Tuesday, May 11, 2010

எழுத்து முறைகளின் வரலாறு - பேரா. சுவாமிநாதன்

உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான எழுதும் முறைகள் உருவாகியுள்ளன. இவை எழுத்து அமைப்பிலும் சரி, வரிவடிவிலும் சரி, எண்ணற்ற வேறுபாடுகள் கொண்டவை. சில எழுத்து அமைப்புகள் பட வடிவிலானவை. சில எழுத்து முறைகளில் உள்ள ஒவ்வோர் எழுத்தும் பல்வேறு ஒலிகளை உருவாக்கக்கூடியவை. வேறு சில எழுத்து முறைகளில் ஒரு எழுத்துக்கு ஒரே ஒரு உச்சரிப்புதான். சிலவற்றில் உயிர் எழுத்துகள் (vowels) என்பவையே கிடையாது. அனைத்துமே மெய் எழுத்துகள்தான்.

இந்த எழுத்து முறைகள் உருவாவதற்கு வெகு காலம் முன்பிலிருந்தே பல மொழிகள் பேச்சு வடிவில் இருந்துள்ளன. அந்த மொழிகள் ஒவ்வொன்றும் எண்ணற்ற சொற்களும் தெளிவான இலக்கணமும் கொண்டவையாக இருந்துள்ளன. அதன் பின்னரே எழுத்து முறை உருவாகியுள்ளது. சில மொழிகளுக்கு இன்றுவரை எழுத்து வடிவமே கிடையாது. (எழுத்து வடிவம் தேவையும் இல்லை!)

மொழி வேறு, எழுத்து முறை வேறு. ஒரு குறிப்பிட்ட எழுத்து முறைக்கே பல்வேறு வரிவடிவங்கள் உண்டு. இந்த வரிவடிவங்களும் காலத்தால் மாறிக்கொண்டே வருகின்றன.

சில எழுத்துமுறைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்து பின்னர் வழக்கொழிந்து காணாமல் போயுள்ளன. அவற்றை பிற்காலத்தில் வந்தவர்கள் எப்படி மீண்டும் கண்டுபிடித்தனர்? உதாரணமாக, பழங்காலக் கல்வெட்டுகளிலிருந்து எகிப்திய, சுமேரிய, இந்திய (பிரமி) எழுத்துக்கள் எப்படி கண்டுகொள்ளப்பட்டன? அதே நேரம், ஏன் சிந்து சமவெளியில் கிடைத்தவற்றை இன்றுவரை புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது?

இதுபோன்ற பலவற்றையும் ஒரு நாளில் சொல்லிவிட முடியாது. எனவே கிழக்கு மொட்டைமாடியில் ஒரு தொடரை ஆரம்பிக்கிறோம்.

பேராசிரியர் சுவாமிநாதன் மே 2010 தொடங்கி, ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், எழுத்து முறைகள் பற்றி கிழக்கு மொட்டைமாடியில் பேசுவார். முதலாவது கூட்டம் வியாழன், 13 மே 2010 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் எழுத்து முறைகள் பற்றிய அறிமுகம் இருக்கும். அதன்பின் ஒவ்வொரு மாதமும் எந்த தினத்தில் கூட்டம் நடக்கும், அது எதைப்பற்றியதாக இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

நீங்கள் கலந்துகொள்வதோடு உங்கள் (10 வயதுக்கு மேற்பட்ட) குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். அவர்களுக்குப் புரியும் வகையில் இந்தப் பேச்சுத் தொடர் இருக்கும்.

1 comment: