Monday, February 06, 2012

புதுக்கோட்டை பயணம் - 6

ஆவுடையார்கோவிலுக்குப்பின் புதுக்கோட்டை திரும்பும் வழியில் சற்றே நின்று இரும்பாநாடு என்ற இடத்தைப் பார்த்துவிட்டுச் செல்ல முடிவு செய்தோம். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோவிலில் வழிபாடு நடப்பதில்லை. பொதுவாகப் பூட்டியே கிடக்கும் கோவில் இது.

கருவறை அமைப்பில் தூங்கானை வடிவம் அல்லது கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) எனப்படும் அமைப்பு முறையில் கட்டப்பட்ட மிக அழகிய கோவில் இது. [மாமல்லபுர ரதங்களில் சகாதேவன் ரதத்தை ஒத்த வடிவம் இது.] வெயில் சாய்ந்து, இருள் சூழத் தொடங்கியதால் அதிகம் காண முடியவில்லை. அந்த இடத்திலும் மழை நீர் சேர்ந்து பெரும்பகுதி தரை சொதசொதவென்று இருந்தது. அப்படி சொதசொதப்பு இல்லாத இடத்தில் மாடுகளும் ஆடுகளும் தம் குளம்பை வைத்து அழுத்திவிட்டுப் போயிருந்தன. அவை ஓரளவுக்குக் காய்ந்திருந்ததால் அப்பகுதி சமதளமாக இல்லாமல் நிற்கவும் நடக்கவும் சிரமம் தந்தது.

கோவிலின் கோஷ்டங்களில் எந்தச் சிற்பமும் இல்லை.

ஆனாலும் மெல்லிய வெளிச்சத்தில் கருவறை கட்டப்பட்டிருந்த கற்களின் சிறப்பையும் அவை வெட்டப்பட்டிருந்த நேர்த்தியையும் காண முடிந்தது.

கருவறைக்குமுன் அர்தமண்டபம், அதற்குமுன் நந்தி ஒன்று இருந்தது என்று ஞாபகம். பிறர் எடுத்துள்ள படங்களைப் பார்த்து, அவற்றைச் சேர்க்கும்போதுதான் என் ஞாபகம் சரியா என்று சரிபார்க்கவேண்டும்.

***

அடுத்த நாள் (இரண்டாம் நாள்) காலை சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும். காலை 5.30-க்குக் கிளம்பி நார்த்தாமலை பகுதியின் மேலமலைக்குச் செல்லவேண்டும் என்று திட்டம். காலைச் சூரியன் எழும்போது மேலமலையில் உள்ள விஜயாலய சோழீசுவரத்தின்மீது அடியிலிருந்து முடி நோக்கி சிறிது சிறிதாக சூரியன் பரவும். அதனைக் காணவேண்டும் என்பது திட்டம். அப்படியானால் இரவில் விரைவாகத் தூங்கவேண்டும். காலை 4.30-க்காவது எழுந்து 40 பேரும் கிளம்பத் தயாராக இருக்கவேண்டும்.

எனவே பேருந்தில் ஏறி புதுக்கோட்டை திரும்பினோம்.

(நாள் 1 முற்றும். தொடர் தொடரும்)

3 comments:

  1. ரொம்ப டைட்லி பேக்டா இருக்கு டூர்..கொஞ்சம் நிறுத்தி நிதானமா போயிருக்கலாமோ?btw, நான் புதுக்கோட்டைக்காரன்..

    ReplyDelete
  2. Amazing how you remember the trip almost minute by minute.

    ReplyDelete
  3. பத்ரி ,நியூட்ரினோ ஆராய்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன ?

    http://siragu.com/?p=1733

    நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தைப் பற்றிய விரிவான தகவல்களை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதைக் காணமுடிகிறது. நியூட்ரினோ ஆராய்ச்சி என்றால் என்ன? இந்த ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது? இந்த ஆராய்ச்சியால் கிடைக்கும் முடிவு பலன் யாது? போன்ற கேள்விகளுக்கு தேனி மாவட்ட மக்கள் விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இவற்றை பொது மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்கு அரசு சிரத்தை எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. இந்த அறிவியல் விளக்கங்கள் மக்களுக்குப் புரியாது என்று அரசு அதிகாரிகளும் ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்களோ என்னவோ?

    ReplyDelete