Tuesday, May 18, 2010

சிங்கப்பூர் டயரி - 3

முதல் நாள் பயிலரங்கு முடிந்ததும், சனி மாலை அன்று கோகுல் உணவகம் சென்று சாப்பிட்டோம். ’மாக் மீட்’ என்ற செயற்கையாக இறைச்சி போலத் தோற்றம் அளிக்கும் தோஃபு கட்டிகள் போட்ட உணவுகள் பல. ஆனால் மெனுவில் சிக்கன், மட்டன் என்றுதான் எழுதியுள்ளார்கள். அதைப் பார்த்ததுமே ராகவனுக்கு ஒரே நடுக்கம்.

ரோஜா(க்) என்ற உணவை நாங்கள் விரும்பிச் சாப்பிட்டோம். சில பழங்கள், தோஃபு என அனைத்தும் கலந்து வறுத்து, கருநிற சாறு ஒன்றில் தோய்த்து, மேலே எள்ளுப்பொடி எல்லாம் போட்டு, சற்றே அசட்டுத் தித்திப்பும் ஆங்காங்கே கொஞ்சம் காரமும் கலந்து சுவையாகவே இருந்தது. மீ கொரெங் மிகக் காரம். அரிசிக் கூழ் கேக், காய்கறிகள் கலந்த ஒரு சாலடும் அதனுடன் சூப் மாதிரி பதத்தில் இருந்த டிரெஸ்ஸிங்கும் கொஞ்சம் சுமார்தான்.

ராகவனுக்கு சிங்கப்பூர் சாலைகள்மீது அபாரக் காதல் ஏற்பட்டுவிட்டது. எங்கும் குண்டு குழிகளே தென்படவில்லை என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். ‘கன்னம்’ மாதிரி வழவழவென்று இருப்பதாகச் சொன்னார். வாயில் மாவா/வஸ்து போட்டாலும் இதுபோன்ற மழமழ ரோட்டில் துப்பச் சிறிதும் தோன்றக்கூடாது என்பதால்தான் சாலையை இவ்வளவு அழகாகப் போட்டுள்ளார்கள் என்பது அவரது கருத்து. அதனால் வாஷ் பேசின் அல்லது குப்பைத்தொட்டி தேடித் தேடி, துப்பினார்!

சிங்கப்பூரில் 7 மணிக்கு முன்னால் சூரியன் உதிப்பதே இல்லை. அதனால் முதல் நாள் சரியான நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை. அதிகாலையில், யாருமற்ற சாலையில், ஒரு சுத்திகரிப்புப் பெண்மணி கையில் நீண்ட குச்சியை வைத்துக்கொண்டு சின்னச் சின்னத் தாள்களையும் சேகரித்துக் கொண்டிருப்பதை, 14-ம் மாடியிலிருந்து 20 நிமிடமாகப் பார்த்துக்கொண்டிருப்பதாக ராகவன் சொன்னார். சுத்தம் என்பதை அடைய வெறும் சட்டங்கள் போட்டால் மட்டும் முடியாது. ஒரு தேசத்தின் மக்களுக்கு, அவர்களது ரத்தத்திலேயே இந்த உணர்வு புகுந்துகொள்ளவேண்டும்.

எப்படியோ சிங்கப்பூரில் இது நடந்துள்ளது. என்ன செய்தால் சிங்கப்பூர் அழுக்காகும் என்று குரூரமாகச் சிந்திக்கத் தோன்றுகிறது.

இரண்டாம் நாள் அமர்வு. உரையாடல் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கில் ராகவன் கொடுத்த ‘சிறுகதை’ பிரசெண்டேஷனை இங்கே மீண்டும் கொடுத்தார். பயங்கர வரவேற்பு. தொடர்ந்து புனைகதைகளை எடிட் செய்வது பற்றி நான் கொஞ்சம் பேசினேன்.

மதிய உணவு இடைவேளையின்போதும் ஒரு வானொலி பேட்டி, ஒரு தொலைக்காட்சிப் பேட்டி.

மதியம் மொழிமாற்றம் பற்றியும், மொழிமாற்றப் பிரதிகளை எடிட் செய்வது பற்றியும் பேசினேன். கடைசியாக கேள்விகள், பதில்கள். ஒரு சிலர், ஏதோ ஒரு புத்தக வெளியீடு இருக்கிறது என்று கிளம்பிச் சென்றுவிட்டனர்.

