Friday, August 08, 2003

தமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி? - 1

வலைப்பதிவு என்பது weblogs (மருவி blogs ஆகியது) என்பதன் தமிழாக்கம். மணி மணிவண்ணன் வலைப்பூ என்று பெயர் சூடினார். இதைப்பற்றி மாலன் திசைகளில் எழுதி நிறையவே பரப்பியுள்ளார்.

கற்காலம் முதலாகவே மனிதன் தன் எண்ணங்கள் பிறருக்குப் போய்ச் சேர வேண்டும் என்று எண்ணி குகையில் ஓவியங்கள் தீட்டினான், சிற்பமாய் செதுக்கினான், பின்னர் களிமண் வட்டைகளை (clay tablets) வடித்தான். ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதினான். பேப்பரில் அச்சு செய்யக் கற்றான், அதன் பின் புத்தகங்கள் மலிந்தன. பின்னர் இணையம் வந்தது.

இணையத்தில் தமிழில் எழுத எவ்வளவோ முயற்சிக்குப்பின் இப்பொழுது சாத்தியப்படுகிறது. முதலில் தனித் தனியாக ஒருவரோடு ஒருவர் அஞ்சலாட முடிந்தது. பின்னர் குழுவாகப் பேசி (சண்டை போடவும்) முடிந்தது. இவையெல்லாம் பரிணாம வளர்ச்சியாக வலைப்பதிவில் வந்து முடிந்துள்ளது. ஒரு சில அறிவாற்றலும், திறமையும், நேரமும் உள்ளவர்களால்தான் அச்சிலோ அல்லது இணையத்திலோ இதழ்கள் (magazine) நடத்த முடிகிறது, அதில் பங்கேற்கவும் முடிகிறது. யாஹூவில் பல குழுமங்களை உருவாக்கினால், ஒவ்வொன்றிலும் ஒரு சிலவற்றைப் பற்றித்தான் பேச முடிகிறது. மேலும் இவ்வாறு இங்கு விவாதிக்கையில், பல குடுமிப்பிடி சண்டையாய் முடிகிறது. சிலவற்றைச் சொல்கையில் யாரும் பதில் கூடப் போட மாட்டேன் என்கிறார்கள். பலருக்கு இந்த யாஹூ குழுமங்கள் இருப்பதே தெரிவதில்லை. எந்த ஒரு தமிழ் யாஹூ குழுமத்திலும் (தினம் ஒரு கவிதை நீங்கலாக) 400 பேருக்கு மேல் பங்கு கொள்வதில்லை. உலகில் வெறும் 400 தமிழ்ர்கள்தான் இணையத்தில் உள்ளனரா?

No comments:

Post a Comment