Thursday, December 23, 2010

இரு பெரும் பிரச்னைகள்? இரு முக்கியமான புத்தகங்கள்

இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொருத்து ஏகப்பட்ட பதில்கள் கிடைக்கும்.

ஊழல்? இந்து மதவாதம்? இஸ்லாமிய தீவிரவாதம்? மாவோயிச பயங்கரவாதம்? உலகமயத்தாலும் தாராளமயத்தாலும் ஏற்படும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பழங்குடியினர் வாழ்வாதாரப் பிரச்னை? காஷ்மீர் பிரச்னை, அதன் விளைவாக ஏற்படும் இந்தியா-பாகிஸ்தான் போர் அபாயம்? அஸ்ஸாம், பிற வட கிழக்கு இந்தியப் பிரச்னைகள்?

இன்னும் பலவற்றையும் பலர் சொல்வீர்கள். அவற்றில் இரண்டை மட்டும் பார்ப்போம்.

காஷ்மீர் பிரச்னையை நாம் முழுவதுமாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று தெரியவில்லை. காஷ்மீர் (அல்லது ஜம்மு காஷ்மீர்) என்பது இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி, இதில் மறு பேச்சுக்கே இடமில்லை என்பது ஒரு தரப்பு. இந்தியாவில் பெரும்பான்மையினரின் தரப்பும் இதுதான். ஆனால் இது நியாயமான ஒரு வாதமா? மறுபக்கம் அருந்ததி ராய் போன்றோரின் தரப்பு. எந்தப் பகுதி மக்களுக்கும் நியாயமான சுய நிர்ணய உரிமை இருக்கவேண்டும்; அப்படி அவர்களுக்கு அந்த உரிமையைத் தராமல் ராணுவத்தை அனுப்பி அவர்களை நசுக்குவது மனித உரிமை மீறல் என்னும் வாதம். உலகின் எந்த ‘ஆக்ரமிப்பு’ ராணுவமுமே கற்களுக்கு பதில் புல்லட்டையும் நியாயமான எதிர்ப்புக்கு பதில் சித்திரவதையையுமே கொடுத்துள்ளனர். இந்திய ராணுவம் இதற்கு விதிவிலக்கல்ல. மணிப்பூர் முதல் காஷ்மீர் வரை நாம் இதைத்தான் பார்த்துள்ளோம்.

காஷ்மீரிகள் நியாயமாக எதனை விரும்பினர்? ஹரிசிங் யார்? அவரது ‘லெகசி’ என்ன? 1947-ல் காஷ்மீருக்குள் ஊடுருவிய பதான்கள் ஏன் அங்கு வந்தனர், என்ன செய்தனர்? அதன் பின்விளைவுகள் என்ன? நேரு, சாஸ்திரி, இந்திரா முத;ல் இன்றுவரை இந்திய ஆட்சியாளர்கள் காஷ்மீர் பற்றி எந்தக் கொள்கைகளைக் கொண்டிருந்தனர்? நேருவுக்குப் பின் அது எப்படி மாற்றம் அடைந்தது? காஷ்மீர் இஸ்லாமியத் தீவிரவாத அலைக்குள் எப்படிச் சிக்கிக்கொண்டது? ஜம்மு பகுதியில் தீவிரமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் காஷ்மீர் பிரச்னையில் எடுத்துள்ள நிலை என்ன? ஷ்யாமா பிரசாத் முகர்ஜி என்பவர் யார்? அவருக்கு காஷ்மீரில் என்ன ஆனது?

இதற்கெல்லாம் முன்னதாக ஜம்மு காஷ்மீர் என்று நாம் அழைக்கும் பகுதியின் புவியியல் அமைப்பு என்ன? காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக், வடக்குப் பகுதிகள், பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் அல்லது ஆஸாத் காஷ்மீர், சீனாவிடம் போன துண்டு துணுக்குப் பகுதிகள், இவை பற்றிய புரிதல்.

ஷேக் அப்துல்லா, காஷ்மீரின் சிங்கம் எனப்படுபவர். அவர் நேரு காலத்திலிருந்து ஏன் சிறையில் அடைக்கப்பட்டபடி இருந்தார்? காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும்தான் அவருக்கு செல்வாக்கு உண்டு என்பது தெரியுமா? அவரிலிருந்து தொடங்கி இன்று அவர் பேரன்வரை காஷ்மீர் பிரச்னையில் என்ன சொல்கிறார்கள்?