***

ஒரு அனானி, இரண்டு நாள்களும் போர் அடித்தது என்று எழுதியிருந்தார். இருக்கலாம். அதனை அவர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் சொன்னால் நன்றாக இருக்கும். அடுத்த முறை, இன்னும் சிறப்பானவர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார்கள். எங்களை வரவழைத்து இந்தப் பயிலரங்கை நடத்த சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டுக் கழகமும் தேசிய நூலகமும் நிறையப் பணம் செலவு செய்திருக்கிறார்கள். பணம் விரயமாகக் கூடாது அல்லவா.

***

எடிட்டிங் ஏன் அவசியம் என்ற எண்ணம் அங்கு வந்திருந்த பலருக்கும் ஏற்பட்டது என்றே நினைக்கிறேன். இதுதான் முதல் நோக்கமே. என் எழுத்துக்கு எடிட்டிங்கே தேவை இல்லை; நான் எழுதியதில் ஒரு வரியைக் கூடத் தொட யாருக்கும் அனுமதி இல்லை என்ற எண்ணம் போய், எழுத்தை மெருகேற்ற, புத்தகத்தின் வடிவத்தைச் சரியாக்க, எழுத்தாளரின் நோக்கத்தைக் குலைக்காமல் அவருக்குப் பெருமளவு உதவ எடிட்டர்கள் தேவை என்ற எண்ணம் வந்துவிட்டால் போதுமானது.

அடுத்து, சிங்கப்பூரில் உள்ள சிலர், தாங்கள் தமிழ் எடிட்டர்களாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டால் அது போதும். அப்படி சிறந்த எடிட்டர்கள் ஆக, என்னவிதமான திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது அடுத்த கட்டம்.

நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களின் நோக்கத்தை ஓரளவுக்குப் பூர்த்தி செய்துள்ளோம் என்றே நானும் ராகவனும் நம்புகிறோம்.

***

ஞாயிறு மாலை லேசாகத் தூறிக்கொண்டே இருந்தது. தேக்கா மார்க்கெட், சிராங்கூன் சாலை ஆகிய இடங்களுக்கெல்லாம் சென்று அங்கே குவிந்திருக்கும் இந்தியர் கூட்டத்தைப் பார்க்கவேண்டும் என்று ராகவன் ஆசைப்பட்டார். ஆனால் மழை அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டுவிட்டது.

ஒலி எஃப்.எம் நண்பர்கள் சபா, சதக்கத் ஆகியோருடனும் வரதராஜன் என்பவருடனும் சேர்ந்து அன்று இரவு விவா சிடி சென்று மார்ஷே என்ற ஸ்விஸ் பிரான்சைஸ் உணவகத்தில் சாப்பிட்டோம். இக்தைப் பற்றி ராகவன் படங்களுடன் எழுதுவதாகச் சொல்லியிருப்பதால் நான் எழுதப்போவதில்லை.

அதற்குமுன், ராகவனின் ஆசைக்கு இணங்கி கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர் நண்பர்கள். சிங்கப்பூர் வந்து மணலைக் கண்ணிலேயே பார்க்கவில்லையே என்று ராகவனுக்கு ஆதங்கம். நச நசவென்ற தூறலுக்கு இடையே சிறிது நேரம் அங்கே நின்று கைக்கெட்டும் தூரத்தில் ஜோஹார் பாருவில் எரியும் விளக்குகளைப் பார்த்து, ‘அதோ மலேசியா’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டோம்.

***

திங்கள் அன்று கல்வி அமைச்சகத்தின்கீழ் வேலை செய்யும் தமிழ் பாடப்புத்தகங்கள் எழுதும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு. அது அடுத்த பதிவில்.

10 comments:

  1. ராமதுரை எழுதியது
    திரு பத்ரி, தாங்கள் எதை எழுதினாலும் சுவை பட எழுதுகிறீர்கள்.
    இது ஒரு புறம் இருக்க, நூல்களுக்கு அதுவும் தமிழ் நூல்களுக்கு எடிட்டர்கள் தேவை என்ற கருத்தை ஆமோதிக்கிறேன். ஆனால் கிழக்குப் பதிப்பகத்தைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அப்படி ஒரு “இனம் “ இருப்பதாகவே தோன்றவில்லை.

