Thursday, June 10, 2010

போபால் தீர்ப்பு

போபால் விஷவாயுக் கசிவு, 26 வருடங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இதில் அப்போதைய யூனியன் கார்பைட் இந்தியா சேர்மன் கேசுப் மஹீந்திரா முதற்கொண்டு 7 பேருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

ஒரு கம்பெனி என்ற அமைப்பில் பங்குதாரர்கள் (Shareholders), இயக்குனர்கள் (Directors), நிர்வாகம் (Management) என்று மூன்று தளங்கள் உள்ளன. பங்குதாரர்கள்தான் பணம் போட்டு நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள். கம்பெனியாக இந்தியாவில் நிறுவப்பட்டால் (கம்பெனீஸ் ஆக்ட்டின்படி), அந்த நிறுவனத்தை வழிநடத்த என்று சில இயக்குனர்கள் நியமிக்கப்படுவார்கள். இயக்குனர்கள் இரண்டுவகை. எக்சிகியூட்டிவ் டைரெக்டர்ஸ் - அதாவது செயல் இயக்குனர்கள். மற்றொருவகை நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள். எக்சிகியூட்டிவ் இயக்குனர்கள் தினசரி நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள். மற்ற இயக்குனர்கள் தினம் தினம் நடக்கும் அலுவலக வேலைகளில் எந்தவகையிலும் ஈடுபடாதவர்கள். போர்ட் மீட்டிங் எனப்படும் இயக்குனர் சந்திப்பில் மட்டும் கலந்துகொள்பவர்கள். அடுத்ததாக நிர்வாகத்தினர். மேல்மட்ட நிர்வாகத்தினர்தான் தினம் தினம் கம்பெனியை நடத்துபவர்கள். இவர்களில் ஓரிருவர் இயக்குனர்களாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நிர்வாகத்தினர் இயக்குனர்கள் கிடையாது.

பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்றால் இரண்டு இயக்குனர்கள் போதும். வெளியார் யாரையும் இயக்குனர்கள் ஆக்கவேண்டியதில்லை. அப்பா, பிள்ளை அல்லது கணவன், மனைவி என்று குடும்பத்தில் இரண்டு பேரை இயக்குனர்கள் ஆக்கி கம்பெனியை ஆரம்பித்துவிடலாம். அதுபோன்ற நேரங்களில் பொதுவாக பங்குதாரர், இயக்குனர்கள், கம்பெனியின் நிர்வாகிகள் எல்லாமே ஒரு குடும்பத்துக்குள்ளேயே போய்விடும். ஆனால் பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளின் நிலை வேறு. அங்கு இண்டிபெண்டெண்ட் டைரெக்டர்கள் தேவை. கம்பெனிச் சட்டப்படி, அந்நியர்கள் சிலரை நிறுவன இயக்குனர்களாக ஆக்கவேண்டும். அப்படி யூனியன் கார்பைட் இந்தியாவின் இயக்குனராக வந்தவர்தான் கேசுப் மஹீந்திரா. இப்படி நான்-எக்சிகியூட்டிவ் இயக்குனராக இருந்த கேசுப் மஹீந்திரா, இயக்குனர் குழுமத்துக்குத் தலைவராக, நிறுவன சேர்மனாகவும் இருந்தார். இவர் மஹீந்திரா அண்ட் மஹீந்திரா குழுமத்தை ஆரம்பித்தவர். இந்தக் குழுமம் இன்று டிராக்டர்கள், கார்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது. நொந்துபோன சத்யம் கம்ப்யூட்டர் குழுமத்தை விலைக்கு வாங்கி மஹீந்திரா சத்யம் என்று நடத்துவது.

ஆண்டுக்கு நான்கு முறை (அல்லது ஆறு முறை) இயக்குனர்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருப்பார் கேசுப் மஹீந்திரா. நிறுவன லாபத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இருந்திருக்காது. போர்ட் மீட்டிங்கில் கலந்துகொள்ள போகவரச் செலவு கொடுத்து, ஒரு சந்திப்புக்கு இவ்வளவு என்று கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்கள். அதற்காகவா அவரை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும்?

கம்பெனிச் சட்டப்படி, பொதுவாக ஒரு நிறுவனத்தின் குற்றங்களுக்கு அதன் இயக்குனர் குழுமம்தான் பொறுப்பு. பங்குதாரர்களுக்கு நேரடியான பொறுப்பு கிடையாது. அப்படிப் பார்த்தால் விஷவாயுச் சம்பவம் நடந்தபோது யூனியர் கார்பைட் (அமெரிக்கா) நிறுவனத்தின் சேர்மனும் மேனேஜிங் டைரெக்டருமாக இருந்த வாரன் ஆண்டர்சனுக்கு என்ன பொறுப்பு?

வாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம். விஷவாயுவைப் பரப்பு என்று அவர் எங்காவது சொன்னாரா?

***

உண்மையில் யார் மீதுதான் குற்றம்? வாரன் ஆண்டர்சன், கேசுப் மஹீந்திரா ஆகியோர் மீது குற்றமே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார், அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை ஆராயாமல் ‘ஹை புரொஃபைல் ஆட்கள்’ என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.

கார்பாரில் என்ற பூச்சிக்கொல்லியைத் தயாரிக்க, மீதைல் ஐசோசயனேட் என்ற (விஷப்) பொருளைப் பயன்படுத்தாமல் வேறு சில வழிகளும் உள்ளன. ஆனால் அந்த வழிகள் அதிகச் செலவு பிடிப்பவை. அபாயம் வரக்கூடும் என்ற நிலையிலும் மீதைல் ஐசோசயனேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தியது யூனியன் கார்பைட் செய்த தவறு. இந்தத் தவறுக்கு யூனியன் கார்பைட் (அமெரிக்கா) காரணமா? அல்லது யூனியன் கார்பைட் (இந்தியா) காரணமா?

