்லப் பேருந்தில் ஏறினோம். காரணம், அங்கே அறந்தாங்கி எம்.எல்.ஏ ராஜநாயகம் (அஇஅதிமுக) அங்கே எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் என்பதுதான்.

எங்கள் வருகையை ஒட்டி, எங்கள் குழுவின் நண்பரான சதாசிவம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு முக்கிய நபர்களிடமும் எங்கள் குழுவைப் பற்றியும் நாங்கள் எதற்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகிறோம் என்பதைப் பற்றியும் எடுத்துச் சொல்லியிருந்தார். ஐந்து எம்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி, மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை நகரமன்றத் தலைவர் என அனைவருக்குமே எங்களது வருகை தெரிவிக்கப்பட்டிருந்தது. அறந்தாங்கியில்தான் ஆவுடையார்கோவில் வருகிறது. எனவே ராஜநாயகம் எங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பினார். கூடவே மதிய உணவு தம்முடையது என்று சொல்லிவிட்டார்.

சுமார் 2.00 மணிக்கு பசியுடன் ஆவுடையார்கோவிலை அடைந்தோம். நேராக இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் இருக்கும் வீட்டுக்கு வந்தோம். அது பழைய கால வீடு. முற்றம், தாழ்வாரம், கூடம், வாசல் திண்ணை அமைப்பைக் கொண்டது. இதுபோன்ற அச்சு அசலான வீட்டில்தான் நான் நாகப்பட்டினத்தில் வசித்தேன். இந்த வீடு திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானதா இல்லை இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானதா என்று எனக்குத் தெரியாது. கோவில் திருவாவடுதுறை ஆதீனத்துடையது என்று நினைக்கிறேன்.

அந்த வீட்டில் எம்.எல்.ஏ ராஜநாயகமும் அவருடைய கட்சித் தொண்டர்களும் சுற்றுப்புற பஞ்சாயத்துகளின் தலைவர்களும் எங்களை வரவேற்றனர். எங்கள் குழுவினர் (சுமார் 40 பேர்) ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டதும், உணவு உண்ணச் சென்றோம். பிரமாதமான உணவு என்று சொல்லி அதில் போடப்பட்ட பதார்த்தங்களை எடுத்துக்கூறி உங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்ப மாட்டேன். உணவிட்டவருக்கு நன்றி.

அந்த வீட்டின் பின்புறம் ஒரு மாபெரும் குளம் இருக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி மன்னரால் வெட்டப்பட்டது. ‘ட’ வடிவில் இருக்கும். திருவாவடுதுறை 11-வது ஆதீனத்தின் ஜீவசமாதி அதுதான் என்று அருகில் உள்ள ஓர் இடத்தைக் காட்டினார் அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவர். அப்படியே கடகடவென்று கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

கடுமையான வறட்சி. பஞ்சம். மழையே பல ஆண்டுகளாக இல்லை. இதனால் சேதுபதி மன்னர் திருவாவடுதுறை ஆதீனத்தை அந்தப் பகுதிக்கு வருமாறு வருந்தி அழைத்தாராம். கால் நடையாகவே அங்கே வந்த ஆதீனம், சில மந்திரங்களைக் கூறி, பதிகங்களைப் பாட, மழை கொட்டியதாம். உடனே கோவிலுக்கு எதிராக உள்ள அந்தப் பகுதி முழுவதையுமே ஆதீனத்துக்குக் கொடுத்துவிட்டாராம் மன்னர். பின்னர்தான் அந்தக் குளமும் வெட்டப்பட்டிருக்கிறது.

மாணிக்கவாசகரின் கதையை அந்தப் பெரியவர் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். திருவாதவூரார் பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்து, சிவனின் திருவிளையாடலுக்கு ஆட்படுத்தப்பட்டு, நரி பரியாகி, பின் மீண்டும் நரியாகி, வைகை கரை உடைந்து, பாட்டி கொடுத்த பிட்டுக்காக ஈசன் மண் சுமந்து, பிரம்படி பட்டு, அனைவருக்கும் இறுதியில் மோட்சத்தைக் கொடுத்த கதையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்தானே? (இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பின்னூட்டத்தில் விரிவாகத் தரத்தானே போகிறார்!) ஈசனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட மாணிக்கவாசக நாயனார், ஊரெல்லாம் சுற்றி, சிதம்பரம் சென்று, பதிகங்கள் பல பாடி, அவற்றை இறைவனே அங்கு வந்து எழுதிக் கொடுத்ததாகச் சொல்வர். இறுதியில் இறைவனோடு மாணிக்கவாசகர் ஒன்றறக் கலந்த இடம்தான் ஆவுடையார்கோவில் என்னும் திருப்பெருந்துறை.

இங்கே பிரம்மாண்டமான, மிக மிக அற்புதமான ஒரு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

மரமா இல்லை கல்லா?

