Friday, May 19, 2006

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு தொடர்பாக என்னை நானே கேட்டுக்கொண்ட சில கேள்விகளும் எனக்குத் தோன்றிய சில பதில்களும். இந்தக் கேள்விகளுக்கான சில பதில்கள் நிச்சயமாக முழுமையாக இல்லை. என் நிலை வேறுபடும்போது, அல்லது புரிதல் அதிகமாகும்போது அவற்றைப் பற்றி எழுதுகிறேன்.

1. அரசினால் நடத்தப்படும் உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அவசியமா?

பதில்: ஆம். சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்ய இட ஒதுக்கீடு அவசியம். அரசினால் ஏற்படுத்தப்பட்டு, கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்குவதாக அறியப்படும் கல்விச்சாலைகளில் அனைத்து சமூக மக்களும் படிப்பதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவது மிக அவசியம். இதன்மூலம் மட்டும்தான் social capital வளர்ச்சி அடையும். இந்த social capital இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் தொகைக்கு நிகரான அளவு இல்லை. இதற்குக் காரணம் பல சமூக மக்களுக்கு உயர் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் இடங்கள் கிடைப்பதில்லை. இதனால் தனிப்பட்ட சில சமூகங்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கெடுதல். நாம் நினைத்த அளவு வேகமாக நம்மால் முன்னேற முடியாது. பிறபடுத்தப்பட்டோரின் நலம் என்பது அவரவர்களுடைய கவலை மட்டுமல்ல, நாட்டின் மொத்தக் கவலை.

2. மெரிட் மூலம் ஒரு கல்விக்கூடத்துக்கு மாணவர்களைச் சேர்க்காமல் இட ஒதுக்கீட்டினால் மாணவர்களைச் சேர்ப்பது சரியா?

பதில்: ஒரு கல்விக்கூடத்தில் குறிப்பிட்ட இடங்கள்தான் (2000 என்று வைத்துக்கொள்வோம்) உள்ளன என்ற நிலையில் அந்த இடங்களை ஒரு நுழைவுத்தேர்வின்மூலம் தீர்மானித்து அந்தத் தேர்வில் முதல் 2000 இடங்களில் இருப்போர் மட்டுமே அந்தக் கல்விக்கூடத்துக்குள் நுழைய முடியும் என்று தீர்மானிப்பதே சரியான செயல் என்று சிலர் வாதிக்கிறார்கள். இதனால் 2001 முதல் 10,000 வரையிலான இடத்தில் இருப்பவர்கள் தகுதியற்றவர்கள் என்று ஆகிவிடாது. தேர்வு நடந்த நாளன்று இருக்கும் மனநிலை, தேர்வுச்சூழல் உருவாக்கும் பதற்றம் ஆகிய பல காரணங்களால் சிலர் ஓரிரு தவறுகளை அதிகமாகச் செய்வதும், சிலர் குருட்டாம்போக்கில் சில கேள்விகளுக்கு பதில் கொடுக்க அதனால் அதிக மதிப்பெண்களைப் பெறுவதும் நிகழ்வதுதான். இந்த "மெரிட்" எனப்படும் முறை மட்டும்தான் ஒரு கல்விக்கூடத்தில் மாணவர்களைச் சேர்க்க சரியான முறையா?

இல்லை. ஒரு படிப்பைப் படிக்க விரும்பும் aptitude, அந்தப் படிப்பைத் திறம்படப் படித்து முடிக்கத் தேவையான குறைந்தபட்சத் திறமை - இந்த இரண்டே போதும். அப்படிப்பட்ட நிலையில் மேலிருந்து கீழாகத்தான் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு கல்வி நிலையம் நினைக்கவேண்டியதில்லை. பிற காரணங்கள் இருக்கலாம்; இருக்க வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்துவது மிக முக்கியமான ஒரு காரணம். வெறும் படிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாது, விளையாட்டுத் திறன், செயலாற்றும் திறன் கொண்ட மாணவர்களைச் சேர்ப்பது, (ஆண்-பெண்) பால் சமன்பாடு , சமூகச் சமன்பாடு, கிராம-நகரச் சமன்பாடு, பொருளாதாரப் பின்னணிச் சமன்பாடு, மதச் சமன்பாடு போன்ற பலவற்றை ஒரு கல்வி நிலையம் விரும்பி வரவேற்றுச் செயல்படுத்தவேண்டும். இதன்மூலமாகத்தான் பல கருத்துகள் ஒரே இடத்தில் பரவி, socially well rounded மாணவர்களை உருவாக்க முடியும்.

அனைத்து மக்களும் எல்லா நலன்களையும் பெறவேண்டும் என்ற கருத்து அரசுக்கு இருக்கவேண்டும்.

3. இட ஒதுக்கீட்டினால் தரம் குறையாதா?

பதில்: இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் வரும்போதெல்லாம் தரம் குறையும் என்றொரு சாக்கு சொல்லப்படுகிறது. தரம் என்பதை ஒரு பாடத்திட்டத்தின் மீதான தேர்வு நிர்ணயிக்கும் என்று எடுத்துக்கொண்டாலும்கூட இட ஒதுக்கீட்டினால் உள்ளே வந்த மாணவர்களும் அதே தேர்வை எழுதித்தான் வெற்றி பெறுகின்றனர். இட ஒதுக்கீடு என்பது தேர்வு முறையிலோ கற்பித்தல் முறையிலோ மாற்றத்தைக் கொண்டுவருவதில்லை. கொண்டுவரக்கூடாது.

இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும்போது பலரும் மருத்துவர்களை உதாரணம் காட்டிப் பேசுகிறார்கள். "உனக்கு உடம்புக்கு வந்தால் நீ இட ஒதுக்கீட்டில் வந்த டாக்டரிடம் போவாயா, அல்லது மிகச்சிறந்த மருத்துவரிடம் போவாயா" என்று கேட்கிறார்கள். யாருக்கு உடம்புக்கு வந்தாலும் உடனே ஏதோ ஒரு டாக்டரிடம் போகிறார்கள். அந்த டாக்டரைத் தேர்வு செய்யும்போது அவர் அகில இந்தியாவிலும் சிறந்த டாக்டரா என்று யாரும் பார்ப்பதில்லை. அந்த டாக்டர் நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறாரா? எவ்வளவு கட்டணம் வசூலிப்பார் - நம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா? நாம் போகும் நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருப்பாரா? இவற்றை மட்டும்தான் நாம் பார்க்கிறோம். மருத்துவர்களை அழைத்து அவர்கள் எத்தனை மார்க்குகள் வாங்கினர், நுழைவுத்தேர்வில் எந்த இடத்தில் இருந்தனர் என்றெல்லாம் பார்ப்பதில்லை.

இட ஒதுக்கீட்டு முறையில் டாக்டரானவர் மோசமான டாக்டர் என்றும், சிறந்த டாக்டர் நிச்சயமாக பொதுப்போட்டியில் வந்தவரென்றும் ஒருவர் நினைக்கிறார் என்றால் அது அவரது மோசமான மனநிலையைக் காண்பிக்கிறது. இட ஒதுக்கீட்டின் நோக்கம் குறைந்த தகுதியில் ஒருவரை நாட்டில் கட்டவிழ்த்துவிடுவது அல்ல. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றிபெறும் ஏழு லட்சம் மாணவர்களின் ஒரு லட்சம் மாணவர்களை மருத்துவப் படிப்பு படிக்க வைக்க முடியும். ஆனால் 2,000 இடங்கள்தான் உள்ளன என்றால் இந்த ஒரு லட்சத்தில் எந்த 2,000 பேரையும் மருத்துவர்களாக்கலாம். அதனால் எந்தக் குறையும் ஏற்படாது.

4. இட ஒதுக்கீடு சலுகையா அல்லது உரிமையா?

பதில்: மிலிடண்ட் சமூக நீதிக்காரர்கள் இட ஒதுக்கீட்டை உரிமை என்கிறார்கள். இது எனக்கு ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு என்பது சலுகைதான். ஆனால் இந்தச் சலுகை இப்பொழுதைக்கு அவசியம். நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனி மனிதர்களுக்கு என்று சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தனி மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படுபவனதான் உரிமைகள். ஒரு குறிப்பிட்ட சமுதாயம், தொழில்துறை, நிலப்பகுதி ஆகியோருக்கு மட்டும் வழங்கப்படுவது சலுகைதான். உரிமை அல்ல.

ஆனால் சலுகை என்பதாலேயே அது இருக்கக்கூடாது என்று யாரும் சொல்லமுடியாது. விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதால் அவர்களுக்குக் கொடுத்த கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. சலுகையாக. அதையே அவர்கள் உரிமை கொண்டாடினால் என்ன ஆகும்? சலுகை என்பது தாற்காலிகமானது. அது எவ்வளவு வருடங்கள், எவ்வளவு தலைமுறைகள் என்பதை வெவ்வேறு காலகட்டத்தில் முடிவு செய்யவேண்டும்.

சலுகைகள் கொடுக்கப்படும்போதே எந்நிலையில் சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனால் ஒரு காலத்தில் சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டியது அவசியம்.

5. இட ஒதுக்கீடு என்பது தனி மனிதர்களின் உரிமையை பாதிக்கிறதா?

பதில்: இட ஒதுக்கீடு தனி மனிதர்களின் உரிமையை பாதிப்பதில்லை. ஆனால் சிலரது விருப்பங்களை பாதிக்கிறது. அவர்களது கனவுகளை பாதிக்கிறது. ஆனால் ஓர் அரசால் எல்லாத் தனி மனிதர்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யமுடியாது. எனவே தத்தம் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ள தனி மனிதர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டும். இன்று பல முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

அரசின்மீது ஒரு குற்றத்தை இந்த மாணவர்கள் நியாயமாகச் சுமத்தலாம். சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பெருத்த மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும் வேண்டிய அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளையும் பிற கல்லூரிகளையும் கட்டியுள்ளன. இந்தியா அவ்வாறு செய்யவில்லை. தனியாரையும் ஊக்கப்படுத்துவதில்லை. ஆனால் இந்தக் குறைகளை மட்டுமே காரணம் காட்டி இட ஒதுக்கீட்டின் நியாயத்தை மறுக்க முடியாது.

இந்திய அரசு தானும் உயர்கல்விக்கூடங்களை அதிகமாக ஏற்படுத்தவேண்டும்; தனியாரையும் தரமான உயர்கல்விக்கூடங்களைக் கட்ட ஊக்குவிக்கவேண்டும்.

6. அரசு உதவிபெறாத தனியார் கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமா?

பதில்: செய்யவேண்டும். தவறில்லை. இத்தகைய இட ஒதுக்கீட்டினால் இந்தத் தனியார் கல்விக்கூடங்கள் தம் வருமானத்தை இழக்கப்போவதில்லை. யாரை மாணவர்களாகச் சேர்த்தாலும் குறிப்பிட்ட கட்டணத்தை அவர்கள் கட்டினால் கல்விக்கூடத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் இட ஒதுக்கீட்டில் இடங்கள் நிரப்பப்படவில்லை என்றால் அந்த இடங்களை பிற மாணவர்களைக்கொண்டு நிரப்பலாம் என்ற உரிமையை இந்தக் கல்விக்கூடங்களுக்குத் தரவேண்டும்.

7. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமா?

பதில்: இதற்கு 'unconditional ஆம்' என்ற பதிலைச் சொல்லமுடியாது. கல்விக்கூடங்களில் அல்லது அரசு நிறுவனங்களில் செய்வது போலல்லாமல் தனியார் நிறுவனங்கள் வேலை தடைபடுவதுபோல எதையும் சட்டமாகக் கொண்டுவரக்கூடாது. அவ்வாறு செய்வது தனியார் நிறுவனங்களின் உரிமையை மீறுவதாகும். தனியார் நிறுவனங்கள் discrimination செய்யக்கூடாது என்பதைச் சட்டமாக்கலாம். அதாவது தகுதி படைத்த பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை கொடுக்கமாட்டேன் என்று சொல்வது குற்றமாக்கப்படவேண்டும். ஆனால் வேலைக்குச் சேர்பவர்களில் இத்தனை சதவிகிதம் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்று திணிக்கக் கூடாது.

இட ஒதுக்கீடு என்பது தகுதிக்குறைவை ஏற்படுத்தும், அதனால் தனியார் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற எண்ணத்தால் நான் இதனைச் சொல்லவில்லை. ஆனால் அசீம் பிரேம்ஜி, கபில் சிபால் ஆகியோர் பேச்சுகளில் இந்தத் தொனிதான் உள்ளது.

லாப நோக்குள்ள நிறுவனங்கள் அனைத்துமே தமது லாபத்தை அதிகப்படுத்த, (சட்டத்தின் வழியில்) என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்வார்கள். இன்றைய சந்தைப்பொருளாதாரச் சூழ்நிலையில் நிறுவனங்களுக்கு வேகம் முக்கியம். கண்ணில்படும் தகுதியான முதல் ஆளை வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலையை உடனடியாகச் செய்துமுடிக்கவே அவர்கள் விரும்புவார்கள். நான் இதற்குமுன் வேலைசெய்த நிறுவனத்திலும் சரி, இப்பொழுது வேலை செய்யும் நிறுவனத்திலும் சரி, வேலைக்கு ஆள் வேண்டுமென்றால் அலுவலகத்தில் உள்ள பிறரிடம் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று கேட்போம். அதற்கடுத்து ஏதாவது மனிதவள நிறுவனத்திடம் தகுதிபடைத்தவர்களை அனுப்பச் சொல்லிக் கேட்போம். இந்த இரண்டு முறையிலுமே சாதி, மதம் என்று எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. நமது எதிர்பார்ப்புக்கு அருகில் வரும் முதல் ஆளைத் தேர்ந்தெடுப்போம். அவ்வளவே.

எல்லா சமூகத்தினருக்கும் தேவையான படிப்புப் பின்னணி இருக்கும்போது வேலை பார்க்கும் இடத்திலும் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பலாம். அவ்வாறு நடக்காமல் சிலரை வேண்டுமென்றே ஒதுக்குகிறார்கள் என்று தெரியவந்தால் அதனைச் சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தகுந்தவாறு சட்டங்கள் கொண்டுவரலாம்.

அத்துடன் சமூக நீதிக்கு என்று அதிகமாகத் துணைபுரிய தனியார் நிறுவனங்கள் வந்தால் அவற்றை ஊக்குவிக்க அரசு முனையலாம்.

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை சட்டபூர்வமாகத் திணிக்க முயல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

8. பிற்படுத்தப்பட்டோருள் Creamy layer என்று முடிவுசெய்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது எனலாமா?

பதில்: சமூகத்தின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகையை தமக்குள்ளாக எவ்வாறு பிரித்துக்கொள்வது என்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இதனை வேண்டுவதை பிற்படுத்தப்பட்டோர் தவறாக எடுத்துக்கொள்ள நேரிடலாம்.

ஒருமுறை இட ஒதுக்கீட்டைப் பெற்றால் போதுமா, அல்லது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள்வரை அது தொடர்ந்தபின்னர் அந்தக் குடும்பம் creamy layer என்ற வரையறைக்குள் வருமா? Creamy layer-இல் ஒருவர் உள்ளார் என்பதைக் கண்காணிக்க National database ஒன்றை உருவாக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களிடமிருந்து வந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் creamy layer என்று இல்லாவிட்டால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பிற பிற்படுத்தப்பட்டோர்தான்.

9. இட ஒதுக்கீடு 50%க்கு உட்பட்டுதான் இருக்கவேண்டுமா? அதற்கு மேலே ஏன் செல்லக்கூடாது?

பதில்: இட ஒதுக்கீடு என்பதை ஏற்றுக்கொண்டபிறகு ஏன் 50%-ல் நிற்கவேண்டும்? 60%? 70%?

ஒரு சிலர் ஒவ்வொரு சமூகத்தினரும் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று பார்த்து அதற்கேற்றவாறு அவரவர்களுக்கு இத்தனை என்று ஒதுக்கிவிடலாமே என்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. இது BC, MBC, SC, ST என்று மட்டும் நிற்காமல் மேற்கொண்டு பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டே போக வழி செய்யும். ஏனெனில் ஒவ்வொரு சமூகத்திலும் அதிலுள்ள உட்பிரிவுகள் தங்களுக்கான இடங்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று நினைப்பார்கள். அதன் வெளிப்பாடுதான் தமிழகத்தில் MBC உருவானது.

50% என்பது ஓர் arbitrary position. இது 60% ஆக இருந்திருக்கலாம், அல்லது 45% ஆகவும் இருந்திருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவாக வைத்திருப்பதன் நோக்கம் பொதுப்போட்டிக்கான களம் எப்பொழுதும் இருக்கும், அது முடிவில் 100% ஆகும் என்பதை முன்வைக்கவே. 50%க்கு மேலாக இட ஒதுக்கீடு என்றால் கண்ணில் இட ஒதுக்கீடு மட்டும்தான் தெரியும். அது இட ஒதுக்கீட்டை முழுமையான ஒரு தீர்வாகவும் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கும் ஒரு தீர்வாகவும் காட்டும்.

அது அப்படிப்பட்ட தீர்வு என்று எனக்குத் தோன்றவில்லை.

10. முற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வேண்டுமா?

பதில்: தேவையில்லை. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை சார்ந்ததல்ல. இன்றைய சந்தைப் பொருளாதாரச் சூழ்நிலையில் படிப்புக்குக் கடன் கொடுக்க பல வங்கிகள் முன்வருகின்றன. நல்ல கல்விக்கூடத்தில் இடம் கிடைக்கும் என்றால் அதற்கு ஆகும் செலவை இன்று ஒருவரால் கடனாகப் பெற முடியும்.

இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதிகளுக்கு இடையேயான சமன்பாட்டைக் கொண்டுவருவதுதானே ஒழிய, பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதல்ல. புதிதாக ஏற்படும் வேலை வாய்ப்புகளும் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையும் ஏழைகளின் நிலையை நிச்சயமாக மேலே தூக்கும்.

======

பிற பதிவுகள்:

சுந்தரமூர்த்தி: முதல் தலைமுறையில் படித்து வந்த OBC நண்பர்கள் கவனத்திற்கு
அருள் செல்வன்: இட ஒதுக்கீடு - இன்று
ரவி ஸ்ரீனிவாஸ்: இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா? | இட ஒதுக்கீடு - 2

50 comments:

  1. Liked Your Post..Keep it up

    ReplyDelete
  2. ஐ.ஐ.டி பட்டதாரி பத்ரியின் பண்பான அலசல்.நேர்மையான அலசல்.

    கீரிமீ லேயர் என்பதிலும் விவாதங்கள் தேவைதான். பணம் இருந்தால் படிப்பு வருமா என்பது பற்றியும் இங்கு எங்கும் விரிவாக விவாதிக்கப் படுவதில்லை.

    வருவதெல்லாம் மட்டையடிகளே...

    மிகவும் நன்றி பத்ரி

    ReplyDelete
  3. எந்த ஜாதியாக இருந்தாலும் ஏழைகள் முன்னேற இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. //முற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வேண்டுமா?

    பதில்: தேவையில்லை. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை சார்ந்ததல்ல. இன்றைய சந்தைப் பொருளாதாரச் சூழ்நிலையில் படிப்புக்குக் கடன் கொடுக்க பல வங்கிகள் முன்வருகின்றன. நல்ல கல்விக்கூடத்தில் இடம் கிடைக்கும் என்றால் அதற்கு ஆகும் செலவை இன்று ஒருவரால் கடனாகப் பெற முடியும்.//

    இதற்கு வங்கியாளர்கள் முத்து (தமிழினி) மற்றும் ஜோசப் அவர்கள் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பரம ஏழை
    என்று தெரிந்தால், உயர்ந்த மதிப்பெண் இருந்தாலும், வங்கிகளில் கடன் கிடைக்காது என்பது எனக்கு கிடைத்த செய்தி,

    ReplyDelete
  5. நல்ல பதிவுங்க.
    எனக்கு இந்த இட ஒதுக்கீடுன்ற விஷயம் கொஞ்சம் புரியாமத்தான்
    இருந்தது. இப்பத் தெளிவாப் புரியுதுங்க.

    நன்றிங்க.

    ReplyDelete
  6. //இதற்கு வங்கியாளர்கள் முத்து (தமிழினி) மற்றும் ஜோசப் அவர்கள் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பரம ஏழை
    என்று தெரிந்தால், உயர்ந்த மதிப்பெண் இருந்தாலும், வங்கிகளில் கடன் கிடைக்காது என்பது எனக்கு கிடைத்த செய்தி, //


    இது சம்பந்தமாக சற்று நாட்களுக்கு முன் வரை இருந்த தயக்கம் இன்று வங்கிகள் மத்தியில் குறைந்து வருகிறது.

    சிதம்பரம் பிரஸ்ஸர் தருகிறார்.உருப்படியான வேலை.ஆகவே பல வங்கிகளும் கடன் தருவதில் போட்டி போடுகின்றன.

    படிக்க போகும் படிப்பை பொறுத்து, வங்கியில் அவருக்கு இருக்கும் அறிமுகத்தை பொறுத்து, வங்கி மேலாளரின் சமூக நீதி எண்ணங்களை பொறுத்து,கேட்கப்படும் கடன்தொகையை பொறுத்து இது நடக்கும்.

    ReplyDelete
  7. சரியான கருத்துகள் பத்ரி...

    ReplyDelete
  8. பத்ரி நல்ல பதிவு: ஒரு சில விஷயத்தில் கருத்து மாறுபாடு உள்ளது.

    1. இடஒதுக்கீடு என்பது உரிமைதான். இது பல நூற்றாண்டு காலமாக பறிக்கப்பட்ட உரிமை. மறுக்கப்பட்ட உரிமை. இந்த உரிமைகள்தான் இன்றைக்கு உயிர்ப்பிக்கப்படுகிறது. இதனை சலுகை என்று ஏற்றுக் கொண்டால், ஏறக்குறைய இதனை பிச்சை அளவிற்கு கொண்டு சென்றிடலாம். தேவைப்பட்டால், வழங்கலாம். இல்லையென்றால் மறுக்கலாம். இந்திய சமூக சூழலில் ஒரு சமத்தன்மை நிலவிட இடஒதுக்கீட்டு என்பது அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஒரு உரிமையே. 50 ஆண்டு காலமாக இதனை மறுத்து வருவதே சட்ட விரோதமானது.

    2. அடுத்து, தனியார் உரிமையில் தலையிடுவதாகும். என்ன மறந்து விட்டீரா, இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது பல தனியார் வங்கிகளை அரசுடைமையாக்கிடவில்லையா? அதுபோல் எந்த தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே நடந்திட வேண்டும். அவர்கள் தனியார் என்பதால் பெரும் கொம்புகள் எல்லாம் முளைத்து விடவில்லை. சமூக சமத்தன்மைக்கு எதுவெல்லாம் பொருத்தமானதோ அதனை கறாறாக அமலாக்கிட வேண்டும்.

