Monday, August 30, 2010

தமிழக ஓவியங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். ஜோப் தாமஸ் என்ற அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் பேராசிரியர் ஒருவர் தமிழகத்தின் கோயில் ஓவியங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுத விரும்புகிறார் என்று எங்கள் ஆங்கில எடிட்டோரியலிலிருந்து தகவல் வந்தது. யாரோ ஒரு அமெரிக்கர் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒரு தமிழர்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் டேவிட்சன் கல்லூரியில் இந்தியக் கலை, கலாசாரம், காந்தியம், இஸ்லாமியக் கலை ஆகியவை தொடர்பான பாடங்களை நடத்துபவர்.

பொதுவாக நாங்கள் அகடெமிக் புத்தகங்களைச் செய்வதில்லை. பொதுமக்களுக்கான புத்தகங்கள்தாம். அவரிடம் அதைத்தான் சொன்னேன். அவரும் அதைத்தான் விரும்பினார். அவரது பிரதியில் ஏகப்பட்ட அடிக்குறிப்புகள் இருந்தன. அகடெமிக் ரிகர். ஆனால் அனைத்தையும் வைத்துக்கொள்வோம், அடிக்குறிப்பாக அல்ல, புத்தக இறுதியில் end notes ஆக என்று முடிவெடுத்தோம்.

இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் பாறை ஓவியங்கள் எனப்படும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் படிமங்கள் மிக அதிகமாகக் கிடைத்துள்ளன. ஜோப் தாமஸின் புத்தகம் அதிலிருந்தே தொடங்குகிறது. அடுத்து, சங்க காலத்தில் ஓவியங்கள் நிச்சயம் இருந்திருக்கவேண்டும் என்பதை சங்க இலக்கிய மேற்கோள்களிலிருந்தே தாமஸ் நிறுவுகிறார். துரதிர்ஷ்டவசமாக அவை ஏதும் நமக்குக் கிடைக்கவில்லை. அடுத்து நமக்குக் கிடைப்பது பல்லவர் கால ஓவியங்களும் பாண்டியர்களின் சித்தன்னவாசல் ஓவியங்களும். வெகு நாள்களாக பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்களுடையவை என்று தவறாகச் சொல்லப்பட்டன. இப்போது அந்தத் தவறு திருத்திக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின், பிற்காலச் சோழர்களின் அருமையான ஓவியங்கள். அவற்றில் முக்கியமான பலவும் தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள உள்பிராகாரத்தில் உள்ளன. அவை பொதுமக்களுக்குக் காணக் கிடைக்கா.

தாமஸின் புத்தகம் இவை அனைத்தையும் அழகாகப் பதிவுசெய்து, அவை பற்றிய ஒரு புரிதலை நமக்குத் தருகிறது.

அடுத்து, தமிழகத்தின் வரலாற்றில் பெரும் மாற்றம். விஜயநகர அரசர்கள், அதன்பின் அவர்களது ஆளுநர்களான நாயக்கர்கள் காலத்தில் அழகுணர்ச்சி போய், வேறுவிதமான நோக்கங்கள் கோயில் ஓவியங்களில் வந்துசேருகின்றன.

அடுத்து, கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ்காரர்கள் காலம். அப்போது தஞ்சை மராத்திய மன்னர்கள் அவையில் முதன்முதலாக, செகுலர் காட்சிகள் படமாக வரையப்படுகின்றன. போர்ட்ரே என்ற ஆசாமிகளைத் தத்ரூபமாகப் படமாக வரையும் முறை வருகிறது. மற்றொரு பக்கம், கம்பெனியார், ஓவியத்தை தங்களது வணிகக் காரணங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சாமிகளையும் பக்தர்களையும் வரைந்தவர்கள், பருத்திச் செடிகளையும் மாம்பழ வகைகளையும் வரைகிறார்கள். வெள்ளைக்காரப் பெண்கள் அணிந்துகொள்ளவேண்டிய கவுன் துணியில் அழகழகான வடிவங்களை வரைகிறார்கள். சென்னையில் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரி, தியோசாஃபிகல் சொசைட்டி வரை தாமஸ் ஓவிய மோஸ்தர் மாற்றங்களைப் பின்பற்றிச் செல்கிறார்.

இந்தப் புத்தகத்தின் ஆரம்ப வடிவம் முதற்கொண்டு, அதன் இறுதி வடிவம் வரை பணியாற்றியது நான் ஈடுபட்ட சந்தோஷமான வேலைகளில் ஒன்று. இறுதியில் 32 பக்க வண்ண ஓவியங்களுடன் புத்தகமாகக் கொண்டுவந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடே கிடையாது. நியூ ஹொரைஸன் மீடியா கொண்டுவந்துள்ள மிகச் சிறந்த புத்தகங்களில் இது ஒன்று.

புத்தகத்தின் அறிமுக விழாவின்போது பேரா. ஜோப் தாமஸ் கொடுத்த காணொளிப் பேச்சை இங்கே தருகிறேன்.

புத்தகத்தை வாங்க இங்கே செல்லவும். ரூ. 300 புத்தகம், சில நாள்களுக்கு மட்டும் சலுகை விலையாக ரூ. 250/-க்குக் கிடைக்கும்.



வீடியோவைத் தரவிறக்கம் செய்துகொள்ள
.

1 comment:

  1. திரு.பத்ரி அவர்களுக்கு,

    இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டு வந்தால் நான் மிகவும் சந்தோஷங் கொள்வேன். அப்படி ஏதும் திட்டம் இருக்கிறதா?

    அன்புள்ள
    பா.மாரியப்பன்

    ReplyDelete