இதை அடுத்து, மாநில, மத்திய, நகராட்சி அமைப்புகளின் தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மீதும் நாம் குற்றம் சொல்லவேண்டும். விஷப் பொருள்கள், எரியக்கூடிய, வெடிக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருக்கவும் இந்தியாவில் குறைந்தபட்சம் 20 சட்டங்கள் உள்ளன. (The Indian Explosives Act, 1884, The Explosive Substances Act, 1908, The Destructive Insects and Pests Act, 1914, The Poisons Act, 1919, The Drugs and Cosmetics Act, 1940, The Factories Act, 1948, The Industries (Development & Regulation) Act, 1951, The Inflammable Substances Act, 1952, The Air (Prevention and Control of Pollution) Act, 1981 ஆகியவை ஒருசில. 1984-க்குப் பிறகு மேலும் பல சட்டங்கள் வந்துள்ளன.) இந்தச் சட்டங்களை எல்லாம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தின்மீது குற்றம் இல்லையா?

இந்தியர்கள் பாதுகாப்பு பற்றி சிறிதும் கவலைப்படுவதே இல்லை. சாலையைக் கடக்கும்போது, தெருவில் சர் புர்ரென்று வண்டிகளை ஓட்டிச் செல்லும்போது, வீட்டில் நெருப்பைக் கையாளும்போது என்று எங்கும் அந்த கவனக்குறைவு தெரிகிறது. யூனியன் கார்பைட் இந்தியாவின் போபால் ஆலையில் வேலை செய்த ஊழியர்களின் கவனக்குறைவுக்கு யாரைக் குறை சொல்வது?

இவை அனைத்தையும் தாண்டி யூனியன் கார்பைட் இந்தியா நிர்வாகிகள்மீது குற்றம் சாட்டியாகவேண்டும். ஆனால் அந்தக் குற்றம் சிறையில் அடைக்கக்கூடிய ஒன்றா?

நிறுவனங்களின் செயல்பாடுகளை சரியான வழியில் கொண்டுசெல்ல, முக்கியமான ஆயுதம் ஒன்று உள்ளது. அதுதான் கடுமையான அபராதம். இந்தியச் சட்டங்கள் எல்லாம் பல ஆண்டுகாலமாக மாற்றப்படாமல் தூசு படிந்து உள்ளவை. அதனால்தான் 2 ஆண்டுகாலச் சிறை + சில ஆயிரம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் உள்ளது. மாறாக அபராதம் பல லட்சங்கள் அல்லது சில கோடிகள் என்று ஆகிவிட்டால், நிறுவனங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கத் தொடங்கும். மோசமான நடத்தை கொண்ட நிர்வாகத்தை அபராதத்தின்மூலமே திவாலாக்க முடியும். திவால் ஆகிவிடுவோம் என்ற பயம் இருந்தால் அது ஒன்றே அந்த நிறுவனத்தை சரியான பாதையில் பயணிக்க உதவும். ஆனால் அத்துடன் லஞ்ச லாவண்யத்தையும் ஒழிக்கவேண்டும். இல்லாவிட்டால் லஞ்சம் கொடுத்துத் தப்பிக்கவே நிறுவனங்கள் முயற்சி செய்யும்.

போபால் விஷவாயு வழக்கில் என் கணிப்பில் மிகப்பெரிய குற்றவாளி இந்திய அரசுதான். 1984-ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு, 1999-ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. மாறாக, இந்திய அரசு, 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும். அப்படி அந்தப் பணத்தைப் பெற்று - அல்லது அந்தப் பணத்தைக் கையில் வாங்குவதற்கு முன்னமேயே - பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்குமாறு செய்திருக்கவேண்டும். செத்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் (இன்றைய பணத்தில்); உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில்... என்றால் ஓரளவுக்கு அது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.

அதைச் செய்யாமல், இன்று ப.சிதம்பரம் தலைமையில் மற்றொரு கமிட்டி போட்டு ஒரு பிரயோசனமும் இல்லை.

எரிக்கப்படவேண்டியது வாரன் ஆண்டர்சனின் கொடும்பாவி அல்ல, ராஜீவ் காந்தி முதற்கொண்டு மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களின் கொடும்பாவிகளை.

47 comments:

  1. Badri, Very good analysis.

    //உண்மையில் யார் மீதுதான் குற்றம்? வாரன் ஆண்டர்சன், கேசுப் மஹீந்திரா ஆகியோர் மீது குற்றமே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார், அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை ஆராயாமல் ‘ஹை புரொஃபைல் ஆட்கள்’ என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.//

    Well said...

    //போபால் விஷவாயு வழக்கில் என் கணிப்பில் மிகப்பெரிய குற்றவாளி இந்திய அரசுதான்//

    True... Corruption, inability of law enforcement are the main reasons.

    ReplyDelete
  2. முதல்முறை இந்த மாற்றுக் கருத்தை கேட்கிறேன். ஞாநி இதை ஒப்புக்கொள்வாரா?

    ReplyDelete
  3. போபால் தயாரிப்பு ஊழியர்கள் ஒழுங்காக முறையில் ( யூனியன் இருந்ததா? ) வேலை செய்திருந்தால் இவ்வளவு சேதம் இருந்திருக்காது அல்லவா?

    குதிக்கபோவது கிணறு என்று தெரிந்திருந்தும் - முடியாது என்று யூனியன் சொல்லியிருக்கலாம் அல்லவா?

    திருப்பூர் சாயப்பட்டறைகளில் வேலை செய்வோர், யூனியன் ஆட்கள் தான், நொய்யலில் சாயக்கழிவு தண்ணீர் விட வைக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தால் - 725 கம்பெனிகளில் ( என் மாமா கம்பெனியும் ஒன்று ) வேலை நடந்து ஐந்தாயிரம் குடும்பங்கள் சந்தோசமாக இருந்திருப்பார்கள்....

    யூனியன் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்?

    ReplyDelete
  4. சரி, மஹிந்ரா, ஆன்டர்சன் ஆகியவர்கள், ஆலையில் இவ்வளவு கடுமையான விஷப் பொருள் உள்ளதே, அதற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று கண்குத்திப்பாம்பாகக் கண்காணித்திருக்க வேண்டுமா இல்லையா? கண்டிப்பாக அவர்களின் அலட்சியமும் ஒரு காரணம். அதற்குரிய தண்டனையை அவர்கள் கண்டிப்பாக அனுபவிக்கத்தான் வேண்டும்.

