Friday, August 15, 2003

தமிழ் இணையம் 2003

தமிழ் இணையப் பல்கலைக் கழகமும், சென்னை அண்ணா பல்கலைக் கழகமும் இணைந்து தமிழக அரசு மற்றும் உத்தமம் அமைப்பின் ஆதரவோடு சென்னையில் ஆகஸ்டு 22-24, 2003இல் "தமிழ் இணையம் 2003" என்னும் மாநாட்டை நடத்துகின்றன.

இது உலகத் தமிழ் இணையக் கருத்தரங்கு வரிசையில் ஆறாவதாகும்.

நான் முதலாவதாக சிங்கப்பூரில், 1997இல் நடந்த "தமிழ்நெட் '97"இல் கலந்து கொண்டேன். அங்கு "Presentation of the Tamil Nadu Budget 1997 Live via the Internet" என்னும் தலைப்பில் பேசினேன். நான் அப்பொழுது சைபர் குளோப் இந்தியா என்னும் நிறுவனம் நடத்தி வந்த "நெட்கஃபே" என்னும் இணைய மையத்தில் தொழில்நுட்ப ஆலோசகனாக வேலை செய்து வந்தேன். தமிழக நிதிநிலை அறிக்கை 1997 தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டபோது அதின் சாரத்தை இணையத்தில் அச்சிட்டோம். அப்பொழுது என்ன எழுத்துக் குறியீட்டையும், உருவையும் பயன்படுத்தினோம் என்றெல்லாம் இப்பொழுது நினைவுக்கு வரவில்லை.

சிங்கப்பூர் மாநாடு பற்றி இப்பொழுது நினைவுக்கு வருவதெல்லாம் மறைந்த திரு கோவிந்தசாமியின் அயராத உழைப்பும், அன்பும்தான்.

1998 முதல் என் கவனம் கிரிக்கெட் திசையில் முழுவதுமாகத் திரும்பியது. தமிழ்நெட் '99 சென்னையில் நடந்த போது அங்கு ஓரிரு மணிநேரம் செலவு செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். பின்னர் மீண்டும் கணினித்தமிழ் பற்றிப் புரிந்து கொள்ள ஆரம்பித்தது மார்ச் 2003இல்தான். இடையில் இரண்டு கிரிக்கெட் உலகக்கோப்பைகள், மூன்று உலகத் தமிழ் இணையக் கருத்தரங்குகள், எண்ணற்ற முன்னேற்றங்கள்.

ஆறாவது கருத்தரங்கில் ஒரு ஓரத்தில் பார்வையாளனாக இருப்பேன். இங்கு நடக்கும் கருத்தரங்கின் முக்கியப் பரிமாற்றங்களை எனது வலைப்பதிவில் நேரடியாகப் பதிவு செய்வேன். ஆம், அந்த அளவிற்கு கணினி, இணைய இணைப்பு, கணினித்தமிழ், வலைப்பதிவு ஆகியவை முன்னேறி விட்டது.

இன்னும் பல முன்னேற்றங்கள் காண வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment