Friday, September 22, 2006

தொழில்முனைவர் நவநீத கிருஷ்ணன்

கடந்த ஞாயிறு (17 செப்டம்பர்), ஈரோட்டில் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றிருந்தேன். அதில் ஒன்று மக்கள் சிந்தனைப் பேரவை ஏற்பாடு செய்திருந்த கூட்டம் - 'தொழில் முனைவோர் பயிலரங்கம்'. மாணிக்கம்பாளையம் என்ற ஈரோட்டை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, கரூர், திருப்பூர் நகரங்களில் பெரும் பலசரக்கு கடைகள், உணவகங்களை நடத்தும் கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.



நவநீத கிருஷ்ணன் மிகவும் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர். நெல்லை மாவட்டத்தில் பிறந்தவர். அவரது இளமைப்பருவத்திலேயே அவருடைய தந்தையார் இறந்துபோய்விட்டார். நவநீத கிருஷ்ணன் அதிகம் படிக்கவில்லை. 6 அல்லது 7ம் வகுப்பு வரை படித்திருக்கலாம். எங்காவது சென்று ஏதாவது செய்து பிழைத்துக்கொள் என்று அவரது தாயார் சொல்லிவிட்டார். "என் தாயார் எனக்கு பஸ்/ரயில் கட்டணம் கையில் கொடுத்தாரா என்று கூட நினைவில்லை. ஆனால் ஆசீர்வாதம் செய்து அனுப்பினார். வேலையில் சேர்ந்து முதலாளிக்கு விசுவாசமாக, நம்பிக்கையாக நடந்துகொள் என்று சொல்லி அனுப்பினார்" என்கிறார் நவநீத கிருஷ்ணன்.

சென்னைக்கு எப்படியோ வந்துசேர்ந்த நவநீத கிருஷ்ணன் 1970களில் ஒரு காப்பித்தூள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ. 500க்க்கு விற்பனை நடக்கும் மிகச்சிறிய கடை. நவநீத கிருஷ்ணன்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த முதலாளி அவரையே கடையைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டார்.

நவநீத கிருஷ்ணனின் நண்பர் ஈரோட்டில் பலசரக்குக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஒவ்வொரு மாதமும் அவர் சென்னைக்கு வந்து நண்பனைச் சந்தித்துப் பேசிவிட்டு சென்னையில் தன் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு ஈரோட்டுக்குத் திரும்புவார். இவர்கள் இருவரும் பேசும்போது தமிழகத்தின் பல நகரங்களிலும் மாபெரும் பல்பொருள் அங்காடிகளைத் தொடங்குவதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்களாம். இருவருக்கும் கையில் காசில்லாவிட்டாலும் நெஞ்சில் தைரியமும் தகிக்கும் ஆசையும் சாதிக்கும் கனவும் இருந்தன.

1989-ல் இரண்டு நண்பர்களும் ஈரோட்டில் சொந்தமாக ஒரு கடையைத் தொடங்க முடிவு செய்தனர். கடை தரையளவுக்குச் சற்று கீழாக இருந்தது. அங்கெல்லாம் யாரும் வரமாட்டார்கள் என்று பலரும் பேசினர். அட்வான்ஸ் தரக்கூட இருவரிடமும் காசில்லை. ஒருவழியாக இடத்துக்குச் சொந்தக்காரரிடம் பேசி கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைத் தருவதென்று ஒப்புக்கொண்டனர்.

அங்கு ஆரம்பித்த கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஈரோட்டில் மூன்று இடங்கள், கோவையில் இரண்டு இடங்கள், பொள்ளாச்சியில், கரூரில், திருப்பூரில் என்று வளர்ந்துகொண்டே போகிறது. குறைந்தது 15,000 சதுர அடி. கரூரில் 50,000 சதுர அடி. சமீபத்தில் திருப்பூரில் திறந்துள்ள கடை 1,50,000 சதுர அடிக்கு மேல்!

கடந்த 17-18 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி முழுவதும் கடின உழைப்பால். தன்னிடம் வேலை செய்பவர்களை மதித்து, திறமைக்கு முன்னிலை கொடுப்பதால். சிறு கடையாக இருக்கும்போதே வளர்ச்சியை முன்வைத்து மேனேஜர், சூப்பர்வைசர் என்றெல்லாம் ஊழியர்களை வரிசைப்படுத்த ஆரம்பிக்க, பலரும் கேலி செய்தார்களாம். ஆனால் நாளடைவில் இதுபோன்ற முறைப்படுத்தல் மூலமாக பெரிதாக வளரும்போது நிர்வாகத்தைத் திறம்படச் செய்யமுடிந்தது.

