Saturday, August 14, 2010

மன்மோகன் சிங் என்ன செய்கிறார்?

நாளைக்கு செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார். மற்றபடி நாட்டின் தலைவராக அவர் எங்கேயும் காட்சி தருவதில்லையே?

ஒரு பக்கம் பிரணாப் முகர்ஜி கிட்டத்தட்ட பிரதமர் போலவே நடந்துகொள்கிறார். நிதி அமைச்சகம் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதற்கு மேலாக மாநிலங்கள்மீது தன் பிடியை இறுக்கும்போலத் தெரிகிறது. ஒட்டுமொத்த சேவை/பொருள் வரி பற்றி முகர்ஜி பேசுவதையும் அதற்கு மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதையும் பார்க்கலாம். ஆனால் மன்மோகன் சிங் இதுபற்றி வாயே திறப்பதில்லை. கட்சிக்குள் ஏதேனும் பிரச்னையா, அல்லது கூட்டணியில் ஏதேனும் பிரச்னையா என்றால் அதிலும் பிரணாப் முகர்ஜிதான் தலையிடுகிறார், தீர்த்துவைக்க முயற்சி செய்கிறார். மமதா பானர்ஜி பிரச்னை செய்தாலோ அல்லது மக்களவையில் கூட்டம் நடைபெறவிடாமல் எதிர்க்கட்சிகள் ரகளை செய்தாலோ, பிரணாப்தான் ஆளும் கட்சி சார்பாக அங்கு நிற்கிறார்.

ப.சிதம்பரம் ஒரு பக்கம், எஸ்.எம்.கிருஷ்ணா மறுபக்கம், அவரவர் துறையை அவரவர் இஷ்டத்துக்கு நடத்திக்கொள்கிறார்கள். மன்மோகன் சிங்கின் கருத்து என்ன என்று நாட்டுக்கு யாரும் தெரிவிப்பது கிடையாது.

ஜெயராம் ரமேஷ் தனி ஆளாக அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார் ஒரு பக்கம்.

கூட்டணியின் மாணிக்கமான மமதா பானர்ஜி அடுத்து துப்பாக்கி ஏந்தி தந்தேவாடாவில் கண்ணிவெடிகளை வெடிக்கவேண்டியதுதான் பாக்கி.

காமன்வெல்த் ஊழல் பற்றி மன்மோகன் சிங் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

விலைவாசி ஏற்றம் பற்றி அவர் கவலை கொண்டுள்ளாரா, அதைக் குறைக்க ஏதேனும் முயற்சிகளை எடுக்கிறாரா என்று நமக்கு துளிக்கூடத் தெரிவதில்லை.

காஷ்மீர் பற்றி அவர் கவலைப்படுகிறார் என்று தெரிகிறது; ஆனால் பிரச்னையைத் தணிக்க தன் அரசு இன்னவெல்லாம் செய்யும் என்று எதையும் அவர் பேசுவதில்லை.

ராஜா, அழகிரி போன்றவர்களையோ அவர்களது பிரச்னைகளையோ அவர் கண்டுகொள்வதில்லை.

மொத்தத்தில் இந்தியாவின் மிக முக்கியமான கட்டத்தில், அதன் தலைவர் ஒரு டம்மி பீஸாகக் காட்சியளிக்கிறார்.

இதென்ன புதுசு? அவர் எப்போதுமே டம்மிதான் என்பவர்களுக்கு... சென்ற ஐந்தாண்டுகளில் அப்படித் தோற்றம் அளிக்கவில்லை. சோனியாதான் அதிகார மையம் என்றாலும் மன்மோகன் சிங் அரசின் தலைவராக, ஒரு தெளிவான நோக்கத்துடன் இயங்குவதாகத் தெரிந்தது. இப்போது அப்படி ஏதும் இல்லை என்பது மட்டும் தெளிவாக இருக்கிறது.

மன்மோகன் சிங் உடல்நிலை காரணமா அல்லது சோனியாவின் மனநிலை காரணமா? எதுவாக இருந்தாலும் மன்மோகன் சிங் பேசாமல் ராஜினாமா செய்துவிட்டு கடைசிக் காலத்தை ஓய்வாகக் கழிக்கலாம். பிரணாப் முகர்ஜிக்கும் கொஞ்ச நாள் பிரதமராக இருக்க வாய்ப்பு அளிக்கலாம்.

நண்பர் ஒருவர், கபில் சிபல்தான் அடுத்த பிரதமர் என்றார். இதற்கு ராகுல் காந்தியே தேவலாம்.

21 comments:

  1. I think he is adopting the following strategy:

    When you are in deep trouble, say nothing, and try to look as though you know what you're doing.

    Regards

    R Gopi

    ReplyDelete
  2. "நண்பர் ஒருவர், கபில் சிபல்தான் அடுத்த பிரதமர் என்றார். இதற்கு ராகுல் காந்தியே தேவலாம்"

    வக்கீல்கள் மீது உங்களுக்கு அப்படியென்ன கடுப்பு:-)

    இந்திரா காந்தி சுடப்பட்ட சமயம், பிரனாவ் முகர்ஜி சீனியர் என்ற முறையில் நாந்தான் அடுத்த பிரதமர் என்று உளறிக் கொட்டி ராஜீவின் கோபத்தை சம்பாதித்தாக படித்த நினைவு இருக்கிறது. அவரது தாகம் இப்போதாவது தீரட்டும்!

    ReplyDelete
  3. ராமதுரை எழுதியது.
    இப்போது நடப்பது சோனியாவின் ஆட்சியே.முந்தைய தடவையும் அப்படித்தான். நரசிம்ம ராவ் ஆட்சியில் மன்மோகன் சிங்கிற்கு பூரண அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அதனால் அவரால் சாதித்துக் காட்ட முடிந்தது.இப்போது அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன.ஆட்சி அதிகாரம் ஒருவர் கையில் இருக்க இன்னோருவர் ஆட்சியின் தலைவராக இருக்க நேர்ந்தால் சிறந்த பலன்களை எதிர்பார்க்க முடியாது.தவிர, யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர் தமக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்று நினைக்க நேரிடும் போது எதுவுமே சரியாக அமையாது. அதுவும் பின்னால் இருந்து ஆட்சி அதிகாரத்தை செலுத்த விரும்புகின்ற ஒருவர் கூட்டணி அரசியலையும் கணக்கில் கொள்ள வேண்டியவராக இருக்கும் போது அலங்கோல நிலைமைதான் இருக்கும்.ராமதுரை

    ReplyDelete
  4. பிரபு: வக்கீல்தான் வேண்டுமென்றால் சிவகங்கைச் சிங்கம் ப.சிதம்பரத்தை ஆதரிப்போம். தமிழர் ஒருவர் பிரதமராகட்டுமே! :-)

    ReplyDelete
  5. ஒங்க பதிவப் பத்தி அவர்கிட்ட யாரோ சொல்லி இருக்காங்க போலிருக்கு.

    பாருங்க காமன் வெல்த் போட்டி ஊழலை விசாரிக்க உத்தரவு இட்டிருக்கார். மாவோயிஸ்ட்களை சரணடையச் சொல்லி இருக்கார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எல்ல முயற்சிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார்.

    ReplyDelete
  6. பத்ரி, அவரு இப்போவே மூணு வருஷத்தில் மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்போம்ன்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார், இதுல பிரதமரா வேற ஆகணுமா?

    ReplyDelete
  7. //அடுத்து துப்பாக்கி ஏந்தி தந்தேவாடாவில் கண்ணிவெடிகளை வெடிக்கவேண்டியதுதான் பாக்கி.//
    கண்ணி வெடிய வெடிக்க வைக்க துப்பாக்கி எதுக்குங்க? ஞே..

    ReplyDelete
  8. //அடுத்து துப்பாக்கி ஏந்தி தந்தேவாடாவில் கண்ணிவெடிகளை வெடிக்கவேண்டியதுதான் பாக்கி.//

    ஒரு கையால் மவுசை பிடித்துகொண்டே அடுத்த கையால் கீ போர்டில் டைப்படிப்பதில்லையா நீங்கள்

    அது போல் தான் !!

    ReplyDelete
  9. You are right Mr.Badri.I also feel MMS is just warming the chair.
    Since he is basically an academic stuff,he would not be enjoying his work now.For Cong.he is required to project that clean image.
    So the country is going to dogs

    ReplyDelete
  10. ரோமிங் ராமன்Sun Aug 15, 11:31:00 PM GMT+5:30

    //ஒங்க பதிவப் பத்தி அவர்கிட்ட யாரோ சொல்லி இருக்காங்க போலிருக்கு.பாருங்க காமன் வெல்த்...//
    ஆமாங்க... வெலவாசி பத்தி கூட கொடி ஏத்தி வச்ச கையோட பேசி இருக்காரே.. பத்ரி பதிவுகளை மமோசி க்கு யாரோ போட்டு கொடுக்கிறாங்க போல .. உஷாரா எழுதுங்க..

    ReplyDelete
  11. // சிவகங்கைச் சிங்கம் ப.சிதம்பரத்தை ஆதரிப்போம். தமிழர் ஒருவர் பிரதமராகட்டுமே! :-//

    கடவுளே.. பத்ரியிடம் இப்படியொரு கொலைவெறியா??

