இன்று காலை செய்தித்தாளில் பெரிய விளம்பரம்: அகில இந்திய வானொலி நிலையத்திற்கு டைரக்டர் ஜெனரல் தேவையாம். ஆகா! எனக்குக் கிடைத்தது நல்ல வாய்ப்பு என்று நினைத்துக் கொண்டேன். அ.இ.வா வை ஒரேயடியாக மாற்றி அமைத்து விடலாம். தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் பண்பலை வானொலிகளை ஓட ஓட விரட்டி விடலாம் என்று மேலும் படிக்கத் தொடங்கினேன்.
சம்பளம் வெறும் ரூ. 24,000 த்தில் தான் ஆரம்பிக்கிறது என்று போட்டதும் கொஞ்சம் வருத்தம். சரி, நாட்டுக்கு சேவை செய்ய இப்படி ஒரு குறைந்த சம்பளம் கிடைத்தால் பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன். மேலே படிக்கத் தொடங்கினேன்.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து பட்டப்படிப்பு இருக்க வேண்டுமாம். நிச்சயம் அதில் தேறி விடுவேன்.
குறைந்த பட்சம் 25 வருடங்களாவது வேலை செய்திருக்க வேண்டுமாம், அதிலும் 15 வருடங்கள் ஒரு ஊடக நிறுவனத்தில் வேலை செய்திருக்க வேண்டுமாம். இது தனியார் நிறுவனமாக இருந்தாலும் பரவாயில்லையாம். [ஊடக நிறுவனம் தவிர, திட்டமீட்டும் பணியில் இருந்தாலும் தேவலாமாம் - Policy planning. திட்டமீட்டும் பணி என்றால் என்ன?]
போச்சு.
இந்த மாதிரி பைத்தியக்காரத் தனமான நிபந்தனைகள் விதிக்கப்படும் வரை உருப்படியான யாரும் இந்த வேலைக்குக் கிடைக்கப் போவதில்லை. முதுகலைப் பட்டப் படிப்புக்குப் பிறகு 25 வருடம் வேலை செய்துள்ளவர், நிச்சயமாக 50 வயதை நெருங்குபவர். கடந்த 15 வருடங்களாக ஒரு ஊடக நிறுவனத்தில் வேலை செய்திருப்பவர் நிச்சயமாக அகில இந்திய வானொலிக்காரராக அல்லது தூரதர்ஷன் காரராக மட்டுமே இருக்க முடியும். திட்டம் தீட்டும் பணியில் இருப்பவர் என்றால் இந்தியன் சிவில் சர்வீஸ் பணி?
ஆக மொத்தம், உள்ளுக்குள் ஒருத்தருக்கு வேலை போட்டுக் கொடுப்பதுதான் தீர்மானம் போல். அ.இ.வா உருப்படாமலே போவதின் காரணம் இப்பொழுது புரிகிறதா? அதுவும் ரூ. 25,000 சம்பளத்தில். நம்மூரில் எந்த மென்பொருள் நிறுவனமானாலும் (இப்பொழுதைய மந்த கதியில் கூட) 3 வருடத்தில் இந்த சம்பளம் வாங்கின்றனர் சின்னப் பசங்கள் எல்லாம். திட்டக் கமிஷனின் பத்தாவது திட்டத்தில் ரூ 1463 கோடி அகில இந்திய வானொலிக்கென ஒதுக்கப்பட்டுள்ள சமயத்தில், அதைப் பராமரிப்பவருக்கு மாத வருவாய் வெறும் ரூ. 25,000.
பண்பலை வானொலிக்காரர்கள் சந்தோஷத்தில் திளைப்பதாகச் செய்தி.
Tuesday, September 02, 2003
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment