Sunday, May 02, 2010

பதிப்புக் காப்புரிமை - உரையாடல்

ஏப்ரல் 22 அன்று தமிழக நூலக ஆணையமும் புத்தகம் பேசுது இதழும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த ‘பதிப்புக் காப்புரிமை’ என்ற நிகழ்ச்சி எல்.எல்.ஏ கட்டடத்தில் நடைபெற்றது. அப்போதே இதைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து நாள்கள் நழுவிவிட்டன. எனவே என் ஞாபகத்தில் இருப்பதை வைத்து எழுதுகிறேன்.

ஏகப்பட்ட பேர் பேச அழைக்கப்பட்டிருதனர். நான் கொஞ்சம் மெதுவாகத்தான் அரங்குக்குச் சென்றேன். சம்பிரதாயமான ஆசாமிகள் பேசிவிட்டுப் போயிருப்பார்கள்; உருப்படியான ஆசாமிகள் பேசுவதைக் கேட்கலாமே என்ற எண்ணம். நான் எதிர்பார்த்தபடியே சிலர் பேசிவிட்டுச் சென்றிருந்தனர். ஆனால் ஞாநியும் அப்போது பேசி முடித்திருந்தார். அவரது பேச்சு கடைசியில்தான் வரும் என்று நான் நினைத்தது தவறாகிவிட்டது. அவர் என்ன பேசினார் என்பதன் குறிப்புகளை அனுப்புமாறு அவரிடம் கேட்டிருக்கிறேன். எழுத்தாளர்களுக்கு குறைந்தபட்ச ராயல்டி என்று நிர்ணயிக்கவேண்டும் என்று அவர் பேசியதாகக் கேள்வி.

ஞாநி ராயல்டி சதவிகிதம் 10% அல்லது அதற்கும் குறைவாக இருப்பதை எதிர்க்கிறார் என்பதும், விற்பனையாளர்களுக்கான கமிஷனே 30-35% என்று இருக்கும்போது எழுதிய எழுத்தாளனுக்கு வெறும் 10% மட்டும்தானா என்னும் கேள்வியை முன்வைக்கிறார் என்பதும் நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். அது தொடர்பாக நான் முன்னமே எழுதியுள்ளேன். இதை மீண்டும் விரிவாக மற்றோர் இடத்தில் எழுத முற்படுகிறேன்.

இப்போது மீண்டும் பதிப்புக் காப்புரிமை கூட்டம். பதிப்புரிமை, காப்புரிமை என்ற இரண்டு வெவ்வேறு விஷயங்களை பச்சக் என்று ஒட்டி இந்த வார்த்தையை உருவாக்கிவிட்டார்கள் போல. ஒரு எழுத்தையோ, ஓவியத்தையோ, போட்டோவையோ... இப்படி ஏதோ ஒன்றைத் தம் சொந்த முயற்சியில், தம் சொந்த உழைப்பில் உருவாக்குபவர்களுக்குக் கிடைப்பதுதான் காப்புரிமை. அதன் வணிக சாத்தியங்களை அவர்கள் விரும்பினால் உரிமங்களாகப் பிறருக்குத் தரலாம். ஆனால் இதே ஆள்கள், பிறரிடம் சம்பளத்துக்காக வேலை செய்யும்போது உருவாக்கும் விஷயங்களுக்கு காப்புரிமை மாறுகிறது.

காப்புரிமை வைத்துள்ள ஒருவர் அந்தக் காப்புரிமையை பிறருக்கு ‘அசைன்’ செய்யலாம். அல்லது காப்புரிமையைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு, பதிப்புரிமையை மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு ஒரு பதிப்பாளரிடம் தரலாம்.

நான் போனபோது பேசிக்கொண்டிருந்த வழக்கறிஞர் துரைசாமி, பெரியார் எழுத்துக்களைப் பதிப்பிப்பது சம்பந்தமாக திராவிடர் கழகத்துக்கு எதிரான வழக்கில் ஈடுபட்டிருப்பவர் என்று புரியவந்தது. ஆனால் அது சம்பந்தமாகத் தன்னால் ஏதும் பேசமுடியாது என்றும் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் சொன்னார். அதற்குமேல் அந்தப் பேச்சிலிருந்து வேறு ஏதும் அறியமுடியவில்லை.

மொழிபெயர்ப்பு பற்றி இரா.நடராசன் பேசினார். துரதிர்ஷ்டவசமாக, கம்யூனிஸ்டுகளின் முற்றுமுழுதான கருத்துகளைப் பின்பற்றி, காப்புரிமை என்பதே காலனியாதிக்க முதலாளிய சுரண்டல் கருத்து என்பதை முன்வைத்து எங்கெல்ஸை மேற்கோள் காட்டி, டபிள்யூ.டி.ஓ, பான் ஒப்பந்தம் போன்ற பலவற்றைத் தொட்டுப் பேசி, இந்தியாவின் காப்புரிமை தொடர்பான கருத்துக்கள் அனைத்தும் தேவையே இல்லை என்பதாக முடித்தார். இந்தக் கட்டுரை புத்தகம் பேசுது இதழிலோ அல்லது காப்புரிமை தொடர்பான சிறப்பிதழ் ஒன்றிலோ வரும் என்று நினைக்கிறேன். அதை எழுத்துவடிவில் படித்துவிட்டு மறுப்பு எழுதவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.
நடராசன் மட்டுமல்ல, அவருக்குமுன் பேசிய துரைசாமியும் மொழிமாற்றம் தொடர்பாகப் பேசும்போது குறிப்பிட்ட ஒன்றை நான் கட்டாயம் இங்கே மறுத்தே ஆகவேண்டும். ஆங்கிலத்தில் ஒரு படைப்பு வருகிறது. அதனை மொழிமாற்றிப் பதிப்பிக்க, மூல ஆசிரியரிடம் உரிமம் பெறவேண்டும். இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டாயிற்று என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தமிழ் வடிவத்தை தெலுங்கில் மொழிமாற்ற யாரிடம் உரிமை பெறுவது? யாரிடமும் உரிமம் பெறாமல் தமிழிலிருந்து தெலுங்குக்கு மொழிமாற்றி பதிப்பிக்கலாமா? நிச்சயம் அவ்வாறு செய்யலாம் என்றே நடராசன் பேசினார். இது முழுவதும் தவறு என்பது என் கருத்து.

முதலில் ஒரு படைப்பை மொழிமாற்ற யாரிடமும் உரிமை பெறவேண்டியதில்லை. அப்படி மொழிமாற்றி தனிச்சுற்றுக்கு அதனை அனுப்பும்பட்சத்திலும் யாரிடமும் உரிமம் பெறவேண்டியதில்லை. அதனை பொதுவில் பதிப்பித்து விலை வைத்து விற்க, அல்லது இலவசமாகவே இணையத்தில் பதிப்பிக்க என்று வரும்பட்சத்தில்தான் மூல ஆசிரியரிடம் அல்லது மூல ஆசிரியரின் மூல மொழிப் பதிப்பாளரிடம் உரிமம் பெறவேண்டும். அப்படிப்பட்ட மூலமொழியின் முதல் மொழ்பெயர்ப்பிலிருந்து மறு மொழிபெயர்ப்பு செய்யவும் யாரிடமும் உரிமம் கோரவேண்டியதில்லை. ஆனால் அந்த மொழிபெயர்ப்பைப் பதிப்பிக்கும்போதுதான் சிக்கல் வருகிறது. இங்கும் மூல மொழி எழுத்தாளரிடம் (அல்லது அவரது பதிப்பாளரிடம்) உரிமம் பெற்றாகவேண்டும் என்பது என் கருத்து. காப்புரிமை தொடர்பான சட்டங்கள் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

முதல் மொழிபெயர்ப்பாளரிடம் அனுமதி பெறவேண்டுமா? அது அவரது மொழிபெயர்ப்பில் ஏதேனும் விசேஷம் இருக்கிறதா என்பதை மட்டுமே பொருத்தது.