    சிதம்பரம் வந்தால் ஆண்டவன் கூட ஆண்டியாவான் :-))))

    ReplyDelete
  12. //ராஜா, அழகிரி போன்றவர்களையோ அவர்களது பிரச்னைகளையோ அவர் கண்டுகொள்வதில்லை//

    ராஜா விஷயத்தில் என்ன பிரச்சினை? அவர் ஊழலே செய்ய வில்லை என்று தாங்கள், பழைய பதிவில் குறிப்பிட்டு உள்ளீர்களே ?

    ReplyDelete
  13. வெங்கட்: அழகிரி ஊழல் செய்தார் என்றும்தான் நான் எங்கும் சொல்லவில்லை. ராஜா, அழகிரி இருவருக்கும் சில பிரச்னைகள் உள்ளன. அழகிரி தமிழில் பேச விரும்புகிறார். ஆனால் அனுமதிக்கப்பட்டுவதில்லை. இதனை நாடாளுமன்ற நடைமுறை என்று ஒதுக்கிவிடக்கூடாது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தன் அமைச்சருக்கு என்ன தேவை என்று பார்க்கவேண்டும்.

    ராஜாவின் அமைச்சகத்தின்கீழ் வரும் பி.எஸ்.என்.எல் கடும் சிக்கலில் உள்ளது. இந்தியாவின் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வேகமாக முன்னேறிக்கொண்டு போகும்போது பி.எஸ்.என்.எல் அரசின் மோசமான கொள்கைகள் காரணமாக பின்னோக்கிச் செல்கிறது. எனவே பி.எஸ்.என்.எல்லை என்ன செய்யவேண்டும் என்பதுபற்றிய முடிவை ராஜா மட்டுமே எடுக்கமுடியாது. மன்மோகன் சிங்தான் முன்னின்று செயல்படவேண்டும்.

    3ஜி ஏலம் விட்டபிறகும், அந்தத் திசையில் ஒரு முன்னேற்றமும் இல்லை. அரசின் சொதப்பல்தான் காரணம். இதிலும் பிரதமரின் தலையீடு இல்லாமல் ராஜா மாத்திரம் முடிவுகளை எடுக்கமுடியாது. இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியதே தொலைத்தொடர்புப் புரட்சிதான். இப்போதும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முக்கியமான பங்கைத் தரப்போவது தொலைத்தொடர்புப் புரட்சிதான். ஆனால் அடுத்து என்ன செய்வது என்று திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் துறையும் இதுதான்.

    கல்வி பற்றியும் எழுதவேண்டும். கபில் சிபல் ஏதோ செய்கிறார். அதுபற்றி ஒட்டுமொத்த கேபினெட்டுக்கும் பிரதமருக்கும் ஏதும் புரிதல் உள்ளதா என்பதும் தெரியவில்லை.

    மொத்தத்தில் ஒருங்கிணைப்பு இல்லாமல், தலைமை இல்லாமல் தள்ளாடுவதாகவே எனக்குப் படுகிறது.

    ReplyDelete
  14. வடிவேலு மாதிரி மன்மோகனை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க போல. எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார். திருப்பி அடிப்பதேயில்லை. இட்லிவடையில் இப்படித்தான் மன்மோகனை லந்தடிக்கிறார்கள்.

    Kapil Sibal has been trying to further the colonial British efforts by laying out a red carpet for foreign universities – while tying up Indian institutions into-knots-into-knots-into-knots. The ‘modern’ theory about Indian education goes that all credit for Indian education should go either to the British Colonial Raj or the Christian Missionary Benevolence.

    -The Shashtipoorthi purana

    ReplyDelete
  15. //
    ஒரு கையால் மவுசை பிடித்துகொண்டே அடுத்த கையால் கீ போர்டில் டைப்படிப்பதில்லையா நீங்கள்

    அது போல் தான் !!
    //

    மமதா இந்த கம்ப்யூட்டர் மவுசை ஆட்டிக்கொண்டே பக்கத்து கம்ப்யூட்டர் கீ போர்ட்டில் அல்லவா டைப்படிக்கிறார்!