    ReplyDelete
  5. அன்புள்ள பத்ரி

    நிறுவனங்களின் நிதி நிர்வாகச் சீர்கேட்டுக்குத் தலைமை மற்றும் நிதித் துறை சார்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவே Sarbanes-Oxley Act 2002 கொண்டு வந்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது அமெரிக்கா. Worldcom, Enron போன்ற நிறுவனங்களின் கணக்கு மோசடிக்கு அவற்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டார்கள்.

    டாலர் காசு மதிப்பு கூட இங்கே போபாலில் பலியான பல்லாயிரம் மனித உயிர்களுக்குக் கிடையாதா? மகேந்திராவும் ஆண்டர்சனும் தலைமைப் பொறுப்பில் (இந்தியா - சர்வதேச நிறுவனம்) இருந்தவர்கள் என்ற முறையில் இவர்களை இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்கச் செய்து தண்டனை வழங்க வேண்டும்.

    ஏதாவது நாசம் ஏற்பட்டால் வெளிநாட்டு nuke supplier-க்கு பொறுப்பு இல்லை, இங்கே இருக்கும் provider-க்கே முழுப் பொறுப்பு என்று Nuclear Liability மசோதாவில் அமெரிக்க அரசு தூண்டுதலால் சேர்த்துச் சட்டமாக்க முயலும் அரசு இது.அப்படி நாசம் ஏற்பட்டால் கிடைக்கக் கூடிய நஷ்ட ஈடு போபாலில் கொடுக்கப்பட்ட சிறு தொகையை விட மிகவும் கொஞ்சமாக வேறு இருக்குமாம்.

    ஆண்டர்சன் கைதான இரண்டு மணி நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்து ம.பி அரசு விமானத்தில் போபாலில் இருந்து வெளியேற ஆவன செய்ய அன்றைய முதல்வர் அர்ஜூன் சிங்குக்கு தில்லியில் நரசிம்மராவ் அரசு தான் உத்தரவிட்டது என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

    இந்தியன் உயிரும், ஈழத் தமிழனின் உயிரும் மயிர் விலை கூட போகாது போலிருக்கிறது.

    வெட்கத்துடனும் வேதனையுடனும்
    இரா.மு

    ReplyDelete
  6. Dear Mr. Badri,

    Your article does not reveal properly the root cause of the accident. Workers working in critical operation, should be given sufficient training and updating them proper safety methods are very much important in plants. Most of the indian companies are doing this as a formality. Why Petroleum companies are met with minor accidents compared to other industries is because of their safety methods and upgradation of training methods and continuous training of their employees.
    This is to be strictly implemented in chemical industries also.

    K. SAID ALAUDDEEN FAISZ
    ANNUR, COIMBATORE.

    ReplyDelete
  7. அருமை! நிச்சயமாக!

    இத்துப்போன இந்திய சட்டங்களும், ஆட்சியாளர்களும்!

    காங்கிரஸ் அரசுகளும், பிரதமர்களும் கோழைகள். தற்காலிக தீர்வை மட்டும் எதிர் நோக்கும் சுய நல வாதிகள்!!

    ReplyDelete
  8. அருமையான அலசல்! எங்களுக்கும் சில விஷயங்களாவது புரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி!
    கொஞ்சமாவது ஊழல்கள் குறையவாவது செய்தல் தான் இந்தியா உருப்படும் ! வெறுமனே அரசியல் வாதிகளை மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்காமல் நம்மால் முடிந்தவைகளை செய்ய முன் வர வேண்டும்! நம்மில் அனைவரும் இந்தியர்கள் என்று ஒன்று படுவது அதில் ஒன்று! நன்றி!

    ReplyDelete
  9. சொல்ல வந்ததைச் சொன்னால் பாரா உதைப்பார். அதனால் அதனைச் சொல்லவில்லை.

    1)மீதைல் ஐசோசயனேட் என்பது ஆபத்தானது என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் அது தடை செய்யப்பட்டதா? தடை செய்யப்படாதது என்னும் பொழுது நிறுவனம் செய்த தவறென்ன?

    2) நிறுவனத்தில் ஏற்படும் கவனக்குறைவுகளுக்கு நிர்வாகம்தானே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தற்பொழுது இருக்கும் சட்டத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கும் தண்டனைகளை தந்துதானே ஆக வேண்டும்?

    3) BP எண்ணை கசிவில், அதனை மேற்ப்பார்வை செய்ய வேண்டிய அரசு இயந்திரத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களே. அது போல இந்த யூனியன் கார்பைட் நிறுவனங்களை மேற்பார்வை செய்ய வேண்டிய அதிகாரிகளுக்கு தண்டனை ஏதேனும் தரப்பட்டிருக்கிறதா?

    ReplyDelete
  10. //‘ஹை புரொஃபைல் ஆட்கள்’ என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.//

    உணர்ச்சிவசப்படாத தொனியில் தெளிவான பதிவு. இந்த விபத்திற்குப் பிறகாவது நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் இல்லை. பல தொழிற்சாலைகளில் அடிப்படை பாதுகாப்புவிதிகள் கூட பயன்படுத்தப்படாத அலட்சிய மனோபாவமே தெரிகிறது.

    கிண்டலடிக்காத நேரடி அர்த்தத்திலேயே கூறுகிறேன். நல்ல பதிவு, நன்றி பத்ரி.

    ReplyDelete
  11. Good introduction to the company management structure and responsibilities of each layer.

    I have issues with many assertions.
    //அபாயம் வரக்கூடும் என்ற நிலையிலும் மீதைல் ஐசோசயனேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தியது யூனியன் கார்பைட் செய்த தவறு. இந்தத் தவறுக்கு யூனியன் கார்பைட் (அமெரிக்கா) காரணமா? அல்லது யூனியன் கார்பைட் (இந்தியா) காரணமா?//
    How does it matter?
    If other means of producing costs more and there is lack of awareness/enforcement of safety is the norm, the US business model is to exploit them(Ask China how it became the manufacturing hub for the US).

    //1984-ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு, 1999-ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. மாறாக, இந்திய அரசு, 3.3 பில்லியன் டாலருக்கு ஒரு துளியும் குறையாமல் யூனியன் கார்பைடிடம் கறந்திருக்கவேண்டும்.//

    What was the political relationship between the US and India in 1984(and later) that affected trade?
    How good(rather bad) was the trade agreements to make the US corporations accountable for such disasters?

    My pure speculation: Was it possible to take a hard stance when you are not a close good political ally? Or be pragmatic and get some reasonable money?

    //‘ஹை புரொஃபைல் ஆட்கள்’ என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.//
    I am very surprised by this statement.

    Consider these(Forget for the moment the US laws):-
    BP oil spill in the Gulf of Mexico:

    BP CEO travels to the US and makes daily media appearances. (He is not the one who was responsible for monitoring the Blowout Preventer in the rig)

    Toyota's massive safety recalls:

    The CEO is forced to travel to the US to testify before the Congress and takes full responsibility. (He is not the one in the assembly line or order those faulty floor mats)

    ReplyDelete
  12. Badri

    I do not agree with your views.

    Whose responsibility is to enforce the security regulations in Bhopal incident?. Did they follow the same security regulations that were followed in US? These regulations were diluted to save money. It was reported that lot of guidelines were Indianized. How could Union carbide allowed to change the regulations and guidelines ?

    ReplyDelete
  13. Well explained, Badri. Totally a different view from what I read and I concur with your view. Thanks!

    ReplyDelete
  14. // வாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம். விஷவாயுவைப் பரப்பு என்று அவர் எங்காவது சொன்னாரா?//

    ஸ்பெக்ட்ரம் ராஜா விஷயத்தைப் போலவே, இந்த பதிவிலும் உங்கள் வாதத் திறமை சிலிர்க்க வைக்கிறது.

    * செல்வராஜ்.

    ReplyDelete
  15. //ஆனால் உண்மையான குற்றவாளிகள் யார்//

    வியப்பாக இருக்கிறது உங்கள் கேள்வி. ஒருவர் கண்மூடித்தனமாக இலாப நோக்கிற்காக ஓட்டிச் சென்ற வண்டி குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுவிட்டது. பலர் உயிர் போய்விட்டது. வண்டி ஓட்டியவருக்கு லைசன்ஸு கொடுத்ததவர், வண்டிக்கு FC கொடுத்தவர், வண்டியின் நிலையை சரியாக கணிக்காமல் பயணம் செய்த பயணிகள், ரோடு போட்ட காண்டிராக்டர் என்று எல்லார் மேலும்தான் தவறு இருக்கிறது.

    ஆனால் இந்த விபத்திற்கு மூலகாரணம் யார்? சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத வண்டியை இலாப நோக்கத்திற்காக மட்டும் ஓட்டிச் சென்ற முதலாளிதானே?

    மற்றவெரெல்லாம் முதலாளிகளுக்கு துணை போனவர்களே.

    இலாபம் சம்பாதிக்கவே தொழில் நடத்தபடுகிறது. தொழில் நடத்த மூலதனம் தேவை. அரசாங்கம், அதிகாரிகள், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் எல்லோரும் பங்கு வகித்தாலும், ஒரு நிறுவனத்தின் அச்சாணி அதன் மூலதனமிடும் முதலாளிகளே. நிறுவனத்தின் தவறுக்கு முழுபொறுப்பும் (Accountability) அவர்களைச் சேர்ந்ததே.

    //போபால் விஷவாயு வழக்கில் என் கணிப்பில் மிகப்பெரிய குற்றவாளி இந்திய அரசுதான்.//

    இந்திய அரசு Vulnerable target. இலஞ்ச இலாவண்யத்தால் வசப்படுத்திவிடக்கூடிய சுலபமான entity. இந்த வழக்கில் அவர்களும் குற்றவாளிகள்தான் என்றாலும் ‘மிகப் பெரிய குற்றவாளி’ சந்தர்ப்பங்களை சாதகமாக உபயோகித்து நிறுவனத்தை நடத்திய முதலாளிகள்தான்.

    உங்கள் ஆதங்கம் ‘இவர்களை மட்டும் தண்டிக்கிறார்களே... மற்றவர்களை விட்டுவிட்டார்களே’ என்று இருப்பின் உங்களோடு முழுவதும் உடன்படுகிறேன்.

    //‘ஹை புரொஃபைல் ஆட்கள்’ என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.//

    எல்லா நாடுகளிலும் ‘கொழுத்த’ பணக்காரர்களை குறை சொல்லும் கூட்டம் உண்டு. இந்தியாவில் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.

    நல்ல பகிர்விற்கு நன்றிகள் பல!
    (இதுவும் ‘நபநப’தான் :) )

    ReplyDelete
  16. ட்விட்டர் வழியாகக் கிடைத்த ஒரு சுட்டி: http://www.studentsforbhopal.org/?q=node/85

    இதில் யூனியன் கார்பைட் இந்தியா எந்த வகையில் எல்லாம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் தவிர்த்திருக்கிறார்கள் என்ற தகவல் உள்ளது.

    முக்கியமான கட்டுரை.

    ***

    இந்தக் கட்டுரையும் சேர்த்து, வாரன் ஆண்டர்சன்மீது கிரிமினல் குற்றம் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. யூனியன் கார்பைட் இந்தியா மீது குற்றம் உள்ளது என்பதை நான் மறுக்கவே இல்லை. நீங்கள் கவனமாகப் பார்த்தால் இந்தக் கட்டுரையில் நான் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும்தான் வக்காலத்து வாங்குகிறேன்: ஒருவர் இந்திய கம்பெனியின் non-executive chairman, மற்றொருவர் அமெரிக்க கம்பெனியின் chairman cum managing director. இந்திய கம்பெனியின் மேனேஜிங் டைரெக்டர் மற்றும் முக்கிய நிர்வாகிகள்மீது குற்றம் இல்லை என்று நான் சொல்லவே இல்லை. அவர்கள்மீது குற்றம் உள்ளது; அது கிரிமினல் குற்றம்; அதற்கான சிறைத் தண்டனையை அவர்கள் அனுபவிக்கவேண்டும்.

    ஆனால் வாரன் ஆண்டர்சன், யூனியன் கார்பைட் அமெரிக்கா சேர்த்து அனைவர்மீதும் சிவில் லயபிலிட்டி உள்ளது; அதுவும் எக்கச்சக்கமாக.

    இதுதான் என் வாதத்தின் சுருக்கம்.

    அத்துடன், இந்திய அரசின்மீது மேலும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கிறேன். மேலே உள்ள பல பின்னூட்டங்களுக்கு தனித்தனியான பதிலை நான் சொல்லவேண்டும். நேரம் கிடைக்கும்போது செய்கிறேன்.

    ReplyDelete
  17. இரா.முருகன்:

    //நிறுவனங்களின் நிதி நிர்வாகச் சீர்கேட்டுக்குத் தலைமை மற்றும் நிதித் துறை சார்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவே Sarbanes-Oxley Act 2002 கொண்டு வந்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது அமெரிக்கா. Worldcom, Enron போன்ற நிறுவனங்களின் கணக்கு மோசடிக்கு அவற்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டார்கள்.//

    சார்பேன்ஸ்-ஆக்ஸ்லி சட்டம், நிறுவனக் கணக்குகளில் தில்லுமுல்லு செய்பவர்கள்மீது கிரிமினல் வழக்கு போட்டு தண்டனைகளை அதிகரிப்பது. தில்லுமுல்லு என்றாலே கிரிமினல் குற்றம்தான். ஆனால் அதுமாதிரியான தில்லுமுல்லா யூனியன் கார்பைட் ஆலையில் நடந்தது? என்ரான் மாதிரியான இடத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ஃபிராட் செய்கிறார். அதற்கு வெறும் சிவில் லயபிலிட்டையையும் தாண்டி கிரிமினல் லயபிலிட்டியைக் கொண்டுவருவது சரிதான்.

    //டாலர் காசு மதிப்பு கூட இங்கே போபாலில் பலியான பல்லாயிரம் மனித உயிர்களுக்குக் கிடையாதா? மகேந்திராவும் ஆண்டர்சனும் தலைமைப் பொறுப்பில் (இந்தியா - சர்வதேச நிறுவனம்) இருந்தவர்கள் என்ற முறையில் இவர்களை இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்கச் செய்து தண்டனை வழங்க வேண்டும்.//

    இங்குதான் நான் மாறுபடுகிறேன். இவர்கள் இருவர்மேலும், இரு நிறுவனங்கள்மேலும் கடுமையான சிவில் லயபிலிட்டி இருக்கவேண்டும். ஆனால் கிரிமினல் லயபிலிட்டி என்பது ஆலை நிர்வாகத்தின்மீதும் இந்திய நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் மேனேஜிங் டைரெக்டர்மீதும் மட்டும்தான் இருக்கவேண்டும் என்கிறேன்.

    ரயில்வே விபத்துகள் எல்லாவற்றுக்கும் மமதா பானர்ஜியை தூக்கில் அல்லது ஜெயிலில் போடலாமா?

    ReplyDelete
  18. சையத் அலாவுத்தீன்:

    //Your article does not reveal properly the root cause of the accident. Workers working in critical operation, should be given sufficient training and updating them proper safety methods are very much important in plants. Most of the indian companies are doing this as a formality.//

    ஆலைகளில் வேலை செய்வோருக்கு பாதுகாப்பு பற்றிய தரமான பயிற்சி அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அந்த பயிற்சி முறைகளை ஏற்படுத்தித்தருவது ஒரு நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் நிர்வாகிகளின் பொறுப்புகளில் ஒன்று.

    பொதுவான இந்திய குணமும் மாறவேண்டும்.

    ReplyDelete
  19. இந்த இடுகைக்கு நேரடி தொடர்பில்லாவிட்டாலும், இந்து நாளிதழில் நேற்று முன் தினம் வந்த செய்தி,
    http://beta.thehindu.com/news/national/article450968.ece?homepage=true

    நீங்கள் கூறும் சிவில் லயபிலிட்டி சம்பந்தபட்டதுதான் இந்த செய்தியும். அரசாங்கத்திற்கு சிவில் லயபிலிட்டியின் மீது ஏனோ கவனம் இல்லை.

    நன்றி,
    வெங்கடாசலம்.

    ReplyDelete
  20. துணிச்சலான மாற்று கருத்து. நன்றி.

    ReplyDelete
  21. UCILல் யூனியன் கார்பைட் பெரும்பான்மை முதலாளி. அதனால் UCILன் கிரிமினல் குற்றங்களுக்கு யூனியன் கார்பைடும் அதன் மேலாளர்களும் பொருப்பேற்க வேண்டும் என்பதில் என்ன தவறு. அதிக இலாபம் பெற பாதுகாப்புச் செலவுகளை குறைக்கவும் என முதலாளிகள் நிர்வாகத்திற்கு வழியுறுத்தி அதன் காரணமாக விபத்து ஏற்படும் பொழுது அது முதலாளிகளின் குற்றமாகும். அப்படி இங்கு நடந்துள்ளது என்பதற்கு சான்றுகள் நிறைய தெரிகின்றன. அதனால் தான் ஆண்டர்சனை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டியிருக்கிறது.

    ஒரு வாகன விபத்து ஏற்படும்போது, அது விபத்தே ஆனால்கூட யார் “At Fault” என்று முதலில் என்று பார்ப்பார்கள். யார் மீது தவறோ அவர்கள் மீது சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். விபத்தில் மரணம் ஏற்படும் பொழுது, காரணமானவர்கள் மீது Homicide குற்றம் சுமத்தப்படும். விபத்து என்பதற்காக Insurance பணம் கொடுப்பதோடு சும்மா விட்டு விடுவதில்லை.

    இரயில் விபத்திற்கு Negligence காரணமாக இருந்து, பல ஆயிரம் பேர் இறக்கவும் காயமடையவும் நேரிட்டால் மம்தா பேனர்ஜியை யாரும் சும்மா விட மாட்டார்கள், அவரையும் விசாரித்து நீதிமன்றம் முன் நிறுத்திவிடுவார்கள்.(Ofcourse ஆண்டர்சன் மாதிரி பணத்தால், பலத்தால் தப்பி விடுவார்)

    ReplyDelete
  22. போபால் சம்பவத்தை ஒரு சாதாரண ரயில் விபத்தோடு ஒப்பிடுவது பொருத்தமானதாக இல்லை. மற்றபடி, சிவில்-கிரிமினல் லயபிலிடி பற்றிய தங்கள் கருத்துகள் உடன்பாடானவை. நிவாரண தொகையை குறைத்து வாங்க ஒப்புக்கொண்ட இந்திய அரசாங்கத்தின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

    இந்தியாவில் பாரிய இழப்புகளை ஏற்படுத்தும் ஒரு விபத்து / சம்பவம் நடந்து விட்டால், கொஞ்ச காலத்திற்கு அந்த பரபரப்பை பத்திரிக்கை செய்தியாக்கி விற்று, அதைப் படித்து வாய் வலிக்கப் பேசி, பிறகு அதை அப்படியே விட்டு விடுகிறோம். மீண்டும் அதேபோல் ஒன்று நடக்கும்போது மேற்கோள் காட்ட மட்டுமே முந்தையை சம்பவம் பயன்படுகிறது. அதிலிருந்து படிப்பினை எதுவும் பெறுவதில்லை.