    3. கிரிமி லேயர் பின்பற்றிட வேண்டும். இதனால் சமூகத்தில் சுழற்ச்சி முறையில் அனைத்து தலைமுறையினரும் பயனடைய ஏதுவாக இருக்கும்.

    ReplyDelete
  9. இது குறித்து இதுவரை நான் படித்ததில்/கேட்டதில் இதுவே most sensible stuff.

    நீங்கள் சொல்வதில் முழுமையான உடன்பாடு - மட்டுமல்லாமல், என் எண்ணங்களையும் சீர் செய்ய உதவியது.

    நன்றி

    ReplyDelete
  10. நல்ல விரிவான பதில்கள் பத்ரி. இட ஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறார்கள் ? என்பதைப்பற்றி இன்னும் ஆழமான அலசல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    அன்புடன்
    சேவியர்

    ReplyDelete
  11. Badri, can you translate this to english. It is important to share this others too.

    ReplyDelete
  12. பத்ரி,


    உங்களது பதிவில் உடன்பட்டும் வேறுபட்டும் பல கருத்துக்கள் உள்ளன. பொதுவாக இடஒதுக்கீடு பிரச்சினையில் (உங்களைப் போன்ற ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து) நாம் எடுக்கும் முடிவுகள் பாரபட்சமின்றி அமைவதில்லை.

    ஆனால், நான் சொல்ல வருவது வேறு. இதை மையமாக வைத்து குறைந்தபட்சம் கல்வித்துறையில் ஒரு லிபரலைஷேசனைக் கொண்டுவர ஆளும் முற்பட்டோர் முயல்வர் என்றே தோன்றுகிறது(ஏற்கெனவே மண்டல் சமயத்தில் இது நிகழ்ந்தது). அப்படி நிகழ்ந்தால் (நிகழும் என நினைக்கிறேன்) - அது நாட்டிற்கு நல்லதே.


    பக்கத்தில் உள்ள சீனாவைப் பாருங்கள். கல்விக்கான கதவுகளைத் திறந்துவிட்டு பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அங்கு கேம்பஸ் துவக்க வைத்துள்ளனர். துபாய் போன்ற நாடுகளெல்லாம் கூட இது போன்று செய்யும்போது நாம் ஏன் இன்னும் நமது கதவுகளை மூடிவைத்துக் கொள்ளவேண்டும்?


    ஒரு ஐ.ஐ.எம் சிங்கப்பூரில் ஒரு நர்சரி பள்ளிக்கான வசதிகளோடு 'கேம்பஸ்' துவங்குவதற்கே இத்தனை விவாதங்கள்,கூப்பாடுகள்.


    இன்று இன்ஜினியரிங் கல்லூரிகள் இத்தனை வந்தபிறகு சீட் கிடைக்குமா என்ற கவலை போய்விட்டது. தகுதி மிகுந்த கல்லூரிகள் நாளடைவில் நிலைத்து நிற்கும். தகுதியில்லாதவை அழிந்து போகும்.


    இது போலவே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் கதவைத் திறப்போமே. தோன்றட்டும் ஓராயிரம் நிறுவனங்கள். இதில் வேண்டுமானால் எதாவது ஒரு கிரைடிரியாவை அரசு முடிவு செய்து கொள்ளட்டும். எதாவது ஒரு இண்டிக்கேட்டரில் டாப்-20 அல்லது 30 நிறுவனங்களைத்தான் அனுமதிப்போம் என்று ( முன்னேறிய நாடுகளில் சில highly skilled immigrants க்கு சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் படித்திருந்தால் மட்டும் அனுமதி கிடைக்கும் என்று நிர்ணய்இக்க முயற்சி செய் து கொண்டிருப்பது போல) வேண்டுமானால் நிர்ணய்ம் செய்து கொள்ளட்டும்(தரம் பற்றிய் கவலைகள் இருந்தால்).

    ReplyDelete
  13. Usha,

    //இதற்கு வங்கியாளர்கள் முத்து (தமிழினி) மற்றும் ஜோசப் அவர்கள் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.//

    ஏங்க முத்துவ இழுக்குறீங்க. அவரு மாட்டு லோன் தருபவர் என சில புனித பிம்பங்கள் சொல்கின்றன. மனுசனுக்கு லோன் கிடையாது.

    ReplyDelete
  14. மிகவும் கவர்ந்த நல்ல பதிவு இது, பத்ரி அவர்களே.

    கணித்துறை / மருத்துவம் / பொறியியல் மட்டுமே வாழ்க்கை இல்லை
    எங்கள் வருமானத்தில் எங்களால் இயன்ற படிப்பு படிக்க வைக்கிறோம்
    அவ்விதம் படிக்க வைக்கும்போது அரசின் சலுகைகள் எங்களுக்குத் தேவையில்லை
    ஏனெனில் அந்தச் சலுகையை நாங்கள் பெற்றால், உண்மையிலே அந்த உதவி தேவைப்படும் ஒருவருக்கு அது கிடைக்காமல் போகலாம்
    என்ற எண்ணங்களை 40 வருடங்களாகச் செயல்படுத்திவருகிறோம்.
    இதுவரை கிடைத்த பணிகள் படிப்பின் மூலமாகவா சலுகைகள் மூலமாகவா என்று எவரையும் சந்தேகப்படவே வைத்ததில்லை
    தேவைப்படும் மாணவர்களின் படிப்பிற்காக எங்களால் இயன்ற பொருளுதவி செய்துகொண்டு வருகிறோம். (நீங்களும் இதேபோல் பிற்காலத்தில் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி அதையும் செயல்படுத்திவருகிறோம்)

    இதை வாசிக்கும் பலரில் ஒரு சிலராவது இவற்றை நாங்களும் செய்கிறோம்; எங்களுக்குத் தெரிந்தவர்களையும் செய்ய வைக்கிறோம் என்று செய்ய ஆரம்பித்தால் அதுவே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete
  15. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் என் பார்வையில், இது ஒரு சிறந்த அலசல். உங்கள் கருத்தை தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

    //4. இட ஒதுக்கீடு சலுகையா அல்லது உரிமையா?

    சலுகைகள் கொடுக்கப்படும்போதே எந்நிலையில் சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனால் ஒரு காலத்தில் சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படவேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டியது அவசியம்.//

    நமது நாட்டில் கொடுப்பதற்கே இவ்வளவு போராட்டங்கள் நடைபெரும் போது - எடுத்தால் என்ன நடக்கும்? எந்த ஒரு அரசாங்கமும் இதை செய்ய துணியாது.

    //5. இட ஒதுக்கீடு என்பது தனி மனிதர்களின் உரிமையை பாதிக்கிறதா?
    இன்று பல முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ரஷ்யா, சீனா போன்ற பல நாடுகளுக்குச் செல்கிறார்கள்.//

    முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல வசதிவாய்புள்ளவர்களும் இதை செய்கிறார்கள். அது மட்டுமல்ல இங்கேயே தனியார் கல்லூரிகளில் Management Quota மூலமும் சேர்கின்றனர். There is also NRI quota.

    //8. பிற்படுத்தப்பட்டோருள் creamy layer என்று முடிவுசெய்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது எனலாமா?

    ஒருமுறை இட ஒதுக்கீட்டைப் பெற்றால் போதுமா, அல்லது இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள்வரை அது தொடர்ந்தபின்னர் அந்தக் குடும்பம் cரெஅம்ய் லயெர் என்ற வரையறைக்குள் வருமா? Cரெஅம்ய் லயெர்-இல் ஒருவர் உள்ளார் என்பதைக் கண்காணிக்க ணடிஒனல் டடபசெ ஒன்றை உருவாக்க வேண்டுமா?//

    இது இன்றைய சூழ்நிலையில் சாத்தியம் இல்லை. மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

    How will you define the creamy layer?. One would say it should be based on the income. Other would say it should be based on the no.of generations. At the present situation it is not possible to monitor these things.

    ReplyDelete
  16. // ஏங்க முத்துவ இழுக்குறீங்க. அவரு மாட்டு லோன் தருபவர் என சில புனித பிம்பங்கள் சொல்கின்றன. மனுசனுக்கு லோன் கிடையாது. //

    ஏங்க அனானி இது உங்களுக்கே நல்லா இருக்கா ?

    என்ன, மாடு பேங்கிற்கு வந்து கைநாட்டு --- சாரி --- கால்நாட்டு வைத்துவிட்டு லோன் மூலம் புல், புண்ணாக்கு, தவிடு, வைக்கோல் எல்லாம் வாங்கிண்டு போய் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுகிறதா ?

    மாட்டுலோன் வாங்குகிறார்கள் என்றால் என்ன இளப்பமா ? விவசாயக் கடன் வாங்குபவர்களில் *பலர்* அதை உண்மையாகவே விவசாயத்திற்காகத்தான் செலவழிக்கிறார்கள் என்பதை என் 25 வருட வங்கிப் பணியில் கண்டிருக்கிறேன். அறுவடை முடிந்தவுடன் அதைவிற்று கடனைத்தீர்த்துவிட்டு மறுபடியும் அடுத்த சுழற்சிக்குத் தயாராகிறார்கள்.

    ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் யாரும் எந்தக் கடனையும் வாங்குவதில்லை. விவசாயக் கடன்கள் திரும்ப அடைக்கப்பெறாமல் இருப்பதற்குப் பல நேரங்களில் இயற்கைதான் ஒரு முக்கிய காரணம். (இப்போது அரசியலும் ஒரு காரணமாகிவிட்டது என்று நினைக்கிறேன்). தேவையான போது மழை பெய்வதில்லை அல்லது சில நேரங்களில் தேவைக்கும் அதிகமாகப் பெய்து பயிரைக் கெடுத்துவிடுகிறது. வர வர விவசாயமும் பங்குச் சந்தை போல ஒரு சூதாட்டமாக ஆகிக்கொண்டிருக்கிறது.

    அகில இந்திய அளவில் சிறு / பெரும் தொழிற்சாலைகளுக்காகக் கொடுக்கப்பட்டு திரும்பி வராத / தள்ளுபடி செய்யப்பட்ட கடன் அளவினை விட வராத / தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன்களின் அளவு மிக மிகக் குறைந்த அளவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வங்கிகளின் ஆண்டு இறுதி அறிக்கையிலிருந்து அவற்றை அறிய முடிவதில்லை.

    எல்லாத் தொழில்களிலும் அவரவர் தயாரிக்கும் பொருள்களின் விலையை அவர்களே நிர்ணயிக்கிறார்களே ஆனால் விவசாயத்தில் மட்டும் ஏன் அவர்களின் பொருட்களுக்கு அரசாங்கமோ மற்ற இடைத்தரகர்களோ நிர்ணயிக்கிறார்கள் ? தேவையான இடங்களில் அவர்களுக்காக ஆதரவு அளித்து தேவையான உரிமைகள் / சலுகைகள் பெற்றுத்தர பவர்ஃபுல் லாபி இல்லையோ (விஷயம் வேறெங்கோ செல்கிறதா? மன்னிக்கவும்)

    இன்னொரு அனானி

    ReplyDelete
  17. மிக அருமையான பதிவு. ஒரு சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் முடிந்த அளவு விரிவாக அலசியுள்ளீர்க்கள்.
    உஷா அவர்க்களே! மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்க்கள் லோன் பெறுவது மிகவும் கடினம் தான். வங்கிகள் லோன் தருவது அதிகரித்து இருந்தாலும் அவர்க்களுக்கு இன்னும் இது கானல் நீர் தான்(என் தந்தை ஒரு வங்கி அதிகாரி)

    ReplyDelete
  18. நல்ல பதிவு பத்ரி.
    உங்கள் எண்ணங்களுடன் நான் உடன்படுகிறேன்.

    கூட எனது சில எண்ணங்கள்:

    1. ஒரு மைனாரிடி கமிஷனைப் போல ஒரு இட ஒதுக்கீடு கமிஷன் முழுநேர அளவில் இதன் அமலாக்கலை ஆய்வு செய்ய வேண்டும். 60 வருடங்களாக இடஒதுக்கீடு இருந்தும் பல அரசு நிறுவனங்களில் முற்பட்டோரின் சதவீதமே அதிகமாக இருப்பதன் அடிப்படைகாரணத்தை ஆய்ந்து அவற்றை களைய வேண்டும். வாக்குவங்கி அரசியலில் சமூகநீதி பாதிக்கப் படக்கூடாது. The delivery should be appropriately measured and corective action taken.

    2. நேசகுமார் சொல்வதுபோல் இன்னும் நிறைய கல்விக்கூடங்களை ஏற்படுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீட்டை இத்துறையில் தாராளமாக்கலாம். மார்க்சிஸ்ட்கள் சொல்வது போல் இப்போதைய நிறுவனங்களில் இடம் அதிகரித்தால் ( வசதிகளை கூட்டாமல்) தரத்தையே குறைக்கும்.

    3. இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாக உணரும் மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். தொழிற்சாரா கல்விமூலம் ஏற்படும் வாய்ப்புகளை சொல்லித் தர அரசு அமைப்புகள் நிறுவப் பட வேண்டும். மதிப்பெண்கள் அதிகம் பெற்று கல்லூரியில் இடம் பிடிப்பதே வாழ்க்கையின் இலக்கல்ல என்பதை புரிய வைக்க வேண்டும். இடஒதுக்கீடுகளுக்கெதிரான ஆர்பாட்டங்கள் தங்கள் எதிர்காலம் என்னாகும் என்ற பயத்திலேயே ஏற்படுகிறது. அதை நீக்க வேண்டியது ஒரு நல்வாழ்வு அரசின் கடமையாகும்.

    ReplyDelete
  19. நன்றி இன்னொரு அனானி

    ReplyDelete
  20. நல்ல பதிவு பத்ரி. இன்னும் ஏற்றத் தாழ்வுகள் பெருமளவில் உள்ள நிலையில் உரிமை-சலுகை குறித்து முழுமையாக உங்கள் எண்ணத்தோடு ஒத்துப் போக முடியவில்லை.

    இட ஒதுக்கீட்டிலும் பயன்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் ஆழமாகச் செல்வதற்கு வழிவகைகள் இருக்க வேண்டும்.

    அதோடு, கல்வி நிறுவனங்களை இன்னும் அதிகரித்த அளவில் தொடங்க அரசு ஏன் ஆவண செய்யக் கூடாது என்பது தான் புரியவில்லை. மனிதவளத்தையே மூலதனமாகக் கொண்டிருக்கும் நாடு அதனை இன்னும் சிறப்பாக வளர்த்தெடுக்கும் தொலைநோக்கை ஏன் கொண்டிருக்கக்கூடாது என்று புரியவில்லை.

    ReplyDelete
  21. எங்கள் அலுவலகத்தில் கெட்ட சுட்டிகள் என நெருப்புச்சுவர் வகைப்படுத்தி இருக்கும் பலவற்றில் உங்கள் வலைப்பதிவும் இருக்கிறது. இப்போதுதான் படித்தேன். பொறுமையாகவும் கோர்வையாகவும் இப்படி எழுதியதற்கு நன்றி.


    அருள்

    ReplyDelete
  22. To be frank, I think that you have not understood various aspects of the issue.There can be solutions other than quota to increase the access to higher education.Caste need not be the only deciding factor.US type diversity or AA'or EO takes into account not just race or ethinicity.There is a reason for 50% limit which has been
    explained time and again by courts.
    Mandal Commission arrived at the
    conclusions based on a data collected in 1931.Vaidyanathan
    in business line (see my blog)
    has made some observations
    about the lack of reliable
    data.Your post will please
    pro-quota people. Reservation
    is an exception to the rule of equality.It cannot be the main
    rule with equality becoming an
    exception.One should not do
    more injustice in the name of
    rectifying the mistakes done
    in past.Let us remember one thing
    reservations have created vested
    interests.The creamy layer concept
    is not a vague concept.SC had stated how to apply it.Some states
    have used this.Central govt. applies this in reservations for
    jobs.I am sure that over a period of time you will revise your views.

    ReplyDelete
  23. இட ஒதுக்கீடு ஜாதிகளின் பிரிவுகளை சட்டப்பூர்வமாக்கும் மற்றும் அதிகாரப்பூர்வமாக்கும் அரசியல் கொள்கையாகும்.

    இட ஒதுக்கீட்டின் நோக்கம் தவறு என சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு முற்றிலும் தவறு.

    தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு முற்றிலும் கீழ்மையான செயல்பாடு.

    ஒரு மருத்தவர் இட ஒதுக்கீடு அடிப்படையில் செயல்பாடுவதற்கும் படிப்பு மதிப்பீடு (merit) அடிப்படையில் செயல்பாடுவதுற்கும் வித்தியாசம் உண்டு. அரசியல்வாதிகளே அவரிடம் வைத்தியம் பார்க்கமாட்டார்கள்.

    இட ஒதுக்கீடு ஒரு ஏழையான 'முற்பட்ட' வகுப்பினரை (உதாரணம் கோயில் பூசாரிகளின் குடுபத்தினர்) ஒதுக்கிவிடும்; அதே நேரத்தில் வசதியுள்ள 'பிற்பட்ட' வகுப்பினரை (உதாரணம் முதல்வர்களின் குடும்பத்தினர்) தேவையில்லாமல் உதவுகிறது.

    இட ஒதுக்கீடு தமிழ் ஒற்றுமைக்கு தீங்கானது. தமிழர்களை சட்டப்பூர்வமாக ஜாதி அடிப்படையில் பிரிக்கிறது.

    இட ஒதுக்கீடு தளித் போன்ற மிகவும் பிற்பட்டவர்களை உதவுவதில்லை. ஏன் என்றல் "மற்றப் பிற்பட்டோர்" (OBC) எனப்படும் வசதியானவர்களுக்கு தேவையின்றி சாதகாமாக அமைகிறது.

    தமிழகத்தில் ஹிந்தி பேசும் முஸ்லிம்களுக்கும், தெலுங்கு பேசும் ரெட்டியார்களுக்கும், தெலுங்கு பேசும் நாயுடுகளுக்கும், கன்னடம் பேசும் கவுண்டர்களுக்கும் இட ஒதுக்கீடு உண்டு; ஆனால் தமிழ் பேசும் 'பார்பான்'களுக்கு இட ஒழிப்பு தான். இது தான் தமிழகத்தின் அரசியலில் 'தமிழ் பற்று' அன்றோ!!!???

    தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடும் தென்னாப்பிரிக்காவின் Apartheid கொள்கைக்கு சமமே.

    ReplyDelete
  24. நன்றிகள் பத்ரி. நல்ல அலசல்.
    குறிப்பாக நீங்கள் எழுதிய பத்தாவது விசயம்.


    ஆனால், உங்களுடன் ஒத்து போகமால் இருப்பது உரிமையா? சலுகையா? என்பதில்.
    நாம் அனைவருமே அறிவோம், சமூக சமச்சீருக்காகவே இந்த இட ஒதுக்கீடு என்று. சட்டபூர்வமாக இல்லாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏற்றதாழ்வை உருவாக்கி, பிற்படுத்தப்பட்ட மக்களின் "உரிமை" பறிக்கப்பட்டிருந்தது. ஆகையால் இன்று ஒரு சமச்சீர் சமுதாயம் உருவாக வேண்டும் என sincere-ஆக எண்ணும் நீங்கள் இடஒதுக்கீட்டை சலுகை என்று சொல்லுவது முரணாக இருக்கின்றது.

    இருப்பினும் உங்கள் பார்வை நன்று.
    மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  25. Reservation need not be given to children whose parents have enjoyed the benefits....

    That is ......... If Mr.A has got MBBS seat or a Govt job by reservation, his children have to compete is Open Quota ONLY.......

    We have ample proof to say (see the admission list in Tamil nadu in the link given at the top of this post) that Once you give an oppurtunity to backward class, the next generation are able to be on par with other people

    ReplyDelete
  26. I think I have given the following answer elsewhere, yet I repeat here
    Society is like a bullock cart with two bulls.......

    Now if the cart has to run fast, BOTH BULLS are to be good....

    WHat is the use of a cart where one bull is very strong and another bull is weak........ The MAXIMUM speed of the cart CAN BE ONLY THE SPEED of the weakest bull....... So we improve the nutrition of the weak bull even if it leads to starving the STRONG BULL.....

    This is what reservation is exactly.... You give the seats WHICH A STUDENT FROM FORWARD COMMUNITY WOULD HAVE GOT to a student from the weaker community, because ONLY if the weaker community gets a little stronger, the cart can move.............

    Now what criteria to follow who is strong and who is weak.....

    1. Economics........... It is a well known fact that THIS is the easiest factor to cheat.......... If we give reservations based on economics, the students of employeed sector will suffer....... WE very well know that you and me pay more income tax than the leading textile owner in your town who earns 2 to 3 lakhs per month............ Except for salaried class of people, how can you check the TRUE income of other sectors . Another factor is that wealth is not stationery.......... Many persons who had a comfortable life were rendered homeless after Tsunami or earth quake.. A rich person can become poor over night......... Many people earn well by their hard work and a poor person can become rich in few years (if he enters cinema or other art field for example)..... So MONEY is subject to change and can be hidden

    2. Religion... Easy to change....... If you say that there is 20 % of reservation for those following Din-e-Ilahi, every one will embrace that .....And more over I can show you atleast 100 people who do not believe in god........... What religion will you fix to them.......And then there are people who believe that there is ONE God......... What religion can you give them............ and there are few who follow more than one religion (when both their parents are of different religion, for example)...... Other than the fact that Religion can be changed with regard to time, it can be hidden.........

    3. Caste..... Because this system is routed deeply in our culture, WE CANNOT CHANGE our caste..... hence this was based as the criteria for reservation........ because of the various criteria we can consider this DOES NOT CHANGE WITH TIME

    ReplyDelete
  27. தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நம் ஊர் கார்பரேட்கள் ஸ்காலர்ஷிப்
    மூலமாக கொஞ்சம் சமூகத்திற்கும் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  28. நண்பர் பத்ரி மற்றும் மறுமொழியளித்த , அளிக்காத அனைவருக்கும்.

    சலுகை என்று வந்து விட்டாலே, அது இன்னொருவரின் உரிமையில் இருந்து பறிக்கப்பட்டதுதான் என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.