கோவிலுக்குள் நுழையும்போது சிவபுராணம் பாடிக்கொண்டே நுழையவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. (பாருங்கள், ஒரு கோர நாத்திக வீர வைணவனுக்கு நேர்ந்த கதியை!) எங்கள் குழுவில் வந்திருந்த பேராசிரியர் ஜம்புநாதன் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். புதுக்கோட்டை அரசினர் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றபிறகு, இப்போது திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரி முதல்வராக இருக்கிறார். புதுக்கோட்டை முழுவதும் சைக்கிளிலேயே சுற்றிச் சுற்றி வந்தவர். பல கல்வெட்டுகள், எங்கோ தரையில் கிடந்த சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள் எனப் பலவற்றை முதன்முதலாகக் கண்டுபிடித்தவர். அதையெல்லாம்விட, ஒரு ஓதுவார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவர் ‘நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என்று ஆரம்பிக்க, அவருக்கு எங்கேனும் தடங்கல் ஏற்பட்டால் அடி எடுத்துக் கொடுக்க கையில் புத்தகத்துடன் நான். ஓரே ஒரு இடம் தவிர வேறெங்கும் தடங்கல் இல்லை.

நாங்கள் சுமார் 40 பேர், கூட எம்.எல்.ஏ, அவருடன் வந்தவர்கள் 10-15 பேர் என்று கோவிலுக்குள் நுழைந்தோம். ஏற்கெனவே சொல்லிவைத்திருந்ததால் கோவிலில் இருக்கும் ஒரு வழிகாட்டி கூடச் சேர்ந்துகொண்டார். ஒரு பக்கம் பேராசிரியர் முத்தழகன், ஒருபக்கம் வழிகாட்டி, ஒருபக்கம் பேரா. சிவராமகிருஷ்ணன் (கவின்கலைக் கல்லூரி), பேரா. சுவாமிநாதன் என்று பலரும் வழிநடத்த நாங்கள் கோவிலைக் காணத் தொடங்கினோம்.

இந்தக் கோவிலைக் காண மூன்று மணி நேரம் போதாது. இறுதியில் களைத்துச் சரிந்தபோது மேலும் பார்க்கப் பல இடங்கள் இருந்தன என்பதுதான் உண்மை.

பெரும்பாலான முன்மண்டபங்கள் எல்லாம் நாயக்கர் காலத்தவை. சிற்பிகள் விளையாடியிருக்கிறார்கள். மண்டபக் கூரைச் சரிவுக்குப் பெயர்தான் ‘கொடுங்கை’ என்பது. சிற்பிகளைக் கோவில் கட்டப் பணிக்கும்போது, ‘ஆவுடையார்கோவில் கொடுங்கையைத் தவிர’ வேறு எதைக் கேட்டாலும் செய்து தருகிறோம் என்றுதான் அதற்குப்பின் ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்களாம். கோவில் மண்டபங்கள் எங்கும் இந்தக் கொடுங்கைகளைக் காணலாம். உள்ளதிலேயே கடினமான கிரானைட் கல்லில் மரத்தில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்திருந்தார்கள். பிரிகயிறு, இரும்புப்பூண், திருகு, வளைவு, கயிறு முடிச்சு என்று இதையெல்லாம் எப்படி கல்லில் செய்தார்கள்? அதுவும் சும்மா ஓரிடத்தில் இரண்டு இடங்களில் என்றில்லை. திரும்பிய திசையெல்லாம் வளைந்து வளைந்து, நெளிந்து நெளிந்து போய்க்கொண்டே இருக்கும் நுணுக்கமான வேலைப்பாடு.

நான்கு குதிரை வீரர்கள். ஒருவர் கிரேக்க ஆடையில், ஒருவர் முகலாய ஆடையில், ஒருவர் மராத்திய ஆடையில், ஒருவர் தமிழக ஆடையுடன்.

வாசலில் மாபெரும் இரு வீரபத்திரர்கள். ரண வீரபத்திரன், அகோர வீரபத்திரன்.

சிவன், தன் மனைவி சதியின் தந்தையான தட்சனின் யாகத்தை அழிப்பதற்காக உருவாக்கிய வடிவம்தான் வீரபத்திரன். வீரபத்திரன் சிலைக்குப் பத்து கைகள் இருக்கும். தட்சனை ஒரு பக்கம் சூலத்தால் குத்திக் கொல்லும் சிற்பம். மறுபக்கம் வாளால் அறுக்க முற்படும் சிற்பம். (புராணத்தில் எப்படிக் கொல்கிறார் என்று யாருக்காவது தெரியுமா?) (இம்மார்ட்டல்ஸ் ஆஃப் மெலூஹா என்ற 21-ம் நூற்றாண்டு புராணக் கதையைப் படிப்பவர்கள் இந்தப் பாத்திரங்களை வேறு மாதிரியாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்!)

