Saturday, September 01, 2012

சஹாராவின் தில்லாலங்கிடி

இந்திய கிரிக்கெட்டின் வெகு நாளைய ஸ்பான்சர் என்பதால் இந்தியாவெங்கும் அறியப்பட்டுள்ள சஹாரா நிறுவனத்துக்குக் கடுமையான கண்டனம் உச்ச நீதிமன்றத்திடமிருந்து வந்துள்ளது. அதன் இரு நிறுவனங்கள் மக்களிடமிருந்து பெற்றதாகச் சொல்லப்பட்டுள்ள கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாயை உடனடியாக மக்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சஹாரா நிறுவனம் எப்படி ஆரம்பித்தது, அதற்கான பண முதலீடுகள் யாரிடமிருந்தெல்லாம் வந்துள்ளன என்பது குறித்து சரியான தகவல்கள் யாரிடமும் இல்லை. ஒரு non-banking finance corporation (NBFC) என்ற முறையில் சஹாரா உத்தரப் பிரதேச மக்களிடமிருந்து நிறையப் பணத்தை முதலீடாகப் பெற்று, அதன்மூலம் வளர்ந்துள்ளது. அவர்களுடைய பணம் எங்கிருந்து வந்துள்ளது என்பது மட்டுமல்ல, எங்கெல்லாம் போகிறது, எப்படி புதுப்புது நிறுவனங்கள் முளைக்கின்றன என்பதும் யாருக்கும் தெரியாது.

சஹாரா குழும நிறுவனமான சஹாரா இந்தியா ஃபைனான்ஷியல் கார்பொரேஷன் லிமிடெட் என்னும் NBFC, தன் செயல்பாட்டை நிறுத்தவேண்டும் என்று ரிசர்வ் வங்கி 2008-ல் ஆணையிட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடுத்த சஹாரா உச்ச நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தது. நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி, இந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படவேண்டும் என்று இறுதித் தீர்வை வைத்தது. அதன் தகவல்கள் இங்கே.

ரிசர்வ் வங்கி ஏன் இந்த நிறுவனத்தை இழுத்து மூட முற்பட்டது?

இந்நிறுவனத்தை ஆராய்ந்த ரிசர்வ் வங்கி, இந்நிறுவனம் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வந்ததைக் கண்டுபிடித்தது. முதலாவதாக, மக்களிடம் பெற்றுள்ள வைப்புத் தொகைக்குக் கொடுக்கவேண்டிய குறைந்தபட்ச வட்டியைக் கொடுக்கவில்லை. வைப்பு நிதி முற்றியதும் வாடிக்கையாளருக்குத் தகவல் தெரிவிக்காமல் அந்த நிதியைத் தன் சொந்தக் காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டது. ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம் நிதியை எம்மாதிரி நிர்வகிக்கவேண்டும் என்ற விதிமுறைகளை சஹாரா நிறுவனம் பின்பற்றவில்லை. யார் யார் வைப்பு நிதி அளித்துள்ளார்கள் என்பது பற்றிய தகவல்களை (KYC) அது சரியாக வைத்திருக்கவில்லை. (எனவே பணம் பல்வேறு அரசியல்வாதிகளுடைய அல்லது நிழலுலக நபர்களுடைய பினாமி பணமாக இருக்கலாம் என்று ரிசர்வ் வங்கி சந்தேகித்தது.)

அப்படியெல்லாம் இந்த நிறுவனம் சேகரித்திருந்த தொகை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய்!

ரிசர்வ் வங்கியின் கட்டளை சரியானது என்று உச்ச நீதிமன்றமும் சொன்னவுடன், சஹாராவுக்கு வேறு வழி இருக்கவில்லை. பணத்தை மக்களுக்குத் திருப்பித் தர ஒப்புக்கொண்டது.

ஆனால் அடுத்த தில்லாலங்கிடி வேலையில் இறங்கியது. சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்பொரேஷன், சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மெண்ட் கார்பொரேஷன் என்ற இரண்டு நிறுவனங்கள் மக்களிடமிருந்து புதுவகையாகப் பணம் திரட்ட முற்பட்டனர். ஏற்கெனவே மக்களிடமிருந்து வைப்பு நிதி வாங்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கியும் உச்ச நீதிமன்றமும் சொல்லிவிட்டபடியால், வேறு வகையில் பணம் பெற இவர்கள் முடிவு செய்தனர். ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களிடம் Optionally Fully Convetrtible Debenture என்ற வகைக் கடன் பத்திரங்களை வெளியிடுவதாகச் சொன்னார்கள்.