    ReplyDelete
  16. இந்த முறை காங்கிரஸ் ஆட்சியில், தனித்துவமாக இயங்க கூடாதென முடிவு செய்துள்ளார்கள் போல.
    யார் பிரதமர் ஆனாலும், பொம்மையாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன். டெலிகாம் துறை பற்றி தங்கள் கவலைகள் , ஆண்டிமுத்து ராஜாவிற்கு உள்ளதாவென தெரியவில்லை. தங்கள் கருத்துக்கள் மிக உன்னதம்

    சார்!, பீப்ளி லைவ் படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தங்கள் வாசகர்களுக்காக, ஒரு விமர்சன இடுகை இடலாமே?
    இந்த தலைப்பு சரியாக இருக்குமா? - ஆட்சிகள் மாறினாலும், (நாட்டில்) காட்சிகள் மாறவில்லை

    ReplyDelete
  17. //ஆண்டிமுத்து ராஜாவிற்கு //

    ஐயா

    அவர் பெயர் ராசா
    அவரது தந்தையார் பெயர் ஆண்டிமுத்து

    எனவே அவரை

    ஆ.ராசா என்றோ அல்லது ராசா ஆண்டிமுத்து என்றோ தான் அழைக்க வேண்டுமே தவிர நீங்கள் கூறியபடி அல்ல

    --

    தமிழர்கள் தங்களது தந்தை பெயரை தலையெழுத்தாக வைத்து கொள்வதை வட இந்திய ஊடகங்கள் தான் தெரியாமல் பழனியப்பன் சிதம்பரம் என்றும் விஷ்வநாதன் ஆனந்து என்றும் தவறுதலாக கூறுகிறார்கள் என்றால் நீங்களுமா !!

    ReplyDelete
  18. ரோமிங் ராமன்Tue Aug 17, 12:02:00 AM GMT+5:30

    //இந்தியாவின் தலையெழுத்தை மாற்றியதே தொலைத்தொடர்புப் புரட்சிதான்//

    ஒரு வார்த்தை சாம் பிட்ரோடா பற்றி சொல்லி இருக்க வேண்டாமா பத்ரி சாரே!! போகட்டும் இன்றைக்கு தொலைத்தொடர்புத்துறை யை ரெண்டில் ஒன்று பண்ணாமல் விட மாட்டேன் என்று மத்திய அரசு அடம பிடிக்காத குறைதான்..பி எஸ் என் எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனை சொல்ல இப்போது மிகப்பெரிய(official ஆகத்தான்) ஒரு பல்நாட்டு நிறுவனம் - http://www.bcg.com/ - பெரிய கட்டணத்துக்கு பணிக்கப்பட்டு இயங்கிகொண்டிருப்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் வளர்ச்சி?? இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறைக்கு உள்ளே, வெளியிலிருந்து அனுமானிக்க முடியாத ஏதோ சிதம்பர ரகசியம் உள்ளது (ப.சிதம்பர அல்ல)

    ReplyDelete
  19. "எதுவாக இருந்தாலும் மன்மோகன் சிங் பேசாமல் ராஜினாமா செய்துவிட்டு கடைசிக் காலத்தை ஓய்வாகக் கழிக்கலாம்."

    ரொம்ப ஈஸியா சொல்லிட்டீங்க? எல்லத்திலயும் தலையிடறது ஒண்ணும் புத்திசாலித்தனம் இல்ல.

    அது தவிர, ஒரு தனி மனிதனா நாம முடிவுகள் எடுக்கும்போதே எவ்வளவோ சிக்கல்கள், குழப்பங்கள். அவர் ஒரு நாட்டின் ப்ரதமர். இதுல "Greater Good" கருதி சும்மா இருக்கறது ஒண்ணும் அவ்ளொ கோச்சுக்க வேண்டிய விஷயம் இல்ல.

    எல்லாத்துக்கும் ராஜனாமா பாட்டு பாடற இன்றைய மீடியாவோட சேந்துராதீங்க. Talk about real issues.

    ReplyDelete
  20. சுவாமிஜி,

    மன்மோகன் அந்தப்பதவில உக்காந்திருக்காருன்னா எதாவது செய்யத்தானே உக்காந்திருக்காரு ?

    எதுவுமே செய்யாம சும்மா உக்காரணும்னா பேசாம பதவியை விட்டுட்டு போய் வீட்டுல புள்ளக்குட்டிகளோட சந்தோசமா சும்மா இருக்கவேண்டியது தானே ?

    மன்மோகன் ஒரு scape goat ஆகிக்கொண்டிருக்கிறார். சோனியாவும் அவளை ஆட்டிப்படைக்கும் அஹமத் பட்டேலும் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.

    ReplyDelete
  21. பணவீக்கம் இதுவரை இல்லாத அளவு மோசம். அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகம். பெட்ரோல் விலை மூன்று மாதங்களுக்கொரு முறை அதிகரிக்கிறது.

    சுதந்திர தினத்தின் போது ஒருவர் இதைக் கண்டித்து மிகக் கோபாவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஏழைகள் இப்படி எல்லாம் துன்பப் படுவது நியாயமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்.

    அவர், நம்ம மன்மோகன் சிங்தான் !

    சிரிப்பதா அழுவதா?

    ReplyDelete