    நான் இரு செல்வங்களின் தந்தை. என் மகன் 4 வருடங்களுக்கு முன் நல்ல மதிப்பெண்கள் வாங்கியும், மூன்றாவது நாள் காலை தான் counselling கிடைத்தது. நாங்கள் இந்த ABC, BBC, OBC வகையைச் சேர்ந்தவர்கள் அல்ல. சென்னையில் உள்ள முதல் தர கல்லூரிகளில் இடம் இல்லை. இரண்டாம் தர கல்லூரிகளில், சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கும் சில பிரிவுகள் கிடைத்தன. ஆனால் முதல் / இரண்டாம் தர கல்லூரிகளில், விரும்பிய பிரிவுகளில் இடம் இருந்தன. ஆனால் கிடைக்கவில்லை. காரணம் அவை அனத்தும் இட ஒதுக்கீடு இடங்கள். இது உரிமை பறிப்பில்லையா?

    அவன் முற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தது அவன் குற்றமா? செய்யாத குற்றத்திற்கு ஏன் தண்டனை?

    நல்ல வேளையாக இன்று தமிழ்நாட்டிலேயே முதன்மையாக விளங்கும் ஒரு கல்லூரியில் அவன் எதிர்பார்த்த பிரிவில் Management quotaவில் மதிப்பெண் அடிப்படையில் எந்தவித கூடுதல் பணமும் செலுத்தாமல் (இப்படியும் சில நல்ல மனது படைத்துள்ளவர்கள் நடத்தும் கல்லூரிகளும் இருக்கின்றன)கிடைத்தது. இன்று USல் உள்ள முதல் தர பல்கலைக்கலைக்கழகங்களில் ஒன்றில் MS படிக்கவும் இடம் கிடைத்தது.

    இட ஒதுக்கீடு ஒரு இருமுனையுள்ள வாள். சரியாகக் கையாளப்படாவிடில் மிக மோசமான விளவுகளை ஏற்படுத்தும். எவரையும் பாதிக்க்காத முறையில், அதே நேரத்தில் அனைவரயும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு, பொருளாதார அடிப்படையில் அனத்து சாரர்க்கும் இட ஒதுக்கீடு அளிப்பதே சிறந்தது. நான் ஒத்துக் கொள்கிறேன், பணம் படிப்பைக் கொடுத்து விடாது என்று. ஆனால் படிக்கக் கூடிய வசதிகளை நிச்சயம் செய்து தரும்.

    இன்று நான் என் மகளின் +2 முடிவை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிறேன். எனக்கு இதுவரை அவள் என்ன, எது, எங்கு படிக்கப் போகிறாள் என்பது புலப்படவில்லை.

    இன்னும் 4 வருடம் கழித்து பத்ரி மாதிரி வேறொருவர் இட்ட பதிவுக்கு மீண்டும் ஒரு இதே மாதிரி பின்னூட்டம் இடுவேனோ என்னவோ, தெரியவில்லை.....

    :-(

    http://balablooms.blogspot.com

    ReplyDelete
  29. உங்கள் அனேக கருத்துக்களுடன் ஒத்து போகின்றேன். ஆனால் கல்வியில் இட ஒதுக்கீடே ஈழப்பிரச்சினையின் அடிப்படை காரணம்களில் ஒன்று என்பதையும் இச்சமயம் குறிப்பிடுதல் வேண்டும். தமிழர் அதிகமாக ஆக்கிரமித்து இருந்த கல்வி நிலைகளை சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்க முனைந்தது ஈழப்பிரச்சினையின் அடிப்படை காரணிகளில் ஒன்று. எனவே இந்திய அரசு தனது நல்ல எண்ணம் கொண்ட்ட திட்டத்தை எப்படி செயல்ப்படுத்து என்பதில் அதிக கவனம் தேவை. செல்வராஜ் குறிப்பிட்டது போல கல்விக்கான கட்டுமானங்களை விரிவுபடுத்துவது அவசியம். கல்வி சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை குறைக்க ஒரு அரிய ஆயுதம் என்பதில் சந்தேகம் இல்லை.

    ReplyDelete
  30. பல பதிவுகளிலும் சொன்ன பதிலை இங்கும் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.

    "இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதிகளுக்கு இடையேயான சமன்பாட்டைக் கொண்டுவருவதுதானே ஒழிய, பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதல்ல".

    உண்மையாகவா?! ஜாதிகளுக்கிடையே உள்ள சமன்பாடு என்றால் என்ன என்பதை முதலில் வரையறை செய்வீர்களா? அதைச் செய்துவிட்டு அல்லவா இந்த வரியை நீங்கள் எழுதியிருக்க வேண்டும்? பொருளாதாரம், கல்வி நிலை இவற்றை விலக்கி விட்டு எந்த அடிப்படையில் சமன்பாடு வந்து விட்டது அல்லது இல்லை என உறுதி செய்வீர்கள்?

    சாதி என்பதை மாறாமல் நிற்கும் static அமைப்பாகக் கருதுவதும், ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையாக சாதியை மட்டுமே வரையறுப்பதும், அந்த ஒன்றின் அடிப்படையில் மட்டுமே சலுகைகளை நிறுவுவதும்
    அடிப்படையிலேயே தவறான அணுகுமுறைகள்.

    நூற்றாண்டுகால வரலாறுகள் காட்டுவது சாதி அமைப்பு என்பது தேங்கி நிற்கும் ஒரு அமைப்பு அல்ல; மாறாக, தொடர்ந்து இயங்கிய, இயங்கிக்கொண்டுள்ள ஒரு உயிரோட்டம் மிகுந்த அமைப்பு என்பதையே. சமூக அதிகாரத்தில் கீழ்த்தட்டில் இருந்தவர் மேலே வந்தததும் மேலே இருந்தவர் கீழே சென்றதும், ஒரே காலத்திலேயே ஒரே சாதி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமூக அதிகார நிலைகளைக் கொண்டிருந்ததும், பழைய சாதிகள் மறைந்து புது சாதிகள் தோன்றியதும், பழைய சாதிகளில் இருந்தே புதிய பிரிவுகள் கிளைத்ததும், அவை வெவ்வேறான சமூக அதிகாரங்கள் என்ற நிலையில் வளர்ந்ததும் இந்த இயக்கத்தினால் விளைந்த வரலாற்று உண்மைகள். இவற்றை மறுத்து ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக நிலை யதார்த்தங்களை காலத்தால் மாறா நேரடுக்கு அமைப்பாக நீட்டித்துக் கற்பனை செய்வதும் அதன் அடிப்படையிலேயே சமூக நீதி என சட்டம் கொணருவதும் அறிவார்ந்த நாணயமின்மையே.

    பொருளாதாரம், குடும்பத்தில் உயர் கல்வி, தொழிற்கல்வி படித்தவர் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட education index, இதுபோன்ற கூறுகளை
    அடித்தளமாக்கி இட ஒதுக்கீடு கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. அடிப்படை வசதியும் நாளை குறித்த நம்பிக்கையும் இன்றி வாழும் மக்கள் அதிகம் இருக்கும் நம் நாட்டில், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டுவது அன்புமணிகளுக்கும், தயாநிதிகளுக்கும் அல்ல. சாதி அடிப்படையை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு அல்ல, சாதிக்கட்டமைப்பை மேலும் இறுக்கவே உதவும். இப்படிப்பட்ட சாதி இறுக்கத்தில் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சித்தலைகளுக்கு ஆதாயம் இருக்கலாம். சமத்துவம் வளருமென்று சொல்ல ஆதாரம் இல்லை.

    பொருளாதார மாற்றம் சமூக அதிகார நிலைகளைப் புரட்டிபோட வல்லது. பார்ப்பன வாலி கருணாநிதி முன்னால் கைகட்டி நிற்பதும், பன்னீர்தாஸ் கடையில் செட்டியார் வேலை செய்வதும் பொருளாதார அடிப்படையில் நிகழ்ந்த அதிகார மாற்றங்கள்தாம்.

    உங்களது 6-வது point , எல்லா தனியார் கல்விக் கூடங்களுக்கும் இச்சட்டம் ஒரு போல அமல் செய்யப்பட்டால்தான் சரி.

    8-வது point- அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வதே சரி.

    ReplyDelete
  31. creamy layer பற்றிச் சொல்லும்போது இவ்வாறு கீழ்க்கண்டவாறு பத்ரி சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை:

    // சமூகத்தின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகையை தமக்குள்ளாக எவ்வாறு பிரித்துக்கொள்வது என்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இதனை வேண்டுவதை பிற்படுத்தப்பட்டோர் தவறாக எடுத்துக்கொள்ள நேரிடலாம்.//

    பிற்பட்டவர்கள் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளட்டும் எனப் பொறுப்பற்றமுறையில் முற்படுத்தப்பட்ட சமூகம் செல்வதைத்தான் அவர் விரும்புகிறாரா? the guidance and advise of forward caste in these matters are necessary.

    இரண்டு சமூகங்களுக்கு நடுவே நிகழும் சாதிக்கலவரத்தைத் தீர்ப்பதற்கு, சம்பந்தப்பட்ட சமூகங்களுள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ளட்டும் என்று மற்ற சமூகங்கள் இருந்துவடக்கூடாது. பிரச்சினை சுமூகமாக முடிய தன்னால் இயன்ற முயற்சியை மேற்கொள்வதே அவசியாமான ஒன்று.

    அதுபோலத்தான் இதிலும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நலன் குறித்து, சமூக அக்கறையில் கூறப்பட்ட முற்பட்ட சமூகத்தின் கருத்துக்கள், சாதீயக் கண்ணோட்டத்தில் சில விமர்சனத்திற்குள்ளானாலும், முற்படுத்தப்பட்ட சமூகத்தின் அமைதியும் சில சமயங்களில் குழப்பத்தையும், அவர்களின் மேல் அவனம்பிக்கையும் ஏற்படுத்தும் என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  32. தெளிவான ஒரு பதிவு!

    மருத்துவ, பொறியியல் படிப்புகளில் மேற்படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு ஏன் கூடாது என்பதற்கு, யாரோ ஒருவருடைய வலைப்பதிவில் விவாதத்திற்குறிய ஒரு காரணம் படித்தேன்.

    அதாவது, பட்டப்படிப்பில் ஒரே கல்லூரியில் ஒரே பாடத்திட்டத்தில் ஒரே அளவிலான வசதிகளோடு படிக்கையில் அதற்கு மேலான படிப்பிற்கு இட ஒதுக்கீடு கோருவது சரியல்ல என்று.

    இட ஒதுக்கீடு கோருவதே, ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவனுக்கும், அவனது குடும்பத்தாருக்கும் தலைமுறையாக மறுக்கப்பட்ட, மறுக்கப்படும் exposure னை ஈடுகட்டத்தானே! அதன்

    காரணமாகவே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. However a student who joins an engineering or medical college is exposed to such environment என்று

    கூறினால் அது ஒரு கவனிக்கப்படத்தக்க வாதமாகவே இருக்க முடியும். பத்ரி கூறுவது போல நமது நாட்டில் போதுமான கல்லூரிகள் இல்லை. படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் இடம்

    கொடுக்க வழியில்லை. அவ்வாறு எனில் மேற்படிப்புக்காக மாணவர்களை வடிகட்டுவதற்கு எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே அளவுகோலாக இருத்தல் மறுபரிசீலனைக்கு

    உட்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ உருப்பெறுவது அவர் கல்லூரி தேர்வில் பெற்ற மதிப்பெண்களை பொறுத்ததுதான்

    என்றாலும் சிறந்த மருத்துவராகவோ அல்லது திறமையான பொறியாளராகவோ உயர்வது மதிப்பெண்களை வைத்து அல்ல என்பது எனது கருத்து...ஆனால் தற்பொழுது நமக்கு உள்ள

    ஒரே அளவுகோல் இந்த மதிப்பெண்கள்தான்.