இந்தவகை டிபென்ச்சர்களைப் பெற்றுள்ளவர்கள், விரும்பினால் குறிப்பிட்ட காலத்தில் இந்தக் கடன் பத்திரங்களை இந்த நிறுவனத்தின் பங்குகளாக மாற்றிக்கொள்ளலாம். விரும்பாதவர்களுக்கு அவர்கள் செலுத்தியுள்ள தொகை திரும்பக் கொடுக்கப்பட்டுவிடும். அதுதவிர, இந்தக் கடன் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சதவிகிதம் வட்டியாக ஆண்டாண்டுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும்.

இம்மாதிரியான பத்திரங்கள் வெளியிடுவதில் தவறே இல்லை. ஆனால் பொதுமக்களிடம் இந்த முறையில் பணம் சேகரிக்க, செபி (SEBI) என்ற பங்கு/கடன் பத்திர மாற்றுக் கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் சஹாரா இந்த அனுமதியைப் பெறவில்லை. அப்படிப்பட்ட அனுமதி தேவையில்லை என்று வாதிட்டது சஹாரா. இது பொதுப்பங்கு வெளியீடு என்ற வரைமுறைக்குள் வராது என்றது. ஆனால் தொடர்ந்து தீர்ப்பாயங்கள், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்துள்ள தீர்ப்புகள், இம்மாதிரியான பத்திரங்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் முழு உரிமை செபியிடம் உள்ளது என்பதை உறுதி செய்துள்ளன.

இங்கும் சஹாரா, யார் யார் பணம் கொடுத்துள்ளார்கள் என்ற முழு விவரத்தை அளிக்கவில்லை. அப்படிப்பட்ட விவரம் தன்னிடம் முழுமையாக இல்லை என்று சாதித்தது. அந்த விவரத்தைத் தரவேண்டிய அலுவலர்கள் விடுப்பில் போயிருக்கிறார்கள் என்றது. எனவே பணம் ‘ஒருமாதிரியான’ இடங்களிலிருந்து வந்திருக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. மேலும் உத்தரப் பிரதேச ஏழை மக்களுக்கு Optionally Fully Convertible Debenture என்றால் என்னவென்று தெரியும் என்று சஹாரா சாதிப்பது பெரும் ஜோக். ஹிந்து பத்திரிகையிலேயே ஓரிடத்தில் Optional, ஓரிடத்தில் Optimal என்றெல்லாம் இதன் ஸ்பெல்லிங்கைப் போட்டு சாத்துகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சஹாரா நிறுவனம் இரண்டுமுறை இதுபோன்ற சிக்கலில் மாட்டியுள்ளதைப் பார்க்கும்போது இந்தக் குழுமத்தின் அனைத்து நிறுவனங்களையும் சிபிஐ, என்ஃபோர்ஸ்மெண்ட் டைரெக்டரேட் போன்றவை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. இவர்கள் கையில் புரளும் பணம் எங்கிருந்து வந்துள்ளது, பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்களா, பினாமி பணம் யாருடையது என்பவையெல்லாம் உடனடியாகக் கண்டுபிடிக்கப்படவேண்டும்.

பெயர் தெரியாதவர்களுடைய பணத்தை அரசின் கணக்குக்கு மாற்றவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதிலிருந்து சஹாராவின் சுப்ரதோ ராயின் நண்பரும் தற்போது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவருமான நபருக்குக் கொஞ்சம் கிலி பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

இதுதான் ஒருவேளை காங்கிரஸ் கட்சியிடம் உள்ள துருப்புச் சீட்டோ, என்னவோ!

6 comments:

  1. Badri -Good one but a person of your public status, a basic research and understanding is needed to write a public blog. Please do home work see http://moneylife.in/article/supreme-courts-sahara-ruling-salute-to-the-judges-but-a-huge-question-mark-before-financial-regulators/28218.html?utm_source=feedburner&utm_medium=twitter&utm_campaign=Feed%3A+MoneylifeRss+%28Moneylife+Personal+Finance+Magazine%29

    ReplyDelete
  2. Read this also http://www.moneylife.in/article/sebi-scores-big-with-sahara/28220.html

    ReplyDelete
    Replies
    1. Thanks anon for your advice. I dn't have the capability to do the kind of research that Sucheta Dalal can do. She is an expert. Can I still get your permission to write my little two paise worth in my blog? Thanks.

      Delete
    2. If you still want to be like all other half baked time pass bloggers or another vinavu it is your choice. god bless you.

      Delete
    3. Thank you Mr. Anonymous. Altho I respect Dr.Badri's academic achievements, I hold similar views about his blogs. Glad to know I'm not alone. :)

      Delete