Thursday, August 28, 2003

சுந்தர ராமசாமியும் தினமலரும்

பிரபலத் தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு கதா சூடாமணி விருது, வாழ்நாள் முழுவதும் இலக்கியத்திற்கான சேவைக்காக வழங்கப்பட்டுள்ளது. நாமெல்லாம் இந்த இலக்கியத்திற்கான சேவை தமிழ் இலக்கியத்துக்கு என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ் நாளிதழான தினமலர் வேறு ஏதோ சொல்ல முயற்சிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

அவர்களது இணைய இதழில் இவ்வாறு எழுதியுள்ளனர்.

"இவர் [சு.ரா] பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், கவிதை, மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் முதலியன மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன."

இதைப் படிக்கும் போது, சு.ரா தமிழ் எழுத்தாளரா, இல்லை வேற்று மொழி எழுத்தாளரா என்பது புரியாமல் பொதுமக்கள் திகைக்க வேண்டிவரும்.

"இவர் எழுதிய 'ஒரு புளியமரத்தின் கதை' என்ற நாவல் ஆங்கிலத்திலும், இந்தியிலும், மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ரோனிட் ஙூஸ்ஸி என்பவரால் ஹீப்ரு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரின் ஜே.ஜே. என்ற நாவலின் குறிப்புகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது."

முதல் இரண்டு வரிகளைப் படிக்கையில் சு.ரா தமிழிலும் எழுதியிருக்கலாம் என்பது போன்ற தோற்றம் ஏற்படும். கடைசி வரியைப் படிக்கையில் அவர் எழுதிய மற்றுமொரு புத்தகத்தின் பெயர் "ஜே.ஜே" என்று அறிந்து, சரி, புரட்சித் தலைவி, பொன்மனச் செல்வி, டாக்டர் J.J பற்றி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கழகத் தொண்டர்கள் கடைகளுக்குப் புறப்படலாம்.

அப்புறம் ஏன் இந்தப் புத்தகத்தின் "குறிப்புகள்" மட்டும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, முழுப் புத்தகத்தையும் மொழிபெயர்க்க மாட்டார்களோ என்ற கேள்விகளும் வரும்.

தினமலர் சப்-எடிட்டரின் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத் தொண்டுக்காக அவருக்கு ஏதேனும் விருது கிடைக்குமா?

No comments:

Post a Comment