Monday, May 15, 2006

வாக்களிக்காதவர்களுக்கு "அர்ச்சனை"

பொதுவாக, குடியாட்சி முறையில் தேர்தலில் நின்று தோற்றால், 'மக்களின் முடிவை மதிக்கிறோம்' என்றுதான் நாகரிகம் மிகுந்தவர்கள் சொல்வார்கள். தாம் ஏன் தோற்றோம், அல்லது ஜெயித்திருந்தாலும் ஏன் தாம் எதிர்பார்த்த அளவு இடங்கள் கிடைக்கவில்லை என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, எப்படி அடுத்த தேர்தலில் சிறப்பாக வெற்றி பெறுவது என்று முயற்சி செய்வார்கள்.

ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் வித்தியாசமானவர்கள். தனக்கு வாக்களிக்கவில்லை என்றால், அல்லது தான் எதிர்பார்த்த பெரும்பான்மை இல்லையென்றால், அதற்குக் காரணமாக இருக்கும் குடிமகன் முட்டாளாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள்.

சென்ற தேர்தலில் கருணாநிதி தோற்றபோது தனக்கு வாக்களிக்காதவர்களை "சோற்றாலடித்த பிண்டங்கள்" என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். இப்பொழுது ஜெயித்தபின்னும் தாங்கள் எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தமிழக மக்களை ஒரு வாங்கு வாங்கியுள்ளார்.
தமிழர்களுக்கு தங்களது இனம் குறித்த தெளிவு இல்லை. கடந்த ஆட்சியாளர்கள் தமிழ் இனத்துக்கு எதிராகச் செய்த செயல்களை எல்லாம் திமுக கூட்டணித் தலைவர்கள் சுட்டிக்காட்டிப் பிரசாரம் செய்தனர்.

முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராஜா உள்பட முக்கியத் தலைவர்கள் கடந்த ஆட்சியால் ஏற்பட்ட தீமைகள் குறித்து விளக்கிப் பிரசாரம் செய்தனர். இதன் பிறகும் கடந்த ஆட்சியாளர்களுக்கு நல்ல ஆதரவு அளித்துள்ள நிலையைப் பார்க்கும்போது தமிழர்களுக்குத் தெளிவு இல்லை என்பது புரிகிறது. தமிழர்களுக்கு தமிழர் என்ற எண்ணம் இல்லை. திராவிடர் என்ற எண்ணம் இருந்தால் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்து இருக்க மாட்டார்கள் என்றார் அன்பழகன்.
Bravo! இன உணர்வு, பரம்பரைப் பகை ஆகிய விஷயங்கள் தவிர்த்து வேறு ஏதேனும் இந்தத் தேர்தல் முடிவுகளுக்குக் காரணமாக இருக்குமா? கடந்த ஆட்சியாளர்கள் என்ன இனம்? குரங்கினம்? ஆரிய இனம்? கடந்த ஆட்சியாளர்களோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டவர்கள் என்ன இனம்? ஜெயலலிதாவை விட்டுவிடுவோம். வைகோ, திருமாவளவன் ஆகியோர் என்ன இனம்? கேப்டன் விஜயகாந்த் என்ன இனம்?

இந்தத் தேர்தலும் சரி, இனி வரப்போகும் தேர்தல்களும் சரி, இனங்களுக்கு இடையேயான தேர்தல் இல்லை. இனியும் திமுக இந்த பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருக்க முடியாது. பார்ப்பனர்களை ஒட்டுமொத்தமாக அழித்து ஒழித்துவிட்டாலும் (அல்லது ஒரு வண்டியில் ஏற்றி மத்திய ஆசியாவுக்கு அனுப்பிவிட்டாலும்) தமிழகத்தில் ஏழெட்டுக் கட்சிகள் இருக்கும். அதில் யாரும் திராவிட/தமிழ் இனத்துக்குத் தனிச்சொந்தம் கொண்டாட முடியாது. எனவே வாக்குகள் சிதறும். அப்பொழுது இன உணர்வைத் தவிர வேறு காரணங்களும் இருக்கும் என்று பேராசிரியர் யோசிக்க வேண்டியிருக்கும்.

பேராசிரியருக்கு தான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தோம் என்ற எண்ணம் கோபத்தை வரவழைத்துள்ளது போலும். அவர் சிறுமையான எண்ணங்களை விடுத்து தமிழக நிதி நிலையைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சீக்கிரத்தில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

16 comments:

  1. பேராசிரியரை நானூறு வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வைத்தவர்களுக்கு இதுதேவைதான். பேராசிரியர் நல்ல முன்மாதிரி.

    ReplyDelete
  2. மிகக் குறைவானவர்களே இனம் பார்த்து வாக்களிப்பதாக தெரிகிறது.

    மக்கள் ஏதேனும் மாற்றம் தேடுகிறார்கள்.

    அந்த மாற்றம் இந்த தேர்தல் அமைப்பில் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

    மாற்றத்தை ஏற்படுத்த வழி இல்லாமையால், மக்கள் தான் உண்மையில் கோபப்பட வேண்டியவர்கள்

    ReplyDelete
  3. ஆதரித்தும் எதிர்த்தும் வாக்களித்தவர்கள் ஏதோ கருத்தைக் கொண்டுதானே செய்திருக்கிறார்கள்?

    இதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் தமிழகத்தில் எந்த அரசியல் வாதிக்கும் இல்லை. திமுக அதிமுக இரண்டுமே இப்போது தங்கள் நிலை குறித்து சுயபரிசீலனை செய்து கொண்டால்தான் நாடு உருப்படும்.

    ReplyDelete
  4. உண்மையில் மாறி மாறி ஆட்சி செய்தும் உருப்படியான ஆட்சி நடத்த இயலாத இருகழகங்கள் மேலும்தான் மக்களுக்கு வெறுப்பு. ஒரு நல்ல மாற்று அணி அமைந்திருந்தால் ஆட்சியை அவர்களிடம்கொடுத்திருப்பார்கள். இதை இன்னும் புரிந்துகொள்ளாமல் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் இருவருக்குமே நட்டம்தான்.

    ReplyDelete
  5. //கடந்த ஆட்சியாளர்கள் தமிழ் இனத்துக்கு எதிராகச் செய்த செயல்களை எல்லாம் திமுக கூட்டணித் தலைவர்கள் சுட்டிக்காட்டிப் பிரசாரம் செய்தனர்.//

    தாங்கள் தமிழ் இனத்துக்கு செய்த "சாதனைகளை" சொல்லி வாக்கு கேட்க முடியலையே என்ற ஆதங்கமாகவே இந்த பேச்சு தோன்றுகிறது.

    (பெரிதாக ஒன்றும் இல்லையே!!!!ஏட்டலவில் தமிழ் செம்மொழி! வளர்க தனது இயக்க தூண்கள் எடுத்து கொண்ட முயற்சி????)

    ReplyDelete
  6. எத்தனை இடங்களில் பேராசிரியர் வந்திருக்குது?!

    ReplyDelete
  7. //பேராசிரியருக்கு தான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தோம் என்ற எண்ணம் கோபத்தை வரவழைத்துள்ளது போலும்.//

    இது தான் உண்மை .அவர் இதற்கு தன் தரப்பில் என்ன காரணம் என்று கண்டறிய வேண்டும் .அதை விட்டு விட்டு இப்படி சொல்வது நிதியமைச்சருக்கு அழகல்ல

    ReplyDelete
  8. Mr.Badri,

    I believe Mr.Anbazagan having some maturity.

    ReplyDelete
  9. One can only laugh at this pathetic thinking and approach, that too from a seasoned politician !

    ReplyDelete
  10. In spiritual field they say we cannot change the samskaras of a person. This is true for DMK party. I can only remember a proverb
    " Nayya Kulipatti Nadu veetla ...

    with best
    CT

    ReplyDelete
  11. நீங்கள் சொல்வது போல இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவார்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் ஒரு மூலையில் கருணாநிதிக்கு பிறகு என்றக் கேள்வி எழும்போது, தற்போதைய சூழ்நிலையில் அடுத்த வரிசையில் ஒரு தலைவர் திமுகாவில் இல்லை என்பதால் ஜெயலலிதாவின் எதிர்காலம் நன்றாக இருப்பதாகத்தான் தெரிகிறது.

    ReplyDelete
  12. எல்லா அரசியல்வாதிகளும் ஒரே இனம் என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும் தப்பில்லை...

    இனம் பற்றிய கண்ணோட்டம் common man எனப்படும் பொதுமக்கள் மத்தியில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    தவிர, இந்தியாவில் இன அடிப்படையில் இயங்குவதாகச் சொல்லும் (இனத்தின் பெயரால் கட்சி நடத்தும்) திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, திக....இதெல்லாம் சட்டப்படி சரியா ஸார்? i mean, can a political party speak openly in racial terms.....`இன உணர்வு கொள்' என்று சொல்வதில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ, சட்டப்படி அது முறையானதா? நரேந்திர மோடியே சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம், இவர்கள் `இனம்' என்று சொன்ன இடத்தில் `மதம்' என்று நிரப்பிக்கொள்வோம்....சும்மாவிடுவார்களா நடுநிலையாளர்கள் `racist' `facist' என்றெல்லாம் சொல்லமாட்டார்களோ...இப்போது மட்டும் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்...?

    இன்னொரு விஷயமும் எனக்குப்படுகிறது...அடிக்கடி தமிழினம், தமிழினம் என்று சொல்வதன் மூலம் அந்த உணர்வே இல்லாமற்போகிறதோ என்றுகூடத் தோன்றுகிறது

    ReplyDelete
  13. வாக்களிக்காதவர்களும் இனி 'அர்சனை' செய்யலாமாம். அனைவரும் அர்சகராக்க உத்தரவு தயார்

    ReplyDelete
  14. Book exhibition at Tamil University


    http://www.hindu.com/2006/05/17/stories/2006051719990300.htm

    "More than 100 publishers from all over the State are expected to display their books in the exhibition."

    Are you there ?

    ReplyDelete
  15. அன்பழகன் கொஞ்சம் பக்குவமடைந்தவர் என நினைத்து அவரிட முதல்வர் பொறுப்பு ஒப்படைக்க கூடாதா என ஏங்கினேனே! செ!

    ReplyDelete