    ReplyDelete
  2. சுத்தம் என்பதை அடைய வெறும் சட்டங்கள் போட்டால் மட்டும் முடியாது. ஒரு தேசத்தின் மக்களுக்கு, அவர்களது ரத்தத்திலேயே இந்த உணர்வு புகுந்துகொள்ளவேண்டும்.

    sathiyamana unmai...

    ReplyDelete
  3. The boring comment is just the sort of lazy feedback I have come to expect from a typical Singapore participant. Such shallow, sweeping comment may be useful to the facilitators & organiser at a superficial level, but a constructive feedback on what aspects were boring, how so, what was the expectation, where the workshop failed to meet it, how could it have been better etc., is what is needed.

    Do you know when the TV interview will be aired?

    ReplyDelete
  4. கலக்கறீங்க போங்க.மாவா?

    ReplyDelete
  5. //Do you know when the TV interview will be aired?//

    No idea.

    ReplyDelete
  6. "என்ன செய்தால் சிங்கப்பூர் அழுக்காகும் என்று குரூரமாகச் சிந்திக்கத் தோன்றுகிறது" -
    என்னே ஒரு வில்லத்தனம்! இப்பொழுது தான் ஒரு பச்சைத் தமிழன் போல் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறிர் :)

    ReplyDelete
  7. its said that MOST EDITORS R FAILED WRITERS (so i know u fit the bill to bcom an editor) since ur writing skills r so pathetic (going by ur tamil blogs ofcourse)

    so how can they add shine to copy?

    and how can these short-term workshops make the participants decent, if not gud editors?

    it takes years of practice and other desirable personality traits (like imagination, creativity, a flair for writing, a way with words, sense of humor, knowledge, language, etc.) to make gud editors

    and abt cleanliness, if a person like raghavan (going by his position as editor with all his knowledge) has such cheap and aruvaruppana habits like chewing and spitting and drinking, how can he expect other low-end indians to hv any civic sense? so a CLEAN INDIA is jus tat - an imposbl vision.

    ReplyDelete
  8. I already informed the organizers about two days workshop. It is not 100% acheived. anyway I grap some ideas from this workshop. but I don't want to highlight my expectations to register this blog.

    ReplyDelete
  9. விமானப் பயண அனுபவத்தைப் பற்றி பா.ரா சொன்ன சம்பவத்தை எழுதி சித்ரா ரமேஷிடம் கொடுத்துவிட்டு கிளம்பினேன். உங்கள் கைக்கு வந்ததா என்று தெரியவில்லை. நான் எழுதியது இதுதான்...

    விமானப் பயணத்தில் ஓய்வெடுக்க முடியவில்லை. பல மூதாட்டிகள் இம்மிகிரேஷன் கார்டுகளைக் கொடுத்து பூர்த்தி செய்து தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.'ஊருக்கே எழுதிக் கொடுத்துட்ட...அப்படியே எனக்கும் எழுதிக் குடு" என்றான் நண்பன். கொடுத்துவிட்டு,விமானத்தை விட்டு வெளியேறினேன். புன்னகை பூத்துக் கொண்டிருந்த இம்மிகிரேஷன் அதிகாரியை அணுகும்போதுதான், நான் இன்னும் இமிகிரேஷன் கார்டை பூர்த்தி செய்யவில்லை என்ற விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. தலையைச் சொறிந்தபடி நின்ற எனது தோளைத் தொட்ட தோழன் சொன்னான்..."நீ ரொம்ப நல்லவன்டா!"

    நாலு வரின்னு சொன்னா, இதென்னா .....என்ற சத்தம் எனக்கும் கேட்கிறது...

    ReplyDelete
  10. அழுக்கான சிங்கப்பூரை பார்க்கனும் என்றால் கொஞ்சம் உள்ளே வரனும் ஆதாவது CBD ஏரியாவை விட்டு.
    சாலைகளின் வழவழப்பை ஆபூர்வமாக மழை பெய்யும் துபாய்/மஸ்கட்டில் இன்னும் அருமையாக பார்க்கலாம்.

    ReplyDelete