நவநீத கிருஷ்ணன் தனக்கு தொழிலில் ஏதாவது புரியவில்லையென்றால் அதை உடனடியாகப் பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தயங்குவதில்லை என்கிறார். அவரது பல்பொருள் அங்காடிகளில் உணவகம் உண்டு. ஆனால் இதை நிர்வகிப்பதில் சில பிரச்னைகள் இருந்ததாம். உடனே தயங்காமல் சென்னை வந்து சரவணபவர் அண்ணாச்சி ராஜகோபாலைச் சந்தித்து உதவி கேட்டுள்ளார். அப்பொழுது நவநீத கிருஷ்ணனுக்கு ராஜகோபாலைத் தெரியாது (இருவரும் நெல்லையைச் சேர்ந்தவர்கள் என்பது வேறு விஷயம்!). ராஜகோபால், கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஊழியர்கள் பத்து பேரை தன்னுடைய சரவணபவன் கிளைகளில் எடுத்துக்கொண்டு ஆறு மாதங்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்து திருப்பி அனுப்பினாராம். அந்த அனுபவத்தை வைத்து நவநீத கிருஷ்ணன் தன்னுடைய நிறுவனத்தில் உள்ள பிரச்னைகளைப் போக்கியதாகச் சொன்னார்.

அதேபோல ஈரோட்டில் முன்னணித் தொழில்முனைவோர்களாக இருக்கும் SKM மயிலானந்தன், சக்தி மசாலா துரைசாமி ஆகியோருடன் அவ்வப்போது தொடர்ந்து பேசி தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்.

கரோட்பதி கிளப் (கோடீசுவரர்கள் சங்கம்) என்ற அமைப்பைத் தான் ஏற்படுத்தியுள்ளதாகவும், திறமையும் ஆர்வமும் இருந்தால் அவர்களுக்கு தானே தேவையான பயிற்சிகள் கொடுத்து அவர்களைக் கோடீசுவரர்கள் ஆக்குவதே தன்னுடைய நோக்கம் என்கிறார் நவநீத கிருஷ்ணன். சிலரை அவ்வாறு செய்துள்ளதாகவும் சொல்கிறார்.

கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் தங்களுக்கும் அதுபோன்ற பயிற்சி கொடுப்பாரா என்றதற்கு தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் ஒருவரிடம் நிஜமாகவே முன்னேறுவதற்கான முனைப்பு உள்ளதா என்பதை பரீட்சித்துப் பார்த்து, பிறகே ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார்.

கூட்டத்தினர் நிறையக் கேள்விகளைக் கேட்டனர். அதற்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்தார் நவநீத கிருஷ்ணன். மிகுந்த வேலைப்பளுவுக்கு இடையேயும் ஒரு ஞாயிறு காலையை முழுவதுமாகப் பிறருக்காகச் செலவழித்தார் அவர்.

கூட்டத்தில் முன்னதாக மக்கள் சிந்தனைப் பேரவை ஸ்டாலின் குணசேகரனும் நானும் பேசியிருந்தோம்.

4 comments:

  1. என் மனதுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சியை கூறியுள்ளீர்கள். நானும் இது போல் எனது இன்டர்நெட் தொழிலை(சென்னைஷாப்பிங்.காம்) பெரிதாக உயர்த்துவேன்.
    அதற்க்காக நீங்கள் கொடுத்த ஆதரவை என்றென்றும் நான் மறக்கமாட்டேன். நவநீத கிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறேன்.

    நன்றி

    ReplyDelete
  2. பதிவு நன்றாக இருந்தது பத்ரி. நவநீத கிருஷ்ணனின் இமெயில் முகவரி கிடைக்குமா?

    ReplyDelete
  3. Badri

    When I visited Kannan Dept Stores in 2003, I found too many child labourers in that shop. He employed atleast 50-60 small boys in that dept store. All boys were from Tirunelveli rural villages. They refused to accept our tips when they loaded our groceries in our car is another point worth mentioning. They were all well trainied. All those boys were trained to lie about their age. We should look for ethics also in any successful rag to rich stories.

    ReplyDelete
  4. This is really a wonderful blog Badri! I have been watching Mr.Navaneetha Krishnan's group growing in front of my eyes since 1990. So I would like to add some more points:

    #1 When they started their shop in the underground, everything in their shop (Right from 'pottu kadalai' and 'konda kadalai') used to stand for quality. Also they were optimally priced.

    #2 They were the first to introduce the 'door-delivery' concept in Erode. During that time only the government co-operative store called 'Chinthamani' used to exist where they never cared about customers. So Kannan department store was different right from the beginning.

    #3 They have very good care for their employees. There is a place where all employees are given stay and provided very good food. Apart from that they introduced 'performance based rewarding system' by introducing various layers in the organization (You have mentioned in your blog as well) which 'enabled' people to perform and work with the organization.

    Finally it was really surprising to know that Mr.Navaneetha Krishnan is only studied upto 6th or 7th standard.

    ReplyDelete