Tuesday, August 19, 2003

சிறுவர் கல்வி, மற்றும் கொடுமை

இன்றைய செய்தித்தாளில் கல்வி பற்றிய சிறு செய்திகள்.

1. சென்னை வேப்பேரியிலுள்ள டவ்டன் மடிக்குழைப் பள்ளியில் தமிழாசிரியர் (பால் தெரியவில்லை, ஆசிரியையாயும் இருக்கலாம்) தமிழ் எழுத்துக்களை சரியாக எழுதவில்லை என்று எல்.கே.ஜி படிக்கும் நான்கே வயதான பிஞ்சுச் சிறுமி ஒருத்தியை சரமாரியாக அடித்துத் தாக்கியதால், பெற்றோர்கள் குழந்தையை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர். மாநில மனித உரிமைக் கழகத்திடம் புகாரும் கொடுத்துள்ளனர். சில நாட்கள் முன்னர்தான் வேலம்மாள் மடிக்குழைப் பள்ளியின் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டது பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.

செய்தி

2. இன்னும் கொடுமையான செய்தி இது. செயிண்ட் மேரி மடிக்குழைப் பள்ளி, பல்லாவரத்தில், மூன்றாவது படிக்கும் சிறுமிகளை, விளையாட்டுத்துறை ஆசிரியர் வன்புணர்ந்தார் என்று உறுதியாகி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு ரூ. பத்து லட்சம் அபராதம் அந்தப் பள்ளி தரவேண்டும் என்று வசந்தி தேவி தலைமையிலான விசாரணைக் கமிஷன் உத்தரவு இட்டுள்ளது. நஷ்ட ஈடு கொடுத்து சரிக்கட்டக் கூடிய கொடுமையா இது? இது ஒரு பெண் குழந்தையை மட்டும் பாதிக்கவில்லை, இன்னும் பல குழந்தைகளையும் பாதித்திருக்கும் என்று கருத்து நிலவுகிறது.

செய்தி

3. இந்த ஹிந்து நாளேட்டில் வந்த செய்திக்கான சுட்டி இணையத்தில் கிட்டவில்லை. சென்னை மாநகராட்சி, கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறாருக்காகத் தனிப் பள்ளி தொடங்க இருப்பதாகச் செய்தி. எப்படியாவது இந்தக் குழந்தைகளை படிப்பு பக்கம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் வேலை செய்வதையும் நிறுத்த வேண்டும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.

கல்வியின் பால் அவர்களை ஈர்ப்பது சரி. ஆனால் அவர்களது வாழ்க்கையைப் பொறுத்த மட்டில் சுண்டல் விற்பதைத் தவிர்த்தால் அவர்களுக்கு சோறு கிடைக்கும் என்று தோன்றவில்லை. மாநகராட்சி மூன்று வேளையும் அவர்களுக்கு சோறூட்டி, தங்க இடம் கொடுக்குமா? இல்லாத நிலையில் அவர்கள் செய்யும் வேலையைச் செய்து கொண்டிருக்கட்டும். மதிய நேரத்தில் சுண்டல் எப்படியும் விற்க முடியாது. அப்பொழுது கல்வி கற்பிக்கட்டும். கொஞ்சம் நல்ல சோறும் ஒரு வேளையாவது போடட்டும்.

No comments:

Post a Comment