அடுத்து காந்தி கண்ணதாசன், பதிப்பகங்களும் காப்புரிமையும் என்பதுபற்றிப் பேசினார். தான் பஞ்சாபகேசன் என்ற வக்கீலிடம் ஜூனியராக இருந்தபோது அறிவுசார் சொத்துரிமை பற்றி சில வழக்குகளை எடுத்து நடத்தியது; கண்ணதாசன் என்ற படைப்பாளியின் மகனாக இருந்து பதிப்புரிமை தொடர்பான சில ஒப்பந்தங்களில் ஈடுபட்டது; இப்போது பதிப்பாளராக இருப்பது ஆகியவற்றைக் கொண்டு இது தொடர்பாகத் தன்னால் பேசமுடிவதைச் சுட்டிக்காட்டினார்.

தமிழ்ப் பதிப்பாளர்கள் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் எழுத்துபூர்வமாகச் செய்யாமல் இருப்பதன் குறைகளைச் சுட்டிக்காட்டினார். பொதுவாக தமிழ்ப் பதிப்புலகில் ‘அவுட்ரைட் ராயல்டி’ (சொல்லப்போனால் இதனை ராயல்டி என்றே சொல்லக்கூடாது - அவுட்ரைட் சேல் ஆஃப் காபிரைட் என்றுதான் சொல்லவேண்டும்) என்ற வகையில் வாய்மொழியாக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து படைப்பை வாங்கி அதனை பதிப்பித்தபின், எழுத்தாளர் அதிகமாக அச்சடிக்கப்படும் புத்தகங்களுக்கு ராயல்டி கோரமுடியும் என்பதனைச் சுட்டிக்காட்டினார். ஒரு காகிதத்தில் எழுதி வாங்கிக்கொண்டால் ஒழிய, இது பின்னர் பிரச்னையைத் தரும் என்றார்.

கண்ணதாசனின் எழுத்துகளை வானதி பதிப்பகம் பதிப்பிக்கும்போது எந்தவித ஒப்பந்தமும் எழுத்துவடிவில் இல்லை என்றார். ஆனால் பூம்புகார் பதிப்பகம் கண்ணதாசன் எழுத்துகளைப் பதிப்பிக்க வந்தபோது மூன்று பக்கங்கள் கொண்ட ஒப்பந்தம் ஒன்றைக் கொடுக்க, அதை இவர் திருத்தி, குறைத்து ஒரு பக்க அளவில் வரும் ஒப்பந்தமாக மாற்றியதை நினைவுகூர்ந்தார்.

வழக்கறிஞர் செந்தில்நாதன் அடுத்து பேசும்போது காலச்சுவடு-புதுமைப்பித்தன் பதிப்பகம் இடையேயான காப்புரிமை வழக்கை விரிவாக விளக்கிக்கூறினார். (இது ஒரு தனிக்கதையாக எழுதப்படவேண்டிய பதிவு.)

இதற்குள் மிக அதிக நேரம் கடந்துவிட்டது. சிலர் கேள்விகள் கேட்கிறேன் என்ற பெயரில் தனித்தனியாக சொற்பொழிவாற்றி, சம்பந்தமில்லாத கருத்துகளை முன்வைத்தனர். அவசர அவசரமாக, கூட்டம் முடிக்கப்பட்டது. வெளியே வந்தும் சிலர் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

***

காப்புரிமை என்றாலே காப்புரிமை பெறுபவர் முதலாலியவாதி என்றும் அவர் பிறர் தன் படைப்புகளை எந்தவிதத்திலும் துய்க்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர் என்பதுபோலவும், எதற்கெடுத்தாலும் வெள்ளைக்காரனுக்கு நாலு சாத்து, முதலாளிக்கு நாலு சாத்து என்பதுபோலவும் பேசுவதன் அபத்தத்தை நம் மக்கள் உணரவேண்டும். ஒன்று ஒருவருக்குச் சொந்தமானது என்ற மேலை உலகின் சட்டவிதிகள்தான் இன்று நம்மை இயக்குகின்றன. இப்படிப் பேசும் பலரது வீடுகளையும் சட்டை வேட்டிகளையும் நாம் நம்முடையது என்று உருவிக்கொள்ள முடியாதவகையில் காப்பது எது? இந்த மேலை நாட்டுச் சட்டங்களும் விதிகளும்தானே? ஆனால் அதே மனிதன், தன்னுடையதை அடுத்தவனிடம் இலவசமாகக் கொடுக்க உரிமை உள்ளது.

நான் என் வலைப்பதிவில் எழுதுவதெல்லாம் என் காப்புரிமை கொண்டது. ஆனால் அதனை பிறர் எப்படிக் கையாளலாம் என்று Creative Commons Attribution 2.5 India License மூலம் சொல்லியிருக்கிறேன். அதன்படி யாரும் எனக்கு ஒரு பைசா தரவேண்டியதில்லை. ஆனால் அதே நேரம் கிழக்கு/ப்ராடிஜி வாயிலாக நான் எழுதி/மொழிமாற்றி வெளியிடும் புத்தகங்களின் காப்புரிமை முழுதும் என்னிடம் உள்ளது; அதன் பதிப்புரிமை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு நியூ ஹொரைஸன் மீடியாவிடம் உள்ளது. அதனை யாரும் எடுத்தாண்டு பணம் செய்ய உரிமை இல்லை. ஆக, என் இஷ்டப்படி என் படைப்புகளை - என் காப்புரிமை கொண்ட படைப்புகளை - இயக்கிக்கொள்ள எனக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையை எனக்குத் தருவது இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957. இந்தச் சட்டம் இல்லையென்றால் இரா.நடராசனின் ‘ஆயிஷா’ கதையை யார் வேண்டுமானாலும் பதிப்பித்து எத்தனை பணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளமுடியும்.

இரா.நடராசன் பேசும்போது மொழிமாற்றல் தொடர்பாக ஏதோ ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் தனி உரிமை இருப்பதுபோலவும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அது இல்லை என்பதுபோலவும் சொன்னார். அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது தொடர்பாக கொஞ்சம் ஆராய்ந்துவிட்டு எழுதுகிறேன்.

(போதும். மிக நீண்டுவிட்டதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.)

4 comments:

  1. நல்ல பதிவு . நன்றி பத்ரி!

    ReplyDelete
  2. நான் காப்புரிமை என்ற தலைப்பில் கிழக்கின் வாயிலாக அறிவுசார் சொத்துரிமை பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறேன், உங்களுக்கு இன்னும் காப்புரிமைக்கும், பதிப்புரிமைக்கும் உள்ள குழப்பம் தீரவில்லையா.

    ReplyDelete
  3. பத்ரி,

    அன்றைய நிகழ்வுகள் குறித்த குறிப்புகள் இதோ.

    http://vizhiyan.wordpress.com/2010/04/27/world-book-day/

    ReplyDelete
  4. copyright=பதிப்புரிமை, patent= urimam- I think this is the right usage.The rights available under patent and copyrights can be sold,assigned etc.In both the case the doctrine of work for hire is applicable.Unfortunately the ignorance about intellectual property rights is such that even basics are not understood properly.To compound this those who write about it in Tamil including some lawyers do not clarify matters.They mix their politics and ideology and use law and intellectual property rights to promote their views by distorting issues and hiding facts.As a result many think that publishers, multinational companies are out there only to suck the blood.
    10% royalty is reasonable given the limited market for tamil books. Books in tamil may not sell in large quantities even if prices are reduced by 10% or so.A book that sells for Rs100 may sell more if priced at Rs 90 but the increase in sales might not make much difference in terms of royalty.If sales increase by 30% on account of reduction by 10% in price then it will make a difference in terms of royalty but if the increase is just 10% or 15% it makes little difference in authors income as royalty. So unless the market expands considerably authors may not benefit much.I may be wrong.

    ReplyDelete