போராட்டம் அல்ல நாங்கள் செய்வது, விடுதலை அல்ல எங்கள் இலக்கு, எங்கள் இலக்கெல்லாம் ஜிஹாத் ஜிஹாத் ஜிஹாத் என்று காஷ்மீர் போராட்டத்தின் திசையையே மாற்றிய ஆஃப்கனிலிருந்து இந்தியா வந்த இஸ்லாமிய கூலிப்படை பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளவேண்டும்?

சரி, இனி அடுத்து என்ன ஆகப்போகிறது? தீர்வுதான் என்ன?

பா.ராகவனின் காஷ்மீர் பற்றிய புத்தகம் உங்களுக்கு இந்தப் பிரச்னை பற்றிய நல்ல ஒரு புரிதலைத் தரும் என்று நம்புகிறேன்.

---

சமீபத்தில் ராகுல் காந்தி - விக்கிலீக்ஸ் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் பேசியதை அவர் ஓர் அறிக்கையாக அமெரிக்கா அனுப்ப, அங்கிருந்து அது ஜூலியன் அஸாஞ்ச் மார்க்கமாக இணையவெளியில் பரவ, இந்தியப் பத்திரிகைகள் அதைக் கைமா செய்துவிட்டன. ராகுல் காந்தி என்னவோ இந்துக்கள்தான் இந்தியாவில் தீவிரவாதச் செயலைச் செய்கின்றனர், லஷ்கர்-ஈ-தோய்பாவை விட மோசமானவர்கள் அவர்கள்தான் என்று சொன்னதுபோலச் செய்திகள் பரவின. ராகுல் காந்தி சொன்னது இவ்வளவுதான்:
Responding to the Ambassador's query about Lashkar-e-Taiba's activities in the region and immediate threat to India, Gandhi said there was evidence of some support for the group among certain elements in India's indigenous Muslim community. However, Gandhi warned, the bigger threat may be the growth of radicalized Hindu groups, which create religious tensions and political confrontations with the Muslim community.
லஷ்கர்-ஈ-தோய்பா, இந்தியாவுக்குப் பிரச்னைதான். அதனால் உந்தப்பட்டு சில இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது பிரச்னைதான். ஆனால்... அதையெல்லாம் விடப் பெரிய பிரச்னை தீவிரவாதச் சிந்தனை கொண்ட இந்துக் குழுக்கள் உருவாகி, முஸ்லிம் சமூகத்துடன் அவை அரசியல்ரீதியாக மோதி, அதன் விளைவாக மதக் கலவரங்கள் ஏற்படுவதுதான்.

இது மிகச் சரியான சிந்தனை. இவ்வாறு பேசியதற்காக நாம் ராகுல் காந்தியைப் பாராட்டவேண்டும். மதரீதியாக இந்தியாவில் பிரச்னைகள் ஏற்பட்டு, இந்தியாவின் இதயத்தைக் கிழித்து ரத்தம் சிந்தவைத்துள்ளன. தேசப் பிரிவினைக்கு முன்பிருந்து தொடங்கி, பின் பிரிவினையில் அதன் உச்சத்தைத் தொட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிய ரணம், அயோத்திப் பிரச்னையில் கொழுந்துவிட்டு எரிந்தது. அங்கிருந்து தொடங்கி, மும்பையில் ஏற்பட்ட தாவூத் கோஷ்டி குண்டுவெடிப்புகள், மும்பைக் கலவரங்கள், பின் கோத்ரா ரயில் எரிப்பு, தொடர்ந்து குஜராத்தில் நடந்த திட்டமிட்ட படுகொலைகள், இந்தியாவின் பல பெரு நகரங்களில் வைக்கப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மும்பையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்... என்று இது இன்றும் தொடர்கிறது.

இந்த போலரைசேஷனுக்கு யார் காரணம்? தீவிரச் சிந்தனைகள்தான் தீவிரச் செயல்களுக்கு இட்டுச் செல்கிறது.

இந்தியா என்பது இந்து தேசமா? இங்கு இந்துக்களுக்கு மட்டும்தான் இடமா? தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கவேண்டியவர்கள் என்று முஸ்லிம்களை இன்றும் தொடர்ந்து ஊசிபோலக் குத்துவது யார்? முஸ்லிம்களை அவர்களுக்குரிய இடத்தில் வைக்கவேண்டும் என்ற எண்ணம் யாரிடமெல்லாம் இருக்கிறது?

ஆர்.எஸ்.எஸ் என்ற ஓர் அமைப்பு எதற்காகத் தொடங்கப்பட்டது? அதன் குறிக்கோள் என்ன? தேசம் என்பதற்கான அதன் வரையறைகள் என்ன? அதன் குறிக்கோளுக்கும் காந்தியின் கருத்துகளுக்கும் என்ன தொடர்பு அல்லது விலகல்? நவீன இந்திய தேசத்தின் வலுமிக்க அமைப்புகளை (அரசியல் அமைப்புச் சட்டம், நாடாளுமன்றக் குடியாட்சி முறை) உருவாக்கிய அம்பேத்கர், நேரு கருத்துகள் பற்றி ஆர்.எஸ்.எஸ் என்ன சொல்கிறது?

இன்று ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கம் இந்தியாவில் அசைக்கமுடியாத ஓர் அமைப்பு. அதன் கருத்துகள் பழமைவாதம் பேசுபவையா? அல்லது வலுவான இந்திய தேசத்தை அமைக்க உதவுபவையா? இந்து-முஸ்லிம் பிரச்னைகள் அனைத்துக்கும் அடிப்படையில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்ஸா? ஆர்.எஸ்.எஸ் இருக்கும்வரை இந்த நாட்டில் அனைவரும் அமைதியாக இருக்கமுடியுமா?

கேள்விகள் என்னுடையவை. பா.ராகவனின் புத்தகத்தில் பதில்கள் இருக்கும். கட்டாயமாக வாங்கிப் படித்துவிடுங்கள்.

*

இரு புத்தகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும். ஜனவரி 4 முதல் ஜனவரி 17 வரை.

10 comments:

  1. பத்ரி,

    //இது மிகச் சரியான சிந்தனை. இவ்வாறு பேசியதற்காக நாம் ராகுல் காந்தியைப் பாராட்டவேண்டும்.//

    என்ன சொல்ல வருகிறீர்கள்? தீவிர சிந்தனைகள்தாம் தீவிர வாதத்துக்கு விதை போடுகின்றன அல்லவா? வகாபிய சிந்தனைகளும், கிறிஸ்தவ மதமாற்றிகளின் சிந்தனைகளையும் இதே அளவு கோல் கொண்டு பாருங்கள். என்றால் வகாபிய பிரச்சாரகர்களையும் கத்தோலிக்க சர்ச்சையும் குறித்தல்லவா ராவூல் வின்ஸி என்கிற ராகுல் கண்டி அமெரிக்கனிடம் அலவலாதி பேசியிருக்க வேண்டும். எதற்கு பாராட்ட வேண்டும் அய்யா அமெரிக்கனிடம் போய் உள்நாட்டு பிரச்சனைகளை பேசியதற்கா? அத்வானி அமெரிக்க தூதரிடம் கத்தோலிக்க சர்ச்சின் அரசியல் ஈடுபாடு நாளைக்கு தமிழ்நாட்டில் ஐஆர்ஏ போன்ற அமைப்புகளை உருவாக்கிவிடும் என்று சொல்லியிருந்தாலும் தாங்கள் அருமையான நிலைபாடு என கூறுவீர்களா? பாராவின் புத்தகம் கட்டாயமாக படிக்கப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை. போலிமதச்சார்பின்மையின் கோட்பாட்டில் சிக்கித்தவிக்கும் ஒரு மனம் எப்படி ஆர்.எஸ்.எஸ் போன்ற பாரத பண்பாட்டு அடிப்படையிலான அமைப்பினை உள்வாங்குகிறது எனும் மனப்பகுப்பாய்வுக்கு அது துணை போகும் என்பதால்.

    ReplyDelete
  2. Interesting remarks and sensible questions. Eager to buy...

    Thanks,
    Murali.

    ReplyDelete
  3. Hindu-muslim conflict has origins in 19th century.RSS or Hindu Maha Sabha did not create them.Your understanding of Hindu-Muslim conflicts reveals your ignorance.Jinnah and Co were firm on partition and blaming RSS or Congress for this is to distort the facts.
    LeT and other groups are more dangerous than RSS.Islamic terrorism has global ambitions while
    RSS and Sangh Parivar have no such ambition.
    They are dangerous and can be handled by India
    while islamic terrorism is a major threat to the
    world.

    ReplyDelete
  4. ஐயா! நீங்க அறிவுஜீவினு யாரோ ஒருத்தர் கொளுத்தி போட்டு போயிட்டார். அதை நீங்களும் நம்பி இது மாதிரி கேள்விகள் கேட்டு?

    இன்று கிழக்கு பதிப்பகம் சென்னையில் உள்ள ஒரு பதிப்பகம்.அதன் கருத்துகள் இந்து எதிர்ப்பு பேசுபவையா? அல்லது வலுவான ஒரு பதிப்பகமாக மாற கமல் மாதிரி இப்படி உளறிகொண்டிருக்கிறதா? இந்து-முஸ்லிம் பிரச்னைகள் அனைத்துக்கும் அடிப்படையில் இருப்பது அறிவு ஜீவி என்ற எண்ணம்தானா? கிழக்கு பதிப்பகம் இருக்கும்வரை இந்த தமிழ்நாட்டில் நாட்டில் அனைவரும் நல்ல புத்தகத்தை அமைதியாக படிக்கமுடியுமா? இல்லனா இதை ஒழிக்க என்னவழி?
    இது என்னுடைய கேள்விகள்?

    ReplyDelete
  5. //Hindu-muslim conflict has origins in 19th century.//

    Your wrong. The conflict was started more than 1000 years back.

    I have read 2 books of Ragahavan. One is ISI - நிழல் அரசின் நிஜ முகம் and the other was லஷ்கர்-ஏ-தொய்பா. It seems he is an anti indian or pro islamic. He is either trying to say they are smart or whatever they doing are right.

    Anyway I won't be reading his books anymore.
    Will be reading the books by Aravind Neelakandan
    ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் and waiting for சிந்தனை செய்

    ReplyDelete
  6. Dear Badri,

    I follow your blogs regularly and also read books from your publications. Do you think Pa.Ra can do justice in these books.. Is this book going to contain the history of Kashmir from 7th Century AD or only from intifada ? will it also narrate the Massacres of Hindus and filling up of Dal lake with the Corpses.

    What Rahul has uttered is sheer immaturity and filled with bigotry. The statistics of attacks on India within and from outside clearly shows the truth. May be Rahul and Raegan are same ( in many ways); when Raegan was proclaiming Sugar from Roots are more dangerous , ignoring the Guns and starwars.

    Regards
    S Baskar

    ReplyDelete
  7. The Hindu right is not a threat to national security. They are a threat to the congress. So Rahul Gandhi has much reason to be paranoid about Hindu right wing communalism. After all they are the only viable opponent for the Nehru-dynasty's perpetuation of their whimsical rule.

    ReplyDelete
  8. சுஜாதாவின் அம்பலம் தளத்தில் எழுதப்பட்டு ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காஷ்மீர்' படித்திருக்கிறேன். அருமையான புத்தகம். பாரா-வின் எழுத்துக்களையும் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  9. பத்ரி,

    ஒரு கேள்வி.

    கிழக்குப் புத்தகம் வெளியிடும் புத்தகங்கள் எல்லாவற்றையும் எழுதியவர்கள் அந்தத் துறையில் அனுபவம் உள்ளவர்கள். உதாரணமாக, கம்யூனிசம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து மருதன் எழுதுகிறார், ராஜீவ் காந்தி கொலை பற்றி விசாரணையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி எழுதுகிறார்.

    ஆனால், இந்துத்துவம், ஆர்.எஸ்.எஸ் இவற்றின் மேல் வெறுப்பை மட்டுமே வெளிக்காட்டி வந்த பா. ராகவனை வைத்து ”ஆர்.எஸ்.எஸ் ஒரு அறிமுகம்” என்ற புத்தகத்தை வெளீயிட்டுள்ளீர்கள்.

    இது அறமா?

    பா. ராகவனின் ஆர்.எஸ்.எஸ் காழ்ப்புணர்வை அறியாத வாசகர்கள் இந்தப் புத்தகம் நடுநிலைமையுடையது என்று நம்பி வாங்குவார்கள்.

    கொஞ்சம் யோசியுங்கள்.

    ReplyDelete