Wednesday, October 29, 2003

சாராய விற்பனையை அரசு தன் கையகப்படுத்தியிருப்பது பற்றி

சில தினங்கள் முன்னால் தமிழக அரசு மணல் தோண்டுவது/விற்பது ஆகியவற்றைத் தனியாரிடமிருந்து பறித்து தாங்களே செய்வதாகச் சொன்னார்கள். தற்பொழுது 'இந்தியாவில் செய்த வெளிநாட்டு மது' (!! Indian made foreign liqour - IMFL என்பதன் மொழியாக்கம்) விற்பனை செய்வதைத் தனியாரிடமிருந்து பறித்து அதைத் தாங்களே செய்வதாகச் சொல்கிறார்கள்.

சாதாரணமாக அரசு தொழில் உற்பத்தி, வியாபாரம் ஆகியவற்றில் இறங்காமல் அரசாட்சி செய்வதில் மட்டும் முனைப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். ஆனால் மேற்குறிப்பிட்ட இரண்டும் ஊழல் மலிந்து, பொறுக்கிகளின் சாம்ராஜ்ஜியமாக இருக்கிறது.

மணல் குவாரி பிரச்சினை கொடுமையானது. கனிம வளம் போல மணலும் (ஆறுகளில் தண்ணீர்தான் இல்லை, மணலாவது இருக்கிறதே!) பொதுச் சொத்து. அதைத் திருடி அதிக லாபத்துக்கு விற்று வந்த காண்டிராக்டர்களும் கழகக் கட்சிக்காரர்களும் எதிர்த்த நேர்மையான அதிகரிகளை லாரி ஏற்றி கொன்றிருக்கின்றனர். ஆனால் அரசிடம் வந்து விட்டது என்பதற்காக ஊழல் நடக்காமல் இருக்கப் போவதில்லை. ஒருவேளை கொஞ்சம் குறையலாம்.

இந்த சாராய சமாச்சாரம்தான் கொஞ்சம் இடிக்கிறது. இங்கும் ஊழல், அரசை ஏமாற்றுதல் எல்லாம் இருக்கிறது. அதற்காக அரசு இந்தத் துறையை ஏற்று நடத்துவது சரியாகத் தோன்றவில்லை. அதனை விடுத்து மீண்டும் ஏலத்துக்கு விட்டு தனியாரிடமே இந்த வேலையை ஒப்படைப்பதே சரியானதாகும். ஏலம் எடுப்பவர்களுக்கான குறைந்த பட்சத் தகுதி, ஒருவருக்கு ஒரு கடைக்கு மேல் தருவதில்லை, அப்படி ஏலம் எடுப்பவர் வருமான வரி செலுத்த வேண்டும், அதற்கான PAN எண்ணைக் கொடுத்துதான் ஏலம் எடுக்க முடியும் என்றெல்லாம் செய்து பினாமிகளை ஒழிக்கலாம்.

மதுவிலக்கு என்றெல்லாம் பேசுவதில் இனியும் அர்த்தமில்லை. பியர் போன்றவை இன்னும் சிலகாலத்தில் பாதி வீடுகளில் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பெறும். பூச்சி மருந்துள்ள சாஃப்ட் டிரிங்க்ஸ் குடிப்பதை காட்டிலும் பியர் எவ்வளவோ மேல்!

No comments:

Post a Comment