    நம் நிர்வாக சீர்கேடுகளையும் லஞ்ச லாவண்யங்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது 1984-க்கு பிறகு இன்னொரு போபால் சம்பவம் நடக்கவில்லை என்பதே பேரதிர்ஷ்டமாக தோன்றுகிறது.

    ReplyDelete
  23. நீங்கள் என்ன வாரன் ஆண்டர்சனின் வழக்கறிஞரா? இப்படி மூச்சைப் பிடித்துக்கொண்டு அவருக்காக வரிந்துகட்டிக்கொண்டு வாதாடுகிறீர்களே! ஆண்டர்சன் போன்ற ஆட்களை குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது உள்ளே தூக்கிப் போட்டால்தான் மற்றவர்கள் பயந்துகொண்டு போபால் விஷ வாயு விபத்து போன்ற ஒரு விபத்து மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆண்டர்சனுக்காக வாதாடும் உங்களை போபாலில் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    அமெரிக்காவில் படித்த நன்றிக் கடனுக்காக இப்படியெல்லாம் பிளாக் எழுதுகிறீர்களா?

    ReplyDelete
  24. >ரயில்வே விபத்துகள் எல்லாவற்றுக்கும் மமதா பானர்ஜியை தூக்கில் அல்லது ஜெயிலில் போடலாமா?

    எனக்கு ஆட்சேபணை இல்லை.

    பிரிட்டீஷ் பெட்ரோலியம் ஏற்படுத்திய எண்ணெய்க் கசிவு அமெரிக்கர்களைப் பாதிக்கும் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்க வழி செய்யும் அமெரிக்கா, போபால் விஷயத்தில், ' எங்காளு மேலே கையை வச்சா வெட்டுவேன்' என்பதைப் பார்த்துக் கொண்டு கைதட்டிக் கொண்டிருக்க நமக்கு என்ன தலையெழுத்தா?

    சிவில், கிரிமினல் எல்லா குற்றச்சாட்டுகளும் அந்த ஆதிபத்யக் கிரிமினல்கள் மேல் சாட்டப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  25. >http://www.studentsforbhopal.org/?q=node/85

    உரலுக்கு நன்றி. இந்த உரலிலேயே தெளிவாகத் தெரிகிறதே. யூனியன் கார்பைட் நிறுவனம் ஆடிட் அறிக்கை பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன்(அதுவும் யூனியன் கார்பைட் 1.25 மில்லியன் டாலர் செலவு குறைப்பும் நடந்துள்ளது என்று.

    யூனியன் கார்பைடும் யூனியன் கார்பைட் ஆஃப் இந்தியாவும் வேறே வேறே நிறுவனம் என்பது, 'மீசை ஒட்டினா ஒரு எம்.ஜி.ஆர், எடுத்துட்டுக் கண் அடிச்சா இன்னொரு எம்.ஜி.ஆர்' மாதிரி பகடி.

    ஒரே குட்டைதான். ஒரே ஒரு மட்டைதான்.

    நீங்க ஏன் இப்படி இந்த தேறாத கேசுக்கெல்லாம் மூச்சுப் பிடிக்க வாதாடி உங்க பொன்னான நேரத்தை வீணாக்கறீங்க பத்ரி. விட்டுடுங்க

    Though the report was available to senior U.S. officials of the company, nothing was done. In fact, according to Carbide's internal documents, a major cost-cutting effort (including a reduction of 335 men) was undertaken in 1983, saving the company $1.25 million that year.

    ReplyDelete
  26. //‘ஹை புரொஃபைல் ஆட்கள்’ என்ற காரணத்தாலேயே அவர்கள்மீது குற்றம் சாட்டுவது இந்தியக் குணம்.//

    இந்த வாக்கியம் தான் என்னை இந்தக் கருத்தை பதிய வைக்கிறது.

    +++

    மேலுள்ளக் கருத்து என்ன அமேரிக்க ரிடர்ன் குணமா ?

    Unprecedented crime; Exemplary punishment. தூக்கில் போட வேண்டாம், ஜெயிலுக்காவது அனுப்பியிருக்கலாம். திவாலும் ஆக்கியிருக்க வேண்டும் ஆனால் கிரிமினல் நடவடிக்கைக்கு நிர்வாகம் கண்டிப்பாக கூண்டோடு கம்பி எண்ணியிருக்க வேண்டும். எதுவும் நடக்கவில்லை.

    அரசியல் நாசமாப் போன குட்டை என்பது ஊர் அறிந்த ஒன்று தான். அவர்கள் மீது குற்றமுண்டு என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி. அதனை ஆண்டர்சன் வக்காளத்துக்குத் துருப்புச் சீட்டாக இங்கு பயன்படுத்துவது தேவையில்லாத வாதம். அரசியல்வாதிகள் தனியாக கவனிக்கப்படுவார்கள்.

    இந்த நிகழ்ச்சியையும் ஈபே (இந்திய கிளை) கைதினையும் போட்டுக் குழப்ப வேண்டாம்.

    ReplyDelete
  27. This is just a half baked analysis. Union carbide did not have any concern for the lives of indian people.

    There was a official inspection report that stated the substandard pipes used to carry the gases. The official inspection published the report in 1982. The report asked union carbide to change the pipes used.

    The indian MD sent a fax about this to union carbide US. The US fuckers replied that it is too expensive to change the pipes and did not allocate any fund to change the pipes disregarding and showing utter callousness for the safety of indians for them Indians were just 3rd rated creatures. Even PETA's plea for ethical treatment of animals would bear more attention than the indian safety official's inspection report.

    Please stop puking half baked useless stuffs. Please read and research before vomiting craps.

    ReplyDelete
  28. This is a flawed argument, probably written with an intention to attract attention. Dow Chemical's CEO received more than 18 million dollars (Rs 90 Crores) in compensation last year. A poor factory inspector in Bhopal who would have received an annual salary of Rs. 3 lakh is in your opinion much more responsible for the accident than the CEO.

    Bravo ! Long Live Capitalism !

    ReplyDelete
  29. Badri,

    Well written article.I am not sure whether your articles gets published in mainstream media.

    BTW, I also agree with your argument that it is only civil liability matter.

    Keep up the good job.

    ReplyDelete
  30. போரின் போது ஒரு படை தளபதியிடம் செய்தியாளர்கள் "இவ்வளவு குழப்பமான சூழ்நிலையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள்?" என்ற பொழுது "இங்கே இப்பொழுது நான் பொறுப்பு வகிக்கின்றவன் என்றாலும், என்னால் நிஜ சூழ்நிலையில் ஒவ்வொருவரிடமும் சென்று என்ன செய்யவேண்டும் என்று கூறுவது சாத்தியமில்லை. ஆக என்னுடைய வேலை அத்தகைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிப்பதுதான். அதை உபயோகபடுத்துவது அவரவர்கள் எதிர் கொள்ளும் தன்மையையும் அந்த தனிப்பட்ட சூழ்நிலையையும் பொருத்தது. எது நடந்தாலும் நான் தான் பொறுப்பு ஆனால் முடிவு எடுப்பது அவர்கள் மட்டுமே!" என்றாராம்.

    ReplyDelete
  31. The true Bhopal verdict was delivered within four days of the tragedy,December 1984, not on June 7, 2010 எம்ஜே அக்பர் http://bit.ly/bhvUs6
    ஆண்டர்சனுக்காக வாதாடும் பத்ரி ஒரு விஷயம் தெளிவுபடுத்த வேண்டும். ஏன் அவர் நிகழ்வு நடந்த நான்கு நாட்களில் இந்த நாட்டை விட்டு ஓட வேண்டும்? அது ஒரு கிரிமினல் குற்றமாக இல்லையெனில் வழக்கில் ஆஜராகி தன் தரப்பு நியாயத்தை விளக்கியிருக்கலாமே? இங்கு யாரும் அவரை கல்லால் அடித்து கொன்றிருக்க போவதில்லையே? அதை விடுத்து தன் இறுதிகாலம் வரை தலைமறைவு வாழ்கை நடத்தும் அவரது குற்ற உணர்வே இந்த நிகழ்வில் அவருக்கும் பங்கிருக்கிறது என்பதை உணர்த்தும்...

    ReplyDelete
  32. Badri,

    It's a very well written article...

    By nature, we Indians are very emotional and then Forgetful.

    It's very difficult to find people who can think straight and have guts to express it without worrying about the consequences.

    Thanks,

    Suresh

    ReplyDelete
  33. Never read anywhere in the net, the complete details about this case. Well Done Badri. The only post gives 100% real and genuine details.

    ReplyDelete
  34. பத்ரியின் பதிவையும் நண்பர்களின் பின்னூட்டங்களையும் இன்றுதான் படிக்க முடிந்தது.

    ‘எல்லாமே அரசியல்தான்’ என்று கேவலமாக ஆகிவிட்ட இந்தியச் சூழலில், இந்தியர்கள், அதுவும் சாமானிய ஏழைகளின் நல்வாழ்வு பற்றி அரசாங்கத்திற்கு என்றுமே பெரிய அக்கறை இருந்தது கிடையாது என்பதே அப்பட்டமான உண்மை. ‘இழவு வீட்டில் கூடப் பிடுங்கின வரை லாபம்’ என்பதே இந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.

    விமான விபத்தோ, ரயில் விபத்தோ நடந்து சாதாரணக் குடிமக்கள் நூற்றுக்கணக்கில் பலியாகும்போதுகூட, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ராஜிநாமா செய்வதாக ஒரு சம்பிரதாய ஸ்டேட்மெண்ட் விடுவதும், பிரதமர் ‘அதெல்லாம் வேண்டாம், பரவாயில்லை’ என்று சப்பைக்கட்டு கட்டுவதும் அன்றாட நடைமுறையில் தினந்தோறும் பார்க்கத்தானே செய்கிறோம்?

    ஆனால், ஆயிரக்கணக்கான கேலன்கள் எரிபொருள் தினமும் அமெரிக்கக் கடற்கரையில் கலந்து வருவதைக் கண்டித்து அதிபர் ஒபாமா தினமும் பிர்ட்டிஷ் பெட்ரோலியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை நேரடியாக அமெரிக்காவில் காண்கிறோம்.

    எனக்குத் தெரிந்து போபால் பேரழிவிற்குப் பிறகு எத்தனை மெத்தனமாக இந்திய அரசாங்கம் நடந்து கொண்டது என்பது உலகமே அறிந்த கேவலம்.

    “The buck stops with me" என்று ஒபாமா வாயாலாவது சொல்கிறார். நம் ஊர் ப.சியோ, மன்மோகனோ, சோனியாவோ அதைக்கூடச் சொல்ல மாட்டார்கள், because they are all busy making a buck, however unfortunate the situations might be for the common man.

    ReplyDelete
  35. என் பின்னூட்டத்துக்கு லேட்டஸ்டான ஒரு அடிஷன்: மினிமம் 20 பில்லியன் டாலர்களையாவது ஒரு எஸ்க்ரோ அக்கவுண்டில் செலுத்தியாக வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை வற்புறுத்துகிறது.

    ReplyDelete
  36. அர்ஜுன் சிங் அனுப்பிய விமானத்தில் தில்லி போன ஆண்டர்ஸன் அங்கே அப்போதைய பிரஸிடென்ட் ஜெயில் சிஙகையும், உட்துறை மந்திரி நரசிம்ம ராவையும் பார்த்து, டீ குடித்து கைகுலுக்கிவிட்டுத்தான் அமெரிக்காவுக்கு விமானமேறுகிறார்!

    நல்ல பதிவு, நன்றி பத்ரி!!!

    பாரதி மணி

    ReplyDelete
  37. Request you to kindly give us all a draft letter that can be sent to our MPs, urging them not to support the civil liability law in its current form. on brief perusal of the issue, i understood that, in US itself, operators are required to provide $10 billion. with no support from govt tax money - what so ever. with what face, does robert blake gives press briefings?

    ReplyDelete
  38. Sir,

    I wish to send the first letter regarding civil libility to the perfect demagogue's daughter - rajya sabha mp

    ReplyDelete
  39. From P.Sainath's article in the The Hindu today - I thought this was relevant to what you were saying:

    Bhopal marked the horrific beginning of a new era. One that signalled the collapse of restraint on corporate power. The ongoing BP spill in the Mexican Gulf — with estimates ranging from 30,000-80,000 barrels a day — tops off a quarter-of-a-century where corporations could (and have) done anything in the pursuit of profit, at any human cost. Barack Obama's ‘hard words' on BP are mostly pre-November poll-rants. The BP can take a lot of comfort from two U.S. Supreme Court judgments in the past two years.

    The first of these came in 2008. That was in the case of the Exxon Valdez oil spill of 1989 — till then the biggest recorded (or admitted to) oil spill in history. Simply put, BP's blowout is recreating an Exxon Valdez every eight days or so. And has been doing that since late April. In the Exxon case, a jury in 1994 imposed penalties of $5 billion on the company. In 2006, points out Sharon Smith in an incisive piece in counterpunch.org, “an appeals court halved the punitive claim to $2.5 billion.” And in June 2008, “the Supreme Court reduced that amount by 80 per cent, to roughly $500 million — an average of $15,000 per plaintiff.” Exxon CEO Lee Raymond who fiercely fought the damages, retired with a $400 million package all for himself. While Exxon Valdez's victims, points out Smith, ended up with roughly the same amount — only, it was shared among 33,000 of them. That is about 10 per cent of the original award and roughly $15,000 per victim.

    ReplyDelete
  40. பத்ரி,
    சுரேஷ் கிருஷ்ணன் ‘நல்ல பதிவு’ன்னு சொல்றதை நம்பாதீங்க. முன்பு ஆண்டர்சனை அமெரிக்க பின் லேடன்னு நான் எழுதினா, நல்ல கட்டுரைன்னு பின்னூட்டம் போட்டார்:-)

    இராமு அவர்களுக்கு நரசிம்மராவ் என்ன பாவம் செய்தார். போபால் விபத்து நடந்தது, விபி சிங் ஆட்சிக்கு முன்னால!

    ReplyDelete
  41. போபால் மற்றும் நஷ்ட ஈடு குறித்த எனது மூன்று பதிவுகள்
    http://marchoflaw.blogspot.com/2010/06/blog-post.html

    http://marchoflaw.blogspot.com/2010/03/blog-post.html

    http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_31.html

    ReplyDelete
  42. பிரபு ராஜதுரை:

    1984-ல் ராஜீவ் காந்தி பதவியேற்ற ஒரு மாதத்தில் போபால் விபத்து நேர்ந்தது. அப்போது நரசிம்ம ராவ் நம் நாட்டின் உட்துறை அமைச்சர். அவர் செய்த பாவம் அது தான்!

    ReplyDelete
  43. Badri,

    I completely disagree with your view,

    Lets take a case, I am establishing a Fireworks factory ignoring all the safety measures and looking only my profits. If there is an explosion and lives lost then it is a criminal offence to put the employees/ppl in danger.

    Even in this example only the factory workers and limited population will be affected but here the entire city was affected.

    Anderson might know the quality of the factory established and the risk involved in that factory. But i am not sure whether capitol punishment should be given or not but should be punished in Jail

    ReplyDelete
  44. போபால் வழக்கில் மேலும் கொஞ்சம் சட்ட சமாச்சாரங்களுக்கு

    போபால், நீங்களே தீர்ப்பளியுங்கள்...

    http://marchoflaw.blogspot.com/2010/06/blog-post_18.html

    ReplyDelete
  45. இது ஒரு 26 வருட மோசடி என்றே சொல்லவேண்டும். இந்திய அரசியல் மற்றும் ஐ.ஏ.எஸ் எல்லாம் கடந்த 26 வருஷமா நல்லா நம்ம நடு மண்டையில மிளகாய் அரைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

    அன்னியன் அம்பியின் அப்பா மாதிரி, முழு நிர்வாகத்தையும் கம்பெனி மற்றும் அன்றைய அரசியல்வாதிகள்/ஐ.ஏ.எஸ் கள் கூண்டில் ஏத்தி கம்பியெண்ண வைக்கணும்னு ஆதங்கப்படத்தான் முடியும். வேறு எதுவுமே செய்ய முடியாத படி லஞ்சப்பணம் விளையாடியிருக்கிறது.

    ஆண்டர்சன் மட்டுமே குற்றவாளி அல்ல 26 வருசம் இந்தக் கேசை இழுத்தடிச்சு பலர் வாழ்க்கையை நரகமாக்கத் துணை புரிந்த அத்தனை பேருமே குற்றவாளிகள் தான்.

    எவன் காசு கொடுத்தாலும் வாங்கிட்டு வாலாட்டுறாங்களே இவிங்க கிட்ட தான் நம்மள ஆட்சி செய்யுற பொறுப்பை நாம ஒப்படைத்திருக்கோம்னா பார்த்துக்குங்க...எவ்வளவு பெரிய முட்டாப்பசங்க நாம...!

    இப்படிப்பட்ட முட்டாள்களைச் சாவடிச்சா காச விட்டெரிஞ்சுட்டு ஃபிரீயா சுத்தலாம்ங்குறதத் தான் இந்தத் தீர்ப்பு நமக்கு சொல்லியிருக்கு.

    ReplyDelete
  46. Badri, you have a decent following on the web. Therefore, you have a moral responsibilty to desist from commenting on issues on which you do not have sufficient facts at your disposal or knowledge on the subject. Beware, there is a difference between an alternative opinion and opinion based on ignorance. The second is poisonous. I can expect this from Gnani and his ilk but not from you. Kesub Mahindra Vs State of Madhya Pradesh, a book on the subject by Prof.Upendra Baxi and related articles by Marc S Galanter are essential readings. Your post betrays the fact that it is based on superficial knowledge extracted from newspapers.The distinguished jurist Fali S Nariman, counsel for Mr. Mahindra and V.P. Gokhale, himself has publicly apologised in his memoir and in later writings(Seminar , Dec 2004) for representing the accused.

    ReplyDelete