Saturday, August 30, 2003

அலாஸ்டேர் கேம்ப்பெலுக்கு கல்தா

கடைசியாக இந்த "spin doctor" வெளியே போகிறார். இவர் பிரித்தன் பிரதமர் டோனி பிளேரின் தகவல் துறை ஆலோசகராக இருந்தவர். உண்மையான வேலை என்னவென்றால் என்ன தகிடுதத்தம் நடந்தாலும் அதை நல்ல விஷயமாக உருமாற்றி பத்திரிக்கைகளுக்கு புருடா விடுவது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் மீது சண்டைக்குக் கிளம்பும்போதே பிளேருக்கு சனி பிடித்தது. பிளேர் ஒருவர்தான் புஷ் பக்கம். ஆனால் பிரித்தனில் அமெரிக்கா மாதிரி சும்மா வீர வசனம் பேசி மட்டும் படைகளை வெளி நாட்டுக்கு அனுப்ப இனியும் முடியாது. ஊருக்குள் நிறைய எதிர்ப்பும் வேறு. கேம்ப்பெல் உடனடியாக நிறைய புரட்டு வித்தைகள் செய்து இராக் அணுகுண்டு செய்வதாகவும், நுண்ணுயிரிகளை வைத்து பேரழிவு ஆயுதங்கள் படைப்பதாகவும், வெறும் 45 நிமிடத்தில் பிரித்தன் வரை வந்து அந்த ஆயுதங்கள் மூலம் நாட்டையே அழித்து விடக்கூடும் என்றும் மக்களுக்கு பயங்காட்டினார்.

இந்த "45 நிமிடம்" செய்திக்கு எந்தவித ஆதாரமும் இல்லை, கேம்ப்பெல்லின் இடைச்செருகல் என்று டேவிட் கெல்லி என்னும் பிரித்தன் அரசின் அழிவாயுத நிபுணர் பி.பி.சிக்கு போட்டுக் கொடுக்க, பிளேரின் அரசுக்கு ஆபத்து. உடனே டேவிட் கெல்லியை விடாது தொல்லைப்படுத்த அவர் கொடுமை தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டார். இப்பொழுது விசாரணைக் கமிஷன் எதுதான் உண்மை என்று தோண்டித் துருவ ஆரம்பிக்க, முதலாவது பலி கேம்ப்பெல். ராஜினாமா செய்து விட்டார்.

அடுத்து பிளேர் ஒழிய வேண்டும்.

No comments:

Post a Comment