Sunday, August 17, 2003

கொழும்பு பயணம்

வேலை நிமித்தமாக இன்று ஒருநாள் கொழும்பு வர வேண்டியிருந்தது.

நேற்று இரவு ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணம். இப்பொழுது இந்தியப் பயணிகள் இலங்கை வருவதற்கு விசா வாங்க வேண்டிய தேவையில்லை. இறங்கியவுடன் விமான நிலையத்திலேயே கடவுச்சீட்டில் அனுமதி வாங்கிக்கொள்ளலாம்.

சென்னை விமான நிலையத்தில் இலங்கை ரூபாய்கள் வாங்க பாரத ஸ்டேட் வங்கியை அணுகினால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் பத்து நிமிடம் கழித்து வரச்சொன்னார். இருபது நிமிடம் கழித்துச் செல்கையில் அங்கு வேறொரு ஊழியர், மிகக் கண்ணும் கருத்துமாக ஏதோ அமீரகப் பணக்கட்டில் தாள்களை எண்ணிக் கொண்டிருந்தார். அவரும் சொன்னது: "இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்களேன்." கொஞ்சம் தள்ளி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியின் நாணய மாற்றுக் கிளை. அதற்கு முன் பெருங்கூட்டம். அங்கு போய் ஒரு வழியாகக் கொஞ்சம் இலங்கைப் பணத்தாள்களைப் பெற்றுக் கொண்டு வேண்டுமென்றே வம்புக்காக, ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பாரத ஸ்டேட் வங்கி ஊழியரை அணுகினேன். மீண்டும், "இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்க."

இரு வங்கிக் கிளைகளிலும் வேலை பார்ப்பது நம்மூர் ஆசாமிகள்தான். ஏன்தான் இப்படி ஒரு உழைப்பில் வித்தியாசமோ?

ஒரே இரைச்சலுடன் ஏர்பஸ் விமானம் சென்னையிலிருந்து கிளம்பி கொழும்பு வந்தடைய வெறும் ஒரு மணி நேரமே பிடிக்கிறது. சும்மா இல்லாமல் விமானத்தில் இருந்த 'தினமுரசு' என்ற வாரப் பத்திரிக்கையைத் திருப்பினால் உள்ளே சுஜாதாவின் தொடர்கதை 'வண்ணத்துபூச்சி வேட்டை' என்று நினைக்கிறேன். புதிதாக எழுதுகிறாரா அல்லது பழைய சரக்கா என்று தெரியவில்லை. வாலி தன் சொந்த வாழ்க்கை பற்றி எழுதுகிறார். நிறைய அரசியல் கட்டுரைகள். இந்தப் பத்திரிக்கை புலி ஆதரவா, எதிரா என்று புரியவில்லை. ரணில் விக்கிரமசிங்கேயின் பிரதம ஆலோசகர் ஸ்ரீலங்கன் நிறுவனத்தில் ஏதோ ஊழல் செய்து விட்டார் என்று ஒரு கட்டுரை. நம்மூர் சமாசாரம்தான். நடுப்பக்கம் திருப்பினால் குறைந்த ஆடைகளோடு கோடம்பாக்கம் "அழகிகள்" அழகு காட்டுகின்றனர். தமிங்கிலம் தலை விரித்தாடுகிறது. ஷாலினி அஜித்துக்கு அறிவுரை சொல்கிறாராம், "ஒழுங்கு மருவாதையா படத்துல நடி, சும்மானாச்சிக்கும் துப்பாக்கி சுடறது, கார் ரேஸ் போறதுன்னு டயத்த வேஸ்டு பண்ணாத". அப்புறம் கருணாஸுக்கும், விவேக்குக்கும் தகராறு, ரதி என்னும் நடிகையை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய தயாரிப்பாளர், பல "ஸ்டில்" படங்கள் என்று கண்ணுக்கு நிறைவாக இருக்கிறது. அடுத்த பìகம் இன்னும் பயங்கரம்: யாரோ ஒரு இலங்கைத் தமிழ் அபிமானி, நடிகர் விஜய் பேரில் எழுதிய அருமையான கவிதை, இன்னும் பல 'புதுக்கவிதை' என்ற பெயரில் சினிமாக்கள் பற்றி எழுதப்பட்ட கொடுமைகள்.

வெளியே வந்தால் குடியேறல் துறை அலுவலர் பொறுமையாக கடவுச்சீட்டில் அச்சடித்து வெளியே அனுப்புகிறார். சுங்க அதிகாரியைத் தாண்டி வெளியே வருகையில் நாளுக்கு நாள் மாறி வரும் கொழும்பு தெரிகிறது.

காரில் தங்குமிடத்துக்குச் செல்லும்போது, போர் நிறுத்தத்தினால் உள்ள தெளிவும், அமைதியும், கேளிக்கையும், சந்தோஷமும் மனதைத் தொடுகிறது. கூட்டம் கூட்டமாக இளம் பெண்களும், ஆண்களும் இரவு பதினொரு மணிக்கு மேல் தெருவில் கை கோர்த்து நடந்து கொண்டிருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் விளக்குச் சரங்கள் மின்னுகின்றன. எப்பொழுதும் காட்டமாக இருக்கும் தெருவோர செக்போஸ்டுகள், அதிலிருந்து முறைத்துப் பார்க்கும் கையில் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் என்ற கெடுபிடிகள் மிகவும் தளர்த்தப்பட்டுள்ளன. என் கடவுச்சீட்டைக் காண்பிக்கும்படி யாரும் கேட்கவில்லை.

இன்று காலையில் ஹோட்டல் அறையிலிருந்து வெளியே பார்த்தால் நுரை பொங்கும் கடலும், கரையெல்லாம் கூட்டமும். தெருக்களும், கடற்கரையும் சென்னையை விடப் பலமடங்கு துப்புறவாக உள்ளன.

அமைதி வேண்டும். சந்தோஷம் வேண்டும். தெருவில் கூட்டம் கூட்டமாய்ப் போய்க்கொண்டிருக்கும் இளைஞர்களை நினைத்துக் கொள்கிறேன். நன்றாகக் குடிக்கட்டும். காதலிலும், கலவியிலும் சந்தோஷம் பெறட்டும். அவ்வப்போது வேண்டுமென்றால் புத்தனோ, சிவனோ, சிலுவையோ, மசூதியோ அதன்முன் ஒரு நிமிடம் கண்மூடி நிற்கட்டும்.

அப்பொழுதாவது போர் மீண்டும் மூளாமல் தடுக்கப்படலாம்.

No comments:

Post a Comment