    அதே நேரத்தில் 'இட ஒதுக்கீடு கோரும் கருணாநிதிக்கு மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் மட்டும் முற்பட்ட வகுப்பிலிருந்து வேண்டுமா' என்ற கேள்வியும் நாகரீகமானது என நான்

    நினைக்கவில்லை. முன்பு இதே கேள்வியினை துக்ளக் பத்திரிக்கையில் அடிக்கடி படித்திருக்கிறேன். துக்ளக் ஆசிரியர் மருத்துவர் மற்றவர்களோடு வக்கீலையும் முன்பு சேர்த்துக் கூறுவார்.

    ஆனால், தற்பொழுது கூறமுடியாது. ஏனெனில் இரு பெரும் ஜாதிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சட்டத்துறையில் மற்றவர்களும் தற்பொழுது கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

    சமீபத்தில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள திரு.விடுதலை அமைதியாகவும், தெளிவாகவும் வாதம் செய்யும் தனது திறமையால் அனைத்து நீதிபதிகளின்

    மதிப்பையும் பெற்றவர். தற்பொழுது தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிக்கு தேர்வு செய்யப்படும் முற்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கிடையேயான மதிப்பெண் வித்தியாசம் மிகவும்

    குறைவு என்று இங்கு படிக்கிறேன். நான் 12ம் வகுப்பு முடித்த 1982ம் வருடம் பொறியியல் கல்லூரிக்கு ஏறக்குறைய பொது வகுப்பில் 93ம் பிசியில் 84ம் எஸ்ஸி எஸ்டியில் 70 சதவிகித

    அளவு தேவையாயிருந்தது என்பது எனது ஞாபகம். அப்பொழுது நேர்முக தேர்வுதான், எம்பிஸியும் கிடையாது. எனவே இத்தகைய முன்னேற்றத்தினைப் பற்றிய விஞ்ஞானபூர்வமான

    புள்ளியியல் ஆதாரம் யாராவது திரட்டியுள்ளனரா என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

    இறுதியாக, இட ஒதுக்கீட்டினைப் பற்றி எழுதும் பலரும் கலப்பு மணத்தினைப் பற்றி ஏன் எழுதுவதில்லை! இரு வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் புரிகையில் அவர்களது

    குழந்தைகள் அப்பா அம்மா யாராவது ஒருவருடைய ஜாதியினை தனது சான்றிதழில் பெற்றுக் கொள்ளலாம் (முன்பு அப்பா என்று மட்டும்தான் இருந்தது). எனவே திருமணங்களில்

    கடைபிடிக்கப்படும் கடுமையான இட ஒதுக்கீடு முறையினை ஒழிக்க இதில் ஆர்வம் கொண்டவர்கள் முன் வந்தால் என்ன? அப்படியும் ஜாதிகள் தொடரும் என்றால் இனி பள்ளி

    ஆவணங்களிலலும், சான்றிதழ்களிலும் ஜாதியினை எழுதுவதற்கு பதிலாக பிசி, எம்பிசி, எஸ்ஸி என்று மட்டும் குறிப்பிடலாமே...இது போலி சான்றிதழ் பெற வழி வகுக்கும் என்றாலும்

    அதனை தடுக்க முடியும். நான் ஏதோ விளையாட்டுத்தனமாக கூறுகிறேன் என்று நினைத்தால்...முன்பு மண்டல் கமிஷன் பிரச்னை விபி சிங் காலத்தில் எழுந்த பொழுது, ஒரு

    தொலைக்காட்சி கலந்துரையாடலில் கொந்தளித்துப் போயிருந்த மாணவர்களைப் பார்த்து ராம் ஜேத்மலானி, 'தான் இந்த ஜாதியில்தான் திருமணம் செய்வேன்' என்று கூறும் யாருக்கும் இட

    ஒதுக்கீட்டினை எதிர்க்க உரிமை கிடையாது என்றார். எனவே இந்த ஒரு வாதத்தின் மீதும் வலைப்பதிவர்கள் தங்களது கருத்துகளை வைத்தால் படித்து தெளிய ஆவலாக இருக்கிறேன்.

    பிரபு ராஜதுரை

    ReplyDelete
  33. Creamy Layer பற்றி என் விளக்கம்.

    பிற்படுத்தப்பட்டோர் அவர்களுக்குள்ளாக அடித்துக்கொள்ளட்டும் என்ற எண்ணத்தில் நான் அதனை எழுதவில்லை. இதுவரையில் creamy layer பற்றி அதிகமாகப் பேசுவது இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மட்டும்தாம். அதனால் இது ஏதோ வயிற்றெரிச்சலில் சொல்லப்படுவது என்று பிற்படுத்தப்பட்டோர் நினைக்கலாம்.

    ஆனால் உண்மையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ளவர்கள்தாம் creamy layer தேவை என்பதை உணர வேண்டும். எப்படி முன்னேறிய சமூகத்தினர் இட ஒதுக்கீட்டினை எதிர்க்கிறார்களோ அப்படியே பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய சிலர் creamy layer-ஐ எதிர்க்கலாம்.

    Creamy Layer என்ற ஒன்று தேவை என்று மண்டல் கமிஷன் அறிக்கையிலும் சொல்லப்பட்டுள்ளது. அதைப்பற்றிய விவாதத்துக்குமுன் இட ஒதுக்கீடு என்பது அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். ஒரே நேரத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் அதே நேரம் Creamy Layer-இன் அவசியம் பற்றியும் பேசினால் பேசுபவரது நியாயம் கேள்விக்குள்ளாக்கப்படும்.

    ReplyDelete
  34. சலுகை vs உரிமை. இட ஒதுக்கீடு என்பது உரிமை என்று பலர் சொல்கின்றனர் என்றுதான் நான் என் பதிலை ஆரம்பித்திருந்தேன். அவர்களை "மிலிடண்ட் சமூக நீதிக்காரர்கள்" என்றும் சொல்லியிருந்தேன். உரிமை என்பதற்கான பொருள் என் அகராதியில் வேறு. உரிமை என்பது அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும் - அது ஏழைக்கும் சரி, பணக்காரனுக்கும் சரி, எந்த ஜாதியில் இருப்பவனாக இருந்தாலும் சரி. முன்னாள் அடிமைக்கும் முன்னாள் ஆண்டைக்கும்கூட இன்னாளில் உரிமைகள் சமமாகத்தான் இருக்கவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைகள் நம் எல்லோருக்கும் வழங்கப்பட்டுள்ளன. அது அனைவருக்கும் பொது.

    அதற்கு மேலாக சில குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் சில அதிகப்படி உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் சிறுபான்மையினருக்கு மட்டும்தான். உதாரணமாக மதச்சிறுபான்மையினருக்கு என்று சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை சலுகைகள் அல்ல. அவற்றை நீக்கமுடியாது. அவை உரிமைகள். கடைசிவரை இருக்கும்.

    அதற்கு மேலாக பெரும்பான்மை மக்களுக்குள் சில பிரிவுகளில் ஏற்றத்தாழ்வைச் சரி செய்யக் கொடுப்பது அனைத்தும் சலுகைகளே. சலுகைகள் நிரந்தரமானவை அல்ல. உரிமைகள் மட்டுமே நிரந்தரமானவை. சலுகைகள் என்றாலே அவை பிச்சை என்று ஆகிவிடாது. வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. இப்பொழுது சலுகைகள்மூலம் வாய்ப்புகளை மீண்டும்பெற வழி வகை செய்யப்படுகிறது. இந்தச் சலுகைகள் ஆயிரம் ஆண்டுகள் இருக்கவேண்டுமா, நூறாண்டுகள் இருக்க வேண்டுமா என்பதை சமுதாயம் ஒன்றுசேர்ந்துதான் முடிவு செய்யவேண்டும். ஆனால் ஜாதி வகையிலான ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படவேண்டும் என்ற கொள்கைகளை மனத்தில் இருத்தி இதைச் செய்யவேண்டும்.

    ReplyDelete
  35. Hi Badri( Please bear with me if this is a long review)
    Appreciate you for taking time to analyse this issue.Did you really analyse it for todays situation ? I don't think so...Lot of people are pleased and will be pleased because that is the mix we have........This is the awareness state of tamilnadu.

    1. அரசினால் நடத்தப்படும் உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அவசியமா?

    I don't think so.What do you mean by up and downs in a society, none of the institution says that only particular community people can get education.These institutions are in their heights because of the intelligent level of the people.There are so many ways to tackle this problem and it is not mathematical problem having unique solution ....Lets assume you are in a situation to buy few valves.The valves are being manufactured by two different guys , one is a bad quality manufactured by a poor guy and the other is a high quality manufactured by a rich guy.I am sure as a reponsible person you will go for the good one.Say you are interested in the life of poor guy , so you want to help him.would you buy certain percentage of the valve from him.....NO.What can we do to improve his life, we can give him infrastructure to develop a good quality valve, we can give him good resources and monetary help to bring his quality of the valve.This has happened in the japanese car and electronic industries, henry ford has done this,In india Dr.reddys lab, orchid chemicals and pharmaceuticals ,TI cycles .. to name a few has done this.
    I think we should do this for all the communities who are backward or they think they are, But they should come thru main stream( Like dharma darshan, one and only que) no special que.Instead of writing the 5400 crores as bad debts, develp training institutes(Like what we did for java and oracle) all over INDIA, Give a quality Education in all the villages by qualified teachers, create Good class rooms......., This way we can still have the pride of the institutions..(Almost five years ago there was a one hour documenatry in CBS(NOT SUN TV) about this institutions)These institutions have made people like Collin powel, George bush, john kerry, Bill gates, Larry Ellison ..etc to mark india in educational Map.
    Some one suggested increase the seats, I am not against this but as experts say we don't have enough infrastructure to do this.Who knows the guy who suggested might be thinking we can put a folding chairs on the side..like they do in the cinema theaters.If you are going to say lets develop infrastructure...develop this infrastructure as level B- Schoold and give 90 % reservations.
    We are giving enough reservation in the state level institutions and in almost all the sates.

    Kuppayil oru Manickam
    "ஒரு படிப்பைப் படிக்க விரும்பும் aptitude, அந்தப் படிப்பைத் திறம்படப் படித்து முடிக்கத் தேவையான குறைந்தபட்சத் திறமை - இந்த இரண்டே போதும். "

    This is very true.I am totally in your frequency, but is it possible to bring this to indian educational atmosphere....If so we should go ahead and do this.This is very much needed because we don't have good economist or good people in science area...

    இட ஒதுக்கீட்டினால் தரம் குறையாதா?

    Though your answer is right, but this is not true in complete sense.I guess you are an IIT,ian and must have gone thru a system different from the state institution.I came out of a top notch engineering school in tamilnadu and my uncle was a professor in the top notch school, so on that qualification I want to tell this much " Question papers are set such that certain percentage of the class can pass the exam, even if they don't pass then senate will meet befor releasing the results to give a grace mark...."so where is the quality.

    தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமா?

    I agree with your thoughts on this.

    முற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு என்று தனி இட ஒதுக்கீடு வேண்டுமா?
    "Nice pep talk "
    I am not able to agree with you.way back in 80's My fathers income was only 5000 Rs in a small town.I applied for a tution loan in canara bank(I believe that was the only bank then , where we can get a loan with minimum hurdles).My application was rejected on the basis of two reasons
    1.My fathers income certificate is not true.
    2.The certificate is a bogus one, because we are from forward community. what a pathetic reason.......and so many unwritten laws imposed by this local guys.

    I wasn't not behind these guys , went and applied for a National scholarship.Applicaton was not even considered.......

    where are we Heading in the name of caste and race , are we going to ship all these forward community people to central asia.........

    CT.

    ReplyDelete
  36. என் பின்னூட்டத்தை தனி பதிவாக இட்டிருக்கிறேன்.
    http://ullal.blogspot.com

    ReplyDelete
  37. ரவி ஸ்ரீனிவாஸ் சொன்னதுபோல மத்திய அரசு Creamy Layer என்பதற்கான விரிவான விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது. தேடியபோது National Commission for Backward Classes தளத்தில் அகப்பட்டது. இதை மத்திய அரசும் சில மாநில அரசுகளும் ஏற்கெனவே இட ஒதுக்கீடு தொடர்பாகப் பின்பற்றுகின்றனவாம். ஆனால் தமிழக அரசு இட ஒதுக்கீடுகளைப் பொருத்தவரையில் Creamy Layer என்ற கொள்கையைப் பின்பற்றுவதில்லை.

    இந்தத் தளத்தில் மாநில வாரியாக எந்த சாதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவை என்ற தகவலும் கிடைக்கிறது.

    ReplyDelete
  38. பத்ரி,

    உங்களுடைய பதிவுக்கு நன்றி. தனிப்பட்ட உதாரணங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிராகரிக்காமல், ஒட்டு மொத்த சமூகத்தின் முன்னேற்றத்தை அடிப்படையிலான உங்கள் பார்வை பாராட்டத்தக்கது. அப்பொழுது இட ஒதுக்கீட்டை உரிமையில்லை, சலுகை என்று நீங்கள் சொல்லுவதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். தற்போதுள்ள இட ஒதுக்கீட்டின் ஓட்டைகளை அடைக்கும் வழிகளைப் பற்றிப் பேசாமல், சாதியடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு மாற்றாக அதை விட ஓட்டைகள் குறைவான எந்த ஒரு மாற்றையும் பற்றிப் பேசாமல், இட ஒதுக்கீட்டை தரமின்மை என்று கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கும் இரவி ஸ்ரீனிவாஸ்கள் மத்தியில் நான் ஒரு "மிலிடண்ட் சமூக நீதிக்கார"னாகவே இருக்க விரும்புகிறேன்.

    தனிப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினாலோ அல்லது இட ஒதுக்கீடு இல்லாமையாலோ பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கலாம். அல்லது இழப்பு ஏற்பட்டதற்கு இட ஒதுக்கீடுதான் என்று தவறாகக் கூடப் புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் இட ஒதுக்கீடு என்பது ஒரு சமூகப் பிரச்னை. தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் நானும் கூட இளங்கலைப் பட்டப் படிப்பு முடியும் வரை இட ஒதுக்கீடுதான் எட்ட வேண்டிய இடத்தை அடையத் தடையாயிருக்கிறது என்று தவறுதலாக எண்ணியிருக்கிறேன். மேலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னுக்கு வர முடியும் என்ற நிலையிலிருந்தும் சட்டை செய்யாத பல நண்பர்களைப் பார்த்துப் பொறாமைப் பட்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் “creamy layer” என்று சொல்ல முடியாது. ஆனால் வாய்ப்புகள் என்ன? ஏன் அளிக்கப் பட்டுள்ளன? எப்படிப் பயன் படுத்திக் கொள்வது? என்ற அடிப்படைப் புரிதல் அவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இல்லை என்பதே உண்மை. தூத்துக்குடி ரெங்கனாதன் தெருவில் உள்ள சில நண்பர்களால் தொடங்கப்பட்ட “உரிமை பறிக்கப் பட்ட முற்படுத்தப் பட்டோர் இயக்கம்” என்ற பெயரில் கையெழுத்து வேட்டையெல்லாம் கூட நடத்தியிருக்கிறோம். 1983 க்கு பின்னர்தான் எந்த ஒரு சமூகப் பிரச்னையையும் என்னால் தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு, கூட்டல்-கழித்தல்களின் அடிப்படையில் அல்லாமல் அணுக முடிந்தது.

    தற்பொழுது நடைமுறையில் இருந்து வரும் சாதியடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் பல குறைகள் இருக்கின்றன. ஆனால் அவை இடஒதுக்கீட்டுக் கொள்கையில் உள்ள ஓட்டைகள் என்பதை விட எல்லா துறைகளிலும் நிலவி வரும் நம்முடைய அரசுகளின் செயல்பாட்டுக் கோளாறுகள் என்றுதான் சொல்ல முடியும். ஊழலும், ஒழுக்கமின்மையும் மலிந்து கிடக்கும் நம்முடைய மக்களாட்சி அமைப்பில் எந்தக் கொள்கை/திட்டம்தான் இதுவரை 100 விழுக்காடு வெற்றியுடன் நிறைவேறியிருக்கிறது? எனவே இருக்கும் நடை முறை இலட்சணத்தில் சாதியடிப்படையிலான இட ஒதுக்கீடுதான் இருக்கும் எல்லா வழிமுறைகளிலும் குறைந்த ஓட்டைகளுடன் அதிக பலனைத் தருவது. உண்மையிலேயே தமிழ்நாட்டில் பார்க்கப் போனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இட ஒதுக்கீடு பல நலிந்த பிரிவினரை கல்வி, பொருளாதார ரீதியாகவும், அரசு இயந்திரத்தின் அதிகாரப் பரவல் வழியாகவும் முன்னேற்றியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் எந்த ஒரு அரசுத் திட்டத்தின் வெற்றி தோல்விகளைப் பற்றிய முறையான புள்ளி விவரங்கள் திரட்டப் படுவதில்லை. சில சமூகவியல் ஆராய்ச்சி அறிஞர்களின் கட்டுரைகளில் இம்மாதிரி விவரங்கள் புதைந்து கிடப்பதை ஆங்காங்கே படித்திருக்கிறேன். ஆனால் இடஒதுக்கீட்டின் ஒட்டு மொத்தமான பலன்களைப்பற்றிய புள்ளி விவரங்கள் திரட்டப் பட வேண்டும். “creamy layer” மக்களை இடஒதுக்கீட்டிலிருந்து வெளியேற்றவும் அது பயன் படும்.

    சுருக்கமாகச் சொன்னால், சாதி ரீதியிலான இட ஒதுக்கீடுதான் சாதியடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்ய, இன்றைய முதலாளித்துவ அரசியலமைப்பில் இருக்கும் ஓட்டைகள் குறைந்த ஒரே வழி. செய்ய வேண்டியவைகள் மூன்று.
    1. “creamy layer” மக்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதற்கு நல்ல வழி கையாளப் பட வேண்டும். ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரின் கல்வி, வேலையை வைத்து ஒரு அளவுமுறையைக் கொண்டு வரலாம்.
    2. கிராமப் புற மக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றிய இலவச கல்வி மற்றும் தகவல் ஆலோசனை (counseling) அளிக்கப் படவேண்டும். அதோடு சாதி ஒழிய வேண்டியவற்றின் அவசியத்தையும், சாதிப் பாகுபாடு பாராட்டுபவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை பற்றியும் கற்பிக்க வேண்டும்.
    3. மேல்தட்டுச் சமூகங்களில், குறிப்பாக நகரங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சாதிய ஒடுக்குமுறை பற்றிய வரலாற்றைச் சொல்லி அவை எப்படியெல்லாம் அடித்தளத்து மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன, இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களின் அவசியமென்ன என கற்பிக்க வேண்டும். இல்லையெனில் எனக்கு இடம் கிடைக்க வில்லை, என் பிள்ளைக்கு இடம் கிடைக்கவில்லை என்ற சோகம்தான் அவர்கள் மனதில் நிற்கும்.

    இந்த மூன்றையும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகச் செயலாற்றும் கும்பல் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதுவரை நானும் சமூகநீதித் தீவிரவாதியாகவே இருக்க விரும்புகிறேன். எந்தப் பிரச்னையிலும் இரண்டு தீவிரவாதங்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நடுனிலையாக எதுவும் செய்ய முடியாவிட்டடல் தொடக்கத்தில் இருந்தே பாதிக்கப் பட்டவர்களின் தீவிரவாதத்தை ஆதரிப்பதே மேல் என்னுடைய கொள்கை.

    நன்றி – சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  39. //"இட ஒதுக்கீட்டின் நோக்கம் ஜாதிகளுக்கு இடையேயான சமன்பாட்டைக் கொண்டுவருவதுதானே ஒழிய, பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்வதல்ல".

    உண்மையாகவா?! ஜாதிகளுக்கிடையே உள்ள சமன்பாடு என்றால் என்ன என்பதை முதலில் வரையறை செய்வீர்களா? அதைச் செய்துவிட்டு அல்லவா இந்த வரியை நீங்கள் எழுதியிருக்க வேண்டும்? பொருளாதாரம், கல்வி நிலை இவற்றை விலக்கி விட்டு எந்த அடிப்படையில் சமன்பாடு வந்து விட்டது அல்லது இல்லை என உறுதி செய்வீர்கள்?//

    Badri,

    I am still waiting for your response to the above question.

    ReplyDelete
  40. //ஆம். சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்ய இட ஒதுக்கீடு அவசியம்//
    சாதி மட்டும் தான் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணமா? Gender ஒரு காரணமில்லையா? பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற வாதத்தின் படி பார்த்தால் பெண்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டாமா?

    //6. அரசு உதவிபெறாத தனியார் கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமா?

    பதில்: செய்யவேண்டும். தவறில்லை.//

    இது Minority Institutions களுக்கும் பொருந்துமா? அவர்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு?

    //செய்யவேண்டும். தவறில்லை.இத்தகைய இட ஒதுக்கீட்டினால் இந்தத் தனியார் கல்விக்கூடங்கள் தம் வருமானத்தை இழக்கப்போவதில்லை. //

    பின்னர்
    //...தனியார் நிறுவனங்கள் வேலை தடைபடுவதுபோல எதையும் சட்டமாகக் கொண்டுவரக்கூடாது. அவ்வாறு செய்வது தனியார் நிறுவனங்களின் உரிமையை மீறுவதாகும்//

    இந்த இரு கருத்துகளுக்கும் முரண்பாடு இல்லையா?

    //8. பிற்படுத்தப்பட்டோருள் Creamy layer என்று முடிவுசெய்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது எனலாமா?

    பதில்: சமூகத்தின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சலுகையை தமக்குள்ளாக எவ்வாறு பிரித்துக்கொள்வது என்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும் //

    அப்படிப் பார்த்தால் SC, ST, BC, MBC என்று ஏன் தனியாக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்? முன்னேறியவர்கள், பின் தன்கியவர்கள் என இரு பிரிவுகளை மட்டும் அங்கீகரித்து அதில் பின் தன்கியவர்கள்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்யலாமா? அதில் யாருக்கு எவ்வளவு என்று பின் தங்கியவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்று அரசாங்கம் விட்டு விடலாமா?
    பின் தங்கியவர்கள் என்பவர்கள் ஒரு homogeneous monolithic block அல்ல. எனவே அதில் ஒரு சாரார்களுக்கு சலுகை அளிக்கக்கூடாது என்றும், இவர்களுக்கு இத்தனை சதவிகீதம் என்று சொல்வதும் அரசின் உரிமை/கடமை.

    --Easwar

    ReplyDelete
  41. I am giving my comments for your every questions...