ஆவுடையார்கோவில் வழக்கங்கள் பிற சிவன் கோவிலிருந்து சற்றே மாறுபட்டவை. பலிபீடம் கிடையாது. த்வஜஸ்தம்பம் கிடையாது. நந்தி கிடையாது. வாசலிலிருந்து நேராகப் பார்த்தால் லிங்கம் தெரியும். நடுவில் எதுவுமே மறைக்காது. சிவனுக்குப் படையல் புழங்கரிசிச் சோறின் ஆவிதான். பிற கோவில்களில் ஏற்கெனவே புழுங்கவைக்கப்பட்ட அரிசியைச் சமைக்கமாட்டார்கள். ஆசார பிராமணர்கள் புழுங்கரிசி சாப்பிட மாட்டார்கள் என்பதைக் கவனிக்க. இந்தக் கோவிலில் தீபாராதனை காட்டியபின் அந்த ஜோதியை பக்தர்களிடம் கொண்டுவந்து கண்ணில் ஒற்றிக்கொள்ளக் காட்டமாட்டார்கள். பாகற்காய் வருவலை ஈசனுக்குப் படைக்கிறார்கள்.

இந்த ஐதீகங்களையெல்லாம் அங்கு சென்றதிலிருந்து மூன்று நான்கு பேர் என்னிடம் சொல்லிவிட்டனர். கடைசியாகச் சொன்னவர் கோவிலில் உள்ள ஓர் அர்ச்சகர். அங்கே ஐந்து சாதிகளைச் சேர்ந்த அர்ச்சகர்கள் உண்டு என்றார் அவர். சிவாச்சாரியார் முதல் உவச்சர் வரை. எந்தெந்தக் கடவுளுக்கு யார் யார் பூசை செய்யவேண்டும் என்று சொன்னார். அவர் கிழக்கு பதிப்பகப் புத்தகங்களைப் படிப்பவராம். என் சட்டையைப் பார்த்துவிட்டு விசாரித்தார். பின் மகிழ்ச்சியுடன் என்னைக் கூட்டிச் சென்று கோவில் தத்துவங்களையெல்லாம் விளக்கிச் சொன்னார். சுற்றுவெளிக்கு அழைத்துச் சென்று பல விஷயங்களைக் காட்டினார். இரு சந்நிதிகளில் ஒரே நேரத்தில் நடக்கும் தீபாராதனையும் அதில் ஒன்று.

மாணிக்கவாசகர் சந்நிதியைச் சுற்றி ஓவியமாக அவரது வாழ்க்கை தீட்டப்பட்டிருந்தது. நாயக்கர் கால ஓவியங்கள். வாசலில் இரண்டு ஆதீனங்கள், இரண்டு தம்பிரான்களின் மாபெரும் சிலை வடிக்கப்பட்டிருந்தது.

கோவில் கருவறையைச் சுற்றியுள்ள சுற்றுவெளியிலும் ஏகப்பட்ட ஆளுயரச் சிற்பங்கள். மேலும் சில வீரபத்திரர்கள், காலாரிமூர்த்தி, பைரவர் சிலைகள். அவற்றை முழுமையாகப் பார்க்க நேரம் இல்லை. பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. அடுத்து வெளிச்சம் இருக்கும்போதே சென்றால்தான் இரும்பாநாடு என்ற இடத்தில் இருக்கும் ஒரு முக்கியமான (வழிபாடு ஏதும் நடக்காத) கோவிலைப் பார்க்கமுடியும்.

எனவே அங்கிருந்து கிளம்பி பேருந்தை நோக்கிச் சென்றோம்.

(தொடரும்)

5 comments:

  1. (இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பின்னூட்டத்தில் விரிவாகத் தரத்தானே போகிறார்!) !!

    http://poetryinstone.in/lang/ta/2009/01/14/a-temple-born-off-a-scam-or-is-it.html

    http://poetryinstone.in/lang/ta/2009/10/12/horses-turn-to-jackals.html

    http://poetryinstone.in/lang/ta/2009/10/02/art-inspired-by-sculpture-series-4-horse-avudayar-temple-tiruperundurai.html

    (புராணத்தில் எப்படிக் கொல்கிறார் என்று யாருக்காவது தெரியுமா?)

    தக்ஷனின் தலையைக் கொய்து தீயில் ...

    http://poetryinstone.in/lang/ta/2008/11/14/shiva-cuts-off-the-head-of-his-father-in-law.html

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  3. //பாருங்கள், ஒரு கோர நாத்திக வீர வைணவனுக்கு நேர்ந்த கதியை!//

    :):)

    ReplyDelete
  4. //அவர் கிழக்கு பதிப்பகப் புத்தகங்களைப் படிப்பவராம். என் சட்டையைப் பார்த்துவிட்டு விசாரித்தார். //

    You are the best roving ambassador for NHM! :)

    ReplyDelete
  5. 'பாருங்கள், ஒரு கோர நாத்திக வீர வைணவனுக்கு நேர்ந்த கதியை!' - நான் அப்பவே நினைச்சேன், இந்த ஆளு அதுக்கு சரிப்பட்டுவரமாட்டாருன்னு!

    ReplyDelete