    Inga Forward/Backward classes'nnu naan mention panni irukkurathu, samoogathin paarvaiyil eppadi irukko appadi thaaney ozhiya, thats not my views..!!

    1. I am asking how u tell tat many doesnt get seats... If u take Engineering, the places are filled using Single-Window system... This gives oppurtunities to everyone who gets gud mark. (actually, if they remove the reservation thr itself, it wud be more fair enuf) Here its viewable by all, including the media. So, noone who gets gud mark 4m a backward community cant be left out. So, as an alternative, the govt shud implement this to all degrees, not the reservation.

    2. Partially agreed... Everyone's every talent shud be taken into account. But, this shud be stopped atleast in +2. After +2, everyone prefers to study of his own interest. If anyone is interested in sports, then he cud hav joined in any PET college, etc. So, why shud we care for his other interests??

    3. Yes... If some problem comes we approach doctors thinking tat he is atleast capable of handling some small issues. The person who perfers economic reason to see a street doctor, will prefer some Sidhaa, Aayurvedic medicines. so, the question here is, wat abt the persons who lead the average life and want to go to a fair doctor?? If a better solution is possible in this time(ie: andha ida odhukeedu illaama niraiya peru merit'la ulla varrathukku vaaippu irukkum pothu), why shud we risk our life??

    4. Partly agreed... But, this type of "Special" things hav been given for nearly 60 yrs... And, if sth happens better, why shud we continue even after the improvement?? Else, if nothing happens better, why shud we continue, the wholesome bloody concept??

    5. Yes.. it satisfies some of the politicians wishes!!

    6. If a person is economically viable, then why shud he enjoy the reservation quota??

    7. If it shud be implemented in govt org, then why shudnt in private sectors?? 'coz the govt fears whether they apply it forcibly then it will affect the economy. Almost all of the global giants will stop investing here in India. 'coz they always respect QUALITY. Most of the private sectors are running successfully only 'coz of the above sed manthra. If it is successful, then why shudnt we implement the same in public sectors too??

    8. Sorry... I really dont get the meaning of creamy layer. So, dont want to comment.

    9. Partly accepted... My concern is "the reservation shud be taken down to ZERO" .

    10. If many banks come forward to give loans, then why shudnt we implement them to backward classes too??
    Banks yezhaigalukkum kadan tharum but athula jaathi paagu paadu paakkuthunna, appo govt shud regulate the loan matters making the banks to give loan to all. If this is not the case, indha karumam pudicha ida othukeettai, atleast +2 varaikkum, ecomical status paathu reservatoin kudukkalaam. (Actually, I am against even for tat too!!) Govt shud be in a state to provide gud education to all. Dont say tat the persons who is not capable of buying materials like books cant study... In every college, only 4 ppl take xerox out of 10. The remaining persons get the xerox 4m those persons and usually study well.
    Aandavan ellaathukkum moolai'ai vaikkum pothu endha paagu paadum paakkalai. Economical'aa better irunthu, backward community'aa irukkuravan ozhunga padikkalai'na, avanoda community thaan kaaranamaa?? At the same time, economical'aa poor'aa irukkura bright student, backward community'la irunthaa, merit'la thaan serppaanganna automatic'aa college'kulla poiduvaan. Endha vagai'la paathaalum ithula nallaa padikkiravanukku endha baathippum varalai.
    Economical'aa illaama samoogam thaan indha maathiri adakku muraigalukku ellaam kaaranam'na, oruthan padikkirathunaala mattum andha samoogam avanai mathichira poguthaa?? Appadi andha samoogam future'la madhikkum'na, appavum padippai vachu madhikka porathu illai. Then why shud we support reservation?? Again the same question...

    ReplyDelete
  42. என்.டி.டி.வி சர்வேயில் இந்தியாவில் 64 % பேர்கள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள்.

    http://www.ndtv.com/template/template.asp?template=reservation&slug=Indians+back+OBC+reservation%3A+Survey&id=19441&callid=0&category=Nationa

    ReplyDelete
  43. // If a better solution is possible in this time(ie: andha ida odhukeedu illaama niraiya peru merit'la ulla varrathukku vaaippu irukkum pothu), why shud we risk our life??//

    I am not able to understand the above line properly... but if you had meant that your life is at risk, because of reservations in medical field, YOU are totally mistaken

    Cut Off for OC is 99 % where as cut off for SC is 97 % in tamil nadu. ANy one who scores that mark is fit enough to be a doctor

    ReplyDelete
  44. Badri,

    Since you are an IITian, I think you would already be aware of this.

    What makes IIT a great institution is not just its faculty but mostly its students. These students are undoubtedly the best of the best.

    By introducing reservation, the brand IIT would no longer be that. The competition inside the campus would definitely be reduced. Probably, BITs would one day overtake IIT.

    Anu_kris

    ReplyDelete
  45. India will be overtaken by china in fields where india has an advantage.India cannot seek reservation as an OBC nation in the
    world.We are becoming a caste oriented nation and quota system
    will destroy IITs etc.Who cares.Let
    the nation decline, let the OBCs
    live.

    ReplyDelete
  46. //இட ஒதுக்கீடு ஒரு இருமுனையுள்ள வாள். சரியாகக் கையாளப்படாவிடில் மிக மோசமான விளவுகளை ஏற்படுத்தும்.//

    Well said

    // எவரையும் பாதிக்க்காத முறையில், அதே நேரத்தில் அனைவரயும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்.//

    Good
    //அதற்கு, பொருளாதார அடிப்படையில் அனத்து சாரர்க்கும் இட ஒதுக்கீடு அளிப்பதே சிறந்தது. //

    So, YOu agree for a POOR GUY to get MBBS even if he scored 2 marks less than a rich guy, but not a BC guy to get the seat when he scores 2 marks less than FC. So according to you merit is NOT compromised when a poor guy gets the seat, but merit is compromised when a backward guy gets seat.... DOUBLE STANDARDS...

    //நான் ஒத்துக் கொள்கிறேன், பணம் படிப்பைக் கொடுத்து விடாது என்று. ஆனால் படிக்கக் கூடிய வசதிகளை நிச்சயம் செய்து தரும்.//

    Similarly forward caste also gives an edge.

    The best way to implement reservation is to treat the children of graduates under Open competition irrespective of their community and NOT The economic factor.

    How can you judge the real income of Business people. The leading textile shop owner in my town pays LESS income tax than me.....

    THose who advocate ECONOMICS as the base of reservation are ignorant that there are 90 crore people in India who do not pay income tax and of these 5 crore are richer than the 10 crore who (are forced to) pay (or tax deducted at source by govt or company)

    ReplyDelete
  47. There are many factors involved in making a student scoring better marks

    1. Money
    2. Community
    3. Parent's Education Level

    Of these MONEY cannot be used as a criteria because
    1. it is stationary
    2. The real status can be easily cheated
    3. Salaried class will be at loss

    Those who give this criteria exhibit their ignorance of ground realities. (They do not know that there exists lot of people who earn more than us yet do not pay income tax) Their concerns are limited to cities and as such they can be ignored

    ReplyDelete
  48. I don't care if the IIT/IIM's standards go down or up. The basic point is we need to bring in social equivality. Badri was very honest in his opinion except in one point.

    There has to be a closing date for this reservation system, but Badri thinks that we don't need to worry about that rightnow.

    I am worried that the very reson we fight for reservation today if continues for ever, will definitely push some other casete down and thery by invalidates the purpose of reservation.

    So there has to be a exit stretegy before we get it to the system. Politicans will never dare to end it .coz of the fear of vote banks. Those who benefit from it, will not stop it ,coz we all very normal people, will act only based on our interest.

    ReplyDelete
  49. From : K.R.Athiyaman, Chennai - 96

    To : Thriru.Ki.Veeramani Ayya Avargal, Chennai

    Anbulla Ayya,

    The creamy layer (that is, those who are
    upper middle class and above) among
    BC/SC/ST communities continue to enjoy
    the benifits of reservation unashamedly.
    (i hail from such a family).

    We propose that economic criteria should
    also be included as an additional qualification
    for being eligible for reservation benefits.
    Families whose annual income is above say,
    Rs.1,80,000/- and where the parents are well
    educated may be deemed as FCs. And many schools,
    where annual fees are above Rs.60,000 may be
    classified as FC schools.

    Reservation was meant to be a short term
    issue and never a permenent institution as
    it has become now. And there should be a
    standing committe consisting of eminent
    jurists, educationalists and honest people
    to perodically evaluate the effects/abuse
    of reservation benefits. The whole process
    should a dynamic one, not a static one, which
    is now a vote bank issue and nutured by
    vested interests. And there should be a
    maximum limit for resrvation (and not the
    present >70%), which should be gradually
    brought down to zero.

    And in promotion among govt staff only
    seniority, merit and efficency should be
    the criteria. Only one generation of any
    family must be eligible for the benefits.
    Subsequent generation must be deemed FCs.

    Unfair reservation benefits to numerous
    well off students has created resentment
    and heart burn among FCs and many fair
    minded people. The caste divisions has become
    more rigid and divisive (esp in govt offices).

    I am sure Thandai Periyar and Ambedhkar would
    endorse my above views if they are alive today.
    They were basicaly honest in all issues.

    DK should have functioned as a bridge between
    BCs and SCs (esp in rural areas) and established
    peace committes for stopping caste clashes.
    The aliented SCs have formed many organisations
    of their own to fight for their rights, instead
    of joinning DK. Blaming brahmins alone for all
    the ills of the society will not solve any thing.

    Thanks & Regards

    K.R.Athiyaman
    Chennai

    ReplyDelete
  50. March 2006

    Dear Friends,

    The creamy layer among OBC/SC/ST have been
    cornering the bulk of the reserved seats
    at the cost of the poor among them.

    Like every other subsidy or dole by govt
    of India (incl labour policy and exit policy)
    reservation policy is full of loopholes and
    distortions, which is being effectively
    utilised and safeguarded by vested intersts
    masquerading as 'for the people'....

    As the FCs are, in effect a minority (less than
    30 % of population), all the political parties
    are silent in this issue, as they vie with
    each other for the votes of the majority
    (OBC and SC/STs) of the populace.

    The parliament will enact the bill into law
    and courts cannot stop this as there is a
    provision in the constitution.

    This is called majoritarianism : imposing the
    will of the majority of the population on the
    minority ; and fundamental rights and fair play
    be damned. Legal sanctity will make it look
    like right thing.

    In Nazi Germany, in 1933-45, the majority of the
    German people did not object to the genocide
    against the minority (Jews mainly). the German
    state did it with the tacit approval of the
    majority of the Germans. But it is a gross
    violation of fundamental rights of the minorites.

    Indians too have become so cynical that the
    majority is ready to supress the monorites
    rights.

    I am sorry to say that this bill will be enacted
    even if all the FCs fight against it, as the
    majority's will (due to vote share) is being
    imposed without any inhibition.

    Unless and until a party like LP has two
    thirds majority in parliament, no one can
    stop these bills.

    TN has shown the ugly way some decades back
    and hence FCs in TN are resigned to their fate
    and not much protest here. And it induces brain
    drain and mass emigration of FCs. And the
    caste feelings and divisiveness increses.

    The only positive aspect currently is that
    the BC/SC/ST youth are no longer under the
    spell of castist leaders like Ramadoss (PMK) or
    Krishnaswamy (SC/ST) and are slowly realising
    the true nature of these cynical and selfish
    leaders, who utilise the castist feeling for
    their personal improvements. That the vote share
    of these leaders is decreasing over the years,
    is the only silver lining.

    K.R.Athiyaman
    Chennai -96

    ReplyDelete